என் மலர்
நீங்கள் தேடியது "Ulundurpet accident"
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருப்பெயர்தக்கா பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 32). இவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்கு வந்தார். இதையடுத்து ராஜீவ் காந்திக்கும், கல்பனாவுக்கும் திருமணம் நடை பெற்றது. அதன்பின்னர் ராஜீவ்காந்தி தனது மனைவியுடன் உளுந்தூர்பேட்டையில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி அவரது மனைவி கல்பனாவுடன் சென்றார். பின்னர் கல்பனாவை கள்ளக்குறிச்சியில் விட்டுவிட்டு ராஜீவ்காந்தி மட்டும் உளுந்தூர்பேட்டைக்கு பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகர் பகுதியில் ராஜீவ் காந்தி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராஜீவ்காந்தி மீது மோதியது. இதில் ராஜீவ்காந்தி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். விபத்து குறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான ராஜீவ்காந்தியின் மனைவி கல்பனா கர்ப்பிணியாக உள்ளார். திருமணமான 9 மாதத்தில் ராஜீவ்காந்தி விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் சென்னைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த டிரைவர் முருகன் (வயது 30) ஓட்டி வந்தார். பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர்.
இன்று அதிகாலை அந்த பஸ் உளுந்தூர்பேட்டை பாலி போலீஸ் சிறப்பு காவல்படை எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த பஸ் மீது தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து வந்த மற்றொரு தனியார் ஆம்னி பஸ் திடீரென பின்னால் மோதியது. இதில் 2 ஆம்னி பஸ்களும் நிலைதடுமாறி அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தன.
களியக்காவிளையில் இருந்து வந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வெங்கடேஷ், அவரது மனைவி ராணி, திருநெல்வேலியை சேர்ந்த சாலி, மதுரை ஜியா, டிரைவர் முருகன் உள்பட 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடன்குடியில் இருந்து வந்த ஆம்னி பஸ்சில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 20 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் கவிழ்ந்த 2 ஆம்னி பஸ்களும் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews