என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்னூர் ஊட்டி"

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
    • கடந்த 3 நாட்களாக புலியின் நடமாட்டம் காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரை சுற்றிய வனப்பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வனப்பகுதி குறைந்து வருவதால் ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் கால்நடைகளை அடித்து கொன்றும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி விட்டும் செல்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு புலி மஞ்சூர்-ஊட்டி சாலைக்கு வந்தது. பின்னர் அங்குள்ள மின்வாரியம் அலுவலகம் பாக்குறை அருகே சுற்றி திரிந்தது. இதனை அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

    மஞ்சூர் பாக்குறை மின்வாரிய அலுவலகம் அருகே, கடந்த 3 நாட்களாக புலியின் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் நாங்கள் பீதியில் உள்ளோம். மேலும் மஞ்சூர்-ஊட்டி ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    எனவே மஞ்சூர் பகுதியில் இரவுநேரங்களில் சுற்றித்திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் அந்த புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • குன்னூர் பகுதியில் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன.
    • யானைகள் விளையாடி மகிழ்வது சுற்றுலாபயணிகளை கவர்ந்துள்ளது.

    ஊட்டி, ஜூன்.10-

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகள், வனத்தில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. கூடலூர், குன்னூர் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    தற்போது பலாப்பழ சீசன் நடப்பதால் யானைகள் பலாப்பழத்தின் வாசனை அறிந்து அவற்றை தேடி வந்து உட்கொள்கின்றன. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலா மரங்கள் உள்ளன. இவற்றில் காய்த்து தொங்கும் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன. குட்டியுடன் முகாமிட்டுள்ள யானைகள் கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு பகுதியில் சுற்றித்திரிகின்றன.

    சாலையை ஒட்டியுள்ள மண்மேட்டில் புரண்டு அந்த யானைகள் உற்சாகத்தில் திளைக்கின்றன. மேலும் ஒரு யானையை மற்றொரு யானை விரட்டியும் விளையாடிய படி உள்ளன. இந்த காட்சிகளை சுற்றுலாபயணிகள் ரசித்தபடி பார்த்து செல்கிறார்கள்.

    அவ்வப்போது அந்த யானைகள் சாலையையும் கடந்து வந்து விடுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் அந்த சாலையை கவனத்துடன் கடக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சுற்றுலாபயணிகள் ஆர்வத்தில் செல்போனில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், யானைகளுக்கு தொந்தரவு அளிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    குன்னூர்-ஊட்டி இடையே ரெயில் பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 200 பயணிகள் பயணம் செய்யலாம். இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் வழியாக இந்த மலை ரெயில் செல்வதால் இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த ரெயில் மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையே நீராவி என்ஜின் மூலமும், குன்னூர் - ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலமும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குன்னூர்-ஊட்டி இடையே ரெயில் பஸ் இயக்க சேலம் ரெயில்வே கோட்டம் தீர்மானித்தது. இதற்காக மேற்கு ரெயில்வேயில் அகமதாபாத்- குஜராத் இடையே இயக்கப்பட்டு வந்த ரெயில் பஸ் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது.

    இந்த ரெயில் பஸ் 1998-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 60 பேர் இதில் பயணம் செய்யலாம். 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. இந்த ரெயில் பஸ் சோதனை ஓட்டம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் பாதை வரை முதலில் 4,5 முறை சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ரெயில் பஸ்சில் 2 என்ஜின்கள் உள்ளது. இரு பக்கமும் டிரைவர்கள் உட்கார்ந்து இந்த ரெயிலை பஸ்சை இயக்கலாம். சோதனை ஓட்டத்தில் சேலம் ரெயில்வே டிவி‌ஷன் சீனியர் மெக்கானிக்கல் என்ஜீனியர் முகுந்தன், சீனியர் டிவி‌ஷனல் எலக்ட்ரானிக் என்ஜீனியர் அரவிந்தன், மேட்டுப்பாளையம் கோச் பொறியாளர் முகமது அஸ்ரப், குன்னூர் ரெயில்வே மேலாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் இந்த ரெயில் பஸ் திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு புதிய தொழில் நுட்பத்துடன் கண்ணை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டு குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும்.

    ×