search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mayana kollai"

    • பக்தர்கள் பலர் கோழி, ஆடு ஆகியவற்றை கடித்து ரத்தத்தை உறிஞ்சினர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மேள, தாளம் முழங்க அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றுக்கு சென்றார். இந்த ஊர்வலத்தில் பலர் சாமி வேடமணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து வெள்ளாற்றில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் பலர் கோழி, ஆடு ஆகியவற்றை கடித்து ரத்தத்தை உறிஞ்சினர். மேலும் ஆடு, கோழியின் ரத்தத்தை சாதத்தில் கலந்து அதனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் குழந்தை பாக்கியம் இல்லாத பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு ரத்தம் கலந்த சாதத்தை போட்டி போட்டு வாங்கி சாப்பிட்டனர். இது தவிர சாமி வேடம் அணிந்து வந்தவர்களிடம் பலர் முறத்தால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில், மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்கா ளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு சென்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில், மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, ஏற்காடு ஜெரினாகாடு புது மயானத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து, மேள தாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

    இந்த சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்கா ளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு சென்றனர். அப்போது வழிநெடுக திரளான மக்கள் நின்றுகொண்டு, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், சாமியாடி வந்த பக்தர்களிடம் ஆடு, கோழிகளை கொடுத்தனர்.

    அதனை வாங்கிய பக்தர்கள், ஆட்டின் குரல் வளையை கடித்து ரத்தம் குடித்தும், கோழியை வாயில் கவ்வியபடியும் சுடுகாடு நோக்கி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • புதன் கிழமை தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.
    • 24-ந்தேதி மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 2-ம் நாள் திருவிழாவான மயானக்கொள்ளை நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷமான அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். காலை 9.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மயானம் நோக்கி புறப்பட்டார்.

    பின்னர் பூசாரிகள் பிரம்ம கபாலத்தை (கப்பறைமுகம்) எடுத்துக் கொண்டு ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். அங்கு மயானக்காளி முன்பு பக்தர்கள் தங்களது வயல்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சுண்டல், கொழுக்கட்டை போன்றவைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி இருந்தனர். உற்சவ அம்மனுக்கு தீபாராதனை காண்பித்ததும், பக்தர்கள் செலுத்தி இருந்த பொருட்களை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், தீராத நோய் குணமாகும் என்பதும் ஐதீகம். எனவே அங்கு கூடியிருந்த பக்தர்கள் போட்டி போட்டு அந்த பொருட்களை பிடித்து சாப்பிட்டனர். இதுவே மயானக்கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.

    தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பித்தவுடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் அம்மனை வேண்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். மேலும் சிலர் கோழியை கடித்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதேபோன்று திருமணம் நடக்கக்கோரியும், ஏற்கனவே வேண்டுதலின்படி திருமணம் நடைபெற்றதற்காக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும் பெண்கள், கூரைப்புடவை அணிந்து வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அதேபோன்று குழந்தைகள் பலரும் அம்மன் வேடம் அணிந்து வந்திருந்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவின் 3-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தங்க நிற பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (புதன் கிழமை) தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.

    • 20-ந்தேதி மகா கும்பாபாளையம் உற்சவம் நடக்கிறது.
    • 24-ந்தேதி சாந்தி அபிஷேகம் நடக்கிறது.

    சித்தூர் நகரில் சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயானக் கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் மயானக் கொள்ளை திருவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இதுகுறித்து கோவில் தர்மகத்தா கே.எம்.குமார் கூறியதாவது:-

    சித்தூர் நகரம் குறவப்பாநாயுடு தெருவில் சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 220 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியதாகும். அந்தப் பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயானக் கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். மயானக் கொள்ளை திருவிழா 190 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை நடக்கிறது. 19-ந்தேதி காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை, சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு அங்காள பரமேஸ்வரியம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி சித்தூரில் உள்ள நீவா நதிக்கு செல்கிறார். அங்கு நடக்கும் மயானக் கொள்ளை திருவிழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    20-ந்தேதி மாலை 6 மணிக்கு மகா கும்பாபாளையம் உற்சவம் நடக்கிறது. அன்று இரவு அம்மன் குறத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    விழாவில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் குறைகளை அம்மனிடம் தெரிவித்து அரிசியை காணிக்கையாக வழங்குவார்கள்.

    24-ந்தேதி காலை 7 மணிக்கு சாந்தி அபிஷேகம், காலை 10 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு அரிசி, விபூதி, குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மயானக் கொள்ளை திருவிழா நடப்பதால் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கோவில் அர்ச்சகர் பி.குமார் உடனிருந்தார்.

    பெண்ணாடம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பெண்ணாடம் மீனவர் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மயானக்கொள்ளை திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் ஊர்வலமாக வெள்ளாற்றங்கரை மயானத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு மயானக்கொள்ளை நடைபெற்றது. முன்னதாக பொதுமக்களை முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
    மாசி மாதம் சிவராத்திரி பண்டிகையை தொடர்ந்து புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    மாசி மாதம் சிவராத்திரி பண்டிகையை தொடர்ந்து புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    தட்சனின் யாகத்தில் விழுந்த தாட்சாயினி ஆக்ரோஷ ரூபம் கொண்டு எழுந்த வடிவமே அங்காளம்மன் என்றும், அவளை அடக்கி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் விடுவித்து மயானத்தை சூறையாட சிவன் அனுமதித்தார் என்று புராணக்கதைகள் கூறுகிறது.

