search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐரோப்பிய கூட்டமைப்பு"

    பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. #Brexit #TheresaMay
    பிரசல்ஸ்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது.

    ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிய இருந்த நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் மசோதா ஒன்றை நிறைவேற்றி அதற்கு ராணி எலிசபெத்தின் ஒப்புதலையும் பெற்றனர்.

    இதனால் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களிடம் தெரசா மே கோரிக்கை வைத்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

    சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. இறுதியில், பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.  #Brexit #TheresaMay  
    பாகிஸ்தான் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய கூட்டமைப்பு கண்டிப்புடன் கூறியது. #PulwamAttack #EuropeanUnion
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இது ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.

    இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை அறிவுறுத்தின.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

    இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஐரோப்பிய கூட்டமைப்பின் துணைத்தலைவரும், வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான உயர்மட்ட பிரதிநிதியுமான பெடெரிகா மோகேரினி, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி முகமது குரேஷியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    அப்போது இருவரும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருவது குறித்து தீவிரமாக விவாதித்தனர். இருநாடுகள் இடையிலான மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி பெடெரிகா மோகேரினி வலியுறுத்தினார்.

    மேலும், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மட்டும் இன்றி, தங்கள் மண்ணில் இருக்கும் ஒவ்வொரு பயங்கரவாதிகள் மீதும் பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என அவர் கண்டிப்புடன் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதே ஐரோப்பிய கூட்டமைப்பின் கருத்தாக உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TheresaMay #Brexit #UKLeader
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது என இங்கிலாந்து 2016-ல் முடிவு எடுத்தது. அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

    இப்போது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

    அவர் இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 14-ந் தேதி ஒரு தீர்மானம் வர உள்ளது.

    இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஒன்று, இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது பிரசல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இதற்கு வழிவிட்டு பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தக் கருத்துக்கணிப்பை பர்மிங்ஹாம் பி.எம்.ஜி. ரிசர்ச் அமைப்பு நடத்தியது.
    ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். #TheresaMay #Brexit #UKLeader
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவு அளித்தனர்.

    முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார். ஆனால் இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது தெரசா மேவுக்கு சவாலாக உள்ளது.

    ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எப்படி எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

    அதாவது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின்னர் பொருளாதாரம், வெளியுறவு கொள்கை என எந்த வகையிலும் இங்கிலாந்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பான ஒப்பந்தத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நிகழ்ந்தாக வேண்டும்.

    இதற்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒப்புதலையும் பெற்றார். ஆனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் போர்க்கொடி உயர்த்தினர்.

    இதனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இது தெரசா மேவுக்கு தலைவலியாக அமைந்தது. இதையடுத்து எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என தெரசா மே வலியுறுத்தினார். ஆனால் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் தெரசா மேவின் முடிவை நிராகரித்தனர்.

    மாறாக ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் மறுபேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும்படி எம்.பி.க்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு வேறொன்றும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ காலக்கெடு விரைவில் முடிய இருப்பதால் தெரசா மே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார்.

    இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தெரசா மே நேற்று பெல்ஜியம் சென்றார். அங்கு அவர் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் கிளாட் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களை தெரசா மே வலியுறுத்துவார் என இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் உள்ள சிக்கலுக்கு தீர்வுகாண்பதே இங்கிலாந்தின் நோக்கமாக உள்ளது. இதற்காக பிரதமர் பல்வேறு வழிகளை திறந்து வைத்துள்ளார். அதே சமயம் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவருவது அல்லது புதிதாக ஒரு அம்சத்தை சேர்ப்பது என எதுவாகினும் அது சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் தெளிவாக உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TheresaMay #Brexit #UKLeader
    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து போக்குவரத்துதுறை ராஜாங்க மந்திரி ஜோ ஜான்சன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். #UKMinister #JoJohnson #Resign
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை இங்கிலாந்து நாடு எடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான முறையான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து போக்குவரத்துதுறை ராஜாங்க மந்திரி ஜோ ஜான்சன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஏற்கனவே இந்த விவகாரத்தில் பதவி விலகிய வெளியுறவு மந்திரி போரீஸ் ஜான்சனின் சகோதரர்தான் இந்த ஜோ ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரர் பதவி விலகி இருப்பதை போரீஸ் ஜான்சன் வரவேற்றுள்ளார்.

    ஜோ ஜான்சன் பதவி விலகி இருப்பது பிரதமர் தெரசா மேயுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடும் சந்தித்துப் பேசினர். இதில், பரஸ்பர வரி விதிப்பால் மோசமாகி வந்த இரு தரப்பு வர்த்தக உறவில் சமரசம் ஏற்பட்டு உள்ளது. #DoaldTrump #JeanClaude
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் வரி விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் கனடா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகின.

    மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படக்கூடிய கார்களுக்கும் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத்தக்க விதத்தில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்தது.



    இதனால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு மோசமாகி வந்தது.

    இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்து முடிந்து உள்ளது.

    அது மட்டுமின்றி இரு தரப்பு வர்த்தக உறவிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப், ஜீன் கிளாடுடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது:-

    ஐரோப்பிய கூட்டமைப்புடன் வர்த்தக தடைகளை குறைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்து உள்ளது. இரு தரப்பு வர்த்தக உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நாள் சுதந்திரமான, நியாயமான வர்த்தகத்துக்கான நல்ல நாள் ஆகும்.

    நாங்கள் இப்போது முதல் பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளோம். இது எங்கே போய் முடியும் என்பதை நாங்கள் நன்றாக அறிந்து இருக்கிறோம். அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூடுதலான இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி.) இறக்குமதி செய்யும். ஐரோப்பிய நாடுகளுடனான சேவைகள், விவசாய வர்த்தகம் அதிகரிக்கும்.

    அமெரிக்க விவசாயிகளிடம் இருந்து அதிலும் குறிப்பாக மத்திய மேற்கு பகுதி விவசாயிகளிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் மிகக்கூடுதலான அளவில் சோயா பீன்ஸ் வாங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நிருபர்களிடம் பேசும்போது, “ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருடனான பேச்சு வார்த்தை நன்றாக அமைந்தது. ஆக்கப்பூர்வமாக இருந்தது. எனது முக்கிய நோக்கம், தொழில் ரீதியிலான பொருட்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்கு உடன்பாட்டை ஏற்படுத்துவதுதான். தேசிய பாதுகாப்பு தடைகளை விரைவில் மறு மதிப்பீடு செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

    இரு தலைவர்களின் சந்திப்பால் ஏற்பட்டு உள்ள மாற்றங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு வர்த்தக அதிகாரி செசிலியா மால்ம்ஸ்டிராம் வரவேற்று உள்ளார். 
    ×