search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலகோட் தாக்குதல்"

    • இந்திய தூதரக உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் அஜய் பிசாரியா.
    • அவர் பாலகோட் தாக்குதல் நடந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக முன்னாள் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் அஜய் பிசாரியா. இவர் சமீபத்தில் "தி ஆங்கர் மேனேஜ்மேன்ட்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைக்குரிய ராஜதந்திர உறவு" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

    அதில், பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு பின் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ நெருக்கடியைத் தவிர்க்கும் முயற்சியில் பிப்ரவரி 27, 2019 அன்று பிரதமர் மோடிக்கு நள்ளிரவில் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக அதிகாரிகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாகவும், சீனா இரு நாடுகளுக்கும் துணை மந்திரிகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தன. ஆனால் தேவையில்லை என இந்தியா மறுத்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்ரவரி 14 அன்று இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது.

    அடுத்த நாள் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அப்போது இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்து, ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அப்போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக் கொண்டார். அவரை இந்தியா கொண்டு வர முயற்சி செய்தபோது, பாகிஸ்தான் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இதனால் இந்தியா கடுமையான பதிலடிக்கு தயாரானது. இந்த நேரத்தில்தான் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.

    பிசாரியாவின் கூற்றுப்படி, அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தெஹ்மினா ஜன்ஜுவாவுக்கு அந்நாட்டு ராணுவத்திடம் இருந்து, இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானை எந்நேரத்திலும் தாக்கலாம் என்ற செய்தி வந்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாட்டு தூதர்களிடம் இதுகுறித்து அவர்களுடைய நாட்டு தலைவர்கள் இந்தியாவிடம் பேசவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். அப்போது ஒரு நாடு சார்பில், இந்தியாவிடம் நேரடியாக பேசுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான் டெல்லியில் இருக்கும்போது அப்போதைய பாகிஸ்தான் உயர் அதிகாரி சோஹைல் மஹ்மூத் என்னை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த, உங்கள் நாட்டின் பிரதமர் மோடியிடம் பேச விரும்புகிறார் என்றார். நான் பிரதமர் மோடி தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளார். முக்கியமான தகவல் என்றால் தன்னிடம் தெரிவிக்கவும். நான் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கிறேன் என்றேன். அதன்பின் எனக்கு போன் அழைப்பு வரவில்லை என்றார்.

    டெல்லியில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து பிரதிநிதிகள் இந்தியாவின் வெளியுறவுச் செயலரிடம் அன்றிரவு "நிலைமையைத் தணிக்கவும், பயங்கரவாதப் பிரச்சனையை தீவிரமாக்க விடாமல் கையாள பாகிஸ்தான் தயாராக உள்ளது" என கூறியுள்ளனர்.

    அடுத்த நாள், இம்ரான் கான் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுதலை செய்வதாக ஊடகங்களிடம் அறிவித்தார். இம்ரான் கான், வர்தமானின் விடுதலையை "அமைதியான செயல்முறை" என்று குறிப்பிட்டாலும், அது இந்தியாவின் கட்டாய ராஜதந்திரத்தின் விளைவு என சுட்டிக்காட்டுகிறார்.

    பிரதமர் மோடி பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் இந்த சம்பவத்தைக் கூறுகையில், "அதிர்ஷ்டவசமாக, விமானி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்தது. இல்லையெனில் அன்று இரவு ரத்தக்களரி நடைபெற்றிருக்கும்" என தெரிவித்துள்ளார்.

    பாலகோட் விமான தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் நவீன போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் 2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் புகுந்து பாலகோட் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுகள் வீசி அழித்தன.

    பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் நுழைந்த கோபத்தில் பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. அதன்படி எஃப்-16 ரக விமானம் மூலம் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முயன்றது.

    அப்போது இந்திய எல்லையில் தயாராக இருந்த இந்திய விமானப்படை, பாகிஸ்தான் திட்டத்தை முறியடித்தது. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்தது. இந்திய வீரர் அபிநந்தன் மிக்-21 வகை போர் விமானத்தைக் கொண்டு, பாகிஸ்தானின் எஃப்-16 நவீன போர் விமானத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார்.

    பின்னர் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பிய அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் விழுந்தார். கிராம மக்கள் அவரை தாக்கிய நிலையில், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

    இந்திய அரசு, உலக நாடுகள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அபிநந்தனை மீட்டது. பாகிஸ்தானின் அதிநவீன விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் ஹீரோவாக கருதப்பட்டார். சில நாட்கள் ஓய்வில் இருந்த அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் அபிநந்தனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
    ×