search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கதிர்காமு"

    பாலியல் புகாரில் சிக்கிய பெரியகுளம் சட்டசபை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமுவுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. #KathirKamu #MaduraiHCBench
    மதுரை:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. பெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ம் ஆண்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி, கடந்த 8-ந்தேதி தேனி அனைத்து மகளிர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன். எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.



    மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளராக உள்ளார். அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அந்த சமயத்தில் அவரை போலீசார் திடீரென கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    அதற்கு அரசு வக்கீல், இன்று (வெள்ளிக்கிழமை) வரை மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார். இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரரை தேர்தல் முடியும் வரை கைது செய்யக்கூடாது. தேர்தல் முடிந்த பின்பு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம். சம்பந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார். #KathirKamu #MaduraiHCBench
    அ.ம.மு.க. வேட்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு (வயது 61). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு டி.டி.வி அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த தேர்தலிலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீது பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

    கடந்த 14.10.2015-ம் தேதி தேனி அல்லி நகரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வந்த டாக்டர் கதிர்காமு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

    எனது முழங்கால் வலிக்கு அவரிடம் சிகிச்சைக்கு சென்றேன். அப்போது எனக்கு மயக்க ஊசி போட்டதால் நான் மயங்கி விட்டேன். அப்போது என்னை பாலியல் பலத்காரம் செய்து விட்டார்.

    இது குறித்து பின்னர் அவரிடம் நியாயம் கேட்டபோது எனது ஆபாச வீடியோவை எடுத்து வைத்துள்ளதாகவும் தான் அழைக்கும் போது ஆசைக்கு இணங்காவிட்டால் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார்.

    இதனை கூறியே என்னை பல முறை ஆசைக்கு இணங்க வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ. ஆகி விட்டார். அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு எனது ஆபாச வீடியோவை என்னிடம் கொடுத்து விடுமாறு கெஞ்சி கேட்டேன். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சென்ற போது அங்கு மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களும் என் மீது ஆசைப்படுவதாக கதிர்காமு கூறி மிரட்டினார்.

    இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

    தாமதமாக புகார் அளித்தது குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது கதிர்காமு எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் நான் அச்சத்தில் இருந்தேன். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியான பிறகு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தைரியமாக புகார் கொடுத்துள்ளேன். மேலும் எனது புகார் மனுவிலும் எனது பெயரை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு எனது உயிருக்கு பாதுகாப்பு கோரியுள்ளேன் என்றார்.

    இதனையடுத்து பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 417, 376, 505(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தேனி அனைத்து மகளிர் போலீசார் டாக்டர் கதிர்காமு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இது குறித்து கதிர்காமுவிடம் கேட்டபோது, என் மீது கொடுக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்குமார், தம்பி ஓ.ராஜா ஆகியோர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார்.
    பெரியகுளம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #AMMK #Kathirkamu
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேனி அல்லிநகரத்தில் உள்ள தனது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணை மயக்கமடைய வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து தேனி அல்லி நகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் கதிர்காமு அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் சசிகலா அணிக்கு தாவினார். இதனையடுத்து இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பெரியகுளம் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக களத்தில் உள்ளார்.

    தற்போது கதிர்காமு மீது தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் 35 வயது மதிக்கத்தக்க தன்னை கதிர்காமு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.



    அதன் பேரில் கதிர்காமு மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு 4 ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் அளிப்பதன் காரணம் குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்தே தனக்கு உயிர் பாதுகாப்பு, மான பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே கதிர்காமு தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த காட்சியில் இருப்பது டாக்டர் கதிர்காமுதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து டாக்டர் கதிர்காமு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என் மீது அளிக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் யாரையும் மிரட்டியதும் இல்லை. இது போன்ற ஒரு சம்பவமும் நடக்கவும் இல்லை. இருந்தபோதும் இந்த பொய் வழக்கை சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றார். #AMMK #Kathirkamu
    ×