search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி மதுபானம்"

    • ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரு சக்கர வாகனம், மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் ஒரு குடோனில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

    இச்சோதனையில் 5400 லிட்டர் ஸ்பிரிட், போலி லேபில்கள் மற்றும் காலி மது பாட்டில்கள், மூடிகள், வெண்ணிலா சுவையூட்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருச்செங்கோடு டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் அடிப்படையில் வட்டூர் பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ், விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மற்றும் முரளி ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    இதில் வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் என்கிற மாதேஸ்வரன் தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அப்பகுதிகளில் விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட் 50 லிட்டரை கேன்களில் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபானம் தயாரித்த குடோனில் இருந்து ஆல்கஹால் மீட்டர், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரு சக்கர வாகனம், மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார்? எங்கெல்லாம் போலி மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர்? என்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுல்தான் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பிடிபடுவார்கள் என தெரியவருகிறது.

    • போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக கேரளாவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி ஜனனி பிரியா தலைமையில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு போலி மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படும் எரி சாராயம் உள்பட அனைத்து உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வீட்டில் இருந்த கேரளாவை சேர்ந்த அருண் (29), சந்தோஷ்குமார் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண் என்பவர், தனது நண்பரான அனில்குமார் (50) என்பவருடன் சேர்ந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை வந்தார்.

    பின்னர் காரமடை அருகே உள்ள செந்தூர் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். அடிக்கடி இவர்கள் வெளியில் சென்று விடுவதால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் வரவே அவர் அவர்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் கேரளாவில் வியாபாரம் செய்து வருகிறோம். அதனால் வாரத்தில் 2-3 நாட்கள் அங்கு சென்று விடுவோம் என தெரிவித்துள்ளனர். அவரும் அதனை நம்பி விட்டார்.

    இதனை தொடர்ந்து, அவர்கள் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக அவர்கள் கேரளாவில் இருந்து எரிசாராயம் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளனர்.

    மதுபானம் தயாரித்த பின்னர் அந்த பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஓட்டி, மதுக்கடைகளில் பெட்டிகளில் அடுக்கி வைப்பது போன்று, பெட்டிகளை வாங்கி அதில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து கேரளாவுக்கு அனுப்பி விற்பனை செய்ததும், இவர்களுக்கு சந்தோஷ் உதவியாக இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், வீட்டில் இருந்த 1600 போலி மதுபான பாட்டில்கள், தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களில் இருந்த 175 லிட்டர் எரிசாராயம், மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த உபகரணங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இதில் தொடர்புடைய அனில்குமார் என்பவரை தேடி வந்தனர். அப்போது, அவர் ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தது தெரியவந்தது.

    மேலும் விடுதலையான பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான், காரமடை அருகே போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்த தகவல் தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது
    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்ட மது விலக்கு போலீசார் வடலூர் பகுதியில் கடந்த வாரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போலி மதுபாட்டில்கள் விற்பனையில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில் தங்கி விசாரணை நடத்தினர். இதில் கல்வராயன்மலை அருகே நடுத்தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கியதை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று, போலி மதுபான தொழிற்சாலை கட்டிடத்தை சுற்றிவளைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது. மதுபானம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் அச்சிடப்பட்டிருந்த லேபில்கள். காலி பாட்டில்கள், பாட்டில் மூடி, காலி அட்டை பெட்டிகள், சில எந்திரங்கள் இருந்ததை கண்டனர். மேலும், 454 மதுபாட்டில்கள் அட்டைப் பெட்டியில் வைத்து வெளியில் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததையும் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.

    இவை அனைத்தையும் பறிமுதல் செய்த கடலூர் மாவட்ட போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிடம் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் ஓப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வீரன், அதே மாவட்டத்தை சேர்ந்த பொறையார் பகுதி ரியாஸ் அகமது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதி தொரடிப்பட்டை சேர்ந்த வெங்கடேசன், கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வயலாமூர் குபேந்திரன் என்பது தெரியவந்தது.

    இவர்கள் தயாரித்த போலி மதுபானங்களை தமிழகத்தில் உள்ள எந்தெந்த பகுதிகளுக்கு, எப்படி, யார் மூலமாக அனுப்பி வைத்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? யார்? என்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதும், இது தொடர்பாக போலீசார் வாரம் ஒரு முறை 2 ஆயிரத்திலிருந்து, 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை கண்டறிவது வழக்கம். அதே சமயத்தில் இந்த ஊரல்களை வைத்திருந்தவர்களோ, அதனை காய்ச்சியவர்களோ இதுவரை பெரியளவில் கைது செய்யப்படவில்லை.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்ததை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கண்டறிந்து, கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    அதாவது, இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசாருக்கோ, கரியாலூர் போலீசாருக்கு தெரியாதா?, தெரியவில்லை என்றால் ஏன் தெரியவில்லை, தெரிந்திருந்தால் இவ்வளவு நாட்களாக ஏன் பிடிக்கவில்லை? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் கல்வராயன் பகுதி மக்கள் போலீசார் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    ×