என் மலர்
நீங்கள் தேடியது "குலதெய்வம் வழிபாடு"
- புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும்.
- செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
நாளை (அக்டோபர் 4-ந்தேதி) புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.
"உப" என்றால் "சமீபம்" என்று பொருள். "வாசம்" என்றால் "வசிப்பது" என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப்பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற் கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
- அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும்.
- உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள்.
முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் 'தில ஹோமம்', எத்தகைய ஆத்மாவையும் சாந்தி அடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு நாளைய அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.
முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு 'பித்ரு தோஷம்' ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை மட்டும் விட்டுச் செல்லக்கூடாது.
அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். ஒவ்வொரு அமாவாசையன்றும், இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.
எனவே அமாவாசை தோறும் கட்டாயம் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களுடைய சந்ததியினருக்கும் நல்ல பலன்களை வாரி வழங்கக் கூடியது ஆகும். பித்ரு தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும், நிம்மதி இன்மையும் ஏற்படும். எனவே தவறாமல் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் உங்கள் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து எளிதாக வீட்டிலேயே கூட பூஜை செய்து வழிபட வேண்டும்.
அமாவாசையில் உணவு எதுவும் உண்ணாமல் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.
அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும். வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இரு வேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
குறிப்பாக அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை நாளின் போது அசைவம் உணவு உண்ணும் பொழுது உடம்பில் ஒருவித அசவுகரியம் உண்டாகும். இது அறிவியல் ரீதியாகவும் உண்மை என்பதால் அமாவாசை தினத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.
வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அன்றைய நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிக்க வேண்டும். அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும்.
பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கவும், குலதெய்வ அருள் பெறவும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. ஒரு மண்பானையில் அல்லது செம்பு, பித்தளை கலசத்தில் தண்ணீரை வைத்து பூஜை அறையில் வையுங்கள். அதில் குலதெய்வத்தை நினைத்து ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்வது குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்கிறது. உங்களால் முடிந்தால் நைவேத்தியம் வைத்து வழிபடவும், அப்படி இல்லை என்றால் சிறிதளவு கற்கண்டு வைத்து வழிபடுங்கள்.
அமாவாசை தினத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது "ஓம் ஸ்ரீம் என்று சொல்லி உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி நமஹ" என்று சொல்லவும். அதாவது குலதெய்வத்தின் பெயர் சுப்பிரமணி என்றால் "ஓம் ஸ்ரீம் சுப்பிரமணி நமஹ" என்று 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு குலதெய்வம் என் வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். அன்று நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் சைவ உணவுகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு வாழை இலையை விரித்து அதில் சைவ உணவுகளை படையலாக போட்டு அந்த வாழை இலைக்கும் முன்பாக ஒரு சிறிய கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து அதை குலதெய்வமாகவும் நம்முடைய முன்னோர்களாகவும் பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு தேங்காய் உடைத்து பழம் வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அந்த கண்ணாடியை பார்த்தவாறு குலதெய்வத்திடம் பேசுவது போல் பேசி வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று பேச வேண்டும்.

பிறகு இந்த படையலில் இருந்து சாதத்தை சிறிதளவு எடுத்து காக்கைக்கு உணவாக வைத்துவிட்டு வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த முறையில் அமாவாசை தினத்தன்று குலதெய்வத்தை நினைத்தும் முன்னோர்களை நினைத்தும் சைவப்படையல் இட்டு வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்க்கை சிறந்து விளங்கும்.
குலதெய்வ ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே வழிபாடு செய்யலாம். அதற்கு மாலை வேலையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வ படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள் உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து விட்டு நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு உங்கள் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இப்படி பிரார்த்தனை செய்யும் நேரத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி வசி வசி என்ற வார்த்தையும் சேர்த்து சொல்லுங்கள். குலதெய்வமே தெரியாது என்பவர்கள் ஓம் குலதெய்வமே வசி வசி என்ற இந்த மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். இதை எத்தனை முறை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.
குலதெய்வம் தெரியாதவர்கள் மேல்மலையனூர் அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்யலாம். ஏனென்றால் அகிலம் பிறக்கும் முன்பு பிறந்த அங்காளம்மனே அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகிறாள் அவளே குலதெய்வங்களுக்கெல்லாம் மூல தெய்வமாக காட்சியளிக்கிறாள்.
இவ்வாறு அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்வதனால் தொட்ட காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும், தடைபட்டு வந்த சுப காரியங்கள் விரைவில் நிறைவேறும், வாழ்வில் நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்பட்டு, தோஷங்கள் நிவர்த்தி ஆகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
குலதெய்வ கோவில்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தவாறு குலதெய்வ வழிபாடு செய்து ஏதேனும் ஒரு ஏழைக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும். இவ்வாறு வழிபட குலதெய்வ கோவில் சென்று வந்த புண்ணியத்தை பெற முடியும்.
- குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும்.
குல தெய்வ வழிபாடு எப்போதும் சிறந்தது. அதிலும் பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. பவுர்ணமி வழிபாடு குடும்பத்தில் உள்ள தீய சக்திகளை நீக்கி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என்றும் பவுர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பவுர்ணமி நாளில் குல தெய்வத்தை வழிபடுவதால் உங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகும். தம்பதியினர் ஒற்றுமையாக வாழ்வர். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி வாழ்வும் சிறப்பாக இருக்கும். ஒருவருடைய வீட்டில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது. அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் குலதெய்வம் காவலாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அருளும் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொறு பவுர்ணமிக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலமிட்டு, குல தெய்வத்தின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, நெய் தீப விளக்கேற்றி குடும்ப சகிதமாக குல தெய்வத்தை மனதார வழிபடலாம். தீபமேற்றியவுடன் குல தெய்வத்தின் பெயரை 108 முறை பயபக்தியுடன் உச்சரிக்க வேண்டும். பின்னர் நைவேத்தியமாக வெண்பொங்கல் (அ) சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். படைத்த நைவேத்தியத்தை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழலாம். எளிய முறையில் இப்படி குல தெய்வ வழிபாடு செய்தாலே போதும் குல தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும்.
ஒவ்வொறு பவுர்ணமியிலும் மாலை நேரத்தில் சந்திர பகவான் தோன்றும் நேரத்தில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் வீடு மனை முதலான செல்வங்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கும்.

