search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை தீர்ப்பு"

    சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் ஒரு பெண், மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sabarimalaverdict
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.



    இந்நிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் ஒரு பெண் இன்று தற்கொலை செய்ய முயன்றார். இதற்காக அவர் ஒரு மரத்தில் தூக்கு மாட்டினார். அப்போது அவரை போலீசாரும் பொதுமக்களும் காப்பாற்றி அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்பத்தியது.

    இதற்கிடையே  கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது. இதில் பந்தளம் ராஜகுடும்பம் திருவாங்கூர் தேவசம் போர்டுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை.

    சபரி மலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே, வரும் நாட்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என கூறப்படுகிறது.  #Sabarimalaverdict 
    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இன்று பா.ஜ.க.வினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். #SabarimalaVerdict #BJPRally
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட 50 முக்கிய கோயில்களை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம் (தேவஸ்தானம்) சார்பிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த இயலாதவாறு கேரள சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இதற்கிடையில், துலாம் மாத சிறப்பு பூஜைக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ளதால் இதுதொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக இந்த கோயிலின் தலைமை நிர்வாகிகள், தந்திரிகள் எனப்படும் தலைமை பூசாரிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றியும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.



    இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில சட்டசபையை நோக்கி இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

    திருவனந்தபுரம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த பேரணியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரும் பங்கேற்றனர்.

    கேரள மாநில பா.ஜ.க. தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி, பாரதிய தர்ம சேனா தலைவர் துஷார் வேலப்பள்ளி உள்ளிட்டோர் இந்த பேரணியில் முன்வரிசையில் அணிவகுத்து சென்றனர்.

    பேரணியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீதரன் பிள்ளை, இவ்விவகாரத்தில் கேரள மாநில அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தீர்வு காணாவிட்டால் எங்கள் போராட்டம் வேறு வடிவத்தில் தலைதூக்கும் என எச்சரித்துள்ளார்.  #SabarimalaVerdict #BJPRally
    சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு தொடர்பான மறு சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #Sabarimala #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஐயப்ப பக்தர்களின் ஆச்சாரங்களுக்கு எதிரானது என்றும், எனவே இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் ஐயப்ப பக்தர்கள், கோவில் தந்திரிகள் கோரிக்கை விடுத்தனர்.



    மேலும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

    நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த மறு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்த வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்க வக்கீல்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

    சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு தொடர்பான மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் படியும், அங்கு வழக்கு பட்டியலிட்ட பின்பு அதன்மீது விசாரணை நடைபெறும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #Sabarimala #SupremeCourt

    சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. #SabarimalaVerdict #SupremeCourt #SabarimalaReview
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சில மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனை வலியுறுத்தி இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்தது. முதல்-மந்திரி பினராயி விஜயன் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் அரசின் முடிவை ஏற்பதாகவும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தது.

    கேரள அரசின் இந்த முடிவுக்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனி ஆச்சாரம் உள்ளது. நித்திய பிரம்மச்சாரியான ஐயப்பனை இளம்பெண்கள் தரிசிப்பது மத நம்பிக்கையை குலைக்கும் செயல். அதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க முடியாது. அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. கேரள அரசுக்கு இதில் விருப்பம் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக தேவசம் போர்டு தெரிவித்தது.

    இது ஐயப்ப பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராகவும் கேரள அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

    இந்த போராட்ட அறிவிப்புக்கு சபரிமலை கோவிலுடன் தொடர்புடைய பந்தளம் ராஜ குடும்பம், சபரிமலை தந்திரிகள், ஐயப்ப சேவாசங்கம் உள்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

    காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளும் போராட்டத்திற்கு துணை நிற்பதாக அறிவித்துள்ளன. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கேரளா முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளது.

    பா.ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் நேற்று சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் பிரமாண்ட பேரணி நடந்தது.

    எர்ணாகுளம், திருப்புணித் துறாவில் ஐயப்பனின் அவதார கோவிலான தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கிய கண்டன பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூரணத்தாரா ஈசா கோவில் அருகே முடிந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சரணகோ‌ஷம் எழுப்பியபடி சபரிமலை கோவில் ஆச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது, கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடியே சென்றனர்.

