என் மலர்
பிரிட்டன்
- உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்
- பாதிரியார் டுப்மேனுக்கு பல ஊர்களில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது
கடந்த 2022 பிப்ரவரி மாதம், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் போரிட்டு வருகிறது.
இரு தரப்பிலும் உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் பலமாக ஏற்பட்டிருந்தும், போர் தீவிரமாக 710 நாட்களை கடந்து தொடர்கிறது.
ரஷியாவின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சுமார் 40 சதவீத மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்தன. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்
உதவிகள் கேட்டு அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை இயங்க செய்யவும் அமெரிக்க உதவியை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சாஸ்டன் (Sawston) கிராமம்.
சாஸ்டன் பகுதியில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர், 29 வயதான வில் லயான் டுப்மேன் (Will Lyon Tupman).
உக்ரைன் மக்கள் இருளில் அவதிப்படுவதை கேள்விப்பட்டு 2022லிருந்தே பாதிரியார் டுப்மேன், பாதி உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மெழுகுவர்த்திகளை சேகரிக்க தொடங்கினார்.
தங்கள் தேவாலயத்திலும் இருந்த பயன்படுத்தப்படாத மெழுகுவர்த்திகளையும் தனது சேகரிப்பில் இணைத்தார். மேலும், இவரது கோரிக்கைக்கு உதவ பலர் முன் வந்ததால், தங்கள் வீட்டில் இருந்த பாதி எரிந்த நிலையில் உள்ள மற்றும் உபயோகப்படுத்தாத மெழுகுவர்த்திகளையும் அவரிடம் வழங்கினர்.

இவையனைத்தையும் பாதிரியார் டுப்மேன், அங்குள்ள ஒரு மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையத்தில் கொடுத்து, உருக்கி, புது மெழுகுவர்த்திகளாக மாற்றினார். அந்த புது மெழுகுவர்த்திகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இந்த அரிய பணியை, பாதிரியார் டுப்மேன் தற்போது வரை தொடர்கிறார். இவரது முயற்சிக்கு அப்பகுதி மக்களிடம் இருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சர்ச்களிலில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
உக்ரைன் மக்கள் டுப்மேனின் இந்த பெரும் உதவியினால் பயனடைந்துள்ளதால், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
- 2022 அக்டோபரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானார்
- குடிநீர், தேநீர் மற்றும் கலோரி-இல்லா பானங்களை மட்டும் அருந்துகிறார் சுனக்
உணவில் கவனம் செலுத்தாமல் வாரம் முழுவதும் உழைத்து விட்டு, வார இறுதியில் விருப்பமான உணவு வகைகளை உண்பதும், ஓய்வெடுப்பதும் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் வழக்கம்.
ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இதற்கு விதிவிலக்காக திகழ்கிறார்.
2022 அக்டோபர் 25 அன்று இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் (43), தனது உடலாரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
வாரந்தோறும் 36 மணி நேரம் விரதம் இருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி தொடங்கி செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை. இக்காலகட்டத்தில் நான், குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துகிறேன்.
வாரம் ஒரு முறை விரதம் இருப்பது எனக்கு முக்கியமான சுய கட்டுப்பாடு.
எனக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் அதிக விருப்பம். இதன் மூலம் விரதம் இருந்த நாட்களைத் தவிர பிற நாட்களில் என் விருப்பம் போல் உண்ண முடிகிறது.
இவ்வாறு சுனக் கூறினார்.

மெக்சிகோ நாட்டின் கோக்கோ கோலா பானத்தை மிகவும் விரும்பி அருந்துபவர் சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவிய இந்தியாவின் கோடீசுவரர் என்ஆர் நாராயண மூர்த்தியின் மகள், அக்ஷதாவை சுனக் திருமணம் செய்தார்.