உங்கள் முன்னோர்கள் குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாமல் இருந்தால், அதனால் பல இன்னல்களை பிள்ளைகள் அனுபவிக்க நேரிடும். அத்தகைய குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும். ஏதேனும் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை என்றால், விடுபட்ட பவுர்ணமி தினத்தை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் தொடர்ச்சியாக குல தெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும்.
சிலருக்கு குல தெய்வமே தெரியாமல் இருக்கும் அதனால் நேர்த்திகடன் செலுத்த முடியாமல் பல இன்னைல்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பவுர்ணமி தினத்தில் தீபமேற்றி, அந்த தீபத்தை குல தெய்வமாக வழிபட, குல தெய்வ அருள் கிடைக்கும். நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கி அவர்களின் வாழ்வும் வளம் பெரும் என்பது நம்பிக்கை.
- குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.
- நம் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன், பூஜைகளை சரிவர செய்ய வேண்டும்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.
குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.

எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அப்படிப்பட்ட நம் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன், பூஜைகளை சரிவர செய்ய வேண்டும். அதை சரியாக செய்ய தவறினாலோ அல்லது மறந்து விட்டாலோ குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். குலதெய்வம் நம் குடும்பத்தின் மீது கோபமாக இருப்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
உங்கள் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்லும் போது குடும்பத்தில் இருப்பவர்கள் சிலர் உங்களோடு கோவிலுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவாகும். தடங்கல்கள் ஏற்படும். அதையும் மீறி கோவிலுக்கு சென்றாலும் அங்கே பூஜை செய்ய முடியாதப்படி தடங்கல்கள் ஏற்படும். அப்படியும் பூஜை செய்து வழிபாட்டால் அங்கேயோ அல்லது வீட்டிற்கு திரும்பி வரும்போதோ பிரச்சனை ஏற்பட்டு மனக்கஷ்டத்தோடு வரவேண்டி இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுவிட்டாலும் காயம் ஏற்படுவது போன்று ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கும். தீயசக்திகள் கனவில் வருவது போன்ற கனவுகள் ஏற்படும். வாழ்வில் தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னை வந்துக் கொண்டேயிருக்கும்.
சில நேரங்களில் தெய்வத்தின் மீது திடீரென வெறுப்புணர்ச்சி தோன்றுவது. குடும்ப உறுப்பினர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவுகள் ஏற்படுவது, மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் இருப்பது. வேலை தேடுவதில் தடைகள், தொழிலில் நஷ்டம், முன்னேற்றம் இல்லாமல் இருப்பது.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் நம் குலதெய்வம் கோபமாக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இதை தவிர்க்க நம் வீட்டில் குலதெய்வத்திற்கு என்றே ஒரு விளக்கை ஏற்றி, 'நாங்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்கு எங்களை மன்னித்து உன் சன்னதிக்கு வந்து வழிப்பட அருள் புரியுங்கள்' என்று வேண்டி வழிபடலாம். மேலும், குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபட்டு, பரிகாரங்களைச் செய்து, உங்கள் குலதெய்வத்தின் அருளைப் பெறுவது நல்லது.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும்சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்டதெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறி சொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.
இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி கால பைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்தகோரிக்கைகளையும் கால பைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் கால பைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது. இவ்வாறு செய்துவரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.
மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பேசெய்து வரவும். அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.






