என் மலர்tooltip icon

    மற்றவை

    • இரும்புச்சத்தின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையே மிக அதிகம்.
    • சிலருக்கு விட்டமின் பி12 எனும் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

    நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகள் சரியாக இருக்க வேண்டும் என்பது ஆண்களுக்கு 14 கிராம் முதல் 16 கிராம் வரை

    பெண்களுக்கு 12 கிராம் முதல் 14 கிராம் வரை இருக்க வேண்டும்.

    இரும்பும் புரதமும் கலந்த கலவையே ஹீமோகுளோபின்.

    இந்த ஹீமோகுளோபின் என்பது ரத்த ஆற்றில் ஓடும் படகைப்போன்றது.

    இந்த படகின் மூலம் தான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜன் எனும் உயிர்வளிக்காற்று உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லையும் சென்று சேர்கிறது.

    நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும் நமது உடலில் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான செல்களும் சேர்ந்தே சுவாசிக்கின்றன.

    இப்படித்தான் மூளைக்கும் ஆக்சிஜன் செல்கிறது. மூளை எனும் தலைமைச்செயலகம் சிறப்பாக இயங்குகிறது.

    இத்தனை இன்றியமையாத ஹீமோகுளோபின் ஏன் குறைகிறது?

    நிலத்தடி நீர் மட்டம் ஏன் குறைகிறது? என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள். மழை பொய்த்து விட்டது என்று தானே. நிலத்தடி நீர் ஊற மழை பொழிய வேண்டும். அதுபோல ஹீமோகுளோபின் ரத்தத்தில் சரியாக இருக்க, நாம் உணவு வழி இரும்புச்சத்தை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    இரும்புச்சத்தின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையே மிக அதிகம்.

    சிலருக்கு விட்டமின் பி12 எனும் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

    மூலம் போன்ற நோய்களால் மலத்தில் ரத்தம் வெளியேறுவது, காச நோயில் இருமும் போது சளியுடன் ரத்தம் வெளியேறும்.

    இந்திய துணைக் கண்டத்தில் ரத்த சோகைக்கு முக்கிய காரணமாக குடலில் தங்கி நம் ரத்தத்தை குடித்து வாழும் குடற்புழு நோயால் ரத்த சோகை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    ரத்த சோகை யாருக்கு அதிகமாக வரும்?

    வேறு யாருக்கு பெண்களுக்கு அதுவும் வளர் இளம் பெண்களுக்குத் தான்.

    ஏன்?

    பிரதிமாதம் இயற்கையாக நிகழும் மாதவிடாய் உதிரப்போக்கு மற்றும் அதை ஈடு செய்ய சரியான அளவு இரும்புச்சத்தை உண்பதில்லை போன்றவையே முதன்மை காரணங்கள்.

    இந்த ரத்த சோகையின் அறிகுறிகள் தான் என்ன?

    1.சோர்வு

    2.உடல் வலி

    3.எப்போதும் தூங்கி வழிந்தது போல் காணப்படுவது.

    4.எதையோ இழந்ததைப் போல இருப்பது

    5. முகம் வெளிறிப்போய் காணப்படுவது

    (இதை பெண்கள் தாங்கள் வெள்ளையாகி விட்டோம் என்று எண்ணி சந்தோசப்படுவார்கள்)

    6. மாதவிடாய் போக்கு குறைதல்

    ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி ?

    இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி12 ஆகிய இந்த இரண்டையும் சரி வர எடுப்பது ரத்த சோகையை வராமல் செய்யும்.

    மாமிசம் உண்பவர்களுக்கு சிறந்த இரும்புச்சத்து அடங்கிய உணவு ஈரல்/ சுவரொட்டி ஆகும்.

    உங்களுக்கு பிடித்த எந்த விலங்கின் ஈரலை உண்டாலும் உங்களுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

    வாரம் ஒரு முறை அல்லது இருமுறை நூறு கிராம் ஈரல் எடுக்கலாம்.

    மாமிசத்தில் விட்டமின் பி12 உண்டு. இதை இரண்டையும் சரியாக எடுக்கும் அசைவ உண்ணிகளுக்கு நோ ப்ராப்ளம்.

    முட்டை மட்டும் உண்பவர்களுக்கு முட்டை மஞ்சள் கருவில் இரும்புச்சத்து இருக்கிறது.

    மரக்கறி உண்பவர்களுக்கு தங்களின் உணவில் கீரை வகைகளை அதிகம் எடுக்க வேண்டும்.

    காய்கறிகள் செய்யும் போது இரும்பு வாணலியில் சமைப்பது சிறந்தது.

    பீன்ஸ், ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்ச்சை, பேரீச்சம் பழம், நட்ஸ் வகைகள் போன்றவற்றில் இரும்பு இருக்கிறது.

