search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய விளையாட்டு"

    • ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அதிகாரி சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    இந்த தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பிக்கும் வகையில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    19, 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்களுக்கு கையுந்துபந்து, 100 மீட்டர் ஓட்ட போட்டி நடக்கிறது. 45 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 1 மீட்டர் நடை பயணம், 50 மீ, 100 மீ ஓட்டம், கேரம் ஆகியவை நடக்கிறது.

    இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் போட்டி அன்று தங்கள் பெயர்களை பதிவு செய்து நேரடியாக கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக ஜொலித்தார்.
    • ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல்இந்தியர் என்ற சிறப்புக்குரிய தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார்.

    ஆமதாபாத்:

    தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் பவானிதேவி, பிரவீன் சித்ரவேல் தங்கப்பதக்கம் வென்றனர்.

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக ஜொலித்தார்.

    அவர் ஸ்னாட்ச் முறையில் 84 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 107 கிலோ என்று மொத்தம் 191 கிலோ எடை தூக்கி முதலிடத்தை பிடித்தார். மற்றொரு மணிப்பூர் வீராங்கனை சஞ்சிதா சானு (187 கிலோ) வெள்ளிப்பதக்கமும், ஒடிசாவின் சினேகா சோரன் வெண்கலப்பதக்கமும் (169 கிலோ) பெற்றனர்.

    பின்னர் மீராபாய் சானு கூறுகையில் 'சமீபத்தில் பயிற்சியின் போது இடது கைமணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதனால் 'ரிஸ்க்' வேண்டாம் என்று தான் இந்த போட்டியில் 3-வது முயற்சியை பயன்படுத்தவில்லை. அடுத்து டிசம்பரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராக வேண்டி இருக்கிறது' என்றார்.

    தடகளத்தில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை தாண்டுதல்) தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பு இந்த பந்தயத்தில் 2015-ம் ஆண்டு ரஞ்சித் மகேஷ்வரி 16.66 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது.

    அதனை முறியடித்து அசத்திய 21 வயதான பிரவீன் திருவாரூர் மாவட்டம் செட்டிசத்திரம் அருகே உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆவார். கேரளாவின் ஏ.பி.அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும் (16.08 மீட்டர்), பஞ்சாப்பின் அர்பிந்தர் சிங் வெண்கலப்பதக்கமும் (15.97 மீட்டர்) கைப்பற்றினர்.

    ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல்இந்தியர் என்ற சிறப்புக்குரிய தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். வாள்வீச்சு சாப்ரே பிரிவின் இறுதி ஆட்டத்தில் அவர் 15-3 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

    சென்னையில் வசிக்கும் 29 வயதான பவானிதேவி ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய விளையாட்டிலும் வாகை சூடியிருக்கிறார். இதன் ஆண்கள் பாயில் பிரிவில் தமிழக வீரர் வினோத்குமாருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் வீராங்கனை இளவேனில் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இளவேனில் குஜராத் அணிக்காக களம் இறங்கினாலும் அவரது சொந்த ஊர் கடலூர் என்பது நினைவு கூரத்தக்கது.

    பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஸ்வப்னா பர்மன் (மத்தியபிரதேசம்) 1.83 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபினயா ஷெட்டி வெள்ளிப்பதக்கமும் (1.81 மீட்டர்), தமிழகத்தின் கிரேஸ் மெர்லி (1.81 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். கிரேஸ் மெர்லி கன்னியாகுமாரியைச் சேர்ந்தவர்.

    20 கிலோமீட்டர் நடைபந்தயத்தில் உத்தரபிரதேச வீராங்கனை முனிதா பிரஜபதி போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் இலக்கை அடைய 1 மணி 38.20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.

    பெண்களுக்கான கபடியின் அரைஇறுதியில் தமிழக அணி 25-45 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது.

    பதக்கப்பட்டியலில் மேற்கு வங்காளம் 5 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என்று 11 பதக்கத்துடன் முதலிடத்திலும், அரியானா 8 பதக்கத்துடன் (4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) 2-வது இடத்திலும் உள்ளன. தமிழகம் 2 தங்கம், 4 வெண்கலம் வென்று 6 பதக்கத்துடன் 8-வது இடம் வகிக்கிறது.

    • கேலோ இந்தியா தேசிய கபடிப்போட்டி கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடந்தது.
    • தமிழக பெண்கள் அணி கபடி போட்டியில் கலந்து கொண்டு 3 வது இடம் பெற்று வெண்கல பதகத்தை வென்றனர்.

    திருப்பூர்

    மத்திய அரசால் நடத்தப்படும் கேலோ இந்தியா தேசிய கபடிப்போட்டி கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் தமிழக பெண்கள் அணி கலந்து கொண்டு 3-வது இடம் பெற்று வெண்கல ப்பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் தமிழக மகளிர் அணியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கபடி வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடினர். வெண்கலப்பதக்கம் வென்ற திருப்பூர் கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டும், பரிசளிப்பு விழாவும் மாவட்ட கபடி கழகத்தில் நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கபடி கழக செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக துணைத்தலைவரும், மாநகர மன்ற உறுப்பினருமான செந்தூர் முத்துகிருஷ்ணன், மாவட்ட கபடி கழக பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, செய்தி தொடர்பாளர் சிவபாலன், புரவலர்கள் மினுபேஷன் கே.எம்.வேலுச்சாமி, மகாலட்சுமி ரத்தினசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு, விளையாட்டு அலுவலர் எம்.ராஜகோபால் கலந்து கொண்டு திருப்பூர் வீராங்கனைகள் ஏ.வி.பி.கல்லூரியில் படிக்கும் யாழினி, உடுமலையில் படிக்கும் கஜிதாபீபி ஆகியோருக்கு பாராட்டும், பரிசும் வழங்கினார். ஆண்கள் பிரிவில் சீனியர் தேசிய போட்டி அரியானாவில் நடந்தது.

    இதில் தமிழக அணிக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணமூர்த்தி, கன் னீஸ்வரன் ஆகியோர் தேர்வு பெற்று சேலத்தில் நடைபெறுகிற பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழாவில் விளையாட்டு கழக தடகள பயிற்சியாளர் திவ்விய நாகேஸ்வரி, மாவட்ட கபடி கழக துணை செயலாளர் சின்னு, அன்னை செல்வ ராஜ், நடுவர் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.சேகர், தண்டபாணி, பாண்டியன், செந்தில், தர்மராஜ், டெக்னிக்கல் மெம்பர் ஆர்.ரங்கசாமி, ராஜன், வாசு ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக அனைவரையும் மாவட்ட கபடி கழக நடுவர் குழு சேர்மனும், சர்வதேச நடுவருமான ஆர்.முத்துசாமி வரவேற்றார்.

    முடிவில் இணை செயலாளர் பி.எஸ்.என்.எல். வாலீசன் நன்றி கூறினார்.

    ×