என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223406"

    • திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
    • கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்.10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும்.

    ஒன்பது நவக்கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணைபடி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்.

    1. திங்களூர் (சந்திரன்): - காலை 6 மணி

    நவக்கிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.

    2. ஆலங்குடி (குரு): - காலை 7.30 மணி

    ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம். காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்.

    3. திருநாகேஸ்வரம் (ராகு): - காலை 9.30 மணி

    கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்.10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

    4. சூரியனார் கோவில் (சூரியன்): - மதியம் 11.00 மணி

    நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவக்கிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

    5. கஞ்சனூர் (சுக்கிரன்): - மதியம் 12.15

    சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15 மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

    6. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்): - மாலை 4 மணி

    நவக்கிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

    7. திருவெண்காடு (புதன்): - மாலை 5.15 மணி

    வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00 மணிக்கு கிளம்ப வேண்டும்.

    8. கீழ்பெரும்பள்ளம் (கேது): - மாலை 6.15 மணி

    திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். 45 நிமிஷ நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00 மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்.

    9. திருநள்ளாறு (சனி): - இரவு 8.00 மணி

    நவக்கிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.

    9.30 மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு புறப்படலாம்.

    • உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட.
    • உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.

    இந்த "சாமி'' யார்... எந்த ஊர்... என்ன பேர்...? என்று அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.

    பல வருடங்களுக்கு முன்னால், சின்னக்குப்பம் கிராமத்துக்கு வந்தவர், ஊருக்கு வெளியே குடிசை போட்டு தனியாக வசிக்கிறார்.

    ஊருக்குள் அவராக வரமாட்டார். விவசாய வேலைகளுக்கு கிராம மக்கள் அவரை வேலைக்கு கூப்பிடுவர்.

    ஆனால், செய்த வேலைக்காக பணமோ பொருளோ வாங்கிக் கொள்ளமாட்டார். உணவு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார்.

    எனவே, பெயரில்லாத அவரை "சாமி" என்று பெயரிட்டு அழைக்கவும் தொடங்கினர்.

    இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவோடு அந்த "சாமியை'ப் பார்க்க வந்தான் முத்து.

    அவன் அவருடைய குடிசையில் நுழைந்தபோது, சாமி ஆனந்தமாய் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார்.

    அவருடைய மாற்று உடை ஒன்றைத்தவிர குடிசையில் வேறு எந்தப்பொருளும் இல்லை.

    ஆள் நுழையும் சப்தம் கேட்டு,

    "வா, முத்து வா'' என்று அழைத்தார்.

    "சாமி, நேற்று நான் பட்டினம் போயிருந்தேன்.

    அங்கே என் உறவினர் ஒருவர் இறக்கும் தருவாயில் பட்ட கஷ்டங்ளைப் பார்த்தேன்.

    அதிலிருந்து என் மனம் கலவரமடைந்திருக்கிறது.

    நான் இறக்கும்போது அது போன்ற கஷ்டங்ளை அனுபவிக்க விரும்பவில்லை. ஆனந்தமாக இறக்க வேண்டும்.

    அதற்கு வழி ஏதேனும் இருக்கிறதா..? சொல்லுங்க சாமி,'' என்றான்.

    "அது மிகவும் எளிமையானது, ஆனால், சுலபமானதல்ல.''

    "உன்னிடம் எத்தனை மேலாடைகள் உள்ளன''...?

    "இருபதுக்கும் மேல் இருக்கும்.''

    அதில் மிகப்பழைய, விலை மிகக்குறைவான ஒன்றை எடுத்து இப்போது நான் செய்வது போல் செய்துவிட்டு நாளை வா என்றவர்,

    தன் மேலாடையைக் கழற்றித் தூக்கியெறிந்தார்.

    அதனை அவன் கண் எதிரே தீயிட்டுக் கொளுத்தினார். அதைப் பார்த்து சிரித்தார்.

    "இது என்ன பெரிய காரியம்'' என்று நினைத்த முத்து, வீட்டுக்கு வந்ததும் தன்னிடம் இருந்த பத்து வருட பழைய சட்டை ஒன்றை எடுத்தான்.

    அது பல இடங்களில் நைந்து கூட போயிருந்தது.

    அதனை தூக்கி எறியலாம் என்று நினைத்தபோது, அது அவன் பாட்டி அவனது பிறந்த நாளுக்குக் கொடுத்த பரிசு என்பது நினைவுக்கு வந்தது. அதை வைத்து விட்டான்.