சுனக்-அக்ஷதா தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
உண்ணாவிரதம் இருப்பதால் உடலில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் அதிக கொழுப்பு குறைய சாத்தியக்கூறு உள்ளதை ஒப்பு கொள்ளும் மருத்துவர்கள், இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்தி கொள்ளும் முன் ஒவ்வொருவரும் தக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
- இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
- 10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வர்த்தக கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏடன் வளைகுடா பகுதியில்இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து இங்கிலாந்து கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். உடனே ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பலில் 22 இந்தியர்கள் உள்ளனர். கப்பலில் எரிந்த தீயை கடுமையாக போராடி இந்திய மீட்புக்குழுவினர் அணைத்தனர்.
10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது. எண்னை கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத் கூறும்போது, இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்த தீயை எதிர்த்து போராடும் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தீயை அணைக்க இந்திய கடற்படை எங்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி என்றார்.
- சூ வெஸ்ட்ஹெட்டிற்கு தற்போது 108 வயது ஆகிறது
- 5 வருடங்கள் கூட தான் உயிருடன் இருப்போம் என சூ நம்பவில்லை
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரம் ஹவுட்டன் லெ ஸ்ப்ரிங் (Houghton-le-Spring).
ஹவுட்டனில் வசித்து வருபவர் சூ வெஸ்ட்ஹெட் (Sue Westhead). வெஸ்ட்ஹெட்டிற்கு தற்போது 108 வயது ஆகிறது
தனது 12-ஆவது வயதில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 25-ஆவது வயதில் டயாலிசிஸ் செய்து கொள்ள தொடங்கினார்.
நீண்ட சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு நோய் தீரவில்லை.
1970களின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரகத்துறை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.
1973ல் வெஸ்ட்ஹெட்டின் தாயார் ஆன் மெட்கால்ஃப் (Ann Metcalf) சிறுநீரகம் தர முன்வந்ததையடுத்து முறையான பரிசோதனைக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்து தாயாரின் சிறுநீரகம், வெஸ்ட்ஹெட்டிற்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ராயல் விக்டோரியா மருத்துவமனையில் நடந்தது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அடுத்த 5 வருடங்களுக்கு கூட தான் உயிருடன் இருக்க முடியும் என வெஸ்ட்ஹெட் அப்போது நம்பவில்லை.
ஆனால், 50 வருடங்கள் கடந்தும், எந்தவிதமான சிறுநீரக சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார், வெஸ்ட்ஹெட்.
இந்த நிகழ்வு, தற்போது வெஸ்ட்ஹெட்டிற்கு உடல்நல மேற்பார்வையும் ஆலோசனையும் வழங்கி வரும் சண்டர்லேண்ட் ராயல் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.
மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்த வெஸ்ட்ஹெட்டுடன் உரையாடிய அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
- புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்
- மருமகள் கேத்ரீனுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது
பிரிட்டிஷ் அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (King Charles III).
2022 செப்டம்பர் மாதம் சார்லஸின் தாயார், அரசி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) காலமானார்.
அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 73.
சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அடுத்த வாரம் இந்நோய்க்கான சிகிச்சைக்காக அரசர் சார்லஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டது. தற்போது ஆபத்தில்லாத நிலையில் உள்ள இந்நோய்க்காக சிகிச்சை பெறுவார் என தெரிவித்த அந்த அறிக்கையில், சிகிச்சை முறைகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதை தொடர்ந்து, அரசர் சார்லஸ் பங்கேற்க இருந்த பல நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
50 வயதை கடந்த பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஒரு பொதுவான நோய் என்றது பிரிட்டன் சுகாதார துறை,

முன்னதாக, வேல்ஸ் இளவரசி (Princess of Wales) என அழைக்கப்படும் அரசர் சார்லஸின் மருமகள், 42 வயதாகும் கேத்ரீன் (Catherine) இரு வார சிகிச்சைக்காக லண்டன் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அரண்மனை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வயிற்று பகுதி நோய்க்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது என அறிவித்திருந்த அரண்மனை செய்தி குறிப்பு, நோய் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
- லண்டன் நகர மேயர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்
- மூவரை தவிர 8 பேர் மேயர் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்
இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உலகிலேயே அழகான நகரம் என பெயர் பெற்றது.
