search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irai Anbu"

    • கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.
    • மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    அன்னூர்:

    கோவை அன்னூரில் உளள முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழக தலைமை செயலாளரும், எழுத்தாளருமான இறையன்பு பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    சாமிகளுக்குள் சண்டையில்லை. மனிதர்களுக்குள் தான் சண்டை. மனிதன் வாழும் வரை மாணவர்கள் தான். வாழ்வின் கடைசி வரை மனிதர்கள் கற்றுக் கொண்டு தான் உள்ளனர்.

    மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது ஒரு கைத்திறணையும் கற்று கொள்ள வேண்டும். இதற்காக கைத்திறண் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்படுகிறது. கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.

    தரையில் அமர்ந்து படித்தால் தான் மாணவர்களின் உடலுக்கு நல்லது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் தரையில் அமர்வதை தவிர்ப்பதால் தான். இளைஞர்கள் வரை இந்த வலி வருகிறது.

    ஒரு பள்ளியின் சிறப்பு கட்டிடங்களால் உயர்ந்தது இல்லை. அதன்மூலம் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் தான் உள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ள தை மட்டும் படிக்கும் ஒருவர் ஒருபோதும் காலப்போக்கை கற்று கொள்ள முடியாது.

    பள்ளியின் பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படித்தால் தான் சிறந்த அறிவை பெற முடியும். மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள் தான்வெற்றி பெறுவார்கள். இன்றைய சிறுவர்களிடம் அதிக புத்திசாலித்தனம் உள்ளது.

    அதற்கு காரணம் இன்றைய நிலையில் செல்போனில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததால் தான். அதனை நீங்கள் சரியான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    அன்றைய மாணவர்களுக்கு நூலகம் இருந்தது. அன்று மாணவர்களின் மனதில் லட்சியத்தை விதைப்பதற்கு யாரும் இல்லை. படிப்பின் மூலம் எந்தெந்த பணிகள் கிடைக்கும் என்று கூட தெரியாது.

    சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் உதா சீனம் படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து படிப்பை கற்று கொடுக்க வேண்டும்.

    அப்போது தான் சராசரி மாணவர்கள் தானாக படிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை கூற வேண்டும். அப்போது தான் அவர்களை மேன்மைபடுத்த முடியும். பள்ளியில் படிக்கும் போது செல்போனுக்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாணவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவரிடம் இருந்து விலகி செல்லுங்கள். இதனால் மாணவர்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் என பேசினார்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    • ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு 1988-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவருக்கு வயது 60 ஆவதால் வரும் ஜூன் 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் மூன்று பேர் பெயர்கள் பட்டியலில் உள்ளது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இதில், ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனா தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெற்றவுடன் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷகில் அக்தர் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதன் காரணமாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். விரைவில் புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
    • தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ் நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்து இருக்கிறார்.

    தமிழகத்தில் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணிகளையும் இவர்கள் கண்காணிப்பார்கள்.

    மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-

    அரியலூா் மாவட்டம்-சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராய், கோவை மாவட்டம்-டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன். கள்ளக்குறிச்சி மாவட்டம்-நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், காஞ்சீபுரம் மாவட்டம்-ஊரக வளா்ச்சித்துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா்.

    செங்கல்பட்டு மாவட்டம்- விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம்-சிவில் சப்ளை கமிஷனர் வி.ராஜாராமன். நாகப்பட்டினம் மாவட்டம்-எரிசக்தித் துறைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, நாமக்கல் மாவட்டம்-தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் குமர குருபரன், புதுக்கோட்டை மாவட்டம்-நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன்.

    ராமநாதபுரம் மாவட்டம்-மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா், ராணிப்பேட்டை மாவட்டம்-தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சேலம் மாவட்டம்-நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட் டம்-வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கரூர்-மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ். பழனிசாமி, மதுரை மாவட்டம்-முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன்.

    புதுக்கோட்டை மாவட்டம்-எஸ்.நாகராஜன், தஞ்சாவூர் மாவட்டம்-ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர்-ஆனந்த், தேனி-கார்த்திக், தூத்துக்குடி மாவட்டம்-சிஜி தாமஸ் வைத்யன், திருப்பூர்-டான்சி, முதன்மை செயலாளர்-விஜயகுமார், வேலூர் மாவட்டம்-ஆதி திராவிட பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, விழுப்புரம் மாவட்டம்-பஞ்சாயத்து ராஜ் கமிஷனர்-ஹர் சஷாய் மீனா, விருதுநகர் மாவட்டம்-ஆனந்தகுமார்.

    • தலைமை செயலாளர் இறையன்புக்கு வருகிற ஜூன் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது.
    • இந்த மாதம் 28-ந்தேதியுடன் இறையன்பு தலைமை செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வுபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்து வருபவர் இறையன்பு. மிகவும் நேர்மையானவர், எளிமையானவர், எழுத்தாளர், பேச்சாளர் என அனைவராலும் பாராட்டப்படக்கூடியவர்.

