என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாம் உலகப் போர்"

    • கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
    • இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹாங் காங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    குவாரி பே (Quarry Bay) பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஆய்வில், இது 1.5 மீட்டர் நீளமும், 450 கிலோகிராம் எடையும் கொண்ட அமெரிக்க குண்டு என்று கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆண்டி சான் டின்-சு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு என்பதை உறுதி செய்துள்ளோம்.

    இதை செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,900 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,000 பேரை வெளியேற்றினோம்" என்று தெரிவித்தார்.

    வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் பல மணி நேரம் போராடி குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    அந்தத் தாக்குதல்களில் வெடிக்காமல் பூமியில் புதைந்துபோன குண்டுகள், இன்றும் கட்டுமானப் பணிகளின் போது அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டிலும், வான் சாய் பகுதியில் இதேபோன்ற ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஷ்விட்ஸ் முகாம்களில் ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தார்
    • யூத எதிர்ப்பு சிந்தனைகள் எக்ஸ் தளத்தில் குறைவு என்றார் மஸ்க்

    இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் அதிபர் அடால்ஃப் ஹிட்லர், அண்டையில் உள்ள போலந்து நாட்டை ஆக்கிரமித்தார்.

    யூத மதத்தினரை வெறுத்த ஹிட்லர், போலந்தில் 40க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கான யூதர்களை அடைத்து வைத்து, அவர்களை தனது படையினரை கொண்டு கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தார்.

    1945ல், "ஆஷ்விட்ஸ்" (Auschwitz camp) என அழைக்கப்படும் சித்திரவதை முகாம்களில், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து, ஹிட்லர் உயிரிழந்து, அமெரிக்க-இங்கிலாந்து படைகள் வெற்றி பெற்ற காலத்திலிருந்து, நாஜி படையினரின் கொடுமைகளை உலகிற்கு உணர்த்தும் விதமாக சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் போலந்து நாட்டில் இவற்றை காண வருவது வழக்கம்.

    இந்நிலையில் ,உலகின் நம்பர் 1 கோடீசுவரரரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க், போலந்து சென்றார். 


    தனது மகனுடன் அங்கு சென்றிருந்த மஸ்க், ஆஷ்விட்ஸ் முகாம்களை பார்வையிட்டு, கொல்லப்பட்ட யூதர்களுக்கான நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    தெற்கு போலந்தில் கிராகோ (Krakow) பகுதியில் ஐரோப்பிய யூதர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றினார் மஸ்க்.


    அப்போது பேசும் போது மஸ்க், "மனிதர்கள், சக மனிதர்களுக்கு இப்படி ஒரு கொடுமையை செய்ய முடியும் என்பது மிகவும் சோகமாக இருக்கிறது. துயரத்தில் என் மனம் நெகிழ்ந்து விட்டது. நேரிடையாக நீங்கள் இந்த இடத்திற்கு வந்து பார்த்தால் உங்கள் இதயம் இன்னும் கனத்து விடும். யூதர்களுக்கு எதிரான கருத்துகள் எக்ஸ் இணைய தளத்தில் குறைவு" என தெரிவித்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு குறித்து ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் நடத்தும் கருத்தரங்கில் மஸ்க் கலந்து கொள்கிறார்.

    • மண்வெட்டியினால் தோண்டும் போது அது ஒரு பொருளின் மீது இடித்தது
    • 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் வந்திறங்கினர்

    இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள டேவன் (Devon) பிராந்தியத்தில் உள்ளது பிளைமவுத் (Plymouth) துறைமுக நகரம்.

    இந்நகரின் செயின்ட் மைக்கேல் அவென்யு (St. Michael Avenue) பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது மகளின் வீட்டின் பிற்பகுதியை விரிவாக்கம் செய்ய கட்டுமான நிபுணருடன் ஆலோசித்து பணிகளை தொடங்கினார்.

    அப்போது மண்வெட்டியினால் அங்கு தோண்டும் போது ஒரு பொருளின் மீது அது இடித்தது. உடனடியாக வெளியே எடுக்க முடியாத அளவிற்கு பெரிதாக இருந்த அந்த பொருளை நீண்ட முயற்சிக்கு பிறகே அவர்களால் காண முடிந்து.

    தனது மனைவியின் ஆலோசனையின் பேரில், பெரிய உலோக உருண்டை வடிவிலான அந்த பொருளின் புகைப்படங்களை அந்த உரிமையாளர், காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

    சுமார் 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், அவர் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் வந்திறங்கினர்.


    அந்த பொருள் ஒரு "வெடிகுண்டு" என்றும் அதை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளுக்காக வந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்த வீட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள அனைவரையும் தொலைதூரம் போகச் சொல்லி உத்தரவிட்டனர். அப்பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.

    அந்த உலோக பொருள் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளில் ஒன்று என்பதால், அதனை அங்கேயே வெடிக்க முயன்றால் பல வீடுகள் நாசமடையலாம் என்பதால் நீண்ட ஆலோசனைக்கு பிறகு அந்த வெடிகுண்டை அந்த தோட்டத்தில் இருந்து, மிக பத்திரமாக வெளியே எடுத்து, ராணுவ வாகனத்தில் ஏற்றி, சுற்றி ஏராளமான மணல் மூட்டைகளை அடுக்கி, ஆட்கள் நடமாட்டமில்லாத சாலைகளின் வழியே எடுத்து சென்று, பின் ஒரு பெரிய காற்றடைத்த ரப்பர் படகில் ஏற்றி, கடலில் நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


    வெடிகுண்டு நிபுணர்களின் மேற்பார்வையில், எந்த பாதிப்புமின்றி அந்த குண்டு கடலில் வெடிக்க செய்யப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு வெடித்தால் அதன் தாக்கம் 4,300 கட்டிடங்களுக்கும், பொதுமக்களில் 10,320 பேருக்கும் இருந்திருக்கும் என பிளைமவுத் நகர கவுன்சில் தெரிவித்தது.

    500 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு இரண்டாம் உலக போரில் இங்கிலாந்தில் வீசப்பட்டு வெடிக்காத பல குண்டுகளில் ஒன்று என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

    ×