என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பாவை"
- மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும்.
- கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.
'மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ணர் அருளியுள்ளார். அதற்கேற்றால்போல் பல சிறப்புகளை மார்கழி மாதம் பெற்றுள்ளது. மார்கழி மாதம் வந்தாலே அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவது என்பது வழக்கமான ஒன்றாகும்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தேவலோகத்தில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. பகல் பொழுதை உத்தராயணம் என்றும், இரவு பொழுதை என்றும் அதன்படி தட்சிணாயனம் அழைப்பார்கள். அதிகாலையான, பிரம்ம முகூர்த்தமாக தேவர்களுக்கு மார்கழி மாதம் உள்ளது. இதனால் மார்கழி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு தனிச் சிறப்புகளும், பலன்களும் உண்டு. எனவேதான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.
ஜோதிட சாஸ்திரப்படி, சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமாக மார்கழி மாதம் உள்ளது. எனவே மார்கழி மாதம், 'தனுர் மாதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வ வழிபாட்டுக்குரிய சிறப்புமிக்க மாதமான மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும். மார்கழி மாதம் அதிகாலையில் வைணவ தலங்கள் திறக்கப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடி திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். அதுபோல சிவன் கோவில்களிலும் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படுகிறது.
மார்கழி மாதம் விடியற்காலையில் கன்னி பெண்களை துயில் எழுப்பி, ஆற்றில் நீராடி இறைவனை போற்றி வழிபடுவதை ஆண்டாள் திருப்பாவையில் விவரித்துள்ளார். அதன்படி, மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு பாவை நோன்பு இருந்து இறைவனை வழிபட்டால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. திருப்பாவை போன்று சிவ பக்தைகள், நோன்பு நோற்பதற்காக தோழிகளை எழுப்புவதாக அமைந்ததே, திருவெம்பாவை. சிவன் அடியாளர்களே கணவனாக வேண்டும் என்றும், பின்பு அவரோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
கோகுலத்தில் இந்திரனால் பெருமழை உருவாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் துன்பப்பட்டபோது, கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றினார். இந்நிகழ்வு நடந்தது மார்கழி மாதத்தில் தான். திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி, இந்த ஆண்டு மார்கழி மாதம் 15-ந் தேதி (30-12-2025) அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம், ஆண்டு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அந்த சொர்க்கவாசல் வழியாக நுழைந்துவந்தால், வாழ்வில் உள்ள சிக்கல்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் நடத்தப்படும். அதன்படி மார்கழி மாதம் 19-ந் தேதி (3-1-2025) அன்று சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் வருகிறது. இது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அனுமன் அவதரித்த நாளாக மார்கழி மாதம் அமாவாசை நாள் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் குவியும்.
மார்கழி மாதம் 10-ந் தேதி (25-12-2025) வியாழக்கிழமை அன்று பிள்ளையார் நோன்பு வருகிறது. திருக்கார்த்திகையில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். இந்த விரதம் இருந்து வழிபட்டால் இனிமையான வாழ்வு அமையும்.
மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு வீட்டின் முன்பு கோலமிட்டு அதன் மீது அழகான மலர்களால் அழகுபடுத்துவார்கள். கோலத்தின் மீது பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவது வழக்கம். இதன்மூலம் மகாலட்சுமியே வீட்டிற்குள் குடியேறுவாள் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலையில் வீட்டின் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவதுடன், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.
- மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் திருப்பாவை பாடப்படுகிறது.
- வெல்லம் தோசை, சுண்டல், சீரகம் மற்றும் பொங்கல் போன்ற சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்படுகிறது.
மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் இன்று முதல் திருப்பாவை பாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் மூலவர் ஏழுமலையானுக்கு வில்வ இலைகளால் சஹஸ்ர நாமார்ச்சனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி அலங்காரம் செய்யப்படுகிறது. வெல்லம் தோசை, சுண்டல், சீரகம் மற்றும் பொங்கல் போன்ற சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70.251 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26,862 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தன் விருப்பப்படியே திருமாலை கணவராக மணம்புரிந்தார் ஆண்டாள்.
- ஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளன.
