search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுள்ளான் ஆற்றின் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
    X

    சுள்ளான் ஆற்றில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சுள்ளான் ஆற்றின் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

    • விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
    • மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவின் முக்கிய வடிகால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு விளங்கி வருகிறது. மேலும், சுள்ளான் ஆறு மூலம் அகரமாங்குடி, சித்தர்காடு உள்பட பல கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுள்ளான் ஆற்றில் பாலூர், சந்திராபாடி, புரசக்குடி, வேம்பகுடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், கருப்பூர், சோலைபூஞ்சேரி, மேலசெம்மங்குடி, மட்டையாண்திடல், கோவிலாம்பூண்டி உள்பட பல கிராமங்கள் வடிகால் வசதி பெறுகின்றன.

    பாலூரில் இருந்து ஆவூர் வரையில் சுள்ளான் ஆறு முழுவதையும் ஆகாயதாமரைச்செடிகள் மற்றும் வெங்காய செடிகள் பெருமளவில் மண்டியநிலையில் காணப்படுவதால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

    அதனால் விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். பொதுப்பணிதுறையினர் அவ்வப்போது சுள்ளான் ஆற்றில் வேம்பகுடி, அகரமாங்குடி பகுதியில் மண்டியுள்ள ஆகாயதாமரைச் செடிகளை மட்டும் சுத்தம் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். அடுத்த வருடமும் அதே பகுதியில் ஆகாயதாமரை செடிகள் மண்டி விடும்.

    இந்தாண்டு கடந்த மாதம் சுள்ளான் ஆற்றில் வேம்பகுடியில் இருந்து தூர்வாரும் பணி தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் சுள்ளான் ஆறு தூர்வாரும் பணி முடிவடையாமல் மட்டையாண்திடல் வரையில் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளதால் பாசனத்திற்கு திறந்து விடுவது தாமதம் ஆகி வருகிறது.

    மேலும் மேட்டூர் அணையும் திறக்கப்பட்டு பருவமழையும் தொடங்க உள்ளதால் சுள்ளான் ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×