    இருப்பினும் வருடம் இருமுறை ஹீமோகுளோபின் செக் செய்து குறைந்தால் சப்ளிமெண்ட் எடுப்பது சிறந்தது.

    வளர் இளம்பெண்கள் குடற்புழு நீக்க மாத்திரை வருடம் இருமுறை எடுக்க வேண்டும்.

    ஏன் இத்தனை கவனமாக ரத்த சோகையை சரி செய்ய வேண்டும் தெரியுமா?

    இன்றைய வளர் இளம்பெண்டிர் தான் நாளைய தாய்மார்கள்.

    ஆண்கள் அனைவரும் நமது பொறுப்பிற்குட்பட்ட தாய்/அக்கா/தங்கை/மனைவி/ மகள் போன்றவர்களுக்கு அவ்வப்போது ஹீமோகுளோபின் எடுத்து சோதித்து வருவது நம் கடமை.

    காரணம் - ஒரு குடும்பத்தில் மிகவும் குறைவான மருத்துவ கவனிப்பு கிடைக்கும் பாலினம் - பெண்கள்.

    -டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    • பூமியிலிருந்து பார்த்தால் பிரகாசமாகத் தெரிகிற வெள்ளி கிரகத்திலும் கடும் வெப்பம். அத்துடன் அங்கு காற்று மண்டல அடர்த்தி மிக அதிகம். விண்கலம் போய் இறங்கினால் அப்பளம்போல நொறுங்கிவிடும்.
    • சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் கடும் குளிர் நிலவும் வாயு உருண்டைகள். நிலம் என்பதே கிடையாது.

    பூமியின் அருமை பலருக்கும் தெரியாது. பூமியை விட்டுக் கிளம்பி வேறு கிரகங்களுக்குப் போய் பார்த்திருந்தால் ஆகா, நம் பூமி சொர்க்கம் போன்றது என்று கூறுவோம். ஆனால், மனிதன் இதுவரை பூமியை விட்டு வேறு எந்த கிரகத்துக்கும் சென்றது கிடையாது. சந்திரனுக்கு மனிதன் போயிருக்கிறான். ஆனால், சந்திரன் ஒரு கிரகம் அல்ல. சந்திரன் நமது பூமியின் அவுட் ஹவுஸ் மாதிரி.

    இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவும் ரஷ்யாவும் அனுப்பியுள்ள ஆளில்லா விண்கலங்கள் சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கிரகங்களையும் ஆராய்ந்து தகவல்களை அளித்துள்ளன.

    மனிதன் என்றாவது ஒருநாள் போய், தங்கி வாழக்கூடிய ஒரு கிரகம் உண்டு என்றால் அது செவ்வாய் கிரகம்தான். ஆனால் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கினால் இயல்பாக சுவாசிக்க முடியாது.

    செவ்வாயில் காற்று மண்டலம் உண்டு. ஆனால் அந்தக் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைடு வாயுதான் அதிகம். மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜன் வாயு மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. எனவே, ஆக்சிஜன் அடங்கிய குப்பியை முதுகில் கட்டிக்கொண்டு, மூக்கில் குழாயை மாட்டிக்கொண்டுதான் நடமாட வேண்டும்.

    செவ்வாயில் தண்ணீர் கிடையாது. அங்குமிங்கும் கிடைக்கும் ஐஸ் கட்டியை உருக்கிப் பயன்படுத்தியாக வேண்டும். விருப்பம்போல நடமாட முடியாது. விண்வெளியிலிருந்து பயங்கர வேகத்தில் வரும் விண்கற்கள் எந்த நேரத்திலும் தலை மீது வந்து விழலாம். தவிர, விசேஷ காப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டும். சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான கதிர்கள் தாக்கலாம்.

    இப்படியெல்லாம் இருந்தும் செவ்வாய்க்கு விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. செவ்வாயின் கதை இப்படி என்றால் சூரியனுக்கு மிக அருகே உள்ள புதன் கிரகத்துக்குப் போவது பற்றிச் சிந்திக்கவே முடியாது. பகலில் 427 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் வெயில். இரவில் மைனஸ் 173 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் குளிர்.

    பூமியிலிருந்து பார்த்தால் பிரகாசமாகத் தெரிகிற வெள்ளி கிரகத்திலும் கடும் வெப்பம். அத்துடன் அங்கு காற்று மண்டல அடர்த்தி மிக அதிகம். விண்கலம் போய் இறங்கினால் அப்பளம்போல நொறுங்கிவிடும். சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் கடும் குளிர் நிலவும் வாயு உருண்டைகள். நிலம் என்பதே கிடையாது.

    பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் (15 கோடி கிலோ மீட்டர்) உள்ளது. எனவே, புதன் கிரகத்தில் உள்ளது போல கடும் வெயில் இல்லை. பூமியில் போதுமான ஆக்சிஜன் அடங்கிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீரும் உள்ளது. எனவே, பூமியில் உயிரினம் சாத்தியமானது. செவ்வாய் போல இல்லாமல் பூமியானது தகுந்த பருமன் கொண்டது. எனவே, அது காற்று மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. வடிவில் சிறியது என்பதால் செவ்வாய் தனது காற்று மண்டலத்தை இழந்து வருகிறது.

    பூமியின் காற்று மண்டலமானது சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. பூமிக்கு காந்த மண்டலம் உள்ளது. அதுவும் இதுபோன்ற கதிர்களைத் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வரும் விண்கற்கள் பூமியின் காற்று மண்டலம் வழியே வரும்போது தீப்பிடித்து அழிந்துவிடுகின்றன. செவ்வாய் கிரகத்தில் அப்படி இல்லை.

    பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. அதனால் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. புதன் கிரகத்தில் பகல் என்பது மிக நீண்டது. இரவும் அப்படித்தான். செவ்வாயிலும் பூமியைப் போல ஒரு நாள் என்பது சுமார் 24 மணி நேரம். ஆனால், பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் சூரியனிலிருந்து தள்ளி அமைந்துள்ளது. எனவே, குளிர் அதிகம்.

    பூமியின் காற்று மண்டலம் தகுந்த அடர்த்தி கொண்டது என்பதால் பூமியில் தண்ணீர் இருக்கிறது. உயிரின வாழ்க்கைக்குத் தண்ணீர் மிக அவசியம். செவ்வாய் கிரகத்தில் என்றோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. ஆனால், இன்று செவ்வாயில் தண்ணீர் இல்லை.

    பூமியானது இயற்கையாக இதுபோன்ற பல சாதக நிலைகளைப் பெற்றுள்ளதால்தான் பூமியில் மனிதனும் பலவகையான விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், தாவரங்களும் வாழ முடிகிறது. அந்த அளவில் சூரிய மண்டலத்தில் பூமி ஒன்றுதான் உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது.

    -அருண் நாகலிங்கம்

    • ஐம்புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள் இருப்பது போலவே, மனதுக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு.
    • புருவ மத்தியாகும். அதற்கு லலாடம், திருநாடு, சிற்றம்பலம், சிற்சபை எனப் பல பெயர்கள் உண்டு.

    மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் ஞானேந்திரியங்கள் ஆகும். இந்த ஐந்து புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள், உண்டு.

    பரிணாமத்தில் கடைசிப் புலனாக, ஆறாவது புலனாக வந்தது மனமாகும். மற்ற ஐந்து புலன்களின் வேலைகளையும் தானே தனித்து ஒருங்கே செய்ய ஏற்பட்ட முழுமையான புலன் மனமே ஆகும்.

    ஐம்புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள் இருப்பது போலவே, மனதுக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அது புருவ மத்தியாகும். அதற்கு லலாடம், திருநாடு, சிற்றம்பலம், சிற்சபை எனப் பல பெயர்கள் உண்டு.

    மனமானது தனக்கான இருப்பிடத்தை விட்டு எப்போதும் ஐம்புலன்களைப் பற்றி வெளியே ஓடிய வண்ணம் இருக்கிறது. ஆம். ஒவ்வொரு வினாடியும் மனம் வெளியே ஓடி ஏதாவது ஒன்றைப் பற்றிய வண்ணமே இருக்கிறது. இதுவே மனதின் இயல்பு.

    -தென்னம்பட்டு ஏகாம்பரம்

    • ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...
    • முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

    உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?

    பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது...

    ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

    ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

    ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

    ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

    முக்கியமாக, பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

    கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

    இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

    மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

    ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

    முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

    அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

    அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

    அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... 'டியூஷன்'என்ற அருவருப்பான கலாச்சாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

    தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

    "இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

    உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

    மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

    • ஆண்டவன் என்றால் விரிந்தவன், எல்லையில்லாதவன் என்று பொருள்.
    • இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.

    பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவோ அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன.

    கடவுளை நாம் 1. ஆதி 2. பகவன் 3. ஆண்டவன் 4. கடவுள் 5. இறைவன் 6. தெய்வம் 7. அநாதி 8. பிரம்மம் 9. பரம் 10. பூரணம் என பலவாறு அழைக்கிறோம். இந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்....

    ஆதி : ஆதி என்றால் முதல் நிலை, மூல நிலை, இருப்பு நிலை என்று பொருள். இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை. ஆதலால் முதல்நிலை என்றும், இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் மூலநிலை என்றும், இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் இருப்புநிலை என்றும், இந்த மூன்று அர்த்தங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் ஆதி என்றும் அழைக்கப்படுகிறது.

    பகவன்: இலகு, பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன.

    இலகு - என்றால், சிறிய ,எளிய என்று பொருள்.

    பகு - என்றால், பெரிய, மதிப்புமிக்க என்று பொருள்.

    பகு + அவன் = பகவன். அதாவது பகவன் என்றால் பெரியவன், மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப்பெரியவன் என்பதைக் குறிக்கிறது.

    குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள். உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள். அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.

    ஆண்டவன் : ஆண்டு + அவன் = ஆண்டவன்.

    ஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்.

    ஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்.

    ஆண்டவன் என்றால் விரிந்தவன், எல்லையில்லாதவன் என்று பொருள். அதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.

    ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன்.. ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன்.. ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன் என்று பொருள்.

    கடவுள்: உயிரின் படர்க்கை நிலையான மனம், உயிராக ஒடுங்கி, உயிரே பரமாக, கடவுளாக மாறுவதைத் தான் கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது.

    கட+வுள் = கடவுள் அதாவது கடந்து கொண்டே உள்ளே செல்.

    மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள் = #கடவுள் என்பதாகும்.

    இறைவன்: இறைவன் என்றால் அரசன், தலைவன், அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள். அதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இயக்க நிலை மாறாமல், இயக்க விதிப்படி ஆண்டு கொண்டிருப்பவன் என்று பொருள்.

    தெய்வம் : உலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது. அ) நிகழ்ச்சி நிலை... ஆ)பொருள் நிலை.

    எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நிகழ்ச்சி நிலை எனப்படும்.

    அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை.

    உடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது... சாம்பல் அணுவாகிப் போகிறது. அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது. தெய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று.

    அநாதி: அநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்.

    புத்தகம் மேசை மீது இருக்கிறது.. மேசை பூமி மீது இருக்கிறது...பூமி வெட்ட வெளியில் இருக்கிறது.

    புத்தகத்திற்கு மேசை ஆதாரம்... மேசைக்கு பூமி ஆதாரம்... பூமிக்கு வெட்ட வெளி ஆதாரம்...வெட்ட வெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் அது அநாதி ஆயிற்று.

    அநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது. அநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர் யார் ? என்று தெரியவில்லை என்று பொருள்.

    கடவுளை யார் உருவாக்கினார்கள்? என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய், தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்....

    பிரம்மம்: பிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற என்று பொருள். அதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்.

    • வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட வேண்டும்.
    • சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

    உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் இரவு 7 மணிக்கு இப்படி செய்யுங்கள்!

    வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள்.

    இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.

    அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

    சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

    சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.

    சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.

    சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

    சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

    சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

    சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

    சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

    சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.

    சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

    சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

    சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

    - வள்ளல் ராமமூர்த்தி

    • இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள்.
    • கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பீதியுடன் அவளைத் தேடினார்.

    கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை, வாக்குவாதம் முற்றிவிட்டது.

    "நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!" என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.

    இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள்தான்,

    கணவனின் மனக்குழப்பம் அப்படிப் பேசவைத்துவிட்டது. வீட்டில் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் அவர் பணியில் ஆழ்ந்து விட்டார்.

    மாலையில் வீடு திரும்பியபோது தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு மண்ணைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    வீட்டுக் கதவு 'ஆ'வென திறந்து கிடந்தது.

    திகைப்போடு வீட்டுக்குள் நுழைந்தால், களேபரம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.

    தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி சத்தமாக அலறிக் கொண்டிருந்தது.

    விளக்கு ஒன்று கீழே தள்ளி விடப்பட்டிருந்தது.

    தரை விரிப்பு ஒரு சுவரின் அருகே ஒழுங்கின்றி கிடந்தது.

    அறை முழுவதிலும் விளையாட்டு பொம்மைகளும் பல்வேறுபட்ட துணிகளும் இறைந்து கிடந்தன.

    சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தார்.

    சாமான் கழுவும் தொட்டியில் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மேடையில் காலைச் சிற்றுண்டி சிந்திக் கிடந்தது.

    குளிரூட்டும் பெட்டியின் கதவு அகலமாக திறந்திருந்தது. அதில் இருந்த உணவு தரையில் சிந்தியிருந்தது.

    மேஜையின் அடியில் ஓர் உடைந்த கண்ணாடி தம்ளர் இருந்தது.

    பின் கதவின் அருகில் ஒரு மணல்மேடு காணப்பட்டது. ஏதோ நடத்திருக்கிறது.

    மதிய உணவு வேளைக்கு முன்பே தன் மனைவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது. கணவருக்குப் படபடப்பு அதிகமானது.

