search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கள்ளக்காதலி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை
    X

    திருப்பூரில் கள்ளக்காதலி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை

    திருப்பூரில் கள்ளக்காதலி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் தபால் நிலையம் பகுதியை சேர்ந்தவர் அனுக்குமார் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி முருகலட்சுமி (26). கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.

    இந்த நிலையில் அனுக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த  இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அனுக்குமார் அவரது தாய் பாக்கியத்திடம் நான் பழகி வரும் இளம்பெண் விவாகரத்து பெற்றுவிட்டார். அவரை எனக்கு 2-வது திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார். மகன் சொல்வதை உண்மை என்று நம்பிய பாக்கியம், மகன் மற்றும் இளம்பெண்ணை திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    இதற்கிடையே மனைவி மாயமானதாக இளம்பெண்ணின் கணவர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், அனுக்குமாருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தங்கி இருந்த அனுக்குமார், பாக்கியம் மற்றும் அந்த இளம்பெண் ஆகிய 3 பேரையும் 15 வேலம்பாளையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த பெண்ணை அவருடைய கணவருடன் அனுப்பி வைத்தனர். போலீசார் அனுக்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலியை பிரிந்த ஏக்கத்தில் அனுக்குமார் சோகத்துடன் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×