    இவ்வாறாக ஒவ்வொரு ஆடையை எடுக்கும்போதும் ஒவ்வொரு ஞாபகம்...

    மறுநாள் சாமியின் கால்களில் விழுந்தான்.

    "அய்யா...., ஒரு பழைய ஆடையைக்கூட என்னால் தூக்கி எறிய முடியவில்லை. என்னை எவ்வாறேனும் காத்தருளுங்கள். இதற்காக என் குடும்பத்தைவிட்டு உங்களோடு வந்து விடவும் நான் சித்தமாயிருக்கிறேன்,'' என்றான்.

    "ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத உன்னால், இந்த உலக ஆசைகள் எனும் ஆடையை எவ்வாறு சுலபமாக கழற்றிவிட முடியும்''..?

    "பசித்திரு,

    தனித்திரு,

    விழித்திரு''

    இதுவே உனக்கான என் உபதேசம்.

    பசித்திரு என்றால் உன் ஆன்மிகப்பசியினை வளர்த்துக்கொள் என்று அர்த்தம்.

    உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட. உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.

    அதுவே தனித்திரு என்பதன் பொருள்.

    "ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத நிலையில் நான் உள்ளேன். இது போன்று இன்னும் எத்தனை எத்தனை கர்மவினையின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறேனோ' என்ற விழிப்புணர்வுடன் வாழ்.

    இதுவே விழித்திரு என்பதன் பொருள்.

    இந்த மூன்று உபதேசத்தினை கடைபிடி. மற்றவை தானே நிகழும்,'' என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தார்.

    அந்த சாமி தான் வள்ளலார் பெருமகனார்.

    - நெல்லை கேசவன்  

    • ஏராள காரணங்கள் என்னைப் பேசவிடாமல் வைத்திருக்க...
    • நேற்றிரவு நண்பன் அழைத்தான் அலைபேசியில்..

    பெண்ணுக்கு செய்த

    முறைமாமன் சீரில்

    மூன்று கிராம்

    குறைந்ததற்கு

    மூக்கு சிந்தி அழுது போன

    மூத்தவள்

    இன்று வரை -

    பேசவில்லை

    சீமந்தக்காப்பு

    சின்னதாய் இருந்தது கண்டு

    கோபித்துக்கொண்ட

    சின்னவள்

    இன்றுவரை -

    பேசவில்லை

    சின்னமச்சானுக்கு கொடுத்த

    சீர்வரிசைத்தட்டில்

    இருந்த

    பட்டுவேட்டியின்

    விலை பார்த்து

    விரக்தி சிரிப்போடு போன

    பெரிய மச்சான்

    இன்றுவரை -

    பேசவில்லை

    பிறந்த அன்றே

    தன் குழந்தையை

    பார்க்க வரவில்லை என்று

    கோபித்துக்கொண்ட

    பெரிய தம்பியும்

    இரண்டு முறை

    அழைத்தும்

    அலைபேசியை

    எடுக்காத காரணஞ்சொல்லி

    சின்னதம்பியும்

    இன்றுவரை -

    பேசுவதில்லை

    மருமகளுடனான

    சண்டையில்

    நான்

    மனைவிபக்கமே இருப்பதாக

    ஒரு காரணஞ்சொல்லி

    பெற்றவளும்

    இன்றுவரை -

    பேசுவதில்லை

    அழைப்பிதழ் கொடுக்க

    நேரில் வராமல்

    அலைபேசியில் மட்டுமே

    தகவல் சொல்லி

    அழைத்த

    அவமானம் தாங்காமல்

    உறவுக்காரர்கள் பலரிடம்

    நானும் -

    பேசுவதில்லை....

    இப்படியாக...

    என்னைச் சுற்றியே

    ஏராள காரணங்கள்

    என்னைப்

    பேசவிடாமல் வைத்திருக்க...

    நேற்றிரவு

    நண்பன் அழைத்தான்

    அலைபேசியில்..

    முப்பதாண்டுகளுக்கு முன்

    பிரிந்துபோன

    நண்பர்கள் எல்லாம்

    கூடிப்பேச

    ஏற்பாடு செய்திருப்பதாக...

    இதோ நான்-

    கிளம்பிக்கொண்டிருக்கிறேன்...!

    -அழ. இரஜினிகாந்தன்

    • இன்றைக்கு என்ன வேண்டும் என்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற இயற்கையின் நியதியை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    • சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்துவிட வேண்டும்.

    நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்து சிலவற்றைச் செய்யலாம் சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும் தடை விதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்கு பொறுத்தமாக இருந்திருக்கும்.

    நாம் இன்னும் அதிகமாக ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில் இதைச் செய், அதைச் செய்யாதே என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது 'சொர்க்கம், நரகம்' என்ற இரண்டு கற்பனைகளே.

    நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்லதை கொடுப்பான், தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள்.

    விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?

    இன்றைக்கு என்ன வேண்டும் என்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற இயற்கையின் நியதியை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்துவிட வேண்டும்.

    இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு தான் தயாரா? என்ற உண்மையை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம்.

    செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும் உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால், ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இயங்கும் போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான், தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம்.

    -வேதாத்திரி மகரிஷி.

    • நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும்.
    • 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.

    "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின் படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. அதாவது தாமிரபரணி போல 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

    ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.

    இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

    48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தானிய வாசத்தில் வைக்கிறார்கள்.அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது.

    ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.

    ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.

    இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

    சரி… ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.

    நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக் கொடுத்து விடும்.

    ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

    அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.

    புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது.

    இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

    பின்னர் கும்பாபிஷேகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.

    ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக ஆக்கப்படுகிறது.

    -கீர்த்திவர்மன் ஸ்தபதி

    • 1846ல் நேபாளத்தை பிடிக்க சென்ற பிரிட்டிஷ் படைக்கு கூர்க்காக்கள் கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார்கள்.
    • இந்தியா- நேபாளம்- பிரிட்டன் போட்ட ஒப்பந்தத்தின்படி நேபாளிகள் இந்திய ராணுவத்தில் சேரலாம்.

    இந்திய ராணுவத்தில் வெளிநாட்டவர் சேரமுடியுமா? ஒரே ஒரு நாட்டவருக்கு தான் அந்த உரிமை உண்டு. நேபாளிகள், குறிப்பாக கூர்க்காக்கள்.

    1846ல் நேபாளத்தை பிடிக்க சென்ற பிரிட்டிஷ் படைக்கு கூர்க்காக்கள் கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார்கள்.

    தோற்று பின்வாங்கிய பிரிட்டிஷ் படை, தான் பிடித்த சிக்கிமை வைத்துக்கொன்டு நேபாளத்துக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்கள் நஷ்ட ஈடு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது.

    அதன்பின் கூர்க்காக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்க அனுமதி கேட்டது பிரிட்டன். நேபாளமும் அனுமதித்தது. சுதந்திரத்துக்கு பின் இந்தியா- நேபாளம்- பிரிட்டன் போட்ட ஒப்பந்தத்தின்படி நேபாளிகள் இந்திய ராணுவத்தில் சேரலாம். பீல்ட்மார்ஷல் ஜெனெரல் கூட ஆகலாம்.

    பிறப்பால் பார்ஸி மதத்தை சார்ந்த சாம் மானேக்ஷா கூர்க்கா ரைபிள்ஸ் ரெஜிமெண்டில் தான் பணியாற்றினார். அவர் அந்த ரெஜிமெண்டை பற்றி சொன்னது "எனக்கு மரணத்தை கண்டு பயமில்லை என ஒருத்தன் சொன்னால் ஒன்று அவன் பொய் சொல்லணும் அல்லது அவன் கூர்க்காவாக இருக்கணும்"

    இன்றும் 30,000 கூர்க்காக்கள் இந்திய ராணுவத்தில் உள்ளார்கள்.

    - நியாண்டர் செல்வன்

    • தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
    • பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார்.

    ஒரு மாணவன் முழு ஆண்டுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில்..

    தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

    இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை.

    வகுப்புல பாடம் நடத்தும்போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியான்னு கோபமாக திட்டினார்.

    அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.

    இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.

    அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.

    உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

    உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

    ஒரு புதிய சிந்தனை உருவானது.

    தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.

    ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.

    அதன் பெயர் இயர் மஃப் (Ear muff)

    பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்.

    இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.

    ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.

    அந்தச் சமயம் முதலாம் உலகப்போர் ஆரம்பமானது.

    பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார்.

    போர் வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான்.

    கோடீஸ்வரனானான்.

    அவர்தான் செஸ்டர் கீரின் வுட்.

    சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்.