    ஹாலை ஒட்டி இருந்த குளியலறையை நோக்கித் திரும்ப அங்கும் அதிர்ச்சிக் காட்சிகள்.

    உள்ளே தண்ணீர் சொட்டும் சப்தம்... நிசப்தத்தை மேலும் திகிலாக்கியது.

    கதவைத் தாண்டி வெளியே வந்து தண்ணீர் குட்டை போல தேங்கிக் கிடந்தது.

    ஈரத்துண்டுகளும் தண்ணீரில் ஊறிப்போயிருந்த சோப்புக்கட்டியும், மேலும் பல விளையாட்டு பொம்மைகளும் குளியலறை தரை முழுவதும் சிதறிக் கிடந்ததைக் கண்டார்.

    கண்ணாடியின் மீதும் சுவர்கள் மீதும் பற்பசை பூசப்பட்டிருந்தது.

    'டாடி' என்ற குரல் கேட்டு, திடுக்கிட்ட அவர் தனது ஒன்றரை வயது மகன் பேஸ்ட்டைப் பிதுக்கி விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் அவனை அவசரமாகத் தூக்கி ஆழ்ந்த முத்தம் கொடுத்து அணைத்துக் கொண்டார்.

    கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பீதியுடன் அவளைத் தேடினார்.

    படுக்கையறையை நோக்கிப் பார்வை திரும்ப, அவசரமாக அதன் கதவைத் திறந்தார்.

    உள்ளே... முதுகுக்கு தலையணை கொடுத்து, ஒய்யாரமாக சாய்ந்திருந்த அவரது மனைவி, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

    'ஸ்வீட்டி' என்றார், உலர்ந்த நாக்குடன் அவரைப் பார்த்து புன்னகை புரிந்த மனைவி,

    "எப்போ வந்தீங்க" என்று கேட்டாள்.

    அதிர்ச்சியிலிருந்து மீளாத கணவர்,

    "இன்று வீட்டில் என்னதான் நடந்தது?" என்று கேட்டார்.

    மறுபடியும் சிரித்த மனைவி,

    "வீட்டிலே என்னதான் வெட்டி முறிச்சியோ.. என்று அலுவலகம் முடிந்து வந்தவுடன் நீங்கள் கேட்பது வழக்கம். இன்று ஒன்றும் வெட்டி முறிக்கவில்லை! அதுதான் நடந்திருக்கிறது" என்று கூறினாள்...

    செல்லாத காசிலும் செப்பு இருக்கும் என்பார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

    இயல்பாக சில விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாலேயே அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாத குணத்தை மாற்றி கொள்ளுங்கள்.

    – (இராம்குமார் சிங்காரம் எழுதிய 'ஒரு கதை, ஒரு விதை' நூலிலிருந்து…)

    • நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தபோது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.
    • சுமார் 34 கிலோ எடையுள்ள முத்துவை ஆய்வு செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் உலகிலேயே மிகப்பெரிய முத்து இது தான் என தெரியவந்தது.

    சாதாரணமாக முத்து எவ்வளவு பெரிதாக இருக்கும். ஆனால் 34 கிலோ எடையுள்ள முத்தைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பல்வான் என்ற தீவில் மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது.

    நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தபோது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

    ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல, 10 ஆண்டுகளுக்கும் அந்த அரிய முத்துவின் மதிப்பு தெரியாமல் அதனை வீட்டிலேயே வைத்துள்ளார்.

    இந்நிலையில், அவர் வசித்து வந்த மரத்தால் செய்யப்பட்ட வீடு திடீரென தீவிபத்திற்கு உள்ளானதும் அந்த முத்துவை எடுத்துக்கொண்டு மற்றொரு வீட்டிற்கு குடி செல்ல முயன்றுள்ளார்.

    அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் எதிர்பாராதவிதமாக இந்த முத்துவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து விலையில்லா கற்கள் பற்றி ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

    சுமார் 34 கிலோ எடையுள்ள அந்த முத்துவை ஆய்வு செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் உலகிலேயே மிகப்பெரிய முத்து இது தான் என தெரியவந்தது.

    இதன் இப்போதைய மதிப்பு 76 மில்லியன் பவுண்ட்(ரூ.672 கோடி) என தெரியவந்துள்ளது.

    கடந்த 1934ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 6.4 கிலோ எடையுள்ள 'அல்லா' என்ற பெயருடைய முத்து தான் உலகின் பெரிய முத்து என பெயர் பெற்று இருந்தது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு முத்து அந்த பெயரை முறியடித்து உள்ளது.

    - அண்ணாமலை சுகுமாரன்

    • நெல்லைச்சீமை மட்டுமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களை கொண்டது!
    • ஐந்தில் பாலையுள் அடங்கும் தேரிக்காடு என்று வழங்கப்பெறும் செம்மணல் பரப்பு வேறெங்கும் இல்லாதது!

