search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry girl murder case"

    • சிறுமி தினமும் நாய்க்கு நூடுல்ஸ் வைப்பது போல் ஓட்டலில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து வைத்தும் ரோசி சாப்பிடவில்லை.
    • கடந்த 2-ந்தேதி முதல் எதை வைத்தாலும் சாப்பிடாமல் நாய் மிகவும் மெலிந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    சிறுமி ஆசைப்பட்டதால் அவரின் தந்தை சிப்பிப்பாறை நாய் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    அதற்கு 'ரோசி' என பெயரிட்டு வளர்த்து வந்த சிறுமி தினமும் நாய்க்கு உணவு வைத்து விட்டு தான் சாப்பிடுவாள்.

    மேலும் சிறுமிக்கு விருப்பமான நூடூல்சை நாய்க்கும் கொடுத்து பழகியுள்ளார். தினமும் இரவு நாய்க்கு சிறுமி நூடூல்ஸ் வைப்பார்.

    சிறுமி இறந்த 2-ந்தேதி முதல் வாய் இல்லாத ஜீவனான அந்த நாய் உணவு உட்கொள்ளாமல் சிறுமியின் வீட்டையே சுற்றி வருவதும் இரவில் அழுவதுமாக உள்ளது. சிறுமி தினமும் நாய்க்கு நூடுல்ஸ் வைப்பது போல் ஓட்டலில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து வைத்தும் ரோசி சாப்பிடவில்லை.

    கடந்த 2-ந்தேதி முதல் எதை வைத்தாலும் சாப்பிடாமல் நாய் மிகவும் மெலிந்து விட்டது.

    சிறுமியை பிரிந்துள்ள நாய்க்கு ஆதரவாக இருக்கும் அந்த பகுதி இளைஞர்கள் யாரை பார்த்தாலும் குரைக்கும். இந்த நாய் கடந்த ஒரு வாரமாக சத்தமின்றி அமைதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    இரவு நேரங்களில் நாய் அழுவது அப்பகுதி மக்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு அ.தி.மு.க., மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது.

    இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்தனர். இதனால் ஓட்டல்கள் மற்றும் சிறிய பெட்டி கடைகள் கூட திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வாசலில் உள்ள உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவர். நேற்று பந்த் போராட்டம் காரணமாக அந்த உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.

    இதை அறிந்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் இணைந்து உணவு தயாரித்து ஆஸ்பத்திரி எதிரில் உணவுக்காக தவித்த நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    மனித நேயமிக்க போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

    • பஸ்கள் இயங்காத காரணத்தினால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தனர்.
    • கூடுதல் தொகை என்றாலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தனர்.

    கடலூர்:

    புதுச்சேரியில் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இருந்தபோதும் கடலூரில் இருந்து கன்னியகோயில், மகாத்மா காந்தி, ரெட்டிச்சாவடி வரைக்கும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது.

    பஸ்கள் இயங்காத காரணத்தினால் இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தனர். இதில் கன்னியகோவிலுக்கு 30 ரூபாயும், மகாத்மா காந்தி கல்லூரி வரை 50 ரூபாயும், ரெட்டிச்சாவடி வரை 80 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு பயணிகளை ஏற்றி சென்று வருவதாக கூறப்படுகிறது.

    ஏராளமான பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் கூடுதல் தொகை என்றாலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர்.
    • பாதுகாப்பு பணியில் குறைவாவே போலீசார் இருந்தனர். இதனால் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்ய காரணமான போதைப்பொருளை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் இன்று நடந்தது.

    பந்த் போராட்டம் அறிவித்த இந்தியா கூட்டணி கட்சியினர் காலை 10 மணியளவில் ராஜா தியேட்டர் சந்திப்பில் ஒன்று கூடினர். அங்கு புதுவை அரசுக்கு எதிராகவும், முதலமைச்சரும், அமைச்சரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஒரு சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென இந்தியா கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, திமுக நிர்வாகிகள் கார்த்திகேயன், சண்.சண்முகம், பிரபாகரன், சக்திவேல், தியாகராஜன், கலியகார்த்திகேயன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலம் நேரு வீதியில் ஆக்ரோஷமாக வந்தது. ஊர்வலத்தை நேருவீதி, மிஷன்வீதி சந்திப்பில் பேரிகார்டு அமைத்து போலீசார் தடுத்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன் வீதியில் திரும்பினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அவர்களை தள்ளி விட்டு, ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன்வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.


    அங்கு போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் குறைவாவே போலீசார் இருந்தனர். இதனால் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலீசார் உட்பட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆனாலும் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், திருநங்கைகள் சிலர் கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.

    அவர்களை போலீசார் துரத்தி பாரதிதாசன் சிலை அருகே தடுத்து பிடித்தனர். பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை நோக்கி செல்ல விடாமல் தடுக்கும் வகையில் சுற்றி வளைத்தனர். திடீரென மீண்டும் அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஓடினர். சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர்.