    இருமுடி கட்டி மாலை அணிய மாட்டோம் என்றும் சபதம் எடுத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். கேரளாவின் பாறசாலை முதல் காசர் கோடு வரை 14 மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

    போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து போராட்டக்காரர்களையும், பந்தளம் ராஜ குடும்பத்தினரையும் சந்தித்து சமரசம் பேச முதல்-மந்திரி பினராயி விஜயன் விருப்பம் தெரிவித்தார். இது பந்தள ராஜகுடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இச்சந்திப்பிற்கு மறுத்து விட்டனர்.

    கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதாக உறுதி அளித்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வருவோம் என கூறி விட்டனர். பந்தள ராஜகுடும்பத்தின் எதிர்ப்புக்கு கேரள நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. என்.எஸ்.எஸ். எனப்படும் இந்த அமைப்பும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.



    இந்த நிலையில் கேரள ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சங்கத்தின் தலைவர் ‌ஷயாலஜா விஜயன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் அரசியல் சாசனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாக கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    சபரி மலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சீராய்வு மனு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் போது தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சபரி மலையில் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளது.  #SabarimalaVerdict #SupremeCourt #SabarimalaReview
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி வருகிற 3-ந்தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை நடத்த உள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரி கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். எனவே இக்கோவிலுக்குள் நுழைய ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

    பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதிற்குட்பட்டவர்கள் யாரும் இக்கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று இளம் வக்கீல்கள் சங்கம் உள்பட பல்வேறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்திய இளம் வக்கீல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விரிவான மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசு, மகளிர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.


    இதற்கான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று வழங்கியது. இதில், இடம் பெற்ற 4 நீதிபதிகள் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு கூறினர்.

    பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியதால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வெளியானதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ஆகம விதிகளுக்கு முரணாக அமையும் என்று கூறினர். கோவிலின் தந்திரி கண்டரரு ராஜீவரரு, பந்தளம் ராஜ குடும்பத்தினரும் தீர்ப்பு ஆகம விதிகளுக்கு முரணானது என்றனர்.

    அதே நேரம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். அதனை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

    மண்டல பூஜைக்கான விழா தொடங்க இன்னும் 45 நாட்கள் உள்ளன. அதற்கு முன்பு வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்கு ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி ஆலோசிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருகிற 3-ந்தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்பதால் அங்கு பெண்களுக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லை. சபரிமலை வரும் பெண்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுவார்கள்.

    பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை பெண்களுக்கான கழிப்பறைகளோ, தங்கும் அறைகளோ, தரிசன கியூவரிசையோ கிடையாது. இனி சபரிமலைக்கு வரும் பெண்களுக்காக அடிப்படை வசதிகள் அனைத்தையும் புதியதாக உருவாக்க வேண்டும்.

    முதலில் தனி கழிப்பறைகள், கியூ வசதி, தங்கும் அறைகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக பெண் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களில் விரதம் இருந்து இருமுடி கட்டி வருபவர்களே 18 படிகள் ஏற வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.


    இந்த நிலையில் 18-ம் படி ஏற ஆண், பெண் இருவரையும் எப்படி அனுமதிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். 18-ம் படியின் அகலம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த படியில் ஒரு நிமிடத்திற்கு 36 முதல் 50 பக்தர்கள் ஏறிச் செல்வார்கள்.

    மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில் இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு அதிகபட்சம் 92 பேராக உயர்த்தப்படும். அதற்கு மேல் பக்தர்களை அனுமதிக்க முடியாது. இனி பெண்களும் 18-ம் படி ஏற வரும்போது, அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை அளிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    சபரிமலை கோவில் தற்போது 59 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இனி பெண்களும் வந்தால் இப்போது இருக்கும் இட வசதியை அதிகரிக்க வேண்டும். குடிநீர் வசதி, பம்பை ஆற்றில் பெண்கள் குளிக்க தனி ஏற்பாடு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    இதற்கு இப்போது இருக்கும் இடத்தை காட்டிலும் கூடுதலாக 250 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று தேவசம் போர்டு கருதுகிறது. இந்த நிலத்தை சபரிமலை வனப்பகுதியில் இருந்துதான் எடுக்க வேண்டும்.

    இந்த மலைப்பகுதி பெரியார் புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்களிடம் இருந்து வனப்பகுதியை பெற அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு முன்னால் உள்ள இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட பின்பே பெண்கள் சபரிமலைக்கு சுதந்திரமாக வந்து செல்ல முடியும்.

    இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு தெரியவரும். #Sabarimala #SabarimalaVerdict #SC
    ×