    தமிழ்நாடு ஐவகை நிலங்களை கொண்ட வளமான மாநிலமாகும். இங்கு மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சியும், காடும் காடு சார்ந்த இடமான முல்லையும், வயலும் வயல் சார்ந்த இடமான மருதமும், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலும், மணலும் மணல் சார்ந்த இடமான பாலையும் உள்ளன.

    இந்த ஐவகை நிலங்களும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுவதில்லை. ஆனால் ஒருங்கிணைந்த நெல்லைச்சீமைக்கு அந்த சிறப்பு உண்டு.

    கோவையில் குறிஞ்சி உண்டு;

    ஆனால் நெய்தல் அங்கு இல்லை!

    தஞ்சையில் மருதம் உண்டு;

    ஆனால் குறிஞ்சி அங்கு இல்லை!

    சென்னையில் நெய்தல் உண்டு;

    ஆனால் மருதம் கிடையாது!

    மதுரையில் மருதம் உண்டு ;

    நெய்தல் இல்லை!

    இராமநாதபுரத்தில் பாதி பாலைதான்;

    ஆனால் முல்லையோ இல்லையே!

    குமரியில் நானிலமும் உண்டு;

    ஆனால் பாலை இல்லை!

    நெல்லைச்சீமை மட்டுமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களை கொண்டது!

    இந்த ஐந்தில் பாலையுள் அடங்கும் தேரிக்காடு என்று வழங்கப்பெறும் செம்மணல் பரப்பு வேறெங்கும் இல்லாதது!

    திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக இந்த தேரிக்காடு அமைந்து இருக்கிறது. கடலோரம் ஒட்டிய சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை பகுதியில் தேரிக்காடுகள் உள்ளன.

    உச்சி வெயிலில் கண்கள் கூசும் அளவுக்கு தகதகவென்று செம்பைக் காய்ச்சிப் பரத்தியதுபோல் இருக்கும்.

    சரத்குமார் நடித்த 'ஐயா' படத்திலும் விஷால் நடித்த 'தாமிரபரணி' படத்திலும் இந்த செம்மணல் பரப்பு செம்மையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்!

    -பாரதி முத்துநாயகம்

    • பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் “மலைகள்” என அழைக்கப்படுகின்றன.
    • வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.

    சங்க இலக்கியங்களில் தற்போது செஸ் என்றழைக்கப்படும் விளையாட்டுக்கு மூலமான வல்லாட்டம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் காணப்படுவதாலும் கீழடி அகழாய்வில் ஆட்டக்காய்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும் இது கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே விளையாடப்படும் விளையாட்டு என்பது உறுதியாகிறது. பரிபாடலில் இவ்விளையாட்டை வல்லுப்போர் எனப்போருடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளதால் இது சதுரங்க விளையாட்டை ஒத்த விளையாட்டாகவும் கருதப்படுகிறது.

    கி.பி.18ஆம் நூற்றாண்டு உடைய நூலான குற்றாலக் குறவஞ்சியில் வல்லாட்டக் குறிப்புகள் வருவதால் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலும் வல்லாட்டம் தமிழர்களால் விளையாடப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.

    வல்லாட்டம் போர்முறை விளையாட்டு என்பதால் இது தமிழர் சமுகத்தில் காய்கள் நகர்த்தி விளையாடும் விளையாட்டுகளின் பரிணாம வளர்ச்சியாகவே சங்கக்காலத்தில் விளங்கியுள்ளது.

    காடுகளில் வேட்டைச் சமூகமாக வாழும் காலத்தில் விரட்டுதல், தாண்டுதல் பயிற்சிக்காகப் பழங்காலத்தில் விளையாடிய எட்டுக்கோடு விளையாட்டாகவும் பின்னர் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த காலத்தில் விளையாடிய ஆடு புலி ஆட்டம் ஆகவும் மன்னர் ஆட்சிக்காலத்தில் வல்லாட்டமாகவும் பிற்காலத்தில் இது சதுரங்கம் ஆகவும் பரிணமித்து உள்ளது.

    " மூன்று புலிகளும் இருபத்தியொரு ஆடுகளும் கொண்ட ஆடு புலி ஆட்டம் கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து பிறந்த ஆட்டமாக இருக்க வேண்டும். புலி திரியும் காடுகளில் ஆடுகளைக் காப்பாற்ற முற்பட்டவனின் முயற்சி இது.

    அரசு இயந்திரம் மிகப்பெரிய வளர்ச்சியினைப் பெற்ற பிறகு பிறந்த மற்றொரு ஆட்டம் சதுரங்கம். அரசன், மதகுரு, குதிரை வீரன், யானை எனப் போர்ப் பயிற்சிக்கான விளையாட்டாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு மன்னர்களும் இதனை ஆடியிருக்கிறார்கள்.

