search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Renovation"

    • சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது.

    இங்கு கருணாம்பிகை சமேத அவினாசிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் பல்வேறு கல்வெட்டுகள் உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனாரால் பதிகம்பாடி முதலை உண்ட பாலகனை உயிருடன் மீட்ட அதிசயம் நடந்த திருத்தலமும் இதுவே.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது

    அதன்படி கோவில் பரிவார சன்னதி விமானங்கள் பாலாலய பூஜை நேற்று இரவு 7 மணி அளவில் கோவில் மண்டபத்தில் யாகபூஜை நடந்தது.

    கோவில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.

    இதில் குமரகுருபர சுவாமிகள், அவினாசி காமாட்சி தாச சுவாமிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர்ஆ.சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவி, பிரகாஷ் ஆறுமுகம், கார்த்திகா, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 6-ந்தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத்தலமாக பாடல் பெற்றதும் நடுச்சிதம்பரம் என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றத்தக்கதுமான சேவூரில் வாலியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீவாலிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய, ஆன்மிக தலமான சேவூரில், தென்கரையில் பழங்கால தெய்வமான அங்காளம்மன் கோவில் உள்ளது. சேவூர் அங்காளம்மன் கோவில் குறித்து அதன் பரம்பரை பூசாரி பொ.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-

    சேவூரின் தென்கரையில் பல குலத்தவருக்கு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து வரும் சுமார் 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட தெய்வமான அங்காளம்மன் கோவிலில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகர், பேச்சியம்மன், வராகி, வீரபத்திரர், கன்னிமார், அகோர வீரபத்திரர் ஆகிய மூர்த்திகள் அமையப்பெற்றது சிறப்பு வாய்ந்ததாகும்.

    அங்காளம்மனை வழிபடுவோருக்கு பசி பிணியை நீக்கி பசுமை வரம் அளிப்பவள். இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் திருப்பணி தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, ஜூலை 6-ந் தேதி பாலாலய சிறப்பு பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 6-ந்தேதி கோவில் குடமுழுக்கு திருப்பணி செய்வதற்கான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஷ்வக்சேன ஆராதனம், புண்ணியாவாசனை, கலச ஆவாஹனம், சுதர்சனஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, சாற்றுமுறை, மஹாதீபாராதனை நடைபெற்று பாலாயம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குலதெய்வத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து சமுதாய மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உப்பளம் தொகுதி வாணரப்பேட்டையில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
    • இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வாணரப்பேட்டையில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஏற்கனவே இந்து அறநிலைத்துறை மூலம் ரூ. 1¾ லட்சம் நிதியை கென்னடி எம்.எல்.ஏ. பெற்று தந்தார்.

    இந்த நிலையில் 2-வது கட்டமாக கோவில் திருப்பணிக்கு நிதி வழங்க வேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி 2-வது கட்டமாக ரூ. 1¾ லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

    இதனை கோவில் திருப்பணிக்குழு வினரிடம் கென்னடி எம்.எல்.ஏ. அளித்தார். நிகழ்ச்சியின் போது கோவில் நிர்வாகக்குழு கலியபெருமாள் செயலாளர் விஜயன், பொருளாளர் வாசு தொகுதி தி.மு.க. செயலாளர் சக்தி வேல் துணைச்செயலாளர் ராஜி, கிளைச்செயலாளர் செல்வம் மற்றும் காத்தலிங்கம், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
    • 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கோவில் நிதியில் இருந்து 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக திருப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆய்வு செய்து ராஜகோபுரம் அமைக்கும் பணி யை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து கோவில் சார்பில் ராஜகோபுர பணிக்காக உபயதாரர்களின் உதவியை நாடினர். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி உபயதாரர்கள் ராஜகோபுரம் அமைப்பதற்காக ரூ.5 கோடியே 30 லட்சம் நன்கொடை வழங்கினர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், 7 நிலை ராஜகோபுர திருப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.முரளிதரன் வழிகாட்டுதலின் பேரில், செயற்பொறியாளர் மதிவாணன், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் மண்டல ஸ்தபதி ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ராஜகோபுர ்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கற்கள் கொண்டு வரப்பட்டு 2-வது பகுதி பாத வர்க்கம் அமைப்பதற்காக கற்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வரி நேர்த்தியாக அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாதர் கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

    இந்த மங்களநாதர் கோவில் சுவாமி சன்னதி முதல் பிரகாரம் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது. குறிப்பாக சுவாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும், வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும்பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது.