    - அருண் நாகலிங்கம்

    • தாயென்ற மகிழ்வோடும் தன்மகனின் நினைவோடும், வாயொன்று இருப்பதனை வஞ்சித்தே உனக்காக...
    • ஓயாது தேய்கின்ற உருவத்தை உற்றுப் பார் காயாது உன்னுள்ளம் கரங்கூப்பு அதுபோதும்!

    கருவுற்ற நாள் தொட்டு கலந்திட்ட சுகக்கேடை

    உருவுற்று மண்மீது உலகெட்டும் நாள்வரையில்

    ஒரு உற்ற சுமைபோல உள்ளத்தும் உடலாலும்

    வரம்பெற்று சுமக்கின்ற வல்லமையே தாய்மையடா!


    நிறமுற்று நீ ஆள நின்நிழலாய் நிலந்தன்னில்

    சரிவுற்று வீழும்வரை சளைக்காமல் உழைக்கின்ற

    பரிவுற்ற தாய்க் காணும் பல நோன்பும் உனக்காக

    நிறைவுற்று அவள் வாழ நினைக்காத தெய்வமடா!


    துளிப்பெற்ற சுகத்துக்காய் துணை பெற்ற நலத்துக்காய்

    வலிப்பெற்று நோய்ப்பெற்று வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

    களிப்புற்ற சில காலம் கண்ணுக்கே வந்தாலும்

    அலுப்புற்று ஒரு நாளும் அவள் சாய்ந்ததில்லையடா!


    தாயென்ற மகிழ்வோடும் தன்மகனின் நினைவோடும்

    வாயொன்று இருப்பதனை வஞ்சித்தே உனக்காக

    ஓயாது தேய்கின்ற உருவத்தை உற்றுப் பார்

    காயாது உன்னுள்ளம் கரங்கூப்பு அதுபோதும்!

    -பொன்மணிதாசன்

    • வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
    • ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

    நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

    எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

    வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.

    வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

    எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

    வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

    இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

    வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

    தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

    நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்.

    தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

    நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

    - ஆறுமுகம்

    • ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக இருக்கும்.
    • ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.

    கடல் என்பது ஆதியில் இருந்தே மனித இனத்திற்கு ஒரு புரியாதப்புதிராகவே இருந்து வந்துள்ளது.

    சிறிது சிறிதாக அச்சம் நீங்கி கடலைத்தாண்டி இருக்கும் நாடுகளை, கடலைக்கடந்து சென்று அறிந்து கொண்டனர்.

    கடலைத்தாண்டியதும் தான் பூகோளம் எனும் நிலவியல் தோன்றியது. உலகில் இருக்கும் இதரப்பகுதிகள் தெரிய ஆரம்பித்தது.

    கடலைக்கடந்தார்களேத்தவிர கடலின் ஆழத்தை மனிதனால் அவ்வளவு எளிதில் யூகித்து அறிய இயலவில்லை. கடல் மிகுந்த ஆழம் கொண்டது என்பது மட்டுமே புரிந்தது.

    கடலின் ஆழத்தைக் கண்டறிய 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முயற்சிகள் மேற்கொண்டனர்.

    ஆனால் அப்போது அதற்கு நவீனக் கருவிகள் இல்லையாதலால் மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலியைக் கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி மிகவும் பழமையான முறையை மேற்கொண்டு, சுமார் 7000 இடங்களில் இவ்வாறு ஆழம் கண்டறிந்தனர்.

    இந்த முறையில் குறிப்பிட்ட இடத்தின் ஆழத்தை மட்டும் அறியமுடிந்ததே தவிர, கடலின் அடிமட்டம் குறித்து அறிய வரைபடம் தயாரிக்க இது உதவவில்லை.

    பிறகு ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தின் பலனாக ஒலி அலைகளைப் பயன்படுத்திக் கடல் ஆழத்தை அறிய முயன்றனர்.

    இந்த உத்தி அடிப்படையில் எக்கோ சவுண்டிங், சைட் ஸ்கேன் ஸ்கேனர் ஆகிய கருவிகள் உருவாக்கப்பட்டு கடலின் நில அமைப்பை வரைபடமாகக் காட்டுகின்றன.

    இந்தக் கருவிகள் தயாரித்துள்ள பதிவேடுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பெரியதொரு படமாக்கிப் பார்த்தால் கடல்கள் அனைத்தும் வற்றிப் போனால் அவை எவ்வாறு காட்சி அளிக்குமோ அப்படிப்பட்ட காட்சியை அப்படம் அளிக்கும்.