    'ராஜாக்கள் ஆனைக்கொப்பு ஆடுவாரைப்போல' என்கிறது திருவாய்மொழியின் நம்பிள்ளை ஈட்டு உரை. சதுரங்கம் என்பதனை ஆனைக்கொப்பு என்ற சொல்லால் அக்காலத் தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. "- பேராசிரியர் தொ. பரமசிவன்.

    வல்யானை அல்லது வல்விலங்கு என்பது சங்க இலக்கியங்களில் போர் யானைகளைக் குறிக்கும் சொல்லாகும். வல்லாட்டம் பழங்காலத்தில் வல்யானைப் போர் என்று யானைப் போராக பழங்குடியினரிடையே தோன்றியதென்பதால், பாதுகாப்பான கட்டங்கள் "மலை" என்று குறிப்பிடப்படுவதோடு "வெட்டு" போன்ற சொற்களையும் கொண்டுள்ளது. யானையடி என்ற சொல் யானையின் நேரான நகர்வினைக் குறிக்கும். யானைகுப்பு என்ற விளையாட்டைக் குறிக்கும் சொல் யானை இளவரசர் என்று பொருள் தருகிறது.

    பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் "மலைகள்" என அழைக்கப்படுகின்றன. இவற்றால் வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.

    " குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

    உண்டாகச் செய்வான் வினை."

    எனும் குறளுக்குத் தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது குன்றின் மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பது போல் மிகவும் பாதுகாப்பானது எனப் பொருள். இந்தக் குறளில் யானைப் போர் மற்றும் பாதுகாப்பான மலை ஆகிய பலகை விளையாட்டு குறியீடுகளைக் காணலாம். இந்த மலைக் கட்டங்களே சதுரங்கத்தின் கருப்புக் கட்டங்களாகப் பின்னர் மாற்றமடைந்துள்ளன.

    வல்லாட்டமானது யானைப்போராகவும் யானை விளையாட்டாகவும் தமிழகத்தில் உருவாகி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் யானை விளையாட்டு என்றே பரவியுள்ளது. சீன நாட்டின் சதுரங்கமும் யானை விளையாட்டு என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக இவ்விளையாட்டு ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.

    வல்லாட்டத்தில் சங்கக்கால ஆட்சி முறையான எட்டு முக்கியத் தலைமை கொண்ட எண்பேராயம் எனும் முறையில் காய்களும் அதற்கான கட்டங்களும் அமைந்துள்ளன.

    தமிழ்நாட்டு மன்னர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தவர்களை எண்பேராயம் என்று பகுத்துக் காட்டுவது சங்கக்கால வழக்கம். இவர்களை முறையே...

    செயலாளர்

    காவல்

    ஊர் தலைவர்

    படைத்தலைவர்

    தொண்டர் படை

    யானை படை

    குதிரை படை

    உழவர் படை

    என உணர்ந்து கொள்ளலாம். இந்த எண்பேராயத்தின் வெளிப்பாடாகவே வல்லாட்டத்தில் எட்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    வல்லாட்ட விளையாட்டில் தொடக்கக் காலத்தில் இராணி என்ற காயே கிடையாது. ஏறக்குறைய 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு படைத்தலைவரின் காய் மேற்கத்திய நாடுகளின் சதுரங்க விளையாட்டு ஒழுங்குபடுத்தலில் இராணிக் காயாக மாற்றி விளையாடப்பட்டது.

    - கோடி

    • இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது.
    • இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

    உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. உலகில் பேசப்படும்/பேசப்பட்ட மிகப்பழமையான மொழிகளில்... Worldblaze வரிசைப்படுத்தி உள்ள டாப்-10 மொழிகளை பார்ப்போம்.

    10 வது இடத்தில் லத்தீன் மொழி:

    ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    9 வது இடத்தில் ஆர்மீனியன் மொழி:

    இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

    8 வது இடத்தில் கொரியன் மொழி:

    கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    7 வது இடத்தில் எபிரேய மொழி:

    இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

    6 வது இடத்தில் அராமிக் மொழி:

    அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

    5 வது இடத்தில் சீன மொழி:

    சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

    4 வது இடத்தில் கிரீக் :

    கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

    3 வது இடத்தில் எகிப்து மொழி:

    ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி :

    இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இது தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    1 வது இடத்தில் தமிழ் மொழி:

    5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

    -அம்ரா பாண்டியன்

    • எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார்.
    • 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு தயங்காமல் அவர் கூறிய பதில், “முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்” என்றார்.

    நாம் உண்ணும் உணவுத்தட்டில் முக்கியமான தேவையாக இருக்கும் ஊட்டச்சத்து "புரதச்சத்து" எனும் ப்ரோட்டீன்கள்.

