என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assembly meet"

    • பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.
    • ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த 2 நாட்கள் நடந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

    அதன்பிறகு, பிப்ரவரி 19-ந்தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்றைய தினம் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று, அமைச்சர்கள் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

    அதனைத்தொடர்ந்து, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக ஜூன் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது.

    பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.

    அந்த வகையில், பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

    தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

    அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

    தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது.

    அதாவது, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்க இருக்கிறார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடையும்.

    அடுத்து, புத்தாண்டில் (2025) ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடும்.

    புதுவை சட்டசபை கூட்டத்தை வருகிற 30-ந் தேதி நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளனர். அன்று எம்.எல்.ஏ.க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும். #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி வர தாமதம் ஆனதால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

    4 மாத காலத்துக்கு தேவையான பணத்தை மட்டும் ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததை அடுத்து கடந்த 2-ந் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகு பட்ஜெட் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும்.

    ஆனால், கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே பட்ஜெட் நிறைவேற்றப்படாமலேயே கடந்த 19-ந் தேதி சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

    அதன் பின்னர் கவர்னர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், அதில் ஒரு நிபந்தனை விதித்து இருந்தார்.

    புதுவையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறி இருந்தார்.

    ஏற்கனவே சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு தலைவர்களை சந்திப்பதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்றனர்.

    இதனால் உடனடியாக சட்டசபை கூட்டத்தை நடத்த முடியவில்லை. டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் இன்று புதுவை திரும்பினார்கள். மற்றவர்கள் இன்று இரவு திரும்புகிறார்கள்.

    எனவே, நாளை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ.க்கள் 3 நாட்களாக டெல்லியில் இருந்ததால் தங்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி இருக்கிறார்கள்.

    இதனால் சட்டசபை கூட்டத்தை வருகிற 30-ந் தேதி நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளனர். அன்று எம்.எல்.ஏ.க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும்.

    அதன் பின்னர் அந்த மசோதா கவர்னருக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்து மத்திய உள்துறைக்கு அனுப்புவார். உள்துறை அனுமதி அளித்ததும் பட்ஜெட் அமலுக்கு வரும்.

    ஆனால், கவர்னர் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனையில் கூறி இருக்கிறார். அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வி எழுகிறது.

    அவ்வாறு அனுமதிக்கவில்லை என்றால், கவர்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல் பட்ஜெட் மசோதாவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கலாம். இதனால் பட்ஜெட்டை அமல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

    அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது.

    பொதுவாக அந்தந்த மாத சம்பளம் அந்த மாதத்தில் இறுதி நாளில் வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் (ஜூலை) சம்பளம் 31-ந் தேதி வழங்கப்பட வேண்டும்.

    இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய 4 மாத சம்பளம் கடந்த பிப்ரவரி மாதத்துக்கும் சேர்த்து 4 மாதங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

    எனவே, இந்த மாதத்துக்கான அரசு ஊழியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் இருந்துதான் நிதி எடுக்க வேண்டும். கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்.

    அது மட்டும் அல்ல, கவர்னர் அனுமதி அளித்தாலும் கூட இனி இந்த மாதம் 31-ந் தேதி சம்பளம் வழங்குவதற்கு கால அவகாசம் இல்லை.

    30-ந் தேதி சட்டசபை கூட்டம் நடத்தி மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அன்றே அனுப்பி வைக்கப்படும். அதற்கு அன்றைய தினமே கவர்னர் ஒப்புதல் அளித்தாலும் பின்னர் உள்துறைக்கு செல்ல வேண்டும். அங்கிருந்தும் அனுமதி வர வேண்டும். இதற்கு ஓரிரு நாள் காலம் தேவைப்படலாம்.

    பொதுவாக மாத கடைசி நாளில் சம்பளம் வழங்குவதற்கு 25-ந் தேதியே சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியை கருவூலத்துறை மேற்கொள்ளும். 28-ந் தேதிக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து வங்கிக்கு பட்டியலை அனுப்பி வைத்து விடுவார்கள்.

    அதன்படி மாத இறுதி நாளில் சம்பளம் வழங்கப்படும். இனி 30-ந் தேதி அனுமதி கிடைத்தால் அதன் பிறகு சம்பள பட்டியலை அனுப்ப முடியாது. எனவே, ஒன்றிரண்டு நாட்கள் கால தாமதத்துக்கு பிறகே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

    ஒருவேளை கவர்னர் அனுமதி வழங்கவில்லை என்றால் அவர் எப்போது அனுமதி வழங்குகிறாரோ அதன் பிறகுதான் சம்பளம் வழங்க முடியும்.

    இது மட்டும் அல்ல, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியாது. அரசு திட்ட பணிகளுக்கும், மற்ற செலவுகளுக்கும் நிதி இருக்காது. எனவே, ஒரு நெருக்கடியான நிலை புதுவையில் உருவாகி இருக்கிறது.

    இதற்கிடையே அரசிடம் மீதமாக இருக்கும் வேறு ஏதாவது நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கலாமா என உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    அவ்வாறு எந்தெந்த துறைகளில் உபரி நிதி இருக்கிறது என்பது பற்றிய கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. #PondicherryAssembly
    ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதை தொடர்ந்து 10 நாட்கள் சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.#TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மே மாதம் 29-ந்தேதி தொடங்கியது.

    இதுவரை வனம், சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதம் முதல்நாள் நடந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மின்சாரம், மதுவிலக்கு, மீன், பால்வளம், கால்நடை, நகராட்சி, உள்ளாட்சி, சட்டம், சிறை, நீதி நிர்வாகம், சத்துணவு, மாற்றுத்திறனாளி, தொழில் துறை, சிறு-குறு தொழில், கைத்தறி, கதர் கிராம தொழில், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விவாதங்கள் நடந்துள்ளன.

    எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதுதவிர ஸ்டெர்லைட், காவிரி பிரச்சனை, எஸ்.வி.சேகர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளும் சட்டசபையில் எழுப்பப்பட்டு காரசார விவாதங்கள் நடந்தன. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

    இன்று 13-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கான விவாதத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்து பேசினார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசார விவாதங்களும் இடம்பெற்றன.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது.

    இதையடுத்து, வருகிற 24-ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து 10 நாட்கள் சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.

    மீண்டும் சட்டசபை 25-ந்தேதி கூடுகிறது. இதில் தொடர்ந்து செய்தி, சுற்றுலா, காவல்துறை, தீயணைப்பு, வருவாய் துறை, சுற்றுசூழல், வணிகவரி, போக்குவரத்து, ஆதிதிராவிடர், தமிழ் வளர்ச்சி, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

    இந்த துறைகள் சார்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. வருகிற ஜூலை 9-ந்தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது. #TNAssembly
    ×