    அப்படத்தைப் பார்த்தால் கண்டத்திட்டு (Continental Shelf). கண்டச் சரிவு (Continental Slope) ஆழ்கடல் (Abyss) ஆகிய மூன்று பகுதிகளை நீர் உலகம் கொண்டது எனத் தெரியவரும்.

    ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.

    சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்தளத்தில் உள்ளன. மடிந்த கடல்வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரியான படிவுகள்.

    இவ்வாறு ஆண்டுதோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்றனவாம்.

    கடலடியில் அனேக செங்குத்தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே.

    கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்திற்குச் சங்கிலித் தொடர்போல் மலைகளும், வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளனவாம்.

    அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பிற இடங்களிலும் இவ்வாறு பள்ளத்தாக்குகள் உள்ளன. சில இடங்களில் இதன் ஆழம் சுமார் 3 மைல்.

    கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உளள அகழிகள் ஆகும். இந்த அகழிகள் குறுகலானவை. நீளமானவை. கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும்.

    இந்த அகழிகளின் ஆழத்துடன் ஒப்பிட்டால் உலகின் கடல்களின் சராசரி ஆழம் 12,556 அடி. அதாவது, இரண்டரை மைல்.

    பிலிப்பைன்சுக்குக் கிழக்கே உள்ள மின்டானாவோ அகழியில் அமைந்துள்ள குக்மடு தான் உலகின் கடல்களில் மிக ஆழமான இடமாகும். இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் அச்சிகரம் மூழ்கி அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி.தான் .

    -அண்ணாமலை சுகுமாரன்

    • பணம் என்கிற ஒரே பண்டத்தால் மட்டுமே பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகி விடுவதில்லை.
    • பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளின் பணமும் ஒன்று.

    நிம்மதியும், மகிழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மகிழ்ச்சி காணாமல் போகும் போது நிம்மதியும் காணாமல் போகிறது.

    காற்று, நீர், உணவு, உறக்கம், பாலின்பம் இவை தான் ஒரு மனித உடலுக்கான அடிப்படைத் தேவைகள். இவற்றில் ஒன்றில்லையென்றாலும் உடல் துன்பப்படுவது உறுதி. அந்த உடற்துன்பம் காரணமாக மனநலமும் கெடுவது உறுதி.

    நடைபாதையில் வசிப்பவனின் மனைவியும் சரி. அரசாங்க அதிகாரியின் மனைவியும் சரி. நட்சத்திர விடுதி போன்ற மாளிகையில் வசிப்பவனின் மனைவியும் சரி. மகா கோடீஸ்வரனின் மனைவியும் சரி. தங்கள் கணவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்க தயங்குகிறார்கள்.

    மனித உடலின் அடிப்படைப் பசியான காமம் தணிக்கப்படாத போது ஆழ்மனதில் ஏக்கம் பிறக்கிறது. ஏக்கம் பூர்த்தியடையாத போது ஏமாற்றம் உருவாகிறது. தொடர் ஏமாற்றம் மனநிலையை விரக்தியடையச் செய்கிறது. நாள்பட்ட விரக்தியே வெறுப்பாக மாறுகிறது. இந்த வெறுப்பு தான் மன நிம்மதியை வேரறுத்து, மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்திச் செல்லும். மனைவியின் மனநலத்தை பொறுத்தே கணவனின் மகிழ்ச்சியும், அவன் பெறக்கூடிய வெற்றியின் அளவும், சமூக மதிப்பும், அவனுடைய ஆயுட்காலமும், குழந்தைகளின் எதிர்காலமும், குடும்பத்தின் தரமும் தீர்மானிக்கப்படுகின்றன.

    குடும்ப வாழ்க்கையில் நிகழும் அவலங்களுக்காக கூறப்படுகின்ற காரணங்கள் அனைத்துமே சாக்குப் போக்குகள். உண்மையான காரணம் பாலின்ப ஆற்றாமை. தாம்பத்ய வாழ்வில் காமம் தணிக்கப்படாத போது, பாலின்ப ஆற்றாமை பெண்ணின் உடலில் உருவாகிறது. இந்த ஆற்றாமை நுண்ணிய அளவிலான மன நோயாக மாறுகிறது. அந்த மனநோயின் விளைவாக அப்பாவி பெண் கூட பிடாரியாக மாற வாய்ப்புண்டு. அதன்பின் தன்னுணர்வற்ற நிலையில் கணவனை சகட்டு மேனிக்கு வதைக்கத் தொடங்குகிறாள்.