    பவர் தரும், எனர்ஜி தரும், வளர்ச்சி தரும் இத்தகைய ப்ரோட்டீனை உணவில் எப்படி எளிதாக அடைவது?

    ப்ரோட்டீன் தேவையை அடைய உதவும் முக்கியமான எளிதான ஒரு உணவு உண்டெனில் அது முட்டை தான். முழுமையான புரதச்சத்து நிரம்பிய உணவு தான் முட்டை.

    முட்டையில் இவையன்றி வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி2 , பி6,பி12. துத்தநாகம் செம்பு என்று மனிதனுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் தாதுஉப்புகளும் இருக்கின்றன.

    முட்டையை வெறும் வெள்ளைக்கருவை மட்டும் உண்ணும் வழக்கம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனால் அது தவறான போக்காகும். நம் உடலுக்குத் தேவையான புரதம் முழு முட்டையில் தான் முழுமையாக வந்து சேரும். கொழுப்புக்கு பயந்து அஞ்சி வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டியதில்லை.

    தினமும் நான்கு முதல் பத்து முட்டைகள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழும் பலரை நான் அறிவேன். எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார். 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு தயங்காமல் அவர் கூறிய பதில், "முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்" என்றார்.

    நாளொன்றுக்கு ஒருவர் மூன்று முட்டைகளை எடுக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன், கட்டாயம் அந்த முட்டைகளை தனியாக செய்து தான் சாப்பிட வேண்டும். முட்டை தோசை, முட்டை பரோட்டா என்று சாப்பிடக்கூடாது. ஆனால் நமக்கு பிடித்த மாதிரி அவித்த முட்டை, ஆம்லெட், பொடிமாஸ் என்று சாப்பிடலாம். முட்டைகளை பச்சையாக உண்ணாமல் சமைத்து உண்பதேசிறந்தது.

    குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்ததில் இருந்து ஒரு முட்டையைக் கொடுத்து பழக்கலாம். முதலில் மஞ்சள் கருவில் ஆரம்பித்து பிறகு ஒரு வயதுக்குப் பிறகு வெள்ளைக்கருவும் சேர்த்துக் கொடுக்கலாம்.

    ஒரு வயதுக்கு மேல் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் வரை அவர்கள் சாப்பிட்டாலும் தடுக்க வேண்டியதில்லை. ஈவினிங் ஸ்நாக்காக ஒரு ஆம்லெட் போட்டுக்கொடுக்கலாம். இது சாக்லேட், பப்ஸ், பர்கரை விடவும் சிறந்தது.

    முட்டைகளை உண்டால் பலருக்கு வாயுக்குத்து வருகிறது. அபான வாயு அடிக்கடி வெளியேறுகிறது என்று கம்ப்ளய்ண்ட் செய்வார்கள். அதற்குத்தான் முன்பே கூறினேன், கட்டாயம் முட்டைகளை தனி உணவாகவே உண்ண வேண்டும். முட்டையை சோறுடனோ, முட்டை தோசை என்றோ, முட்டை பரோட்டா என்றோ உண்ணக்கூடாது.

    என்னை சந்திக்கும் நீரிழிவு நோயர்களுக்கு ஒரு வேளை உணவாக முட்டைகளை பரிந்துரை செய்து வருகிறேன். நான்கு முட்டைகளை முழுதாக உண்டாலும் ரத்த சர்க்கரை 200-ஐத் தாண்டாது. காரணம் முட்டைகளில் கார்போஹைட்ரேட் கிடையாது.

    கார்போஹைட்ரேட் இல்லாத உணவுப்பொருள் மிக மிக குறைவாகவே இன்சுலின் சுரப்பை தூண்டும். மிக மிக குறைவாகவே ரத்த க்ளூகோஸ் அளவுகளை ஏற்றும்.

    நீரிழிவு நோயர்களுக்கு இதனால் மூன்று நன்மைகள். முதல் நன்மை ரத்த சர்க்கரை ஏறாமல் இருப்பது. இரண்டாவது நன்மை நிறைவான புரதச்சத்து கிடைப்பது. மூன்றாவது நன்மை நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் பி12 கிடைப்பது.என்னை சந்திக்கும் பொருளாதாரத்தில் எளியோர்க்கும் சரி, வலியவர்களுக்கும் சரி.. நான் பரிந்துரைக்கும் புரதம் சார்ந்த உணவு "முட்டை" தான். தினமும் மூன்று முட்டைகள் எடுத்தால் போதும். அவர்களுக்கு வேறு ஹெல்த் ட்ரிங்குகளின் அவசியம் ஏற்படுவதில்லை.

    - டாக்டர் ஃபரூக் அப்துல்லா

    ×