மே 2 அன்று லண்டன் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
4 வருட பதவிக்காலம் உள்ள லண்டன் மேயர் பதவிக்கு தற்போது மேயராக உள்ள சாதிக் கான் மீண்டும் 3-வது முறையாக போட்டியில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், சாதிக் கானை எதிர்த்து தருண் குலாடி (63) மற்றும் ஷ்யாம் பாடியா (62) எனும் இரு தொழிலதிபர்கள் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர்.
இந்த இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியா நான் பிறந்த பூமி. எனது வீடு லண்டன். தற்போதுள்ள மேயர், மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டார். மக்கள் நல்வாழ்விற்காக சுதந்திரமான தடையற்ற கொள்கைகளை மக்களின் ஆலோசனையுடன் செயல்படுத்தவே நான் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாக நிற்கிறேன். அனைவருக்குமான பாதுகாப்பான நகரமாக லண்டனை மாற்றுவேன்" என கூறினார் தருண்.
தருண், "நம்பிக்கை மற்றும் வளர்ச்சி" (trust and growth) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.
"தற்போது லண்டனின் நிலை என்னை வருத்தமடைய செய்கிறது. இந்த பெருநகரத்தில் வசிப்பவர்களின் வாழ்வு, செயலற்ற ஒரு அமைப்பால் பலியாவது என்னை கவலை கொள்ள செய்கிறது. வரப்போகும் நாட்களில் இரவும் பகலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அந்த சவால்களை எதிர் கொண்டு, உலகில் லண்டனுக்கு என முன்னர் இருந்து வந்து தற்போது இழக்கப்பட்டுள்ள முதல் இடத்தையும், தனிப்பட்ட மரியாதையையும் மீட்டு எடுப்பேன்" என கூறினார் ஷ்யாம்.
ஷ்யாம், "நம்பிக்கைக்கான தூதர்" (ambassador of hope) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.
2024 மார்ச் மாதம், இருவரும் தங்களை ஆதரிப்பவர்களின் கையெழுத்துடனும், டெபாசிட் தொகையுடனும் அதிகாரபூர்வமாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சாதிக் கான், தருண் மற்றும் ஷ்யாம் ஆகியோரை தவிர, 8 பேர் இந்த மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
1947ல் சுதந்திரம் பெறும் வரை இந்தியா, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமையாக ஆளப்பட்டு வந்தது. இன்று அந்நாட்டின் தலைநகரை ஆள இந்திய வம்சாவளியினர் தீவிரம் காட்டுவதை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.
- மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
- லண்டனில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
லண்டன்:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 8-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இந்தப் பயணத்தின்போது இங்கிலாந்து ராணுவ மந்திரி கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூனுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்.
கடந்த 22 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இங்கிலாந்து சென்றடைந்தார்.
- கடந்த 22 ஆண்டில் எந்த பாதுகாப்பு மந்திரியும் இங்கிலாந்து சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று இங்கிலாந்து சென்றடைந்தார். லண்டன் விமான நிலையம் வந்த ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் அந்நாட்டு பாதுகாப்புச் செயலருடன் விரிவான சந்திப்பு நடத்துகிறார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆண்டில் எந்த இந்திய பாதுகாப்பு அமைச்சரும் இங்கிலாந்துக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பேரா. மைக்கேல் மர்மாட், இங்கிலாந்தின் புகழ் பெற்ற "ஸர்" பட்டம் பெற்றவர்
- தங்களை காக்க போதுமான வசதி இல்லாததால் 10,62,334 பேர் உயிரிழந்துள்ளனர்
பல்வேறு உயர்கல்வி ஆராய்ச்சிகளுக்காக செயல்படும் பல்கலைக்கழகமான யுசிஎல் (UCL) எனும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளது.
"ஸர்" (Sir) பட்டம் பெற்ற பேரா. மைக்கேல் மர்மாட் (Prof. Sir Michael Marmot) தலைமையில் "இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஈக்விடி" எனும் உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் இங்கு செயல்படுகிறது.
இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து பேரா. மைக்கேல் பல தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் அகாலமாக உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின் சிக்கன நடவடிக்கைகள், கோவிட் பெருந்தொற்று ஆகியவையே மரணத்திற்கு காரணமாக இருந்தது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏழை மக்கள் புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற நோய்களில் இருந்து தங்களை காத்து கொள்ள முடியாமல் இறக்கின்றனர்.