    இந்தநிலையில் சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் நன்கொடை மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதியில் திருப்பணிகள் நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்தன. தற்போது மங்களநாயகி அம்பாள் சன்னதி உள்பிரகாரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் சேதமடையாமல் அதன் தன்மை குறையாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சீரமைப்பு பணிக்காக தேவைப்படும் மணல் தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கிழக்கு ராஜகோபுரம், அம்மன் சன்னதி கோபுரம், நடராஜர் சன்னதி கோபுரம், ராஜ கோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நந்தி மண்டப பிரகாரம் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    திருஉத்தரகோசமங்கை கோவிலின் மராமத்து மற்றும் சீரமைப்பு பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து வரும் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    • துறையூர் பெருமாள்மலை கோவிலில் கோபுர கலசம் சாய்ந்த நிலையில் உள்ளது.
    • கோவிலுக்கு செல்லும் சாலையும் சேதமடைந்து, பாறைகள் சாலையில் உருண்டு கிடக்கிறது.

    துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கு சென்று வரும் பாதை மிகவும் சேதமடைந்தும், பாறைகள் சாலையில் உருண்டு கிடக்கும் நிலையிலும் உள்ளது. இதுவரை சாலையை சரி செய்வதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மலையில் இருந்து பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே கிடக்கின்றன. மீண்டும் மழை பெய்தால் அந்த பாறைகள் உருண்டு சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களின் மீது விழக்கூடிய அபாய நிலை உள்ளது. மேலும் கோவிலின் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து சாய்ந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. இது பற்றி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் இது பற்றி கூறுகையில், கலசம் ஒரு கோவிலுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். கலசம் சாய்ந்த நிலையில் இருக்கும் போது கோவிலில் தினமும் அர்ச்சனைகள் உள்ளிட்டவை செய்து வருகிறார்கள். கோவிலில் திருவிழாக்கள் மட்டும் நடத்துவது போதாது. கோவிலை பராமரிக்கவும் வேண்டும். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனபோதும், மீண்டும் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    குரங்குகள் குடிநீர் தொட்டியில் குளித்து அசிங்கம் செய்து வருகிறது. பக்தர்கள் யாரும் குடிநீர் மற்றும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டம் தற்போது அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. மலை உச்சிக்கு ஒரு நாளைக்கு குறைந்த அளவே பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் பலர் உணவருந்த முடியாத நிலை உள்ளது. ஏனெனில் பக்தர்கள் சென்று வருவதற்கு போதிய போக்குவரத்து வசதி கிடையாது. பக்தர்கள் செல்ல வேண்டுமென்றால் படிக்கட்டுகளிலோ அல்லது இருசக்கர வாகனங்களில் மட்டுமே கோவிலுக்கு செல்ல முடியும். புரட்டாசி மாதத்தில் மட்டும் தனியார் வேன்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் அனைவரும் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த பெருமாள் மலைக்கு வந்துதான், தங்களது காணிக்கையை செலுத்துகிறார்கள். அதிக அளவில் வருமானமுள்ள கோவிலாக இருந்தும், இந்த கோவிலுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் சாய்ந்த நிலையில் இருக்கும்போது, கும்பாபிஷேகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து அவற்றை புனரமைக்காமல் திருவிழா நடத்துவது வருத்தம் அளிக்கிறது.பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டும், ஆகம விதியை கடைப்பிடித்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். அன்னதானத்தை மீண்டும் அடிவாரத்திலேயே செயல்படுத்த வேண்டும். மேலும் கோவில் கோபுரத்தை சரி செய்து, புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.
    • லெட்சுமி தீர்த்தகுளம் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமி தீர்த்தகுளம் அமைந்து உள்ளது.இந்த குளமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக செவிவழி செய்தி கூறுகிறது. ஒரு காலத்தில் இந்த குளம் வற்றாத புனித தீர்த்தக் குளமாக இருந்து வந்துள்ளது.

    குறிப்பாக தேமல், பருவு உள்ளவர்கள் இந்த லெட்சுமி தீர்த்தக்குளத்தில் உப்பு வாங்கி போட்டு நோயை குணமாக்கி வந்துள்ளனர். ஆகவே நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.

