என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • இம்ரான் கான் வீட்டில் நடந்த சோதனையில் அங்கிருந்த ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
    • பயங்கரவாத அமைப்பாக இருக்கும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கைற்பற்றப்பட்ட ஆயுதங்களும், குண்டுகளும் போதுமான ஆதாரமாக உள்ளது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால் அவரை கைது செய்து நேரில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜரானார். அந்த சமயம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரது வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், இம்ரான் கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமான தொணடர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏராளமான இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    போலீசார் இம்ரான் கான் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது தலைமையிலான கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இம்ரான் கான் வீட்டில் நடந்த சோதனையில் அங்கிருந்த ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. பயங்கரவாத அமைப்பாக இருக்கும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கைற்பற்றப்பட்ட ஆயுதங்களும், குண்டுகளும் போதுமான ஆதாரமாக உள்ளது. இதனால் அக்கட்சிக்கு தடை விதிப்பது குறித்து சட்டக் குழுவினருடன் அரசு ஆலோசனை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் எனது வீட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து சோதனை நடத்தியதற்காகவும், தொணடர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் பஞ்சாப் மாகாண போலீஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் கான் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    • முதலில் ஆடிய லாகூர் அணி 200 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய முல்தான் அணி 199 ரன்கள் எடுத்து தோற்றது.

    லாகூர்:

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. அப்துலா ஷபிக் 40 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷஹீன் அப்ரிடி 15 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி களமிறங்கியது. ரூசோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் முகமது ரிஸ்வான் 34 ரன்னும், குஷ்தில் ஷா 25 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில் முல்தான் சுல்தான்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் போராடி தோற்றது.

    இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    தொடர் நாயகன் விருது இசானுல்லாவுக்கும், ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கும் வழங்கப்பட்டது.

    • இம்ரான் கானை கைது செய்ய போலீசார் முயன்றதால் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திரண்டனர்
    • போலீசாருக்கும் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசு கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். இதனால் அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் பரிசுப்பொருட்கள் முறைகேடு வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இன்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் போலீசார் அதிரடியாக பேரிகார்டுகளை அகற்றிவிட்டு இம்ரான் கான் வீட்டின் முன் திரண்டிருந்த ஆதரவாளர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் நீதிமன்ற வளாகத்திலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மோதல் ஏற்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜரானார் இம்ரான் கான். அப்போது இம்ரான் கானின் கைது வாரண்டை ரத்து செய்த நீதிமன்றம், அவரை வீட்டிற்கு செல்ல அனுமதி அளித்தது. வழக்கு விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

    • போலீசாருக்கும், இம்ரான்கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
    • பரிசு பொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் இன்று இஸ்லாமாபாத் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசு கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இம்ரான் கான் தாக்கல் செய்து இருந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த வழக்குகள் மட்டுமின்றி பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த 2 வழக்குகளிலும் இம்ரான் கானை தங்கள் முன்பு போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டு ஜாமீனில் வெளியில் வரமுடியாத கைது வாரண்டை சில நாட்களுக்கு முன்பு பிறப்பித்தது.

    இதையடுத்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது போலீசாருக்கும், இம்ரான்கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த நிலையில் கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்து இருந்த மனுவை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு இந்த கைது உத்தரவை நிறுத்தி வைக்கு மாறு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டனர்.

    இதற்கிடையில் நேற்று இம்ரான் கான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அங்கு அவர் மீது தொடரப்பட்டுள்ள 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பரிசு பொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் இன்று இஸ்லாமாபாத் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

    இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இம்ரானை காண அவரது தலைமையிலான தெக்ரீக் -இ-இன்சாப்கட்சி தொண்டர்கள் கோர்ட்டு முன்பு திரண்டு இருந்தனர்.

    • இம்ரான்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கைது செய்வதற்கான தடை தற்காலிகமாக நீட்டிப்பு.
    • பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

    ஆனால் அவர் வழக்கில் ஆஜராகவில்லை. இதனால் நேற்று முன்தினம் இம்ரான்கானை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக களமிறங்கினர்.

    அதன்படி நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனையறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏற்பட்ட வன்முறையில் அவரது ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அதில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர்.

    இம்ரான்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீட்டித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இம்ரான்கான், அவரது நெருங்கிய உதவியாளர் ஷா மெக்மூத் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
    • பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு அடுத்த மாதம் (ஏப்ரல்) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் கூட்டத்தில் ஆசிப் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாகவும், இதனால் மந்திரி ஆசிப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • இம்ரான்கானை கைது செய்ய வந்திருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 54 போலீசார் காயம் அடைந்தனர்.
    • சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் கடந்த 2018- ம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள் அளித்த பரிசு பொருட்களை மலிவு விலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் பல முறை இம்ரான் கான் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் பொதுக்கூட்டம் ஒன்றில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் அவருக்கு பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் பரிசு பொருட்கள் வழக்கில் வருகிற 18- ந்தேதியும், நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 21- ந்தேதியும் இம்ரான்கானை போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இன்று காலை வரை அவரை கைது செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இம்ரான் கானை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியான தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் லாகூரில் உள்ள அவரது வீடு முன்பு திரண்டனர்.