மார்கழி மாதத்தில் பெண்கள் திருப்பாவை படிக்க வேண்டும். ஆண்டாள் பாடிய பாடல் என்பதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடலாக இருப்பதால் திருப்பாவை எனப் பெயர் பெற்றன. திருமாலை மணம் புரிய வேண்டும். தன் விருப்பப்படியே திருமாலை கணவராக மணம்புரிந்தார் ஆண்டாள்.
திருமாலைத் தவிர வேறு எவரையும் மணவாளனாக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். ஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளன. திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்ட நோக்கத்தை எடுத்துரைப்பது முதல் பாடல். 2 முதல் 5 வரை உள்ள பாடல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணரின் சிறப்பைக் கூறும் பாடலாக அமைந்துள்ளன.
6 முதல் 15 வரை துதிப்பாடல்கள் பெண் தோழர்களை கற்பனை செய்து ஆழ்வார்களுக்கு ஒப்பாக கொண்டு அவர்களை எழுப்பி நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை பற்றி எடுத்துரைக்கும்.
16 முதல் 30 வரையில் உள்ள பாடல்கள் வெண்ணை உண்ட கிருஷ்ணனை உருகி பாடப்படும். உன்னையே கணவனாக எண்ணி கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாடப்பட்டது.
இத்தனை பெருமையை கொண்ட ஆண்டாளை மனமுருகி வேண்டி பாட வேண்டும். ஆண்டாள் மகாலட்சுமி, பூமாதேவி அவதாரம் என்பதால் பொறுமைக் குணம் வாழ்ந்தவர். அறிந்து அறியாமல் செய்த தவறுகளை உணர்ந்து ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்க மனமிரங்கி அருள்புரிவாள்.
- 10 நாள் ஆண்டாளுக்கு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறும்.
- இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது.
ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்புகள் ஏராளம். பெரியாழ்வார் மட்டுமின்றி, ஆண்டாளும் ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார். பெருமாள் மீது கொண்ட காதலால், அவர் நினைவாக பாடிய 30 பாடல்கள், திருப்பாவையாக மிளிர்கின்றன. ஆண்டாளுக்கு 'கோதை', 'நாச்சியார்' என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. கோதை ஆண்டாள், 'தமிழையும் ஆண்டாள்' என்பது சொல் வழக்கு. ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களை, எந்த மொழியில் மொழிபெயர்த்து பாடினாலும் கேட்பவருக்கு தமிழில் பாடுவது போன்ற உணர்வு இருக்குமாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் விழா நடக்கும். மற்ற மாதங்களைவிட மார்கழியில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மார்கழி மாதத்தில் பகல் பத்து உற்சவமும், பின்னர் ராப்பத்து உற்சவமும் நடைபெறும். அதன் பிறகு 10 நாள் ஆண்டாளுக்கு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறும். பகல் பத்து உற்சவம் தொடங்கும் போது, ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளி, தான் வளர்ந்த வீட்டிற்கு வருவார். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அங்கு வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பெரியாழ்வார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை வீட்டில் தயார் செய்து, பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிப்பார்கள்.
திருப்பாவை பாடல்களை இயற்றிய ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாவை பட்டு ஒன்றை ஆண்டாளுக்கு சமர்ப்பித்தனர். அது அரக்கு நிறம் கொண்டது. இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், அதில் ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடல்கள் இருக்கும். இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், அதாவது மார்கழி முதல் தேதியில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பல லட்ச ரூபாய் செலவில் பக்தர் ஒருவர் சமர்ப்பித்திருந்த, 30 திருப்பாவை பாடல்களுடன் அச்சிடப்பட்ட ஊதா நிற பட்டுப்புடவை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டுப்புடவையில், ஆண்டாள் முழு உருவத்தையும் பட்டு நூல்களால் சேர்த்துள்ளனர்.
இந்த பட்டுப்புடவையின் நீளம் 18 கெஜம். ஒரு கெஜம் என்பது கிட்டத்தட்ட 3 அடி ஆகும். மிக மெல்லிதாகவும், வேலைப்பாடுடனும் நெய்யப்பட்டு இருக்கும் இந்த புடவையானது, அப்படியே ஆண்டாள் விக்ரகத்துக்கு சாற்றப்பட்டு, அவர் எழுந்தருளும் போது, அவ்வளவு நீளமான பட்டுப்புடவையை எப்படி இவ்வளவு சிறிதாக மடித்து சாற்றினார்கள் என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.
