search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy anandan"

    சென்னையில் காவலரை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ ரவி, ஆனந்தன் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் ரோந்து பணிக்குச் சென்ற காவலர் ராஜவேலுவை தாக்கிய ஆனந்தன் என்ற ரவுடி கடந்த 3ஆம் தேதி அடையாறு அருகே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த என்கவுண்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.


    அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி

    இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரவுடி ஆனந்தன் இல்லத்தில் இறுதி காரிய நிகழ்ச்சி நடந்தது. அதில், விருகம்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி கலந்து கொண்டு ஆனந்த் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ஆனந்தனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
    போலீஸ்காரரை கத்தியால் தாக்கிய ‘எல்லோரையும் சுடாமல், என் கணவரை மட்டும் சுட்டது ஏன்?’ என்று ரவுடி ஆனந்தனின் காதல் மனைவி ரஷிதா கண்ணீருடன் கேள்வி எழுப்பினார். #ChennaiEncounter
    சென்னை:

    போலீஸ் என்கவுண்ட்டருக்கு பலியான ரவுடி ஆனந்தனுக்கு ரஷிதா(வயது 24) என்ற மனைவியும், 4 வயதில் அவினாஷ் மகனும், நிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தன் ரஷிதாவை காதலித்து கரம் பிடித்தார்.

    ரவுடி என்றாலும் ஆனந்தனை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் ரஷிதா வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தன் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான தகவல் கேட்டு ரஷிதா அதிர்ச்சி அடைந்தார்.

    தனது கணவர் ஆனந்தன் ‘என்கவுண்ட்டர்’ செய்யப்பட்டது குறித்து ரஷிதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சம்பவத்தன்று எனது கணவர் ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சீனு, ஸ்ரீதர், அரவிந்தன் உள்பட 10 பேரும் அந்த போலீஸ்காரரை (ராஜவேலு) அடித்து உதைத்தனர். 5 பேர் கையில் கத்தி இருந்தது. 5 பேரும் அந்த போலீஸ்காரரை தலையிலேயே குத்தி தாக்கினர். நான் என் கணவரை தடுக்க முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை.



    என் வீட்டுக்காரர் மட்டும் தாக்கவில்லை. கத்தி வைத்திருந்த 5 பேரை தவிர மற்றவர்கள் அந்த போலீஸ்காரர் கை, கால்களை பிடித்துக்கொண்டனர். அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியதை நானே பார்த்தேன். எல்லாரும் இக்காட்சியை கண்டு பயந்து நடுங்கினர்.

    ஆனால் இந்த சம்பவத்துக்கு என் கணவரை மட்டும் சுட்டு கொன்றுவிட்டனர். நியாயப்படி பார்த்தால் அந்த 5 பேரையும் சுட்டிருக்கவேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiEncounter
    போலீஸ் என்கவுண்ட்டரில் பலியான ரவுடி ஆனந்தன் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று நடந்தது.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் போலீஸ்காரர் ராஜவேலுவை (வயது 35) அரிவாளால் வெட்டிய வழக்கில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த 9 ரவுடிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதில் ஆனந்தன் (25) என்ற ரவுடி, போலீஸ்காரர் ராஜவேலுவின் ‘வாக்கி-டாக்கி’யை திருடி தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள புதர் பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் ரவுடி ஆனந்தனை மட்டும் தனியாக போலீஸ் ஜீப்பில் தரமணி பகுதிக்கு அழைத்து சென்றனர்.

    சம்பவ இடத்தில் ‘வாக்கி-டாக்கி’யை எடுக்கும்போது, ரவுடி ஆனந்தன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவின் கையை வெட்டினார். பின்னர் உதவி கமிஷனர் சுதர்சனத்தையும் தாக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது ‘என்கவுண்ட்டர்’ பிரயோகம் நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சுதர்சன் ரவுடி ஆனந்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது இடதுபக்க மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் பலியானார்.

    இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவோடு இரவாக அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டது.


    ரவுடி ஆனந்தன் உடலை பார்ப்பதற்காக வந்த மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன்


    தமிழகத்தில் நடைபெறும் ‘என்கவுண்ட்டர்’ சம்பவங்களை பொறுத்தவரையில் அரசு சார்பில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதன்படி ரவுடி ஆனந்தன் என்கவுண்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் நியமிக்கப்பட்டார்.

    அவர் உடனடியாக விசாரணை களத்தில் இறங்கினார். தரமணியில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தை நேற்று காலை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மதியம் 12.20 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த ரவுடி ஆனந்தன் உடலை வந்து பார்வையிட்டார். ஆனந்தன் உடலை அவரது சகோதரர் அருண், சித்தப்பா மனோகரன் ஆகியோர் மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் அடையாளம் காட்டினார்.

    பின்னர் ஆனந்தன் உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்திருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக முதலில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கப்பட்டது. இதில் அவரது இடது பக்க மார்பு பக்கத்தின் உள்ளே ஒரு குண்டு மட்டும் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரவுடி ஆனந்தனின் பிரேத பரிசோதனை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை நடந்தது. மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் முன்னிலையில் உடல்கூறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செல்வநாயகம், டாக்டர் குகன் ஆகியோர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனையின்போது ரவுடி ஆனந்தன் உடலை துளைத்திருந்த துப்பாக்கி குண்டு வெளியே எடுக்கப்பட்டு, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ரவுடி ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனையையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீடு அமைந்துள்ள ராயப்பேட்டை வி.எம்.தர்கா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை வளாகம், ராயப்பேட்டை போலீஸ்நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
    ×