search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச அரிசி"

    • கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
    • அரிசிக்கான தொகையானது ஜூலை 1ம் தேதி முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 5 கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கிலோவுக்கு 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும்.

    இது தற்காலிக ஏற்பாடு மற்றும் அரிசி கொள்முதல் செய்யும்வரை மாற்று வழி என்று சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.

    • மாநிலங்களிடம் இருந்து தான் மத்திய அரசுக்கு வரிகள் செல்கின்றன.
    • கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    தேர்தலின் போது காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம் கடந்த 11-ந்தேதி தொடங்கப்பட்டு விட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வருகிற 1-ந்தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 10 கிலோ ரேஷன் அரிசி வழங்கும் அன்னபாக்ய திட்டமும் அமல்படுத்தப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் மாதந்தோறும் 2.16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கர்நாடகத்திற்கு தேவையாக உள்ளது.

    இந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் அரிசி, கோதுமையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கர்நாடக அரசு, 10 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்த விடாமல் மத்திய அரசு தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரிகளுடன் சித்தராமையா பேசி வருகிறார்.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்க நாங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். அரிசி கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் மத்திய அமைப்பு என மூன்று நிறுவனங்களை நாங்கள் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். இந்த மூன்று அமைப்புகளும் மத்திய அரசுக்கு சொந்தமானவை.

    அந்த 3 நிறுவனங்களிடமும் அரிசி விலையை நாங்கள் கேட்டுள்ளோம். இந்திய உணவு கழகத்திடம் இருந்து அரிசி வாங்கினால் போக்குவரத்து செலவை சேர்த்து ஒரு கிலோ அரிசி ரூ.36.40-க்கு கிடைக்கும். ஆனால் அந்த நிறுவனம் அரிசி வழங்க முடியாது என்று கூறிவிட்டது. அதனால் அந்த மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் டெண்டர் மூலம் அரிசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி வழங்க ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்து 92 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ.840 கோடி செலவாகும். இந்த செலவை ஏற்று அரிசியை கொள்முதல் செய்து வினியோகம் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்திய உணவு கழகத்திடம் போதுமான அரிசி கையிருப்பு இருந்தாலும், அதை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

    கர்நாடக பா.ஜனதா தலைவர்கள், ஏழைகளுக்கு அரிசி வழங்க கர்நாடக அரசுக்கு தேவையான அரிசியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் எடுத்துக் கூறலாம் இல்லையா?. 8 கிலோ அரிசி வழங்கி அத்துடன் மைசூரு பகுதியில் 2 கிலோ ராகி, வட கர்நாடக பகுதியில் 2 கிலோ சோளம் வழங்கப்படும். அடுத்த 6 மாதங்களுக்கு வழங்கும் அளவுக்கு இந்த உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளது.

    பஞ்சாப் மாநில அரசுடன் தலைமை செயலாளர் பேசியுள்ளார். இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வருகிற 1-ந் தேதி முதல் 10 கிலோ அரிசி திட்டத்தை தொடங்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விஷயத்தில் யார் எவ்வளவு அரசியல் செய்தாலும், தடுக்க முயன்றாலும் நாங்கள் அதை பொருட்படுத்தாமல் 10 கிலோ அரிசியை வழங்கியே தீருவோம். ஏழைகளுக்கு அரிசி வழங்குவதில் மத்திய பா.ஜனதா அரசு அரசியல், அதுவும் விரோத அரசியல் செய்கிறது.

    மத்திய அரசு, நிலத்தில் நெல் சாகுபடி செய்து அரிசி உற்பத்தி செய்கிறதா?. அவர்கள் மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தான் கொள்முதல் செய்கிறார்கள். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி அடிக்கடி பேசுகிறார். நாம் இந்த கூட்டாட்சியில் தான் இருக்கிறோம். மாநிலங்களிடம் இருந்து தான் மத்திய அரசுக்கு வரிகள் செல்கின்றன. அதனால் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மராட்டிய முதல்-மந்திரியுடன் பேசி தண்ணீர் திறந்துவிடுமாறு கேட்பேன். முதல்-மந்திரி பதவி விஷயத்தில் எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • ஏழை மக்களுக்கு அரிசி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.
    • எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது.