இந்தப்பட்டின் பெருமைகள் குறித்து ஆண்டாள் கோவில் ஸ்தாணிகம் ரமேஷ் கூறியதாவது:-
ஆண்டாளுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் தேதியில் திருப்பாவைப்பட்டு அணிவிக்கப்படும். இந்த புடவையில் 30 திருப்பாவை பாடல்களும், ஆண்டாள் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. பட்டு நூல்களால் இழைக்கப்பட்ட இந்தப் பட்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆண்டாளுக்கு சாத்தப்படும். அதிகாலை அணிவிக்கப்படும் இந்தப் புடவையிலேயே, அன்றைய தினம் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு ஆண்டாள் காட்சி அளிப்பாா்.
திருப்பாவைப் பட்டில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் காட்சியளிப்பதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையையும், ஆண்டாளே வந்து பிறந்ததாக கொண்டாடுவது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெண்கள் வெளியூர்களுக்கு திருமணம் ஆகி சென்றாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து ஆண்டாளை தரிசித்துச் செல்வார்கள். தற்போதும் அந்த ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டாள் வேடம் அணிந்து அழகு பார்ப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆண்டாள் வேடம் அணிந்து குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வருவர். மார்கழி மாதத்தில் ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் இன்றும் உள்ளது. பூமா தேவியாக பிறந்த ஆண்டாளின் கோவிலுக்கு, வாழ்நாளில் ஒரு முறையேனும் வந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பல மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புடவைக்கு சிறப்பு பூஜை
ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டாளுக்கு அணியப்படும் பட்டுபுடவையை மற்ற நாட்களில் பீரோவில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். மார்கழி மாதம் அன்று அந்த புடவையை பீரோவில் இருந்து எடுப்பர். பின்னா் அந்த புடவையை ஆண்டாள் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்வர். ஆண்டாளுக்கு பிடித்த பழங்கள், பொருட்கள் ஆகியவை இந்த பூஜையின் போது இருக்கும். சிறப்பு பூஜை முடிந்த பிறகு திருப்பாவை பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்படும்.
- குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார்.
- சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று வேகமாக தேடினார்.
அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக்கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கிய அவர், தெய்வீக முகக்களை கொண்ட அந்த குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.
இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதிய பெரியாழ்வார், அந்த குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார். பிறகு அந்த குழந்தையை தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை வேறு யாருமல்ல; சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம்.
சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.
பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்கு தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். அருகே உள்ள கிணற்றை கண்ணாடியாக நினைத்து அதில் தன் அழகை பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையை கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். அந்த மாலையை தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.
பெரியாழ்வார் அதிர்ச்சி
ஒரு நாள் வழக்கம் போல் பெருமாளுக்கு உரிய மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டு கழற்றி வைக்கும்போது அதில் ஆண்டாளின் தலைமுடி சிக்கி கொண்டது. ஆண்டாள் இதைக் கவனிக்கவில்லை. ஆனால், பெரியாழ்வார் கவனித்துவிட்டார்.
உடனே, அந்த மாலையை பெருமாளுக்கு சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார். ஆனால் அன்றிரவே பெருமாள் அவரது கனவில் தோன்றி, முடி இருந்த மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய மாலை தான். அவள் சூடி களைந்த மாலையை அணிவதே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு சாற்ற வேண்டும் என்று அருளினார்.
இதனாலேயே ஆண்டாளுக்கு சூடி கொடுத்த சுடர்கொடியாள் என சிறப்பு பெயர் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு சாற்றப்பட்டு வருகிறது.
ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்றுபொருள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி என பல சிறப்பு பெயர்களும் இவளுக்கு உண்டு.