2011லிருந்து 2019 வரையிலான காலத்தில் 10,62,334 பேர் சிகிச்சை பெற தேவையான பொருளாதார வசதி இல்லாததால் அகாலமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் பொருளாதார ரீதியில் வளமையான 10 சதவீதம் பேர் வசிக்கும் இடங்களில் வாழ்ந்திருந்தால் அகால மரணம் ஏற்பட்டிருக்காது.
2020ல் மட்டும் 1,51,615 அகால மரணங்கள் நிகழ்ந்தன. இதில் பெரும்பாலானவை கோவிட் பெருந்தொற்றால் விளைந்தவை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேரா. மைக்கேல் மர்மாட், "ஏழ்மையாகவும் சுகாதாரமற்றதாகவும் நம் நாடு மாறி வருகிறது. இங்கு பணக்காரகர்ளால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடிகிறது. தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; ஆனால், வசதி குறைவால் அவர்களால் தங்களை காத்து கொள்ள முடியாமல், அவர்களின் ஆயுட்காலம் குறைகிறது. இது அவர்கள் குற்றமில்லை. அரசியல்வாதிகள்தான் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை தர வேண்டும்; ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை" என தெரிவித்தார்.
"ஹெல்தி லைஃப் இயர்ஸ்" (healthy life years) எனப்படும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏதும் இன்றி மனிதர்கள் வாழும் காலகட்டத்தின் அளவு குறைந்து கொண்டே வருவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- திருடியவன் பணத்தை எடுத்து கொண்டு பையை டான் நதியில் வீசியுள்ளான்
- பையில் இருந்த கிரெடிட் கார்டில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டிருந்தது
வட கிழக்கு ஸ்காட்லேண்டு பகுதியில் உள்ள நகரம், அபர்டீன் (Aberdeen).
அபர்டீனில் வசிப்பவர் 81 வயதாகும் ஆட்ரி ஹே (Audrey Hay). சுமார் 30 வருடங்களுக்கு முன் இவரது பணியிடத்தில் இவரின் விலை உயர்ந்த கைப்பை திருடு போனது. பறி போன அவர் பையில் அப்போது சுமார் 200 பவுண்ட் பணம் இருந்தது.
ஆட்ரி காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினரின் தேடலில் கைப்பை கிடைக்கவில்லை.
திருடியவன் அந்த பையை டான் நதியில் (River Don) வீசி உள்ளான்.
கடந்த செவ்வாய் அன்று மெய்சி கூட்ஸ் (Maisie Coutts) எனும் 11-வயது சிறுமி தான் வளர்க்கும் நாயுடனும், பெற்றோருடனும் டான் நதிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்தன.
அதில் இருந்த சில கிரெடிட் கார்டுகளில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை தேட தொடங்கினார் அந்த சிறுமி.
தனது நீண்ட தேடலில் அப்பையின் உரிமையாளரான ஆட்ரியை கண்டு பிடித்தார் மெய்சி. உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்தார்.

இது குறித்து ஆட்ரி, "நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்" என தெரிவித்தார்.
"சமூக வலைதளங்களின் தாக்கமும், பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது" என மெய்சியின் தாயார் கூறினார்.
மெய்சியின் நேர்மைக்கும், உரிமையாளரிடம் பொருளை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- புது விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது
- புதிய விதிகளால் 1,40,000 பேர் வருவது குறைய கூடும் என அரசு கணித்துள்ளது
இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க அங்கு செல்லும் மாணவர்கள், இனி பெற்றோர் உட்பட தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்து செல்லவோ, நுழைந்த பிறகு அவர்களை அங்கு வரவழைத்து தங்களுடன் தங்க வைத்து கொள்ளவோ அனுமதி கிடையாது. முதுநிலை ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் அரசு நிதியுதவியுடன் பெறப்படும் பட்டங்கள் ஆகியவற்றை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்தியர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முனைந்துள்ளது.
