search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கரி இறக்குமதி"

    டெண்டர் விடாமல் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #ADMK #edappadipalaniswami
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாநிலமெங்கும் மின் வெட்டு வரப்போகிறது என்று பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும், அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி இப்படியொரு கொள்ளை லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க அரசும், அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

    இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி எண்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு 5098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு ஒப்புக்கொண்டு, டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

    “கோல் இந்தியா” விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்தனமாகவும் கைலாகுத்தந்திரமாகவும் தெரிகிறது.


    சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி “மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை” என்று கூறினார். ஆனால் முதல்-அமைச்சரோ “நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள்” என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

    மின் பகிர்மானக்கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே முரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு வந்தது? “நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை மின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை” என்று சி.ஏ.ஜி அறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன்?

    அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டு அந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து நிலக்கரி வாங்குவது ஏன்? தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின் மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்க ஒப்புக்கொண்டார்கள்? என பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.

    அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. “காற்றாலை மின்சார ஊழல்” “நிலக்கரி கொள் முதல் ஊழல்” “மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின் “நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக் கொண்டிருக்கிறது.

    நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும், “நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று பிடிவாதமான முடிவு எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

    ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள் மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அ.தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். ஆளத் தெரியாதவர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்குத் துணை போகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #ADMK #edappadipalaniswami
    தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. #PowerShortage #TNGovernment
    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இது அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று எதிர்க்கட்சியான தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு வழக்கத்தை விட 60 சதவீதம் நிலக்கரி குறைவாக வழங்குகிறது. அதே நேரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் எதிர்பாராத வகையில் மிகவும் குறைந்து விட்டது. உற்பத்தி திறன் 1.2 சதவீதமாக குறைந்து விட்டது.

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த 13-ந்தேதி (நேற்று முன்தினம்) 13,751 மெகாவாட்டும், நேற்று 13,924 மெகாவாட்டும் மின் சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் நாள் ஒன்றுக்கு 18,204 மெகாவாட் மின்சாரம் தேவை.



    வழக்கமாக காற்றாலை மூலம் 8,255 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார அளவு மிகவும் குறைந்து விட்டது. அதாவது 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.

    அனல்மின் நிலையங்களுக்கு தினமும் 20 ரெயில் பெட்டிகள் அளவு நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 7 முதல் 8 ரெயில் பெட்டிகள் நிலக்கரி மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.

    இதனால் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,510 மெகாவாட்டும், நேற்று 2,875 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. அதற்கு முன் தினசரி 4,320 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இத்தகைய காரணங்களால் தான் மின் உற்பத்தி பாதிப்பால் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து உற்பத்தி நடப்பதற்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே தமிழக மின் உற்பத்திக்கு தேவையான தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை சப்ளை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    எதிர்காலத்தில் இத்தகைய மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க நிலக்கரி அதிக அளவில் தேவைப்படுகிறது. எனவே 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழ்நாடு மின் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே தமிழ்நாட்டில், மின் தட்டுப்பாடுக்கான காரணம் பற்றி கேட்டதற்கு மின்துறை அமைச்சர் பி.தங்க மணி பதில் அளித்தார்.

    அதில், “கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. ஆண்டு பராமரிப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் மற்றும் வல்லூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதுதான். இது முன் எப்போதும் இல்லாத அளவு எதிர்பாராமல் நடந்தது. நிலைமை 3 நாளில் சீராகும் என தெரிவித்தார். #PowerShortage #TNGovernment
    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Minister #thangamani
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    காற்றாலை மின்உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 2 நாளில் குறைந்ததாலும், மத்திய மின் தொகுப்பில் இருந்து நமக்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் வராததாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

    கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்உற்பத்தியில் நமக்கு 3 மாதமாக மின்சாரம் தரவில்லை. ஆனாலும் நீர்மின்நிலையம், அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மின்உற்பத்தியை வைத்து நிலைமையை சமாளித்தோம்.

    காற்றாலை மூலம் அதிகமாக மின்உற்பத்தி கிடைத்ததால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்உற்பத்தி கணிசமாக குறைந்தது.

    மேலும் வடசென்னையில் 2 அனல் மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்உற்பத்தி நாளை மீண்டும் தொடங்குகிறது. இதேபோல் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது 2 நாளில் சரி செய்யப்பட்டுவிடும்.



    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி நிறுத்தப்படவில்லை. ஏனென்றால் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவது உண்மைதான். ஆனாலும் நம்மிடம் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

    எனவே இப்போது மின் வெட்டு இல்லை. இதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #thangamani
    ×