    கவர்னர் மாளிகை வாசலில் நின்று அவர்கள் கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை துரத்திப் பிடித்து கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கவர்னர் மாளிகை வாசல், சுற்றுப்புற பகுதிகளில் களேபரமாக இருந்தது. இதையடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர். வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 திருநங்கைககளுக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. கைது செய்தோரை போலீசார் வாகனங்களில் ஏற்றி கோரிமேடு கொண்டு சென்றனர்.

    • ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது.
    • இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சிறுமி 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமியின் உடல் முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு சிறுமியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர், சிறுமியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.


    வீட்டில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலமானது பாப்பம்மாள் கோவில் மயானத்தை அடைந்ததும் சிறுமியின் குடும்ப முறைப்படி சடங்கு செய்யப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது சிறுமி பயன்படுத்திய புத்தகப் பை, பொம்மை, உடைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    • சந்தேகத்தின் பேரில் பிடித்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யாமல் மேலோட்டமாக விசாரித்துள்ளனர்.
    • அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சிறுமி 2-ந்தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    சிறுமி மாயமான தினத்தன்று மாலையே சோலை நகர் மற்றும் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் முதலில் அலட்சியமாக விசாரணையை தொடங்கியதாக கூறப்படுகிறது. 2-வது நாளில் சிறுமியின் வீட்டை சுற்றியே தேடினர். மறுநாள் மோப்ப நாய் வரவழைத்து தேடும் பணிநடந்தது. மோப்பநாய் சிறுமியின் வீட்டில் இருந்து சிறிது துாரம் சென்று நின்று விட்டது.

    சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி கண்ணதாசன் வீதியில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்துள்ள வீட்டில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் தானாக அழிந்துவிட்டது.

    அழிந்துவிட்டதாக கூறப்பட்ட சி.சி.டி.வி.யின் ஹார்டு டிஸ்க் அழிக்கப்பட்ட மூலம் காட்சிகளை மீண்டும் ரெக்கவரி செய்து பார்த்திருந்தால் அன்றே கொலை குற்றவாளிகளை கைது செய்திருக்கலாம். ஆனால் அதில் போலீசார் கோட்டை விட்டதாக கூறப்படுகிறது.

    அதுபோல் சந்தேகத்தின் பேரில் பிடித்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யாமல் மேலோட்டமாக விசாரித்துள்ளனர்.

    இதனால் உண்மை வெளியே தெரியவில்லை. அதில் காலதாமதம் ஏற்பட்டது. சிறுமி மாயமான இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு அப்பால் உள்ள சி.சி.டி.வி.க்களில் சிறுமி குறித்து எதுவும் பதிவாகவில்லை என்பதால் சிறுமி வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர்.

    3-வது நாள் சிறுமி இறந்திருக்கலாம் என கருதிய போலீசார், அங்குள்ள செப் டிக் டேங்க், குடிநீர் தொட்டி, பிரிட்ஜ்களில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போதும் சிறுமியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    4-வது நாள் மதியம் 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் உடல் அழுகிய நிலையில், கழிவுநீர் கால்வாயில் இருந்து சிறுமியின் உடல் கட்டப்பட்ட மூட்டை வெளியே வந்தது. துர்நாற்றம் காரணமாக சிறுமி உடல் மிதப்பது வெளியே தெரிந்தது. அதன் பிறகே போலீசார் உடலை கண்டுபிடித்தனர். சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட தகவலும் வெளியானது.

    இவை அனைத்தும் சிறுமி மாயமான வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திலே நடந்து முடிந்து விட்டது.

    சிறுமி மாயமான 2-ந்தேதி மதியம் முதல் 5-ந்தேதி வரை 4-வது நாளில் சிறுமியை பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    சிறுமி மாயமான அன்றே அப்பகுதியில் யார் கஞ்சா பழக்கம் உள்ளவர்கள். யார்? யார்? சிறுமியிடம் நெருங்கி பழகுபவர்கள் என விசாரணையை தொடங்கி இருந்தால் சிறுமியை முதல் நாளிலே கண்டு பிடித்திருக்கலாம்.

    அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    கொலை நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் மிக்க பகுதி. அருகருகே வீடுகள் உள்ளது. எப்போதும் சாலையில் மக்கள் அமர்ந்திருப்பர். இந்த பகுதியிலேயே துப்பு துலக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டதை காட்டுகிறது.

    கொலையாளிகளும் சிறுமி மாயமான நாள் முதல் சகஜமாக வெளியில் நடமாடியுள்ளனர்.

    • சிறுமி கொலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விளக்கம் அளித்தார்
    • வாட்ஸ்-அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை டிஜிபி சீனிவாஸ், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார்.

    இவ்வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநர், டிஜிபி-யிடம் கேட்டறிந்தார்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க டிஜிபி-யிடம் துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்.

    ×