search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலுமிச்சம் பழம்"

    • திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்ன மயிலம் என்று அழைக்கப்படும் இரட்டைமலை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலாவும், 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ந் தேதி தேரோட்டமும், 24-ந்தேதி காவடி பூஜையும் நடந்தது. 25-ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் நடந்த இடும்பன் பூஜையில் திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.

    நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார். முதல் நாள் பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் 2-ம் நாள் பழம் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் , 3-ம் நாள் பழம் 42 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், 4-ம் நாள் பழம் 19 ஆயிரம் ரூபாய்க்கும், 5-ம் நாள் பழம் 11ஆயிரம் ரூபாய்க்கும், 6-ம்நாள் பழம் 34 ரூபாய்க்கும், 7-ம் நாள் பழம் 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 8-ம் நாள் பழம் 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9-ம் நாள் பழம் 15ஆயிரம் ரூபாய்க்கும் என 9 நாள் பழங்களும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.

    இந்த பூஜையில் பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தை இல்லாத தம்பதியினர் ஈரத் துணியுடன் போட்டி போட்டு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து சென்றனர். அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது . இந்தக் கோவிலில் ஏற்கனவே ஏலத்தில் பழம் வாங்கி சாப்பிட்டு குழந்தை பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினர். கடந்த ஆண்டு முதல் பழம் 31ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9 பழங்களும் சேர்த்து 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஏலம் போயிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 1 லட்சத்து 55 ஆயிரத்து 800 ரூபாய்க்கு கூடுதலாக ஏலம் போனது . எலுமிச்சம் பழம் ஏலம் எடுக்க விரும்புவர்கள் உள்ளூர் நபர்களை வைத்தே ஏலம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. 

    • கோடை காலத்தை முன்னிட்டு எலுமிச்சம் பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்தி வருகின்றனர். எலுமிச்சை சாறு செறிந்த குளிர்ந்த நீர் அருந்தினால், உடல் வெப்பம் தணிவது மட்டுமின்றி, வயிற்றுப் பிரச்சினைகளும் சரியாகும்.

    மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பரவை காய்கறி மற்றும் பழச்சந்தைகளில் ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

    மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம் அதிகமாக விளைகிறது. எனவே வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழங்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-

    பேரையூர் தாலுகாவில் தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி சந்தையூர், சாப்டூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை பழம் சாகுபடி ஆகி வருகிறது. இங்கு விளையும் எலுமிச்சை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பேரையூரில் நடப்பாண்டு எலுமிச்சை விளைச்சல் நன்றாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120-க்கு கொள்முதல் ஆகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால் கண்மாய், கிணறுகளில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் உள்ளது.

    எனவே நாங்கள் எதிர்பார்த்ததை போல, எலுமிச்சம்பழ விளைச்சல் நன்றாக அமைந்து உள்ளது. எங்களிடம் வியாபாரிகள் தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்கின்றனர். மாட்டுத்தாவணி பரவை உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    எலுமிச்சம்பழ விளைச்சலும், விலையும் அமோகமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு வெயில் உக்கிரமாக இருப்பதால் தேவையும் சற்று அதிகமாக இருக்கும். எனவே எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×