search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசாணை ரத்து"

    சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad #MadrasHighCourt
    சென்னை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



    இந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை ஐகோர்ட்டில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து 8 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. வாதப் பிரதிவாதங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளனர். #SalemChennaiGreenCorridor #8LaneRoad #MadrasHighCourt
    தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டருக்கான அரசாணை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HighCourt #EggProcurement
    மதுரை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முட்டை கொள்முதல் அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    முட்டை கொள்முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.



    இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மகாதேவன் தமது உத்தரவில், அரசாணை முறையாக இல்லை என்றும், பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாகவும் கூறி, அதனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில், இதுவரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  #HighCourt #EggProcurement
    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. #SecretariatCase
    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து இந்த புதிய கட்டிடத்துக்கு தலைமை செயலகம் மாற்றப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் பழைய இடத்துக்கே தலைமை செயலகம் மாற்றப்பட்டது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரவும் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இதன்படி, நீதிபதி ஆர்.ரெகுபதி விசாரணை நடத்தினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி நீதிபதி ஆர்.ரெகுபதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில், கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனுக்கும், விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அமைக்கும் விசாரணை ஆணையம் என்பது கண் துடைப்பு நாடகம் என்றும், விசாரணை ஆணையம் அமைப்பதால், எந்த ஒரு பலனும் இதுவரை ஏற்பட்டது கிடையாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பின்னர், நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தை கலைத்து, புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், அதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தார். நீதிபதி ஆர்.ரெகுபதியும் விசாரணை ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இதுவரை நடத்திய விசாரணையின் விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய தலைமை செயலகம் கட்டிடம் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.


    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதை பார்த்த பின்னர், போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை தமிழக அரசு பரிசீலிக்காமலேயே, நேரடியாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.

    தமிழக தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டியதில் சுமார் ரூ.629 கோடி ஊழல் நடந்துள்ளது, இவ்வளவு பெரிய ஊழலை சும்மா விட்டு விட முடியாது. இந்த ஊழலுக்கு முகாந்திரம் உள்ளது என்பதால் தான் போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீதிபதி ஆர்.ரெகுபதியின் விசாரணை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் படிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார். அதில், நீதிபதி ஆர்.ரெகுபதி தன் விசாரணையை முடிக்கவில்லை. ஆதார ஆவணங்களை எல்லாம் திரட்டி, முழுமையாக விசாரணை முடிந்து, அந்த அறிக்கையை தாக்கல் செய்த பின்னரே, போலீஸ் விசாரணைக்கு மாற்ற முடியும்.

    எனவே அரைகுறை ஆவணங்களை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார். #SecretariatCase
    ×