search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "policeman attack"

    • வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.
    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அருவங்காடு:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சண்முக பிரியன் (வயது 28).

    இவர் நேற்று பகல் முழுவதும் சேலாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். மாலையில் பணியை முடித்து விட்டு, அங்கிருந்து குன்னூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிரே கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது. இதனை பார்த்த சண்முகபிரியன், தனது மோட்டார் சைக்கிளை திருப்பி, வேகமாக சென்ற காரினை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    காரில் இருந்தவரிடம் அதிவேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை வேகமாக இயக்கி செல்கிறீர்கள் என கேட்டார்.

    ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.

    இதுகுறித்து சண்முகபிரியன் கொலக்கொம்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலாஸ் பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(38) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் பூ மற்றும் பழக்கடை நடத்தி வந்துள்ளார்.

    மேலும் இவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி வந்ததும், தட்டிக்கேட்ட போலீஸ்காரரை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அப்துல் காதர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் பேசியது, மதுபோதையில் வாகனம் ஓட்டியது, கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
    • வீட்டில் திடீரென லைட்டை அணைத்து விட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புது கொத்துக்காடு என்ற பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கடத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீஸ்காரர்கள் அன்பழகன், வேல்முருகன் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்பொழுது அந்த வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் திடீரென லைட்டை அணைத்து விட்டனர். பின்னர் வீட்டின் வெளியே கூடியிருந்தவர்கள் திடீரென போலீசாரை சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டு மற்றும் அதில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக கடத்தூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (28), துரைசாமி (54), குமார் (27), சுரேஷ் (30), பிரபு (28), ராமசாமி (38), சந்திரசேகர் (32), பழனிச்சாமி (54), ஆறுமுகம் (50), வெள்ளியங்கிரி (40), முருகன் (35), பழனிச்சாமி (35), வசால் (30), ராதா (35), பொன்னுச்சாமி (40) ஆகிய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரை சூதாட்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேச்சேரி அருகே திருவண்ணாமலை போலீஸ் ஏட்டுவை அடித்து, உதைத்தது தொடர்பாக 2 பேர் கைதாகியுள்ள நிலையில் 2 பேர் தப்பி ஓடியுள்ளனர்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 54). இவர் திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார்.

    இவர் கடந்த ஒரு வருடமாக பணிக்கு செல்லாமல் விடுமுறையில் வீட்டில் இருந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இவருடைய வீடு அருகே உள்ள பிள்ளையார் கோவிலில், வெள்ளார் பகுதியை சேர்ந்த ரமேஷ் (34), மேச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் (33), ஆட்டுக்காரனூர் சரவணன் (42) உள்பட 4 பேர் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சென்று ஏட்டு பழனிசாமி பேசியபோது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று பழனிசாமி வீட்டில் இருந்தபோது, அவர்கள் 4 பேரும் திடீரென வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசி பழனிசாமியை அடித்து உதைத்தனர்.

    சத்தம் கேட்டு உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை கண்டதும் ரமேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேரும் மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    காயம் அடைந்த ஏட்டு பழனிசாமி சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவர் கொடுத்த புகாரின்பேரில் மேச்சேரி போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இதையடுத்து மேட்டூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்பு 2 பேரையும் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆட்டுக்காரனூர் சரவணன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் முத்துக்குமாருக்கும், இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்ற சட்டக்கல்லூரி மாணவர் சரவணனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் முத்துக்குமாரை, சரவணன் சரமாரியாக தாக்கினார். ஹெல்மெட்டால் தலையில் ஓங்கி அடித்தார். இதில் முத்துக்குமாரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் முறிந்தன.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கீழ்ப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீஸ்காரர் முத்துக்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவர் சரவணன் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    சென்னை ராயப்பேட்டையில் போலீஸ்காரர் மீது ரவுடி கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 6பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 10 மணி அளவில் தகவல் வந்தது.

    இதனையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஏழுமலை உடனடியாக அங்கு விரைந்து சென்றார்.

    அப்போது அங்கு சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர் ஏழுமலை அவர்களை எச்சரித்தார். உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் திடீரென ஏழுமலையை தாக்கியது. அவரை பார்த்து தனியாகத்தான் வந்துள்ளான். போட்டு தள்ளுங்கடா என்று கூறிய படியே போலீஸ்காரர் ஏழுமலையை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.

    அவர்களிடம் இருந்து ஏழுமலை தப்பிக்க முயன்றார். ஆனால் விடாமல் அக்கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி அரவிந்தன் போலீஸ்காரர் ஏழுமலையை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் அவரது தலையில் 16 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இடது காது, கன்னம் ஆகிய இடங்களிலும் வெட்டு விழுந்தது. உடனடியாக ரவுடி அரவிந்தனும் கூட்டாளிகளும் தப்பி சென்று விட்டனர்.

    இதனை தொடர்ந்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் ஏழுமலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இச்சம்பவம் தொடர்பாக ரவுடி அரவிந்தன் அவனது கூட்டாளிகள் ஜிந்தா, அஜித், வேல்முருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Tamilnews
    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கியுள்ளார். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault

    காந்திநகர்:

    இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் விளையாட தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை அணி மும்பையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. 

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜா, தனது மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிர் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து ஜடேஜா மனைவி காரை விட்டு இறங்கினார்.

    அப்போது ஆத்திரமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை தடுக்கும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார்.

    இதுகுறித்து விவரம் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ×