search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர்வாரும்"

    • இரணியல் இரட்டை பிரிவு கால்வாயினை தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வல்சன் போஸ், பணி ஆய்வாளர் மகேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் அமைந்துள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணியினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரணியல் இரட்டை பிரிவு கால்வாயினை தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கோதையாறு பாசன திட்டத்தின்கீழ் அமைந்துள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரு கிறது. ரூ.4.80 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் நீளத்தில் அனந்தன்குளம் கால்வாய்க்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை'அ' கிராமம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.8.50 லட்சம் மதிப்பில் 7 கிலோ மீட்டர் நீளத்தில் ஆசாரி பள்ளம் கால்வாய்க்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வட்டம், வேம்பனூர் கிழக்கு, நீண்டகரை அ, மற்றும் கல்குளம் வட்டம் ஆளுர் 'ஆ' கிராமம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    ரூ.11.51 லட்சம் மதிப்பில் 5.60 கிலோ மீட்டர் நீளத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை அ, வடிவீஸ்வரம் கிழக்கு கிராமம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 3.60 கிலோ மீட்டர் நீளத்தில் தெங்கம்புதூர் கால்வாய்க்குட்பட்ட மதுசூதனபுரம் கிராமம் ஆகிய இடங்களில் நடை பெற்று வரும் வருடாந்திர பராமரிப்பு பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் கால்வாய்களை முறையாக தூர்வாருவதால் கால்வாயின் நீர்ப்போக்கு கொள்ளளவு அதிகரிக்கும். கால்வாயில் வரும் தண்ணீர் இழப்பு ஏற்படாமல் கடை வரம்பு பகுதிகளில் உள்ள பாசன பகுதிகளுக்கு வெள் ளப்பெருக்கு காலங்களில், சென்றடையும் கால்வாய் களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல் லாமல் பாதுகாக்க இயலும். மேலும் இக்கால்வாய்களின் வாயிலாக 2246.61 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வல்சன் போஸ், பணி ஆய்வாளர் மகேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
    • ஓடை முழுவதும் செடிகள் புற்கள் முளைத்து புதர் மண்டியது.

    உடுமலை :

    உடுமலை நகரின் நுழைவுப் பகுதியில் உடுமலை - பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது.இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றவில்லை.இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்து கொண்டது. இதன் காரணமாக தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வந்ததுடன் ஓடை முழுவதும் செடிகள் புற்கள் முளைத்து புதர் மண்டியது.இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வந்ததுடன் அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து தங்கம்மாள் ஓடையை தூர்வாரி அதில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன் பேரில் பெயரளவுக்கு மட்டுமே ஓடையில் தேங்கிய மண் அகற்றும் பணி நடைபெற்றது.இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி வருகிறது.மேலும் தங்கம்மாள் ஓடையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலமும் சேதம் அடைந்தது. அதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பிறகு தரைமட்ட பாலங்கள் இடித்து அகற்றப்பட்டது.அதில் ஒரு பாலம் அபாயகரமான நிலையில் உள்ளது. பொதுமக்களும் வேறு வழியின்றி அதை கடந்து சென்று வருகின்றனர்.இடித்து அகற்றப்பட்ட பாலங்கள் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பொதுமக்கள் தங்கம்மாள் ஓடையை கடப்பதற்கு நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    எனவே தங்கம்மாள் ஓடையை முழுமையாக தூர்வாரி சீரான முறையில் கழிவுநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓடையின் குறுக்காக தரைமட்ட பாலங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
    • சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

    அவிநாசி :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. இதில் 32 பொதுப்பணித்துறை குளம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டு 42 குளங்கள், கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 971 குட்டைகள் என 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.தேர்வு செய்யப்பட்டுள்ள குளம், குட்டைகளில் சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

    மொத்தமுள்ள 1,045 குளம் குட்டைகளில் 947 குளம், குட்டைகளில் இந்த உபகரணம் பொருத்தப்பட்டு விட்டது.இதன் மூலம் ஒரே இடத்தில் இருந்தபடியே குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள முடியும். திட்டப்பணி 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீர் செறிவூட்டப்பட வேண்டிய குளம், குட்டைகளை தூர்வாருவதுடன் அதில் செறிவூட்டப்படும் தண்ணீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சுக்குழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் கூறியதாவது:-அத்திக்கடவு நீர் செறிவூட்டப்பட உள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் புதர்மண்டிக் கிடக்கின்றன. குளம், குட்டைகளில் நிரம்பும் தண்ணீர், வெயில் காலங்களில் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால் அக்குளம், குட்டைகளை தூர்வாரி தேங்கும் நீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சு குழிகளை அமைக்க வேண்டும்.அந்தந்த கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளில், 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பணிகளை மேற்கொண்டால், செறிவூட்டப்படும் தண்ணீர் நிலத்தடியை சென்றடையும்.குறைந்தபட்சம் பொதுப்பணித்துறை குளங்களிலாவது இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குமாரபாளையம் நகரா ட்சியில் 10 ஆண்டுகளாக கோம்பு பள்ளம் எனும் சாக்கடை பள்ளம் தூர் வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
    • இந்த தூர் வாரும் பணி கம்பன் நகர் முதல் இடைப்பாடி சாலை பஸ் ஸ்டாண்ட் பகுதி வரை நடைபெறவுள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகரா ட்சியில் 10 ஆண்டுகளாக கோம்பு பள்ளம் எனும் சாக்கடை பள்ளம் தூர் வாரப்படாமல் இருந்தது.நகராட்சி சேர்மன் உத்தரவின் பேரில் இந்த பள்ளம் தூர் வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் சேர்மன் விஜய்கண்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த தூர் வாரும் பணி கம்பன் நகர் முதல் இடைப்பாடி சாலை பஸ் ஸ்டாண்ட் பகுதி வரை நடைபெறவுள்ளது. இதே போல் பாலக்கரை மற்றும் கம்பன் நகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொதுக்கழிப்பிடம் கட்டுமான பணியை சேர்மன் பார்வையிட்டார்.

    இவர்களுடன் பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கண்ணன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ராஜ், தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  

    ×