search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brain dead"

    • நவம்பர் 25லிருந்து கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்ள தொடங்கினார்
    • சிடி ஸ்கேன் பரிசோதனையில் மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது

    இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் (East Midlands) பிராந்தியத்தில் உள்ளது லின்கன்ஷையர் (Lincolnshire) பகுதி. இங்கு தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர், 16-வயதான பள்ளிச்சிறுமி லேலா கான் (Layla Khan).

    சுமார் 3 வாரங்களுக்கு முன்பு லேலாவிற்கு மாத விடாய் கால வயிற்று வலி தொடங்கியது. அவரது தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை கூறினார்கள்.

    நவம்பர் 25லிருந்து லேலாவும் கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்ள துவங்கினார்.

    டிசம்பர் 5 காலகட்டத்தில் லேலாவிற்கு வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து கொண்டது. அந்த வார இறுதியில் அவர் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வாந்தி எடுக்க தொடங்கினார்.

    இதையடுத்து, அவரது குடும்பத்தினர் க்ரிம்ஸ்பி (Grimsby) பகுதியில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். "ஸ்டமக் பக்" (stomach bug) என பொதுவாக அழைக்கப்படும் வைரஸ் தாக்குதலில் வரும் இரைப்பை குடல் அழற்சி (viral gastroenteritis) நோயால் லேலா தாக்கபப்ட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லேலாவின் நிலை மறு நாள் மோசமடைய தொடங்கி, வலியில் அலற தொடங்கினார். மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முனைந்த போது நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து, அருகிலிருந்த "டயானா, பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ்" மருத்துவமனைக்கு லேலாவை அவர் தாயாரும், உறவினரும் காரில் கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் லேலாவிற்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

    டிசம்பர் 13 அன்று, ஹல் ராயல் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்து விட்டார்.

    குதூகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்த லேலா குடும்பம் அவரை இழந்த சோகத்தில் தவிக்கிறது.

    லேலாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அவை 5 உயிர்களை காத்ததாக லேலாவின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

    தக்க சமயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    • சில மனித செல்கள் பன்றிகளின் மூளைகளில் காணப்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர்.
    • தொடர்ந்து 61 நாட்கள் நடந்த பரிசோதனையின் மூலம் இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 1 லட் சத்து 3ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருக்கின்றனர். இதில் 88 ஆயிரம் பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது.

    இதையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை தொடர்பாக அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தானமாக வழங்கப்பட்ட உடல்கள் மற்றும் விலங்குகள் மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில மனித செல்கள் பன்றிகளின் மூளைகளில் காணப்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உயிருடன் இருக்கும் நோயாளிக்கு உலகில் முதல்முதலாக பன்றியில் இருந்து இதயம் சம்பந்தமான மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்த போதிலும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆனாலும் தொடர்ந்து அமெரிக்க நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து 61 நாட்கள் நடந்த பரிசோதனையின் மூலம் இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ஆவான் என்று நினைத்தவன் அசைவின்றி கிடப்பதாக தந்தை கண்ணீர் மல்க கூறினார்.
    • இளங்கோவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    உள்ளகரத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் சொந்த ஊர் பீகார் மாநிலம். அவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இளங்கோவனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வேதனை அடைந்தனர்.

    நேற்று முன்தினம் இளங்கோவனுக்கு பிறந்தநாள். எனவே அவர் மோட்டார் சைக்கிளில் மாணவியை ஏற்றிக்கொண்டு ஒன்றாக சுற்றினார். பின்னர் அவர்கள் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக காதலனிடம் மாணவி தெரிவித்தார்.

    எனவே ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்று கருதிய இருவரும் கட்டி பிடித்தபடி மின்சார ரெயில்முன் பாய்ந்தனர். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இளங்கோவன் பலத்த காயம் அடைந்தார்.

    மாம்பலம் ரெயில்வே போலீசார் இளங்கோவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இளங்கோவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    மாணவர் இளங்கோவனை அவரது தந்தை குமார், தாயார் லதா ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். குமார் கட்டிட தொழிலாளி ஆவார். லதா வீட்டு வேலை செய்து வருகிறார்.

