search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanatana Dharma Issue"

    • தி.மு.க. ஏன் திரவுபதி முர்முக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை
    • நீங்கள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தீர்கள்.

    சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில், இவருக்கு எதிரான கருத்துக்கள் வலுத்து வருவதோடு, இவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது தான் சனாதன தர்மத்திற்கு சமீபத்திய உதாரணம்," என்று தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கு பதில் அளித்த பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, தி.மு.க. ஏன் திரவுபதி முர்முக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    "பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கட்சி ஏன் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை? நீங்கள் திரவுபதி முர்முவுக்கு எதிராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தீர்கள், அவர் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்? இந்த நாட்டின் குடிமக்களாக நாங்கள் அவருக்கு வாக்களித்தோம், அதுதான் சனாதன தர்மம், நீங்கள் ஏன் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை," என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

    "சனாதன தர்மத்தை நம்பும் நாங்கள், எல்லோரும் சமம் என்று நினைப்பதால் தான் நாங்கள் அவருக்கு வாக்களித்தோம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எங்களிடம் இருந்து சனாதன தர்மத்தை கற்றுக் கொள்ளுங்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
    • இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்ப பா.ஜ.க. முயற்சி.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி ஆகும்," என்று தெரிவித்தார்.

    சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தனது கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பாா.ஜ.க.வினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்."

    "எதுவும் மாறக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதே சனாதனம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்கக்கூடாது என்று கூறினார்கள், பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று கூறினார்கள், கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்றார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். என்ன வழக்குப் போட்டாலும் அதை சந்திக்க தயார்," என்று தெரிவித்தார். 

    ×