    இத்தகைய சிறப்பு பெற்ற லெட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் சமீபத்தில் அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்து விழுந்தது. இதனையொட்டி கோவில் நிர்வாகம் லெட்சுமி தீர்த்த குளத்தை சீரமைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படியே ரூ.6½ கோடியில் பழமை மாறாமல் அதிநவீன தொழில் நுட்பத்துடன் குளத்தின் 3 பக்கமும் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் கான்கிரீட்டிலான சுவரும் கட்டப்பட உள்ளது.

    மேலும் கோடைகாலத்திலும் வற்றாத நீர் நிலையாக தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக குளம் ஆழமாக தூர்வாரப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக இந்து சமய அறநிலையதுறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டு பணிக்கான டெண்டர் விடப்பட்டு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதி கமிஷனரிடம் கோரப்பட்டுள்ளது. உரியஅனுமதி கிடைத்தவுடன் ஒரு சில வாரத்தில் லெட்சுமி தீர்த்த குளம் தூர்வாரும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 6 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க உள்ளது.
    • 2017-ம் ஆண்டு கோவில் நிதியில் இருந்து ரூ.2½ கோடியில் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கியது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அம்மன் திருத்தலங்களில் பிரசித்திபெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கோவில் நிதியில் இருந்து ரூ.2½ கோடியில் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கியது. தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் நன்கொடையாளர்களை சந்தித்து திருப்பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் திருப்பூரைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் திருப்பணிக்கு நன்கொடையாக ரூ.6 கோடி நிதியை வழங்கிட முன்வந்தனர்.

    இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறையும் ஒப்புதல் அளித்து விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா கூறுகையில், வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கு நன்கொடை அளிக்க உபயதாரர்கள் முன்வந்ததால், 6 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க உள்ளது. ரூ.6 கோடியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

    • இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது.
    • காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றது.

    அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதும் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடியதுமான பல சிறப்புகள் பெற்றதாக விளங்குகிறது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலை யத்துறையின் மூலம் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி வருகிற 24-ந் தேதி காலை 7 மணி அளவில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • புனித நீரால் சாமி அம்பாளுக்கு அபிஷேகமும் நடந்தது.
    • சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனூர்நாடு கோட்டைத் தெருவில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நவக்கிரகங்களும் தனிசன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.அகத்திய மாமுனி வழிப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. பழமையும், பல்வேறு சிறப்பும் வாய்ந்த இக்கோவில் வளாகத்தில் தீர்த்த கிணறு ஒன்று இருக்கிறது. இதில் இருந்து தீர்த்தம் எடுத்து சாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கிணறு புனரமைக்கப்படாமல் நீர் மாசுபட்ட நிலையில் இருந்தது. இதனால் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்காரணமாக சாமி, அம்பாளுக்கு மாற்று நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தீர்த்த கிணற்றின் நிலை அறிந்து மிகுந்த வருத்தத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்த்த கிணற்றை புனரமைக்கும் முடிவை எடுத்தனர்.

    அதன்படி கோவில் வளாகத்தில் இருந்த தீர்த்த கிணறு பக்தர்களால் சுத்தம் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ருத்ர யாகம் நடந்தது. இதனையடுத்து திருமுறை பாராயணம் ஓதி சாமி, அம்பாளுக்கு கிணற்றில் இருந்து எடுத்த புனிதநீரால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர், சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கோவிலில் உள்ள பிரகார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்வதற்காக தீர்த்த கிணற்றில் இருந்து குழாய் அமைக்கப்பட்டது. பழமை வாய்ந்த கோவிலின் தீர்த்த கிணற்றை பக்தர்கள் புனரமைத்து தினசரி அபிசேகத்திற்கு இறைவனுக்கு சமர்பித்துள்ளனர். புனித தீர்த்தத்தில் அபிஷேகம் நடைபெற்றதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது.

    தஞ்சை பெரிய கோவில் விமான கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம், மழைநீரால் பாசி படிந்திருப்பதை அகற்றும் வகையில் ரசாயன கலவையால் வர்ணம் பூசும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு கோவில் குடமுழுக்கு நடைபெற்றதையொட்டி அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன. மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் கோபுரம், விமான கோபுரம், பெரியநாயகி அம்மன், முருகர், நடராஜர், விநாயகர் சன்னதி கோபுரங்களும் ரசாயன கலவை மூலம் வர்ணம் பூசப்பட்டது.