    பிரம்மஹத்தி தோஷம்

    ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன் திலோத்தமை என்ற தேவ மங்கையின் அழகில் மயங்கி அவளை துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்க பிரம்மனின் ஆணவத்தை அழிக்க விஷ்ணுவின் ஆலோசனைப்படி பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் வெட்டி எறிந்தார். அது சிவபெருமானின் கைகளில் ஒட்டிக்கொண்டது. எவ்வளவோ முயன்றும் அதை சிவபெருமானால் தட்டிவிட முடியவில்லை.அதனை தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

    அதனையறிந்த பிரம்மனின் மனைவியான சரஸ்வதி, சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல வடிவத்தையும் அடைய சாபமிட்டார். அதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், நீ மலையரசன் பட்டினத்தில் (மேல்மலையனூர்) பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என வழிகாட்டினார். அகோர உருவம் கொண்ட பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள்.

    மயான கொள்ளை

    அந்த சமயத்தில் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தியானம் செய்தாள். விஷ்ணு கூறியபடி விநாயகப்பெருமானை காவல் நிற்க செய்து, அன்னபூரணி மூலம் சுவையான உணவை சமைத்து அதை மூன்று கவளமாக்கினாள். இரண்டு கவளங்களைச் சிவனின் கையில் இருந்த கபாலத்திற்கு வழங்கினாள். அதன் சுவையில் மயங்கிய கபாலம் ஆசை தீர உண்டது. மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவற விட சுவையில் மயங்கிய கபாலம் தரை இறங்கியது.

    இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அன்னை அங்காள பரமேஸ்வரி, கபாலத்தைத் தன் காலால் நசுக்கித் தரையில் அழுத்தினாள். உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    மயான கொள்ளை திருவிழாவின் போது அம்மனின் முன்பு பிரம்ம கபாலத்தை கையில் ஏந்தி கோவில் பூசாரிகள் பக்தி பரவசத்துடன் ஆடியபடி மயானத்திற்கு செல்வர். இதையடுத்து அம்மன் மயானத்தில் எழுந்தருளியவுடன் அங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் சுண்டல், கொழுக்கட்டை, தானியங்கள் ஆகியவற்றை வாரி இறைத்து மயான கொள்ளை திருவிழா நடை பெறும்.

    விழாவின்போது அங்காளம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். முன்னதாக அங்கு கூடியிருக்கும் திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தானியங்கள், பழங்கள், சுண்டல், கொழுக்கட்டை மற்றும் சில்லரை நாணயங்களை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பலர், அவற்றை பிரசாதமாக எடுத்து செல்வர்.

    முன்னதாக அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மன் வேடம் அணிந்து வருவார்கள். இதில் சிலர் நாக்கு, தாடையில் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் மயானத்துக்கு வரும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பலர் அருள் வந்து ஆடுவர். அவர்களில் சிலர் சேவல், கோழியை கடித்து, அதன் ரத்தத்தை குடிப்பது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க செய்யும். அருள் வந்து ஆடியவர்களின் முன்பு பலர் விழுந்து வணங்குவார்கள். அப்போது அவர்கள் மீது, சாமி ஆடியவர்கள் நடந்து சென்று ஆசி வழங்குவர்.

    நேர்த்திக்கடன்

    தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 11-ந் தேதி ரணகளிப்பு நிகழ்ச்சியும் மறுநாள் மயான கொள்ளை மற்றும் தேர் திருவிழாவும் நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 5.30 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. இதில் அரசு கொறடா அனந்தராமன், பா.ஜனதா கட்சியின் துணை தலைவர் செல்வம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கொழுக்கட்டை, மணிலா, ரூபாய் நோட்டுகள், காய்கறிகளை அம்மனை நோக்கி வீசி வழிபட்டனர்.

    அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி சுடலை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தேரை பக்தர்கள் அந்த பகுதியில் உள்ள மயானத்திற்கு இழுத்துச்சென்றனர். பின்னர் அங்கு மயான கொள்ளை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான மாசிப்பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    6-ந் தேதி மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து 7-ந் தேதி தங்க பல்லக்கிலும், அன்று இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் 5-ம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள, தாளம் முழங்க உற்சவ அம்மனை அக்னி குளத்திற்கு ஊர்வலமாக பல்லக்கில் தூக்கி சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை சிம்ம வாகனத்தில் அமர்த்தினர்.

    அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அம்மன் மாலை 4.30 மணி அளவில் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டத்தின் முன்பாக எழுந்தருளினார். பின்னர் சாமிக்கும் பூக்குழிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு பூ உருண்டையை உருட்டி விட்டதும் தலைமை பூசாரி முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினார். அவர் இறங்கியதும் கோவில் மேலாளர் முனியப்பனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பல பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், பறவை காவடி எடுத்தும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகனசுந்தரம், அறங்காவலர்கள் கணேசன், ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழி பூசாரிகள், கொடுக்கன்குப்பம் கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.
    கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மயானக்கொள்ளை உற்சவம் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி, கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் கோவில் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றப்படுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வீதி உலாவும் நடைபெறுகிறது. இதில் நாளைமறுநாள் (1-ந்தேதி) இரவு 7 மணிக்கு 3 முக இருளகண்டனுடன் அம்மன் வீதி உலாவும், 2-ந்தேதி இரவு பூவாலை கப்பரையுடன் அம்மன் வீதிஉலாவும், 3-ந்தேதி அக்னி கரகத்துடன் அன்னவாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 4-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை உற்சவம் 6-ந்தேதி காலை 11.30 மணிக்கு மேல் நடக்கிறது. 8-ந்தேதி கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    ×