என் மலர்
நீங்கள் தேடியது "ஐஎப்எஸ் நிதி நிறுவனம்"
- போலீஸ் அதிகாரி வீட்டுக்கு நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- கட்டுக்கட்டாக பணமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏராளமான நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்.) நிதி நிறுவனம் பொதுமக்களிடம் கோடிக்கணக் கில் பணத்தை சுருட்டி ஏமாற்றியது அம்பலமானது.
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கிளைகளை அமைத்து செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் சார்பில் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 முதல் 25 சதவீதம் வரை ஒவ்வொரு மாதமும் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தையை கூறி கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதை நம்பி பொதுமக்கள் அதிக அளவில் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 84 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியை ஐ.எப்.எஸ். நிறுவனம் வாரி சுருட்டியது.
ஆனால் பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்த படி வட்டி மற்றும் முதலீட்டுத்தொகையை அளிக்காததால் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக 31 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். ஐ.எப்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏராளமான தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 49 அசையா சொத்துக்கள் மற்றும் 1.12 கோடி தங்க நகைகள் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடாக் உத்தரவின் பேரில் ஐ.எப்.எஸ். நிதிநிறுவன மோசடி தொடர்பான விசாரணையை நடத்துவதற்காக டி.எஸ்.பி. கபிலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டினார்.
அப்போது நிறுவனத்துக்கு சாதகமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் எனக்கு என்ன செய்வீர்கள்? என்று கபிலன் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது டி.எஸ்.பி. கபிலன் ரூ.5 கோடி வரையில் பேரம் பேசியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் முதல்கட்டமாக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கபிலன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இதுபொருளாதார குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் டி.எஸ்.பி. கபிலன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. கபிலன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.
லஞ்ச புகாருக்குள்ளாகி இருக்கும் டி.எஸ்.பி. கபிலன் நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்ட பொருட்கள் வைக்கும் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கட்டுக்கட்டாக பணமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து கபிலன் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி போலியான நிதி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து ஏமாற்றியது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுபோன்ற நிதி நிறு வனங்களிடம் பணத்தை பறிகொடுத்துவிட்டு என்றைக்காவது ஒருநாள் நாம் போட்ட பணத்தில் சிறு பகுதியாவது கிடைக்கும் என்று பொதுமக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
இதுபோன்ற சூழலில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உரிய விசாரணை நடத்தி நிவாரணம் பெற்றுத்தர வேண்டிய டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவரே மோசடி நிதி நிறுவனத்திடம் விலை போய் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- வெளிநாட்டு பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
- வழக்கிற்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இயக்குனர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கிண்டியில் செயல்பட்டு வந்த ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் 84 ஆயிரம் பேரிடம் ரூ.5,900 கோடி மோசடி செய்தது குறித்து பெருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு மாதம் 10 சதவீதம் வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் இதில் முதலீடு செய்தனர். இதற்கு வட்டியும் அசலும் கொடுக்காமல் வந்த புகாரை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ரூ.1.14 கோடி ரொக்கம், 791 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.121 கோடி பணம் முடக்கப்பட்டு ரூ.39 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கிற்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இயக்குனர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் தொடர்புடைய நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகவர் ஹேமந்திரகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஹேமந்திரகுமார் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்று கூறப்படுகிறது.
- ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
- ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலூர்:
வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக்கொண்டு ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.8,000 வரை வட்டியாக பணம் தருவதாக அறிவிப்பு வெளியானது.
இதற்காக அந்த நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏஜெண்டுகளை நியமித்தது. ஏஜென்டுகள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி பணத்தை வாரி குவித்தது.
குறிப்பிட்ட காலம் வரை பொதுமக்களுக்கு வட்டி பணம் வழங்கிய நிதி நிறுவனம் திடீரென பணம் தராமல் நிறுத்தியது.
இது குறித்து புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். வட மாவட்டங்களில் ஐ.எப்.எஸ். நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ. 6,000 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முக்கிய ஏஜெண்டுகள் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம், கார்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலாரில் உள்ள ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீட்டிற்கு காலை 9 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர்.
ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் இருந்து பல கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் வீடுகளில் ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
அமலாக்கத்துறை சோதனையால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதே போல் செங்குட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவன இயக்குனரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
நெமிலியை சேர்ந்த ஏஜெண்டு ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
இந்த சம்பவத்தால் வேலூரில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்