    உப்பள்ளி :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டதாக அவர் சொல்கிறார். அவர் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். தற்போது அரிசி கிடைக்கவில்லை என்று காரணங்களை சொல்கிறார்கள்.

    இது காங்கிரஸ் தனது உத்தரவாத திட்டங்களில் இருந்து பின்வாங்கிவிட்டதை காட்டுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அரிசியை கொண்டு வருவதாக சித்தராமையா கூறியுள்ளார். ஏழை மக்களுக்கு அரிசி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். கர்நாடக விவசாயிகள் அரிசி கொடுக்க முன்வந்தால் அரசு அதை கொள்முதல் செய்ய வேண்டும்.

    பா.ஜனதாவினரே அரிசியை கொடுக்க ஏற்பாடு செய்யட்டும் என்று சொல்வது சரியல்ல. ஒருவேளை வருகிற 1-ந் தேதி ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசியை வழங்காவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் குதிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது. 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால் இந்த அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    சித்தராமையா காணொலி மூலம் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டார். வறட்சி உள்ள பகுதிகளில் செயல்படையை அமைக்க வேண்டும். இந்த அரசுக்கு மக்கள் மீதான அன்பு நீண்ட நாள் நீடிக்காது என்று கருத தோன்றுகிறது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சட்டசபை கூட்டத்திற்கு முன்பு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • நான் 21-ந் தேதி டெல்லி செல்கிறேன்.
    • பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

    பெங்களூரு :

    முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மின் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடக தொழில் வர்த்தக சபையினர் முழு அடைப்பு நடத்துவதாக கூறியுள்ளனர். 2 மாத நிலுவைத்தொகையுடன் இந்த மாத கட்டணம் வந்துள்ளது. அதனால் கட்டணம் கூடுதலாக இருப்பது போல் தெரிகிறது. அடுத்த மாதம் முதல் கட்டணம் குறைவாக தான் வரும். இதுகுறித்து அந்த சபையினரை அழைத்து அதிகாரிகள் பேசியுள்ளனர். அவர்கள் சமாதானம் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்குகிறோம். இதற்கு தேவையான அரிசியை வழங்குமாறு இந்திய உணவு கழகத்திடம் கேட்டோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அடுத்த நாளே தங்களால் அரிசி வழங்க இயலாது என்று கூறி கடந்த 12-ந் தேதி அரசுக்கு கடிதம் எழுதினர்.

    முதலில் அரிசி இருப்பதாக கூறிவிட்டு பிறகு இல்லை என்று கூறுவதை என்னவென்று புரிந்து கொள்வது?. அவர்கள் அரிசி கொடுப்பதாக கூறியதால் தான் நாங்கள் மத்திய மந்திரியிடம் பேசவில்லை. ஒருவேளை இல்லை என்று கூறி இருந்தால், நான் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியிடம் பேசி இருப்பேன். இது ஏழைகளுக்காக அமல்படுத்தப்படும் திட்டம். இதற்கு குறுக்கீடு செய்வது ஏன்?.

    நான் 21-ந் தேதி டெல்லி செல்கிறேன். அந்த நேரத்தில் பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். அதனால் அவரை சந்திக்கும் திட்டம் இல்லை. அவர் டெல்லி திரும்பிய பிறகு வேறொரு நாளில் நேரில் சந்தித்து பேசுவேன். தெலுங்கானா முதல்-மந்திரியிடம் பேசினேன். அவர் தங்களிடம் அரிசி இல்லை என்று கூறிவிட்டார். சத்தீஸ்கர் மாநிலம் 1½ லட்சம் டன் அரிசி கொடுப்பதாக கூறியுள்ளது. ஆந்திராவிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

    கர்நாடகத்தில் அரிசி கொள்முதல் செய்ய வேண்டுமெனில் அதன் விலை அதிகமாக உள்ளது. ராய்ச்சூரில் தான் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு ஒரு கிலோ அரிசி ரூ.55 ஆகும். இந்த விலை அதிகம். மத்திய அரசு ஒரு கிலோ அரிசி ரூ.36-க்கு வழங்குகிறது. அரிசி வழங்குவதில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மத்திய அரசிடம் பேசி கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை ஒதுக்குமாறு சொல்ல வேண்டும். அதை விடுத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    ×