    பணம் என்கிற ஒரே பண்டத்தால் மட்டுமே பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகி விடுவதில்லை. பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளின் பணமும் ஒன்று. மற்றபடி, பணம் மட்டுமே பாலின்பப் பஞ்சத்தால் ஏற்படும் மன வக்கிரங்களைப் போக்கி விட முடியாது. பாலின்பத்துக்கு மாற்றுப் பொருளாக பணத்தைப் பயன்படுத்த முடியாது. பணம் அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரக்கோல் அல்ல.

    ஆகவே காமத்தின் புனிதத்தை புரிந்து கொள்ள முடியாத கணவனால் மனைவிக்குரிய இன்பங்களை நிச்சயம் வழங்க முடியாது. பாலின்பங்களை வழங்காத வரை மனைவியின் மனம் மலர முடியாது. மனைவியின் மனம் மலராத வரை, குடும்ப விவகாரச்சண்டைகள் முடிவிற்கே வராது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாகக் குடியேற முடியாது.

    படித்ததில் பிடித்தது

    • எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர் வீட்டில் விருந்தாளியாக இருக்கக்கூடாது . அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு.
    • நோய்வாய் பட்டால் 3 நாள் மருந்து சாப்பிட்டாலே குணம் ஆக வேண்டும். அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு .

    "விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்" என பழமொழி இருக்கும்பொழுது மாதக்கணக்கில் மருந்து எடுத்துக் கொள்வது சரியா?

    இந்த பழமொழியை கேள்விப்படும் போதெல்லாம் ஒரு அருமையான கதை என் நினைவுக்குவரும். கதையை சொன்னவர், எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நிகழ்ந்த வந்த பரவை முனியம்மா அவர்கள்.

    ஒருத்தன் தன் தாயிடம் சென்று "அம்மா என்னை என் மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். போயிட்டு வரட்டுமானு அனுமதி கேட்டான்.

    தாயும் சரி என்று சொல்ல... அம்மா எப்போ நான் திரும்பி வர என்று மகன் கேட்க , அதற்கு அந்த தாய் "எப்பொழுது உன் முகம் உனக்கு தெரிகிறதோ அன்று வந்துரு.. அதற்கு மேல் ஒரு நாள் கூட அங்கே தங்க வேண்டாம்"னு சொல்லியனுப்பினாள்.

    தாய் என்ன சொன்னாள் என்று புரியாமல் மகனும் மனைவியை அழைத்துக் கொண்டு விருந்துக்கு சென்றான். அங்கே தடல்புடலாய் விருந்து உபசரிப்பு. இலையில் வைக்க இடம் இல்லை, அத்தனை வகைகள். கோழி, முட்டை, மட்டன், மீன் என்று அனைத்தும் பரிமாறப்பட்டன. அவனுக்கு சந்தோஷமோ சந்தோசம்.

    2ஆம் நாளும் நல்ல விருந்து, இலையில் எல்லாம் இருந்தது மட்டனை தவிர.

    3ஆம் நாள் இலையில் மீன் இல்லை.

    4ஆம் நாள் இலையில் கோழி இல்லை.

    5ஆம் நாள் இலையில் முட்டையும் இல்லை.

    6ஆம் நாள் இலையில் சைவ உணவு சாம்பார் ஒரு கூட்டு,ஒரு பொரியல்.

    7ஆம் நாள் இலையே இல்லை, தட்டில் சோறு சாம்பார் உடன் ஒரே ஒரு பொரியல்.

    8 ஆம் நாள் சாம்பார் சாதம் மட்டுமே.

    இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவனும் அதை சாப்பிட்டான். 9 ஆம் நாள் அவனுக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது. தட்டில் கஞ்சி சோறு, தொட்டுக்க ஊறுகாய்.

    பசியில் அதையும் சாப்பிடுவதற்கு தலையை குனிஞ்சா அந்த கஞ்சி தண்ணியில் அவன் முகம் தெரிந்தது. அப்போ தான் அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அவனும் இனிமேல் இங்கே இருந்தா நமக்கு மரியாதை இல்லை என்று உணர்ந்து தன் வீட்டுக்கு கிளம்பி விட்டான் .

    எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர் வீட்டில் விருந்தாளியாக இருக்கக்கூடாது . அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு. அதை போல் நோய்வாய் பட்டால் 3 நாள் மருந்து சாப்பிட்டாலே குணம் ஆக வேண்டும். அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு .

    -மைதிலி

    ×