    இவருக்கு வருகிற ஜூன் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது. ஆனாலும் இந்த மாதம் 28-ந்தேதியுடன் அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வுபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    மார்ச் 1-ந்தேதியில் இருந்து இறையன்புக்கு செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட பதவியான தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கவர்னரால் நியமிக்கப்படும் இந்த பதவி 3 ஆண்டுகள் ஆகும்.

    இறையன்பு தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டால் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் அல்லது முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தலைமை செயலாளராக அதிக வாய்ப்பு உள்ளது என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • சீரடி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு சென்றார்.
    • மிகவும் எளிமையாக வந்த தலைமை செயலாளரை பார்த்த ரெயில் பயணிகள் வியந்து பாராட்டினர்.

    சென்னை :

    'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் முதல் அரசுமுறை 2 நாள் பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டார். இதற்காக அவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சீரடி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு சென்றார்.

    முதல்-அமைச்சருடன், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோரும் ரெயிலில் பயணம் செய்தனர். இந்த அரசு முறை பயணத்துக்காக தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆய்வு பணிக்கு தேவையான கோப்புகளை சாதாரண துணிப்பையில் வைத்தபடி, அதை தன் தோளில் சுமந்தபடி சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். மிகவும் எளிமையாக வந்த தலைமை செயலாளரை பார்த்த ரெயில் பயணிகள் வியந்து பாராட்டினர்.

    • மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் எல்.ஏ.லலிதா தொழில்நுட்ப கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார்.
    • நில நிர்வாக கூடுதல் ஆணையர் எஸ்.ஜெயந்தி பள்ளிக்கல்வித்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார்.

    சென்னை :

    தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஏ.பி.கார்த்திக்கேயன் நெல்லை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் செயலாளர் டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆனார். செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் தீபக்ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஆனார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் பழனி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆனார். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இணை மேலாண்மை இயக்குனர் கே.கற்பகம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.

    செங்கல்பட்டு உதவி கலெக்டர் சஞ்சீவனா தேனி மாவட்ட கலெக்டர் ஆனார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிரந்தி குமார் பதி கோவை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ திருவாரூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். திருவள்ளூர் மாவட்ட உதவி கலெக்டர் மகாபாரதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இவ்வாறு 11 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார். அவர் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் இணை செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் வணிகவரித்துறை இணை ஆணையராக (மாநில வரிகள்) இடமாற்றம் செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் எல்.ஏ.லலிதா தொழில்நுட்ப கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார்.

    நில நிர்வாக கூடுதல் ஆணையர் எஸ்.ஜெயந்தி பள்ளிக்கல்வித்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு மேகனசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சி.கதிரவன் தமிழ்நாடு சாலைகள் பிரிவு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி எம்.லட்சுமி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பூஜா குல்கர்னி தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார். மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் செயலாளர் பி.எஸ்.ராஜசேகர் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் சிறப்பு செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

    கோவை வணிக வரிகள் இணை கமிஷனர் (மாநில வரிகள்) சிவராசு வருவாய் நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டார். திட்ட மற்றும் மேம்பாட்டு துறை சிறப்பு செயலாளர் ஹர்சகாய்மீனா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையராக (பயிற்சி) இடமாற்றம் செய்யப்பட்டார். தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஜி.லட்சுமி பிரியா ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் இந்து அறநிலையத்துறையின் சிறப்பு பணி அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டி.எஸ்.ஜவகர் தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில திட்ட மேலாளர் சுப்புலட்சுமி நில நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

    சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) எம்.எஸ்.பிரசாந்த் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனராக (பொது) மாற்றப்பட்டார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டி.மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் மேலும் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் அலுவல் சாரா இணை செயலாளராகவும் பணியாற்றுவார்.

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றுவார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயா சந்திரபானு ரெட்டி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் செயல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    கோவை கலெக்டர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக (பணிகள்) இடமாற்றம் செய்யப்பட்டார். தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நீரஜ்மிட்டல் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில நகர்ப்புற சுகாதார மேலாளர் அழகுமீனா தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். கடலூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குனர் பவன்குமார் கிரியப்பாநாவர் திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) டி.சினேகா ஓசூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குனர் சி.தினேஷ்குமார் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    சிப்காட் பொது மேலாளர் (நிர்வாகம் மற்றும் நில நிர்வாகம்) ரத்தினசாமி வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஆனார். பள்ளிக்கல்வித்துறையில் முன்னாள் துணை செயலாளர் சரண்யா அரி விடுமுறையில் இருந்து திரும்பியதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுதந்திர தின விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைப்பது மரபு.
    • தேசியக் கொடி ஏற்றிவைப்பது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். 

    ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. 

    இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுக்கூறு-17ன்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 

    1989-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு3(1)(m)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலகப் பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய

    குற்றமாகும்.

    மேலும் மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 3(1)(m)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் மேற்சொன்ன வகுப்பினரை வேண்டுமென்றே அவமதித்தால் அல்லது பொதுமக்கள் பார்வையில் எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அச்சுறுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். 

    இதனைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

    அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய

    பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

    மேலும், இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.

    இந்தப் புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் (Help line) / ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம்.

    இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு 14.08.2022 மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும் அது குறித்த அறிக்கையை 17.08.2022க்குள் அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×