search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur suicide"

    திருப்பூரில் கள்ளக்காதலி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் தபால் நிலையம் பகுதியை சேர்ந்தவர் அனுக்குமார் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி முருகலட்சுமி (26). கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.

    இந்த நிலையில் அனுக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த  இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அனுக்குமார் அவரது தாய் பாக்கியத்திடம் நான் பழகி வரும் இளம்பெண் விவாகரத்து பெற்றுவிட்டார். அவரை எனக்கு 2-வது திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார். மகன் சொல்வதை உண்மை என்று நம்பிய பாக்கியம், மகன் மற்றும் இளம்பெண்ணை திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    இதற்கிடையே மனைவி மாயமானதாக இளம்பெண்ணின் கணவர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், அனுக்குமாருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தங்கி இருந்த அனுக்குமார், பாக்கியம் மற்றும் அந்த இளம்பெண் ஆகிய 3 பேரையும் 15 வேலம்பாளையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த பெண்ணை அவருடைய கணவருடன் அனுப்பி வைத்தனர். போலீசார் அனுக்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலியை பிரிந்த ஏக்கத்தில் அனுக்குமார் சோகத்துடன் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காங்கயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களை காப்பாற்ற சென்ற பேரன் படுகாயம் அடைந்தான்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளியங்காட்டு புதூரை சேர்ந்தவர் தங்க முத்து (60). இவரது மனைவி நாகமணி (55). தங்க முத்து கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இந்த தம்பதிக்கு சந்திரசேகரன் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி தருண் (10) என்ற மகன் உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக சந்திரசேகரன் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் அவர் தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன் சந்திரசேகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

    இதனால் தங்கமுத்துவும், அவரது மனைவி நாகமணியும் வேதனையில் இருந்தனர். தங்களது பேரன் தருணை அவர்கள் கவனித்து வந்தனர். ஆனாலும் முதுமை காரணமாக அவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால் வேதனையில் இருந்தனர். மகன் இறந்த துக்கமும் அவர்களை வாட்டியது.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் தங்கமுத்துவும், அவரது மனைவி நாகமணியும் தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தனர். தீ உடலில் பற்றி எரிந்தவுடன் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டதும் அங்கு படுத்து தூங்கி கொண்டு இருந்த தருண் ஓடி வந்தான். அவன் தனது தாத்தா-பாட்டி மீது பற்றிய தீயை அணைக்க முயன்றான்.

    அவனை இருவரும் தள்ளி விட்டனர். இதனால் தருண் சிறு தீக்காயத்துடன் தப்பினான். அவன் வெளியே வந்து சத்தம் போட்டான்.

    இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்கமுத்து- நாகமணி மீது பற்றிய தீயை அணைத்தனர். ஆனாலும் இருவரும் தீயில் கருகி பலியாகி விட்டனர்.

    இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூரில் கணவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சூர்யா (19). இவர் முதலிப்பாளையம் சிட்கோவில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் நவீன் குமார் (26) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி நவீன்குமார் - சூர்யா கடந்த மாதம் 5-ந்தேதி நண்பர்கள் முன்னிலையில் செங்கப்பள்ளி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நல்லூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.

    பின்னர் நவீன் குமார்- சூர்யா தனிக்குடித்தனம் சென்றனர். அவர்களுடன் நவீன் குமார் தாய் காளீஸ்வரியும் குடியிருந்து வந்தார். சூர்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் 3 முறை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளார்.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. வாய் தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று நவீன் குமார் வெளியில் சென்று விட்டார். வீட்டில் இருந்த சூர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று வீடு திரும்பிய நவீன் குமார் மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட சூர்யா தனது இடது கையில் கணவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் உன்னை விட்டு தனியாக பிரிந்து செல்ல மனமில்லை. நீயும் என்னுடன் வந்து விடு என எழுதப்பட்டு இருந்தது.

    சூர்யா தனது வங்கி பாஸ்புத்தகத்தில் மற்றொரு கடிதம் எழுதி இருந்தார். அதில் நவி மாமா. நீ பேசிய அந்த ஒரு வார்த்தையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் செல்கிறேன். என்னுடன் வந்து விடு என எழுதி உள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    ×