search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரடி நடமாட்டம்"

    • சமையலறையில் இருந்த நல்லெண்ணெயை ருசித்த குடித்துவிட்டு, அங்குள்ள பொருட்களை சூறையாடி சேதப்படுத்தியது.
    • எங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலாவரும் கரடி தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்.

    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

    அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலைஅடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி அடுத்த ஜக்கலோடை கிராமத்துக்கு சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு கரடி வந்தது.

    அங்குள்ள வீடுகளில் உணவு கிடைக்குமா? என தேடி அலைந்து திரிந்தது. அப்போது மாசிஅம்மாள் என்பவரின் வீட்டின் முன்பு நின்ற கரடி திடீரென கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது.

    பின்னர் சமையலறையில் இருந்த நல்லெண்ணெயை ருசித்த குடித்துவிட்டு, அங்குள்ள பொருட்களை சூறையாடி சேதப்படுத்தியது.

    பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த கரடி அதிகாலை நேரத்தில் மீண்டும் வந்த வழியாக காட்டுக்குள் புறப்பட்டு சென்றது.

    அடுத்த நாள் காலையில் பொதுமக்கள் எழுந்து வந்து பார்த்தபோது மாசியம்மாள் வீட்டின் கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்த விவரம் தெரியவந்தது. சம்பவத்தன்று மாசிஅம்மாள் வீட்டில் இல்லாததால், அவருக்கு அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    எங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலாவரும் கரடி தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். இருப்பினும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • பனிக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கும் முன்னரே வனப்பகுதியில் வறட்சி தொடங்கி விடுகிறது.
    • தென்மேற்கு பருவமழை கைவிட்டதால் பசுமைக்கு திரும்ப வேண்டிய வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீரை அளித்து வனப்பகுதி அடைக்கலம் கொடுத்து வருகிறது.

    பனிக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கும் முன்னரே வனப்பகுதியில் வறட்சி தொடங்கி விடுகிறது. இதனால் வனம் படிப்படியாக அதன் இயல்பு தன்மையை இழந்து விடுகிறது. அவற்றில் உற்பத்தியாகின்ற ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து போகிறது. இதனால் உணவு, தண்ணீருக்காக அல்லல்படும் வனவிலங்குகள் வேறு வழியின்றி அடிவாரப் பகுதியான அமராவதி அணையை நோக்கி வந்து விடுகிறது.

    தற்போது தண்ணீர்-உணவுக்காக அமராவதி அணைக்கு வரும் வனவிலங்குகள் உடுமலை-மூணாறு சாலையில் உலா வருகின்றன. கடந்த சில நாட்களாக குட்டியுடன் யானை ஒன்று உலா வந்த நிலையில், இரவு நேரத்தில் கரடி ஒன்றும் உலா வருகிறது. சாலையில் வரும் வாகனங்களை கூட பொருட்படுத்தாமல் சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    தென்மேற்கு பருவமழை கைவிட்டதால் பசுமைக்கு திரும்ப வேண்டிய வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளும் வனப்பகுதிக்கு திரும்பிச் செல்ல மனமில்லாமல் அடிவாரப் பகுதியிலேயே வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு உள்ளது. எனவே சாலையை கடக்கும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • கிராம மக்கள் அச்சம்
    • ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மலையில் மான், மயில், கரடி, ஆமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    இதில் கடந்த ஆண்டு ஏலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொன்னேரி கிராமத்தில் கரடி நடமாட்டம் காணப்பட்டது.

    அப்போது விறகு சேகரிக்கு சென்ற பெண் மற்றும் முதியவரை கரடி கடித்தது. காயமடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மயில்பாறை கிராமத்தை சேர்ந்த சிலர் ஆடு மேய்ப்பதற்காக மலை அடிவாரத்திற்கு சென்றனர்.

    அப்போது முருகர் கோவில் அருகே திடீரென வந்த கரடி ஆடுகளை கடிக்க முயன்றது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த ஆடு மேய்ப்பவர்கள், பதறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவலை தெரிவித்தனர்.

    இதனால் கிராம மக்கள் மிகவும் அச்ச மடைந்து ள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மத்தான் ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • கரடி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • கரடி ஒன்று நடமாடியது, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    பன்னேர்கட்டா அருகே ஜிகினி, கல்லுபலு ஆகிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும், ஒரு கோவிலுக்கு அருகிலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று நடமாடியது, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    சமீப நாட்களாக அடிக்கடி இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.