திருமண வயதை அடைந்த ஆண்டாள் கண்ணனை அனுதினமும் நினைத்து, தனக்கு ஏற்ற மணவாளன் அவன் தான் என உறுதிகொண்டாள். கண்ணனை நினைத்து மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி விரதம் இருந்து வணங்கி வந்தாள். அதையறிந்த பெரியாழ்வார், மகளின் அந்த விருப்பத்தை ஏற்றபோதிலும், 108 எம்பெருமான்களில் யாரை திருமணம் செய்ய விரும்புகிறாய்? என்று கேட்டார். அப்போது ஆண்டாளிடம் ஒவ்வொரு பெருமாளின் பெருமைகளையும் எடுத்து கூறினார். கடைசியில் ஸ்ரீரங்கநாதரின் சிறப்புகள் அவளுக்கு பிடித்து இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாள் ஆண்டாள்.
ஆண்டாள் விருப்பப்படி அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவளை ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கில் அழைத்து சென்றார் பெரியாழ்வார். தென் காவிரிக்கு அருகில் சென்ற போது ஆண்டாள் தன்னை ஏற்க இருக்கும் ரங்கநாதருக்கு எதிரே பல்லக்கில் சென்று இறங்கினால் கவுரவமாக இருக்காது என கருதினாள். அதனால் அந்த இடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினாள். அவளது விருப்பத்தை அறிந்த பெருமாளும் அவள் நடந்தால் பாதம் வருந்தும் என எண்ணி யாரும் அறியாதவாறு அவளை அங்கிருந்து ஆட்கொண்டார்.
பல்லக்கில் இருந்து ஆண்டாள் திடீரென்று மாயமாய் போனதை கண்ட பெரியாழ்வார் திகைப்படைந்தார். பின்னர் தன் மகளை பெருமாள் அழைத்து கொண்டதை அறிந்த அவர் முறைப்படி தன் ஊருக்கு வந்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். பெருமாளும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஆண்டாளை ரங்கமன்னராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு பங்குனி உத்திரம் அன்று ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.
- கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
- விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டி கையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.
'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'
கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.
பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.
- மார்கழி மாதம் `தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது.
மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி மாதம் `தனுர் மாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார். சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான், வேறெந்த நிகழ்வுகளையும் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன்படியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது.
மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.
மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான். இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிப்பது இறைவனின் அருளைத் தரும்.
- ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே இது மார்கழி மாதம்.
- ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி
பாடல்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களே! ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே ! இது மார்கழி மாதம். முழு நிலவு ஒளி வீசும் நாள். இந்த நாளில் நீராடச்செல்வோம். கூர்மையான வேல் உள்ளவனும், பகைவர்களுக்கு கொடுமை செய்பவனும் ஆன நந்தகோபனின் குமாரன், அழகு நிறைந்த கண்களைக் கொண்ட யசோதை பிராட்டிக்கு இளம் சிங்கம் போன்றவன், கார்மேகம் போன்ற உடல் அமைந்தவன், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று பிரகாசிக்கும் முகத்தையும் கொண்ட ஸ்ரீமன் நாராயணன், நாம் விரும்பிய வரத்தைத் தருவான். அதனால் உலகத்தார் அனைவரும் புகழும் வண்ணம் நீராடி மகிழ்வோம்; வாருங்கள்!
திருவெம்பாவை
பாடல்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்
கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்
விளக்கம்
ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி! தொடக்கமும் முடிவும் இல்லாதவன் சிவபெருமான். ஒளிவடிவான அவனைப்பாடினோம். அந்த பாடலைக் கேட்ட பின்பும் நீ உறங்குகின்றாயே. உன்னுடைய காதுகள் உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? சிலம்பணிந்த இறைவனின் திருப்பாதங்களை நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்ட ஒருத்தி, அவன் நினைவில் விம்மி விம்மி அழுது தன்னை மறந்தாள். பின்னர் மலர் படுக்கையில் இருந்து புரண்டு எழுந்து, எதுவும் செய்யமுடியாமல் விழுந்து விட்டாள். இறைவனிடம் அவள் கொண்ட பக்தி நிலை அப்படியானது. ஆனால் எங்கள் தோழியாகிய நீயோ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய். இனியாவது எழுந்து வந்து இறைவனைப் பாடுவாய்.
- பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.
- இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது.
