search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "irrigation facility"

    • மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும்.
    • காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர சம்பா, தாளடியையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த ஆண்டு பிரதான கால்வாய்கள் மட்டுமல்லாமல் சிறிய கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவில் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும் என்றும், பிரதான வாய்க்கால்களில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைவாக சென்று வயல்களில் பாய்ந்து குறுவை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களிலும் விதை நெல் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி கல்லணை பாலங்களில் தோரணங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது. கல்லணை பாலங்களில் மேல் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன், காவேரி அம்மன், அகத்தியர், ஆர்தர் காட்டன் ஆகிய சிலையில் புது வண்ணம் பூசப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன .

    நாளை காலை மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும் . அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பின்னர் முதலில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இடத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    திறந்து விடப்படும் தண்ணீரில் மலர்களையும் விதை நூல்களையும் தூவுவார்கள். காவிரியை தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படும் . நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் . கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கல்லணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாசனப்பகுதியில் குறுவை சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து காவிரி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர். எப்படியாக இருந்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தூர்வாரப்படாத வாய்க்காலை சீரமைத்து பாசன வசதி தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • போதிய நீர்பாசன வசதி ஏற்படுத்தித்தர நீதிபதி உத்தரவிட்டார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பெரியாறு வைகை வடி நில கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி பிரிவு–-1ன்கீழ் உள்ள ஆண்டிபட்டி மடைகள் மூலம் கட்டக்குளம் பிரிவின்கீழ் சுமார் 150 ஏக்கர்பயன் பெற்றுவந்தது.

    இந்த நிலையில் 4 வழிச்சாலை அமைத்த போது அந்த வாய்க்கால் சேதம் அடைந்தது. இதனால் கடந்த 20 வருடங்களாக விவசாய நிலங்களுக்கு தேவையான பெரியார் பாசன பங்கீட்டு நீர் பாசன வசதி இல்லாமல் தடைபட்டிருந்தது.

    இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயி தங்கராஜ் விவசாயிகள் சார்பில் பலமுறை பொதுப்பணித்துறை, வருவாய் துறை என பல்வேறு அரசுத்துறை னரிடம் முறையீடு செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினியிடம் மனு கொடுத்தார்.

    இந்த மனு தொடர்பான விசாரணையில் மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பெரியார் வைகை வடி நில பிரிவு -1 அதிகாரிகளுக்கு 400 மீட்டர் நீளமுள்ள நீர்பாசன கால்வாயை தூர்வாரி சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய போதிய நீர்பாசன வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவின்படி 400 மீட்டர் நீளமுள்ள நீர் பாசன கால்வாய் தூர்வாரப்பட்டு விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் செல்ல வழிவகை ஏற்படுத்தபட்டுள்ளது.

    இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த 150 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தேவையான நீர்பாசன வசதி பெற்று பயனடைந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இது போன்ற பொது சேவை பயன்பாட்டில் குறைபாடுகள் தொடர்பான மனுக்களை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் எந்தவித கட்டணமின்றி விசாரித்து விரைவில் நிவாரணங்களை சட்டப்படி பெற்றுகொள்வதற்கான வழிவகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிரந்த மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ரஜினி தெரிவித்தார்.

    நிரந்தர மக்கள் நீதிமன்றமானது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாற்று சமரச தீர்வு மைய கட்டடிடத்தில் அனைத்து நீதிமன்ற வேலைநாட்களிலும் செயல்பட்டு வருகிறது.

    • சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனால் இப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக ஒரே ஆண்டில் 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக இப்பகுதி பாசன வசதிக்காக சாத்தியார் அணையிலிருந்து 11 கிராம கண்மாய் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகவும் சாத்தியார் அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சுமார் 260 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் தொடர் கனமழை பெய்தால் சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி மீண்டும் மறுகால் பாயும் வாய்ப்புள்ளது.

    இதனால் இப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
    • மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவின் முக்கிய வடிகால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு விளங்கி வருகிறது. மேலும், சுள்ளான் ஆறு மூலம் அகரமாங்குடி, சித்தர்காடு உள்பட பல கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுள்ளான் ஆற்றில் பாலூர், சந்திராபாடி, புரசக்குடி, வேம்பகுடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், கருப்பூர், சோலைபூஞ்சேரி, மேலசெம்மங்குடி, மட்டையாண்திடல், கோவிலாம்பூண்டி உள்பட பல கிராமங்கள் வடிகால் வசதி பெறுகின்றன.

    பாலூரில் இருந்து ஆவூர் வரையில் சுள்ளான் ஆறு முழுவதையும் ஆகாயதாமரைச்செடிகள் மற்றும் வெங்காய செடிகள் பெருமளவில் மண்டியநிலையில் காணப்படுவதால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

    அதனால் விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். பொதுப்பணிதுறையினர் அவ்வப்போது சுள்ளான் ஆற்றில் வேம்பகுடி, அகரமாங்குடி பகுதியில் மண்டியுள்ள ஆகாயதாமரைச் செடிகளை மட்டும் சுத்தம் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். அடுத்த வருடமும் அதே பகுதியில் ஆகாயதாமரை செடிகள் மண்டி விடும்.

    இந்தாண்டு கடந்த மாதம் சுள்ளான் ஆற்றில் வேம்பகுடியில் இருந்து தூர்வாரும் பணி தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் சுள்ளான் ஆறு தூர்வாரும் பணி முடிவடையாமல் மட்டையாண்திடல் வரையில் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளதால் பாசனத்திற்கு திறந்து விடுவது தாமதம் ஆகி வருகிறது.

    மேலும் மேட்டூர் அணையும் திறக்கப்பட்டு பருவமழையும் தொடங்க உள்ளதால் சுள்ளான் ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×