search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை பல்கலைக்கழகம்"

    • சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்றார்.
    • வழக்கமாக மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை விழாவையொட்டி புதுவைக்கும் வருவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

    பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

    அவரின் வருகைக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி வருகை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார்கள் என தெரிவித்தனர். ஆனால் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னரும், முதல்-அமைச்சரும் பங்கேற்கவில்லை.

    அதேநேரத்தில் சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்றார். வழக்கமாக மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை விழாவையொட்டி புதுவைக்கும் வருவார்கள்.

    சென்னை வரை வந்த துணை ஜனாதிபதி புதுவை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுவதுதான் காரணம் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகம், புதுவை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அங்கு அவர் பேராசிரியராக பணியாற்றிய போது தங்கியிருந்த வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், அதற்கான வாடகை பாக்கி ரூ.23 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் பல்வேறு சங்கத்தினர் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி ஆகியோருக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர்.

    அதில் புதுவை பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்டுள்ளனர். டிஜிட்டல் போர்டு அமைப்பது உட்பட பல்வேறு முறைகேடுகளில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த புகார் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை துணை ஜனாதிபதி, கவர்னர் தமிழிசை புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ×