என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.
    • இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ் தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் வசம் உள்ள மேற்குகரை பகுதியில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் மதவழிபாட்டுத்தலம் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேலியர்கள் பலியானார்கள். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

    இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா முனைபகுதியில் இன்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.

    இந்நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் ராக்கெட்டுகளை ஏவினர். சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் வழிமறித்து அழித்தது. தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இஸ்ரேலில் மத வழிபாட்டு தலம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் காசா முனை பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.

    • ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பங்கேற்றனர்.
    • ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் ஒரு மகத்தான மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார்.

    ஹைஃபா:

    இஸ்ரேலிய முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உள்ளது. டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உள்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைஃபா நகரத்தை வளர்ச்சி அடைய செய்ய உள்ளதாக அதானி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

    ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அதானி, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். துறைமுகத்தில் ரியல் எஸ்டேட்டை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.

    அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை கணிசமாக மேம்படுத்தும் என்றும் கூறினார்.

    ஹைஃபா துறைமுகமானது சரக்கு கப்பல்களை கையாளும் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். சுற்றுலா பயணக் கப்பல்களை அனுப்புவதில் மிகப்பெரிய துறைமுகமாக விளங்குகிறது.

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க், அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டது. இந்த விவாகரம் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்த, அதானி குழும பங்குகள் சரியத் தொடங்கின. இந்த சரிவுக்கு மத்தியில் அதானி குழுமம் புதிய துறைமுகத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெருசலேம் ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்தார்.
    • அதில் எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    மேற்கு கரையின் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படை கடந்த செவ்வாய்கிழமை தேடுதல்வேட்டை நடத்தியது. இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் பாலஸ்தீன ஆயுதக்குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் - மேற்குகரை இடையே பதற்றம் அதிரித்தது.

    இதற்கிடையே, இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த 21 வயது பாலஸ்தீனியர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 42 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறினர். இந்த தாக்குதல் சம்பவங்களால் இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலின் ஜெருசலேமில் பாலஸ்தீனியர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஜெருசலேம் ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதலுக்கான எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜெருசலேம் ஜெப ஆலயத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை ஏற்கனவே கைது செய்யத் தொடங்கியுள்ளோம். யார் நம்மை காயப்படுத்த முயன்றாலும் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும் நாங்கள் காயப்படுத்துவோம் என தெரிவித்தார்.

    • இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக மூன்றாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றார்.

    இஸ்ரேலில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும்- யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது.

    இந்நிலையில் நடந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட கூட்டணிக்கு 51 இடங்கள் மட்டுமே பெற்றது.

    நெதன்யாகுவின் லிகுட் கட்சி சுமார் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம், பெரும்பான்மையுடன் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 120 உறுப்பினர்களில் 63 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக ஆறாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றார்.

    • வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
    • சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி அவர்களை கைது செய்ய இஸ்ரேல் ராணுவம் அங்கு தேடுல் வேட்டையில் ஈடுபட்டது.

    அப்போது அங்குள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் வீரர்கள் அவர்களை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    அப்போது இஸ்ரேல் வீரர்கள் சுட்டதில் ஒரு வீட்டில் இருந்த 16 வயது பாலஸ்தீன சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவள் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தாள். இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுமி உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் தொடர்ந்து விசாரணை நடத்தும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

    • குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
    • இந்த தாக்குதலை பாலஸ்தீன போராளிகள் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜெருசலேம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பகைமை நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கு இடையில் மோதல் நீடிக்கிறது. எனினும் அந்த 2 பகுதிகளும் தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் இஸ்ரேலியர்களை குறிவைத்து கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    அப்படி தாக்குதல்களில் ஈடுபடும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.

    அதுமட்டும் இன்றி மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் பதுங்கியிருக்கும் போராளிகளை பிடிப்பதற்காக நடத்தப்படும் தேடுதல் வேட்டையின்போது அப்பாவி பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இந்த மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை மற்றும் ஜெருசலேமில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் ஜெருசலேம் நகரின் நுழைவுவாயிலில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை வழக்கம் போல் மக்கள் பலர் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

    பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். குண்டு வெடிப்பில் சிக்கி 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் குண்டு வெடிப்பு நடந்த பஸ் நிறுத்தத்துக்கு செல்லக்கூடிய சாலையை மூடி அந்த பகுதி முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    அதை தொடர்ந்து குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே ஜெருசலேம் நகரின் நுழைவுவாயிலில் குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அந்த நகரின் வடக்கு பகுதியில் ரமோட் என்கிற இடத்தில் உள்ள மற்றொரு பஸ் நிறுத்தத்தில் அடுத்த குண்டு வெடித்தது.

    இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 2 குண்டு வெடிப்புகளிலும் காயமடைந்த 21 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த இரட்டை குண்டு வெடிப்பு ஜெருசலேம் நகரை உலுக்கியது. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலை பாலஸ்தீன போராளிகள் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த ஆண்டு மேற்குக்கரை மற்றும் ஜெருசலேமில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் 19 இஸ்ரேலியர்களும், 130-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலில் கடந்த 4 ஆண்டுகளில் 5-வது முறையாக நேற்று பொதுத்தேர்தல் நடந்தது.
    • இதில் பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் இதுவாகும்.

    உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்டவரிசையில் காத்திருந்து ஜனநாயக கடைமையை ஆற்றினர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

    • தீபாவளிப் பண்டிகை நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
    • தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஜெருசலேம்:

    தீபாவளிப் பண்டிகை நாளை வெகு விமர்சையாக உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பாக ஹெர்சாக் வெளியிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்துச் செய்தி:

    தீபாவளி என்பது தீமையின் மீது நன்மையையும், இருளின் மீது ஒளியையும், அறியாமையின் மீது அறிவையும் வென்றெடுக்கும் பண்டிகையாகும்.

    ஜனாதிபதி முர்மு மற்றும் எங்கள் அன்பான இந்திய நண்பர்களுக்கு, இஸ்ரேல் மக்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோனும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிதுள்ளார்.

    • காஸாவில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து அழித்து வருகிறது.
    • எகிப்து தலையிட்டு அமைதியை நிலைநாட்டுவது குறித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    டெல் அவிவ்:

    காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலஸ்தீன போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உட்பட குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. காஸாவில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து அழித்து வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இதற்கிடையே எகிப்து தலையிட்டு அமைதியை நிலைநாட்டுவது குறித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

    • நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல்.
    • காசா போராளிகளின் முயற்சியை முறியடிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பேச்சு.

    இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் அடிக்கடி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. உயரமான கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து புகை வெளியேறும் காட்சி குறித்த வீடியோ வெளியானது. 


    தில் மூத்த போராளி உள்பட 10 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதல்கள் இஸ்லாமிய ஜிகாத் போராளிகளை குறி வைத்து நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. காசா மீதான தாக்குதலுக்கு பிறகு தேசிய தொலைக்காட்சி உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் யாசிர் லாபிட், தனது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

    காசாவில் இருந்து இஸ்ரேல் எல்லையை நோக்கிய எந்தவொரு தாக்குதல் முயற்சியையும் தமது அரசு முறியடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்களை கண்டு இஸ்ரேல் சும்மா இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • 2020-2021-ம் ஆண்டுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி திணரும் சூழ்நிலைக்கு உள்ளானது.
    • டெல்டா பிளஸ் வைரஸ் மனித குலத்தையே பந்தாடி விட்டது என்று சொல்லலாம்.

    கொரோனா தொற்று அச்சுறுத்தல் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவானபோது அது உலகையே முடக்கிப் போடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2020-2021-ம் ஆண்டுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி திணரும் சூழ்நிலைக்கு உள்ளானது.

    இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரசில் ஏற்பட்ட பிறழ்வுகள்தான். கொரோனா வைரஸ் எத்தகைய தன்மையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே அது மாற ஆரம்பித்துவிட்டது.

    ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ் என்று கொரோனா மாறிக் கொண்டே இருந்தது. இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் டெல்டா பிளஸ் வைரஸ் மனித குலத்தையே பந்தாடி விட்டது என்று சொல்லலாம்.

    அதன்பிறகும், கொரோனாவின் தாகம் தீரவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனா வைரஸ் பல்வேறு பிறழ்வுகளை சந்தித்து ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு சென்றது. தென் ஆப்பிரிக்கா நாடுகளில் முதன் முதலாக ஒமைக்ரான் தாக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

    அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியபோதே ஒமைக்ரான் 5 வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிந்தது. அதாவது பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4, பிஏ-5 ஆகிய 5 வகைகளாக ஒமைக்ரான் பரவியது. மிக குறுகிய காலத்திற்குள் உலகின் அனைத்து நாடுகளையும் ஒமைக்ரான் ஆக்கிரமித்தது.

    இதனால் ஏற்பட்ட மிகப்பெரிய நன்மை என்ன வென்றால் ஒமைக்ரான் ஆதிக்கம் பெருக பெருக டெல்டா பிளஸ் வைரசின் கொடூரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் வைரஸ்தான் ஆக்கிரமித்து இருக்கிறது.

    ஒமைக்ரான் வைரசாக கொரோனா மாறிய பிறகு அதன் ஆற்றல் குறைந்து போனது. பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும் அது மக்களை முடக்குவது மிக மிக குறைவாக உள்ளது. இதனால் ஒமைக்ரானை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

    இந்த நிலையில்தான் கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. தமிழகத்திலும் உஷாராக வேண்டிய நிலைக்கு செல்லும்படி கொரோனா துரத்திக்கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 15 ஆயிரத்துக்கு மேல் சென்றுவிட்டது. எனவே முகக்கவசமும், தடுப்பூசியும் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இந்தியாவில் மீண்டும் வேகம் எடுத்துள்ள ஒமைக்ரான் வைரஸ் பற்றி இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனாவின் புதிய வடிவமான பிஏ-2.75 என்ற வகை வைரஸ் நாடு முழுவதும் பரவி இருப்பதை கண்டுபிடித்தனர்.

    குறிப்பாக இந்தியாவில் 10 நகரங்களில் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் மிக மிக அதிகளவு இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் புதிய வகை ஒமைக்ரான் இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    இந்தியாவை தவிர இந்த புதிய வகை வைரஸ் மேலும் 7 நாடுகளில் பரவி இருப்பதை உலக சுகாதார மையம் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த புதிய பிஏ 2.75 வைரஸ் வேகம் எந்தளவுக்கு உள்ளது? அது மனிதர்களை தாக்கும்போது எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது எவ்வளவு காலம் நீடிக்கும் ஆற்றலுடன் இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பிஏ2.75 வகை வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரவில்லை என்றும், அது இந்தியாவில் தான் உருவானது என்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள். ஆனால் இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சமீரன் பாண்டா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'கொரோனா வைரசில் பிறழ்வுகள் ஏற்படுவது தற்போது மிக மிக சகஜமான ஒன்றாக உள்ளது. அடிக்கடி  கொரோனா வைரஸ் பிறழ்வு வந்து கொண்டே தான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை ஏற்க இயலாது' என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், 'இந்த புதிய வகை வைரசால்தான் தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கிறதா? என்பதை யும் உறுதிபடுத்த இயலாது' என்று கூறி விட்டார்.

    இஸ்ரேல் விஞ்ஞானிகளின் அறிக்கையால் இந்திய விஞ்ஞானிகள் புதிய வைரஸ் குறித்த அடுத்தக் கட்ட ஆய்வை தொடங்கியுள்ளனர்.

    • தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
    • காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். அதேபோல் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலை மேற்கொண்டது.

    காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள குடிமக்களை நோக்கி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு ஹமாஸ் ராணுவ சாவடிக்குள் உள்ள ஆயுத தளத்யுதைம், ஹமாசுக்கு சொந்தமான 3 ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியது என்று கூறியது.

    மேலும் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய ராக்கெட்டுகள், இஸ்ரேலிய வான் பாதுகாப்புகளால் இடை மறிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் ஹமாஸ் இயக்கத்தில் முக்கிய தளபதி ஒருவர் பலியானார்.

    ×