    மகனின் நிலை பற்றி குமார் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது மகனுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். அன்று கல்லூரி விடுமுறை என்பதால் காலையிலேயே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான். வீட்டில் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக் வாங்கி வைத்திருந்தோம். இரவு வரை அவன் வீட்டுக்கு வரவில்லை.

    எனவே கேக் வெட்டுவதற்காக இரவு 9 மணிக்கு அவனுக்கு போன் செய்து அழைத்தேன். அப்போது போலீசார் தான் போனை எடுத்து பேசினார்கள். எனது மகன் ரெயிலில் அடிபட்டு படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருப்பதாக கூறினார்கள். உடனே பதறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கு அவன் அசைவின்றி கிடந்தான்.

    அவன் ஜிம்முக்கு போய் வாட்டசாட்டமாக இருப்பான். அவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆக்க நினைத்தேன். ஆனால் அவன் நிலை இப்படி ஆகிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

    காதல் பற்றி எங்களிடம் தெரிவித்து இருந்தால் சமாதானம் செய்து இருப்போம். அவன் எதையுமே சொல்லாததால் இப்படி ஆகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2 கைகளை இழந்த வாலிபருக்கு மூளைச்சாவு அடைந்தவரின் கைகளை பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த போடிக் காமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (30). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    கொத்தனாரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி சித்தையன் கோட்டை என்ற இடத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் வயரில் அந்த கம்பி உரசியது. இதில் அவரது 2 கைகளும் முழங்கைக்கு கீழே கருகியது. கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருந்தும் பலனில்லை. 2 கைகளையும் இழந்துவிட்டார். அவரால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியது.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.ஜி. வினய்யை சந்தித்தார். அப்போது அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.

    அவரது உதவியுடன் கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களை சந்தித்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தானமாக பெற்று உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் 2 கைகளையும் மீண்டும் பொருத்த முடியும் என நம்பிக்கை அளித்தனர்.

    இதற்கிடையே மரணம் அடைந்த ஒருவரின், 2 கைகளையும் தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன் வந்தனர். உடனே கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி மதுரையில் இருந்து விமானம் மூலம் நாராயணசாமி சென்னை வந்தார்.

    அங்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வி.ரமாதேவி தலைமையில் 75 பேர் அடங்கிய குழுவினர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 13 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அவருக்கு தொடர் சிகிக்சையும், தொடர் கண்காணிப்பும் அளிக்கப்பட்டது. தற்போது பூரண குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பினார்.

    அது குறித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமாதேவி கூறியதாவது:-

    ஸ்டான்லி ஆஸ்பத்திரி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நிலை மையமாகும். இருந்தாலும் மூளை சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அரசு மருத்துவமனையில் இதுவே முதல் முறையாகும்.உலகம் முழுவதும் 87 ஆஸ்பத்திரிகளில் இதுவரை 110 பேருக்கு இந்த வகை அறுவை சிகிச்சை மூலம் மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

    உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பொருத்தப்பட்ட நாராயணசாமியால் சில பணிகளை சிறப்பாக செய்ய முடியும். பிசியோ தெரபி சிகிச்சையை கட்டாயம் அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் மூலம் தான் அவரது கைகள் சரியாக செயல்படுத்த முடியும்.

    தற்போது அவரால் கைகளை உயரே தூக்க முடியும், செல்போன் மற்றும் டெலிபோனில் கால் செய்ய முடியும். கோப்பை உள்பட பாத்திரங்களை எடுக்க முடியும். தமிழ்நாட்டிலேயே இவருக்குதான் முதன் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் இத்தகைய ஆபரேசன் மூலம் மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்றார்.

    ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமசிவாயம் கூறும் போது, “முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. அது தொடர வேண்டுமெனில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் கைகளை தானம் செய்ய பொதுமக்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கைகள் துண்டிக்கப்பட்ட சுமார் 6 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு பொருத்த வேண்டும். தாமதம் ஏற்பட்டால் மீள்சி திறன் குறையும் என்றார்.

    இதற்கிடையே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பெற்ற நாராயணசாமிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

    அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியிடத்திற்கான அரசாணையை வழங்கினார். அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். #tamilnews
    ×