    வனத்துறையினரும் பாதுகாப்பாக இருக்குமாறு கிராம மக்கள் மற்றும் குடியிருப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையோரத்தில் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

    ஆனைமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனசரகங்களில் யானை, புலி, கரடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக வில்லோனி, வேவர்லி, தோணிமுடி, நடுமலை, கவர்க்கல், அக்காமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் கரடிகள் நடமாட்டம் உள்ளது.

    இந்த நிலையில் ஆழியாறு-வால்பாறை சாலையில் காண்டூர் கால்வாய் கடக்கும் பகுதியில் கரடி ஒன்று சாலையோரத்தில் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியாறு அருகே வால்பாறை சாலையில் கரடி ஒன்று சுற்றி திரிவதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

    வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்வது, புகைப்படம் எடுப்பது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனவிலங்குகளை அதன் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

    வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுலா பயணிகளால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும் வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் வனச்சட்டங்களையும், விதிகளையும் மதித்து நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.
    • கரடி நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்:

    கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் பின்புறம் குரும்பபாளையம் பிரிவு செல்லும் சாலையில் குழந்தைவேல் நாச்சி அம்மாள் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உள்ளது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். அப்பகுதி மக்கள் நள்ளிரவில் கரடி நடமாடுவது குறித்து மிகவும் அச்சம் அடைந்த நிலையில் உள்ளனர். இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.

    இதனை கண்ட வனத்து றையினர் உடனே இன்று காலை அப்பகுதிக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்கள் நேரில் பார்த்ததை கூறியதை அடுத்து கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரடியின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கரடி எவ்வளவு தூரம் நடந்து சென்றது என்பதையும் சோதனை நடத்தினர். கரடியை கூண்டு வைத்து பிடிக்கலாமா அல்லது வேறு எந்த முறையில் பிடிக்கலாம் என்று தீவிர ஆய்வு செய்தனர்.

    பின்பு அப்பகுதி மக்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருட்டான இடங்களில் தெரு விளக்குகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று முறையிட்டனர். இனிவரும் காலங்களில் கரடி நடமாட்டம் இருந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    • உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
    • கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது.

    அரவேணு:

    கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

    சற்று தொலைவிலேயே அக்கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் குட்டியுடன் கரடிகள் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வருகிறோம். எனவே ஊருக்குள் குட்டியுடன் உலா வரும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • பொதுமக்கள் எந்த நேரத்தில் கரடி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வசித்து வருகிறார்கள்.
    • மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த கரடி அங்கிருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஓணிகண்டி, மட்டகண்டி பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    அவ்வாறு வனத்தை விட்டு வரும் கரடிகள் குடியிருப்புக்குள் சுற்றி திரிவதுடன், வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருக்க கூடிய அரிசி பருப்பு, மாவு, எண்ணெய் வகைகளை ருசி பார்த்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் எந்த நேரத்தில் கரடி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வசித்து வருகிறார்கள்.

    ஓணிகண்டி அண்ணா மலைப்பகுதியை சேர்ந்தவர் துரை. இவர் நேற்றிரவு வழக்கம்போல குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு விட்டு, தூங்க சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவு வேளையில் வீட்டின் சமையல் அறைக்குள் இருந்து சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் எழுந்து சென்று பார்த்தார். அப்போது கரடி ஒன்று அங்கிருந்த தின்பண்டங்களை எடுத்து ருசி பார்த்து கொண்டிருந்தது.

    இதனை கண்டதும் அதிர்ச்சியான துரை சத்தம்போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்த கரடி வீட்டை விட்டு வெளியில் வந்து அங்குள்ள புதருக்குள் சென்று மறைந்து கொண்டது. இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

    ஆனால் சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த கரடி அங்கிருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியது. இதனை கண்ட மூதாட்டி சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

    பின்னர் அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தகரத்தை தட்டியும், தீ மூட்டியும் கரடியை அங்கிருந்து விரட்டினார்கள். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வீடுகளில் கரடி புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே இந்த பகுதியில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடியை விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×