search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 MLA Case"

    தங்க தமிழ்ச்செல்வன் என்னுடன் தான் இருப்பார் என்றும், அவரைத்தவிர மற்ற 17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை வாபஸ் பெறும் நிலைப்பாட்டில் இல்லை என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தங்க தமிழ்ச்செல்வனுடைய திடீர் முடிவு குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-

    சென்னை அடையாறில் உள்ள என்னுடைய வீட்டுக்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் நேற்று (நேற்று முன்தினம்) வந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து இந்த தீர்ப்பு குறித்து ஆலோசித்தோம்.

    தங்க தமிழ்ச்செல்வன் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இருக்கும்போதே, தீர்ப்பு திரும்ப திரும்ப தாமதம் ஆக வேண்டாம். நாம் அனைவரும் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேர்தலில் போட்டியிட்டு, அதே தொகுதியில் குக்கர் சின்னத்தில் நின்று நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்.

    அதற்கு மற்ற எம்.எல்.ஏ.க்கள் நாம் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆனால் இப்போது சட்டப்பூர்வமாக போராடுவோம். 3-வது நீதிபதி விசாரணையில் வரும் தீர்ப்பில் கண்டிப்பாக நமக்கு சாதகமாக இருக்கும். அதிலும் நாம் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டு சென்று போராடி நிச்சயம் அங்கே வெற்றி பெறுவோம். ஏனென்றால் எடியூரப்பா வழக்கில் கூட எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதே அடிப்படையில் நமக்கும் தீர்ப்பு வரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    அதையும் மீறி நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால், இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்றும் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.


    தங்க தமிழ்ச்செல்வன் வக்கீலுடன் வந்து வருகிற திங்கட்கிழமை தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும், வழக்கு வாபஸ் பெறுவதற்கான மனுவையும் கொடுக்க இருப்பதாக என்னிடம் வந்து தெரிவித்தார்.

    அப்போது வக்கீல்கள் 3-வது நீதிபதியிடம் கொடுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள். அப்படியே செய்யுங்கள் என்று நானும் கூறினேன்.

    மற்ற (17 எம்.எல்.ஏ.க்கள்) எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு இது அல்ல. அவர்கள் சட்டப்பூர்வமாக போராடும் நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து என்னுடன் தான் இருப்பார். தேர்தல் வந்தாலும் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவார்.

    நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என நிரூபித்து கட்சியையும், இரட்டை இலையையும் மீட்போம். தொடர்ந்து சட்டரீதியாக போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
    சபாநாயகரின் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு செய்து உள்ளார். 3-வது நீதிபதியின் தீர்ப்பு தாமதம் ஆகலாம் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கிறார்.
    சென்னை:

    19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவிட்டார். அதில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தார். மற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெளியானது.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு அந்த வழக்கு செல்கிறது.

    முன்னதாக இந்த தீர்ப்பு வெளியாவது குறித்த தகவல் அறிந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன்(ஆண்டிப்பட்டி), வெற்றிவேல்(பெரம்பூர்), பழனியப்பன்(பாப்பிரெட்டிபட்டி), செந்தில்பாலாஜி (அரவக் குறிச்சி), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

    அப்போது தங்க தமிழ்ச்செல்வன், “ஐகோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றாலும், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு செல்லமாட்டோம்” என்று தெரிவித்தார். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “18 எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு செல்வோம்” என்று கூறினார்.

    இந்த முரண்பாடு குறித்து டி.டி.வி.தினகரனிடம் கேட்டபோது அவர், “தங்க தமிழ்ச்செல்வன் அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறார். அவரும்(தங்க தமிழ்ச்செல்வனும்), வெற்றிவேலும் என்னுடைய 2 கண்கள் மாதிரி” என பதில் அளித்தார்.

    இந்த நிலையில், தற்போது தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக திடீரென தெரிவித்து உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    இதுகுறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    கட்சி தாவல் தடைச்சட்ட வரம்பின்கீழ் நாங்கள் வரவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடைச்சட்டம் பாய்ந்து இருக்க வேண்டும். இதே நீதிபதி தான் அவர்கள் நிரபராதி என்று தீர்ப்பு அளித்தார். ஆனால் எங்களை கண்டித்து இருக்கிறார். இது ஒருதலைபட்சமான தீர்ப்பு.

    அரசாங்கத்தின் சொல்படிதான் ஐகோர்ட்டு கேட்கிறது. கோர்ட்டால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியவில்லை. இந்த அரசை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஈடுபட்டு இருக்கிறார்.

    என்னுடைய தொகுதியில் கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏ. இல்லை. இதனால் மக்கள் அடிப்படை பிரச்சினைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

    எங்கள் வழக்கில் 3-வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எப்படியும் அந்த தீர்ப்பு வெளிவருவதற்கு ஓராண்டு காலம் ஆகலாம்.

    என்னுடைய தொகுதிக்கு எம்.எல்.ஏ. வேண்டும். எனவே சென்னை ஐகோர்ட்டில் நான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுகிறேன். அதன்பிறகு, என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வரட்டும். பொதுமக்களும் பயன் அடையட்டும். அதற்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

    9 மாதங்களாக 3 லட்சம் மக்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டு இருக்கிறது? இது எனக்கு பிடிக்கவில்லை. உடனடியாக என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு தான். மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது.

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் நல்லவர்களாகிய எங்களுக்கு கெட்ட தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரிடம், “உங்கள் முடிவை டி.டி.வி.தினகரனிடம் தெரிவித்து விட்டீர்களா? நீங்கள் டி.டி.வி.தினகரனுடைய அணியில் தான் நீடிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்னுடைய முடிவை முதலில் டி.டி.வி.தினகரனிடம் தான் தெரிவித்தேன். அவர் வழக்கை வாபஸ் பெறுவதற்கான மனுவை தலைமை நீதிபதியிடம் கொடுக்க வேண்டாம். 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகு, அவரிடம் கொடுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். அதன்படி செயல்படுவேன். நான் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அணியில்தான் நீடிக்கிறேன்’ என்று பதில் அளித்தார். #18MLACase #ThangaTamilSelvan #AssemblySpeaker #ChennaiHighCourt
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #18mlacase #Congress #Thirunavukkarasar
    தஞ்சாவூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வரவுள்ளதை வரவேற்கிறேன்.


    இந்த தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும். மேலும், ஆட்சி கவிழ்கிறதா? அல்லது நிலை பெறுமா? என்பது தெரியவரும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படாததற்கு அம்மாநில அரசும், மத்திய அரசுமே பொறுப்பு. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு வேகமாக செயல்படவேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை. இதில் கட்சிகளை வைத்து இப்பிரச்சனையை அணுக முடியாது. எனவே தமிழக அரசு போராடி மத்திய அரசை தலையிடச்செய்து தீர்வு காணவேண்டும்.

    எஸ்.வி.சேகர் மீது தமிழக காவல்துறைதான் வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்றால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அல்லது காவல் துறை பயப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #18mlacase #Congress #Thirunavukkarasar
    ×