search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archeology department"

    கோவில்களில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த போதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. #HCMaduraiBench
    மதுரை:

    தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் வாழும் கலை அமைப்பு சார்பில் 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது முற்றிலும் விதிமீறலாகும்.

    கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனியார் தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது அனுமதியின்றி செயல்பட்ட வாழும் கலை அமைப்பின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.

    இது குறித்து நாளை (இன்று) ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர், தஞ்சை பெரிய கோவில் தேவஸ்தான இணை ஆணையர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொல்லியல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, கோவில் உதவி கமி‌ஷனர் பரணிதரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் எந்த அடிப்படையில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


    இதற்கு பதில் அளித்த தொல்லியல்துறை வக்கீல், கோவில் சார்ந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கு என கேட்டதால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அப்படி என்றால் நிகழ்ச்சி ஏற்பாடுகள் இப்படித்தான் செய்ய வேண்டும் என திட்டமிடல் குறித்த வரைப்படம் அவர்களிடம் ஏன் கொடுக்கப்படவில்லை என தொல்லியல் துறையினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் இனிமேல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு போதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் தீர்ப்புக்காக வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HCMaduraiBench
    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால் தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். #TajMahal

    ஆக்ரா:

    உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமின்றி தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்துவார்கள்.

    மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்களும் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாடு முஸ்லிம்களும் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவது தெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் இது குறித்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு, வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்தது.

    இந்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், “தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை நேற்று முதல் தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

    நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    வழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.

    வெளி ஊர்களில் இருந்து தாஜ்மகாலுக்கு வந்திருந்த முஸ்லிம் சுற்றுலா பயணிகளுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. தொல்லியல் துறை நடவடிக்கைக்கு இமாம் சையது சாதிக் அலி, தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் சையது இப்ராகிம் உசைன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்க வில்லை. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதாக கூறியுள்ளனர். #TajMahal 

    கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் முயற்சியில் சி.பி.ஐ.யுடன் தொல்லியல் துறையும் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். #ministerpandiarajan
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு பொன்விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி, கலைப்பண்பாடு மற்றும் விளையாட்டு துறைகளின் வாயிலாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதற்கு தமிழ் ஆட்சிமொழி கலைப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    1998-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள சிலைகளை அடையாளம் வைத்து அதற்கு ஒரு பதிவேடு உருவாக்கி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்திய தொல்லியல் துறையினர், தமிழக தொல்லியல் துறை சார்பில் 48 ஆயிரம் சிலைகளை ஆவணப்படுத்தும் பணியை கடந்த 2013-ம் ஆண்டில் முடித்தனர். 13 ஆயிரம் சிலைகள் ஆவணப்படுத்தப்படவில்லை என கூறுகின்றனர்.

    எவ்வளவு சிலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை எங்கு உள்ளது, போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் ஒளிவு மறைவு இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஆவணப்படுத்தாத சிலைகள் உள்ளதா எனவும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். தற்போது சிலைகளை மீட்டு வரும் பணி சி.பி.ஐ.யிடம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் சிலைகளை தேடும் வேலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும், உலக அளவிலும் நடக்கிறது. இதனை மத்திய அரசின் அமைப்பு செய்கிறது.

    மத்திய அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டதால் தொல்லியல் துறை மூடப் பட்டது என அர்த்தம் கிடையாது. சிலைகள் மீட்கும் பணியில் சி.பி.ஐ.யுடன் இணைந்து தொல்லியல் துறையும் செயல்படும்.

    சிலைகள் கடத்தப்பட்டது கோவில்கள் மட்டுமல்லாமல் அருங்காட்சியகத்திலும் நடந்துள்ளது. அதை நாங்கள் மீட்டுள்ளோம். சிலை மீட்பு பணிகளை சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின் தற்போது நேர்மாறாக கூறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) திவ்யஸ்ரீ, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமா, கலைப்பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குனர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerpandiarajan
    ×