search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people attack"

    கிருமாம்பாக்கம் அருகே சொத்து தகராறில் தாய்- மகனை தாக்கிய உறவினர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது தம்பிகள் ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ். இவர்கள் 3 பேருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் 3 பேருக்கும் பொதுவான இடத்தில் இருந்த வாழை மரங்கள் புயல் காற்றினால் சாய்ந்து போனது. இதனை நாகராஜனின் மகன் ராஜேந்திரன் (வயது 24) அப்புறப்படுத்தினார்.

    அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதில், ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரனும், கிருஷ்ணராஜும் சேர்ந்து ராஜேந்திரனை கையாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் ராஜேந்திரனின் வலது கையை கடித்து காயப்படுத்தினர்.

    இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் ரவிச் சந்திரனும், கிருஷ்ணராஜும், ராஜேந்திரனின் தாய் கமலத்தை தாக்கி அங்கிருந்த குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தினர்.

    இதுபற்றி ராஜேந்திரன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரன், மற்றும் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கொல்கத்தா நகரின் தெற்கு பகுதியில் உள்ள பள்ளியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். #KolkataSchool
    கொல்கத்தா:

    கொல்கத்தா நகரின் தெற்கில் உள்ள தக்கூரியா பகுதியில் சிறுமிகள் மட்டும் பயிலும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் யூ.கே.ஜி. வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுமி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு போக மாட்டேன் என்று அழுது ரகளை செய்து வந்தாள்.

    அதற்கான காரணத்தை சமீபத்தில் அறிந்த பெற்றோர் அந்த சிறுமி கூறியதை கேட்டு ஆத்திரமும், ஆவேசமும் அடைந்தனர். அப்பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் கடந்த மாதம் 26-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவள் கூறியதை கேட்ட பெற்றோரும், உறவினர்களும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இன்று காலை அந்த பள்ளியை முற்றுகையிட்டனர்.

    சிறுமியால் குற்றம்சாட்டப்படும் ஆசிரியரை பணிநீக்கம் செய்வதுடன் அவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குள் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டதால் அவ்வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமாதானமாக பேசி அவர்களை கலைந்து போகுமாறு தெரிவித்தனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து போக மாட்டோம் என அவர்கள் மறுத்து விட்டனர்.

    இதைதொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பெண்கள் என்றுகூட கருதாமல் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஓரிரு பெண்களின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழியும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.

    தடியடிக்கு பின்னர் அப்பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர். #KolkataSchool
    கொடைக்கானல் அருகே பாதை பிரச்சினையில் 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 22). தனது உறவினர் அமுதாவின் தோட்டத்துக்கு சென்றுள்ளார். பூம்பாறை பகுதியைச் சேர்ந்த பஞ்சம்மாளுக்கும், அமுதாவின் மகன் விஜய்க்கும் பொதுப்பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக பஞ்சம்மாளும், விஜயும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை பாண்டியராஜன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஞ்சம்மாள் அவரது கணவர் தனபால் மற்றும் உறவினர்கள் அரிவாள், கம்புகளுடன் வந்து பாண்டியராஜன் தரப்பை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    பின்பு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டியராஜன், அமுதா மற்றும் விஜயை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் கொடைக்கானல் மற்றும் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    இது குறித்து கொடைக்கானல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பஞ்சம்மாள், தனபால் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    திருவாரூரில் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் ராஜகணபதி (வயது 26). இவரும் குடவாசலை சேர்ந்த மாரிமுத்து (30) என்பவரும் இருசக்கர வாகன பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த பைனான்ஸ் நிறுவனம் மூலம் எண்கண்ணை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார். அவர் அதற்கு செலுத்த வேண்டிய 4 மாத தவணை தொகையை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் மணிகண்டன் நேற்று திருவாரூரில் உள்ளது தனது நண்பர் ஜெயராஜ் என்பவர் பெட்டி கடைக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற ராஜகணபதியும், மாரி முத்தும், மணிகண்டனிடம் பணத்தை கட்டும்படி கூறியுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மணிகண்டனும், ஜெயராஜும், ராஜகணபதியையும் மாரிமுத்துவையும் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபற்றிய புகாரின்பேரில் திருவாரூர் டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரோண்யா வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தார். மேலும் தலைமறைவான மணிகண்டனை தேடி வருகிறார்.

    ×