    அதன்படி விமான கோபுரத்தில் படிந்திருந்த பறவைகளின் எச்சங்கள், மழைநீரால் படிந்திருந்த பாசிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ததோடு, பழமை மாறாமல் இருப்பதற்காக ரசாயன கலவை பூசும் பணியும் நடைபெற்றது. சிதிலமடைந்து இருந்த சுதை சிற்பங்களும் சீரமைக்கப்பட்டன. இந்த பணிகள் 2018-19-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.

    விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விமான கோபுரலத்தில் உள்ள கலசமும் தங்க முலாம் பூசப்பட்டது. கொடிமரம் புதிதாக நடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இதனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தஞ்சை பெரிய கோவில் பழமை மாறாமல் ரசாயன கலவை கொண்டு வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற நிதி ஆண்டு முதல் (ஏப்ரல் மாதத்திற்கு பிறகு) வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தொல்லியல் துறையினர் நேற்று 216 அடி விமான கோபுரத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். தொல்லியல் துறையை சேர்ந்த 4 பேர் நேற்று கயிறு உதவியுடன் விமான கோபுரத்தின் மீது ஏறி ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். 1 மணி நேர ஆய்வுக்குப்பின்னர் அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.

    இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் ரசயான கலவையுடன் வர்ணம் பூசும் பணி வருகிற ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைபெற உள்ளது. மழைநீரால் பாசி படியாமல் இருப்பதற்காகவும், பறவைகளின் எச்சத்தை அகற்றி அதன் பொலிவு மாறாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் கோபுரத்தில் வேறு ஏதும் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதா? சிற்பங்கள் எதுவும் சிதிலமடைந்து உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதனை எவ்வாறு சரி செய்வது? ரசாயன கலவை பூசுவது எப்படி? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான கோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவடைந்ததும் இதர கோபுரத்திலும் பணிகள் மேற்கொள்ளப்படும்"என்றனர்.

    • பஞ்சலோக பொருட்கள் வைக்கும் பிரிவையும் ஆய்வு செய்தார்.
    • கோவிலில் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசும் பணிக்காக 50 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள தேவஸ்தான தங்க நகைகள் பிரிவையும், கோவிலில் தற்போது நடந்து வரும் மூலவர் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசும் பணிகளையும் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவிலில் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசும் பணிக்காக 50 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோவில் அதிகாாிகள் இணை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    அந்தப் பணிகளை விரைவுபடுத்த கோவிலில் உள்ள அலுவலகங்களை மாற்றி, பொற்கொல்லர்களுக்கு தேவையான 5 பட்டறைகளை ஏற்பாடு செய்யுமாறு இணை அதிகாரியிடம் கோவில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    அப்போது பொற்கொல்லர்களுடன் உரையாடிய இணை அதிகாரி வீரபிரம்மன், தெய்வீகப் பணியை முழு ஈடுபாட்டுடன் முடிக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

    அத்துடன் கோவிந்தராஜசாமி கோவில் மூலவர் கோபுரத்தில் தங்க முலாம் பூசும் பணிகளை விரைவுபடுத்தவும், திட்டமிட்டபடி பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தி முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இணை அதிகாரி உத்தரவிட்டார்.

    பின்னர் தேவஸ்தானத்தின் பழைய ஹுசூர் அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, செப்புத் தகடுகள், வெண்கலம் போன்றவற்றைப் பொற்கொல்லர்கள் வைக்கும் அறைகளாகப் பழுதுப்பார்த்து பயன்படுத்த கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பழுதான பொருட்களை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பஞ்சலோக பொருட்கள் வைக்கும் பிரிவையும் ஆய்வு செய்தார். அந்த அறையை சரியான காற்றோட்டத்துடன் விசாலமானதாக அமைக்க பொறியியல் துறை அதிகாரிகளுக்கு இணை அதிகாரி உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது நிதித்துறை அதிகாரி பாலாஜி, என்ஜினீயர்கள் நாகேஸ்வரராவ், வேணுகோபால், கோவில் உதவி அதிகாரி சுப்பராஜு மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×