    தங்கள் கட்சி தலைவரை கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இம்ரான்கானை கைது செய்ய வந்திருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 54 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து வன்முறையில் ஈடுபடும் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் மாகாண போலீஸ் ஐ.ஜி. உஸ்மான் அன்வர் கூறியதாவது:-

    இம்ரான்கானை கைது செய்ய முயன்றபோது அதனை தடுக்கும் வகையில் அவரது கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் ,பொது சொத்துகளை அவர்கள் தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

    சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளைவைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம்.
    • நேற்று மாலை முதல் இம்ரான்கான் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 2 வழக்குகளில் பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலகத்தில் கொடுக்காமல் அதை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    அதே போல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த பேரணியில் நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய வழக்கிலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான்கானை நாளை வரை கைது செய்ய தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து இம்ரான் கானை கைது செய்ய லாகூரில் ஜமான் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு இஸ்லாமாபாத் போலீசார் சென்றனர். அவர்கள் இம்ரான்கான் வீட்டுக்கு முன்பு குவிந்து இருந்தனர்.

    இதற்கிடையே இம்ரான் கான் தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம். பாகிஸ்தான் மக்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போரிட வேண்டும்.

    என்னை கைது செய்துவிட்டால் நாடு தூங்கிவிடும் என்று அவர்கள் (அரசு) நினைக்கிறார்கள். அதை நீங்கள் தவறு என்று நிரூபிக்க வேண்டும். நான் இல்லாமல் கூட உங்களால் போராட முடியும் என்று நிரூபியுங்கள். கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறார். நான் உங்களுக்காக (மக்கள்) வாழ்நாள் முழுவதும் போராடுவேன் என்று தெரிவித்தார்.

    இம்ரான்கானை போலீசார் கைது செய்வதை தடுக்க அவரது தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டுக்கு முன்பு திரண்டிருந்தனர். அவர்கள் இம்ரான் கான் வீட்டை சுற்றி நின்றனர்.

    அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்லாமல் அங் கேயே இருந்தனர். திடீரென்று போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. டயர் உள்ளிட்ட பொருட்களை சாலையில் போட்டு எரித்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து இம்ரான் கான் கட்சியினர் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடியடியும் நடத்தி னர்.

    இதனால் அப்பகுதி போர்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதலில் கட்சி தொண்டர்கள் பலர் காயம் அடந்தனர். அதே போல் டி.ஐ.ஜி. உள்பட போலீசாரும் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர். சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு வன்முறை கட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் தொண்டர்கள் பலர் அப்பகுதியிலேயே சுற்றி வருகிறார்கள்.

    இதையடுத்து இம்ரான் கான் வீடு உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. போலீசார் 8 மணி நேரம் போராடியும் இம்ரான்கானை கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா, பைசலாபாத் உள்ளிட்ட நகரங்களில் நேற்று மாலை முதல் இம்ரான்கான் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளை மறித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • இஸ்லாமாபாத் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இம்ரான்கானுக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார்.
    • சிறப்பு போலீஸ் படையினர் இம்ரான்கான் வீடு இருக்கும் சாமர் பார்சி பகுதிக்கு சென்று அவரை கைது செய்ய திட்டமிட்டனர்.
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கான் விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கோர்ட்டு விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே இவ்வழக்கு நேற்று இஸ்லாமாபாத் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இம்ரான்கானுக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். அவரை கைது செய்து வருகிற 29ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் லாகூரில் இன்று தேர்தல் பேரணி இம்ரான்கான் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இம்ரான் கானை இன்று கைது செய்ய இஸ்லாமாபாத் போலீசார் ஹெலிகாப்டர் மூலம் லாகூரில் உள்ள அவரது வீடு அருகே உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.

    அங்கு சிறப்பு போலீஸ் படையினர் இம்ரான்கான் வீடு இருக்கும் சாமர் பார்சி பகுதிக்கு சென்று அவரை கைது செய்ய திட்டமிட்டனர்.

    இந்தநிலையில் இம்ரான் கானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட் பிடிவாரண்ட்டை ரத்து செய்து இம்ரான் கானை வருகிற 16ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • பயணியின் நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
    • கராச்சி விமான நிலையத்தில் பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

    கராச்சி:

    டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்றபோது விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    அவரது நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. முன்னதாக அங்கு அந்த பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

    விமானம் இறங்கியதும் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பயணியை சோதித்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • தொலைக்காட்சி வாயிலாக தொண்டர்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
    • அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதில், பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்ற வழக்கில் லாகூர் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை கடந்த மாத இறுதியில் பிறப்பித்தது.

    அதை தொடர்ந்து இம்ரான்கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவர் தலைமறைவானார்.

    எனினும் அதன் பின்னர் தொலைக்காட்சி வாயிலாக தொண்டர்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    அதைத்தொடர்ந்து பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, இந்த வழக்கில் குவெட்டா நகர கோர்ட்டு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது.

    அதனை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் பலூசிஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பலுசிஸ்தான் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

    • சர்வதேச எல்லைப் பகுதியில் அவர் ஊடுருவுவதை பெரோஸ்பூர் செக்டாரில் இருந்து கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அவரை திரும்பி செல்ல எச்சரித்தனர்.
    • முதல்கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானில் உள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநில எல்லை வழியாக மர்மமான முறையில் ஒரு நபர் இந்தியாவுக்குள் இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்தார். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர் ஊடுருவுவதை பெரோஸ்பூர் செக்டாரில் இருந்து கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அவரை திரும்பி செல்ல எச்சரித்தனர். அந்த நபர் தொடர்ந்து முன்னேறி வந்ததால் அவரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானில் உள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×