திருப்பாவை
பாடல்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே! மார்கழி மாத பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.
திருப்பாற்கடலில் பாம்பணையில் துயில்கின்ற பரந்தாமனின் திருவடியை அன்புடன் பாட வேண்டும். நெய், பால் ஆகியவற்றை உண்ணக்கூடாது. அதிகாலையில் எழுந்து நீராடி, கண்ணுக்கு மை தீட்டாமல், கூந்தலில் பூ சூடிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பிற ரைப்பற்றி கோள் சொல்லக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யக்கூடாது. செய்யத்தகாத காரியங்களையும் செய்யக்கூடாது.
யோகிகளுக்கும், தவசிகளுக்கும் நாமாக சென்று தர்மம் செய்ய வேண்டும். பிறருக்கு கொடுக்கும் போது செருக்கு இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், பரமன் அடிபணிந்து செய்ய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்
நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்
விளக்கம்
சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது, யாவும் கடந்து நிற்கின்ற ஒளிவடி வான இறைவன் மீது பாசம் வைத்திருப்பதாகச் சொல்வாய். அதே அன்பை இந்த மலர் படுக்கையின் மீது எப்போது வைத்தாய். பெண்களே!
நீங்கள் கேலியாக பேசி விளையாடுவதற்கு இது ஏற்ற இடம் அல்ல. தேவர்கள் சிவபெருமானை வாழ்த்துவதும், வணங்குவதுமாக உள்ளனர். இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது. ஒளிமயமான ஈசன் தனது திருவடிகளை இம்மண்ணில் படும்படி அருள்புரிய வந்துள்ளார். சிவலோகத்தில் வீற்றிருக்கும் அவர், தில்லை சிதம்பரத்தில் நம்மைக் காக்க எழுந்தருளியுள்ளார். நாம் சென்று வழிபடுவோம்.
- தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால்.
- என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன்
திருப்பாவை
பாடல்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ்செந்நெலோடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்
வாமன அவதாரத்தில், மாவலி சக்கர வர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டு, வானளாவ உயர்ந்து தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால். மேன்மைமிக்க அவருடைய பெயரைப் பாடி நீராடினால், நாடு முழுவதும் மாதம் மூன்று முறை மழை பெய்யும்.
நீர்வளம் பெருகி நெற்பயிர்கள் செழுமையாக உயர்ந்து வளரும். நெற்பயிர்களின் நடுவே கயல்மீன்கள் துள்ளும்.
அழகிய குவளை மலரில் புள்ளிகளைக் கொண்ட வண்டுகள் தேன் குடித்து மெய் மறந்து உறங்கும். தொழுவத்தில் புகுந்து பால் கறப்போர் பருத்த மடிகளை பற்றிக் கறக்க, வள்ளல் குணம்மிக்க பசுக்கள் குடம் நிறைய பாலைச் சுரந்து குடங்களை நிரப்பும். இப்படிப்பட்ட நீங்காத செல்வத்தை நாம் இந்த பாவை நோன்பால் அடைவோம்.
திருவெம்பாவை
பாடல்
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்
முத்தைப்போன்று வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் எல்லோருக்கும் முன்பாகவே எழுந்திருந்து, இறைவனை 'என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன், இன்பமே வடிவானவன்' என்று இனிக்க இனிக்க பேசுவாய். அப்படிப்பட்ட நீ, நாங்கள் இத்தனைமுறை அழைத்தும் உறங்கிக் கொண்டிருக்கிறாய். வந்து கதவை திறந்து விடு!
நீங்கள் எல்லாம் இறைவனுடைய பழைய அடியார்கள். இறைவன் அருகில் இருப்பவர்கள். அதிக பற்றுடையவர்கள். அவன் பால் உரிமை உடைய நீங்கள் என்னுடைய தவறை பெரிதுபடுத்தாமல் மன்னித்து ஏற்றால் இழுக்கு ஆகுமா? நீ இறைவனுடன் பற்றும், அன்பும் கொண்டவள் என்று எல்லோரும் அறிவோம்.
அழகான இதயத்தை உடையவர்கள் சிவபெருமானை நினைத்து பாடாமல் இருக்க மாட்டார்கள்!. உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இதுவும் தேவைதான்.
- அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே!
- ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே!
திருப்பாவை
பாடல்
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்
கடல் போன்ற நிலையில் அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே! மழைக்கு அதிபதியாகிய மன்னனே! நீ மழையை பெய்விக்காமல் ஒளிந்து கொள்ளாதே! நீ கடலில் புகுந்து, நீரை முகர்ந்து கொண்டு வானத்தை அடைய வேண்டும். இந்த உலகின் மூல முதல்வனாகிய திருமாலின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறவேண்டும். பெருமையும், எழிலும் பொருந்திய நாராயணனின் கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்ன வேண்டும். அவனது மற்றொரு கையில் உள்ள வலம்புரி சங்கு ஒலிப்பதை போல. இடி இடிக்க வேண்டும். பெருமாளின் சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புபோல உலக மக்கள் யாவரும் வாழும் படியாகவும் நாங்கள் மகிழ்ந்து நீராடுவதற்கு தாமதம் செய்யாமல் மழையை பொழியச் செய்யவேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
விளக்கம்
ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே! இன்னுமா உனக்கு பொழுது விடியவில்லை? கிளிபோல பேசும் நம் தோழியர் அனைவரும் வந்துவிட் டார்களா? என்று கேட்கிறாய். இறைவனைப் பாட வந்தவர்களை கணக்கிட்டு சொல்கிறோம். யார் வரவில்லை என்பதை எண்ணிப்பார்த்து சொல்கிறோம் அதற்கு நேரம் ஆகும். அதுவரைக்கும் நீ தூங்கிக்கொண்டு காலத்தை வீணாக்காதே. தேவருக்கு ஒப்பற்ற மருந்தாகவும், வேதங் களின் சிறந்த பொருளாகவும் கண்ணுக்கு இனிமையாகக் காட்சிதரும் சிவனை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கிறோம். ஆகை யால் நீயே வந்து எண்ணிக்கொள். எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் நீ போய் தூங்கு!
- ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன்.
- அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன்.
திருப்பாவை
பாடல்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
மாயாஜாலம் செய்வதில் வல்லவன், வடமதுரையில் பிறந்தவன், தூய்மையான நீர் பெருக்கெடுத்து ஓடும் யமுனைக்கரையில் விளையாடி வாழ்பவன், ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன், தான் பிறந்த தாயின் வயிற்றுக்கு பெருமை சேர்த்தவன், அவனே தாமோதரன். அப்படிப்பட்ட கண்ணனை, தூய்மையான மனதோடு சென்று அவன் திருவடிகளில் மலர் தூவி வணங்க வேண்டும். வாயினால் அவன் புகழைப்பாடி, மனதினால் தியானித்து வழிபட்டால், நமது பிழைகள் யாவும் நீங்கும். முற்பிறவியில் நாம் செய்த பாவங்களும், தொடர்ந்து வருகின்ற பாவங்களும் நெருப்பினில் இட்ட தூசியைப்போல் மறைந்துவிடும். ஆகவே அவன் பெருமைகளைப் பாடுவோம்.
திருவெம்பாவை
பாடல்
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய்
உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
திருமால், நான்முகன் ஆகியோரால் காணமுடியாத இறைவனின் திருப்பாதங்களை, நாம் காணமுடியும் என்று பொய்யாக பிறர் நம்பும் படியாக பாலும், தேனும் ஒழுக பேசிய வாயையுடைய பெண்ணே, கதவைத் திறப்பாயாக! பூமியில் உள்ளவர்களாலும், வானுலகில் உள்ள தேவர்களாலும், பிற உலகத்தில் உள்ளவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன். அவன் எளியவர்களான நம் மீது அன்பும், கருணையும் கொண்டு அருள்புரிகிறான். அவனது பெருங்குணத்தை போற்றுகிறோம். சிவனே... சிவனே.. என்று அவன் திருநாமத்தை உரக்கப்பாடுகிறோம். இதைக்கேட்டும் உணர்ச்சி இல்லாமல் தூங்குகிறாயே! நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை. நீ எப்போதுதான் இதை உணரப்போகிறாய்! எழுந்திரு.!!