புதிய விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
"மக்களுக்கு இங்கிலாந்து அரசு அளித்த வாக்குறுதியின்படி எல்லைகளை பலப்படுத்துவது, அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம். கல்வி கற்க "விசா" பெற்று கொண்டு வரும் பலர், பிறகு இங்கேயே பணி தேடி, இங்கிலாந்திலேயே தங்கி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிமுறை மூலம் சுமார் 1,40,000 பேர் இங்கிலாந்து வருவது குறைய கூடும்" என இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இன்றிலிருந்து இங்கிலாந்தில் கல்வி பயிலும் பெரும்பாலான அயல்நாட்டு மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது முடியாது. 2024 தொடங்கியதுமே இங்கிலாந்து மக்களுக்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம்" என பதிவிட்டுள்ளார்.
2019லிருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 930 சதவீதம் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- "இம்மர்சிவ் கேம்ஸ்" விளையாட்டுக்களில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்
- மெய்நிகர் தொழில்நுட்ப விளையாட்டுக்களில் எச்சரிக்கை தேவை என்றார் காவல் ஆணையர்
சமீப சில வருடங்களாக இணையதளத்தில், "விஆர்" (VR) எனப்படும் மெய்நிகர் உண்மை (Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்கள் விளையாடும் பல விளையாட்டுக்கள் பிரபலமடைந்துள்ளன.
வீட்டிற்கு வெளியே செல்லாமல் குழுந்தைகளால் விளையாட முடியும் என்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதற்கு தேவையான ஹெட்செட் போன்ற உபகரணங்களை வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர்.
மெடாவெர்ஸ் (Metaverse) எனப்படும் வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பத்தில், தொலைதூரத்தில் உள்ள ஒருவருடனோ அல்லது பலருடனோ, அல்லது ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாகவோ, குழந்தைகளால் விளையாட முடிகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் இதற்கான உபகரணங்களுடன் தனது வீட்டில் இருந்தபடியே "இம்மர்சிவ் கேம்ஸ்" (immersive games) எனப்படும் "மூழ்கடிக்கும் விளையாட்டு" வகைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்.
மெடா (Meta) நிறுவனத்தின் (முன்னர் ஃபேஸ்புக்) "ஹொரைசான் வேர்ல்ட்ஸ்" (Horizon Worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் "அவதார்" (avatar) எனப்படும் அவரை போன்றே தோற்றமுடைய மெய்நிகர் வடிவத்துடன், பல இடங்களில் இருந்து பலர் தங்கள் அவதார் உருவங்களுடன் விளையாடி வந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பிற அவதார்கள் (அதனை இயக்குபவர்களால்) அச்சிறுமியின் அவதார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது.
சிறுமி மீது நேரடியான பாலியல் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் மெய்நிகரில் நடைபெற்ற "கூட்டு பாலியல் தாக்குதல்" அச்சிறுமிக்கு உணர்வுபூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர், இங்கிலாந்து காவல்துறையிடம் இது குறித்து புகாரளித்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இவ்விளையாட்டு தளம் குறித்து முன்னரே இது போன்ற புகார்கள் சில முறை எழுப்பபட்டும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி (James Cleverly), "இது போன்ற தாக்குதல்களை குறைத்து மதிப்பிடாமல் தீவிரமாக நாம் பார்க்க வேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளார்.
"வேலி இல்லாத மெய்நிகர் விளையாட்டுகளில் தாக்குதலை நடத்த இரை தேடும் மிருகங்கள் போல் பல விஷமிகள் அதிகம் வர வாய்ப்புள்ளதால், இவற்றை தடுக்கும் விதமாக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என இங்கிலாந்து காவல் துறை தலைவர் "இயான் க்ரிஷ்லி" (Ian Critchley) தெரிவித்துள்ளார்.
வெளியில் விளையாட சென்றால் மட்டும்தான் ஆபத்து என எண்ணி வீட்டிற்கு உள்ளே குழந்தைகள், நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தும் போது அவர்களின் விளையாட்டுக்களை பெற்றோர் கண்காணிக்காமல் இருப்பது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.






