என் மலர்
சீனா
- சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2-வது காலாண்டில் 6.3 சதவீதமாக உள்ளது
- 16 முதல் 24 வயதிலான இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதம் அதிகரிப்பு
சீனாவின் இரண்டாவது காலண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையை அந்நாடு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, உள்நாட்டு உற்பத்தி 6.3% என உயர்ந்திருந்தாலும் பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்திருந்ததை விட இது குறைவு என தெரிகிறது.
அதே சமயம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஜூன் மாதத்திற்கான 16 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை 21.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், அனைவருக்குமான வேலைவாய்ப்பின்மை நகரங்களில் ஜூன் மாதம் 5.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
"சீனா ஒரு சிக்கலான புவிசார் அரசியல் பின்னணியில் மாறி வரும் பன்னாட்டு பொருளாதார சூழலை சந்தித்து வருகிறது என்றும் வேலைவாய்ப்பின்மை இன்னும் உயரலாம்; ஆனால் ஆகஸ்ட மாதத்திற்கு பிறகு குறையும்" என சீனாவின் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஃபூ லிங்ஹுய் தெரிவித்தார்.
சீனாவின் குறைந்து வரும் வேலைவாய்ப்பின்மை குறித்து கடந்த மே மாதம் கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கோவிட் காலத்திற்கு முன்பு 10% என இருந்த வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதம் 20.4% என இரட்டிப்பானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளைஞர்களுக்கு குறைந்தளவே அனுபவம் இருப்பதால், பொருளாதார சுழற்சிகள் நடைபெறும் போதெல்லாம் வேலைவாய்ப்பின்மையில் அவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். கல்லூரிகளிலிருந்து பெறும் திறமைகளுக்கும், தொழில்துறைக்கு தேவைப்படும் திறனுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருப்பதுதான் அடிப்படை காரணமாக அந்த அறிக்கை தெரிவித்திருந்தது குறிப்பத்தக்கது.
சீன பொருளாதாரத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என அந்நாடு கருதுவதால் கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு ராணுவம் உட்பட அரசாங்க நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க பல வழிமுறைகளை உறுதி செய்துள்ளது.
இவ்வருடம் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேல் (11.58 மில்லியன்) கல்லூரி படிப்பை முடிக்கும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை தேடி வெளிவர போகிறார்கள் என்பதால் பொருளாதார வல்லுனர்கள் சீனா இந்த நிலையை எதிர்கொள்ள எடுக்க போகும் நடவடிக்கைகளையும் அது எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பதையும் கூர்ந்து கவனிக்கின்றனர்.
- விசாரணையில், ஆசிரியை வாங் யுன், உணவில் கலந்த ரசாயனம்தான், குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.
- மரண தண்டனைக்கான உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் ரசாயனத்தை கலந்து ஒரு குழந்தையை கொன்று, 24 பேருக்கு பாதிப்பை உண்டாக்கிய முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேங் யுன் எனும் 39-வயது ஆசிரியை வாங் யுன், 2019ம் வருடம் மார்ச் மாதம், உடன் பணி செய்யும் ஒரு ஆசிரியருடன் ஏற்பட்ட ஒரு தகராறுக்கு பிறகு சோடியம் நைட்ரைட் எனும் ரசாயனத்தை வாங்கியுள்ளார். மறுநாள் அவர் பணிபுரிந்த மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வைக்கப்பட்ட பாத்திரங்களில் அதனை கலந்து விட்டார்.
அதன்பின்னர் ஜனவரி 2020 மாதவாக்கில் ஒரு குழந்தைக்கு பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் பலியானது. இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. விசாரணையில், ஆசிரியை வாங், உணவில் கலந்த ரசாயனம்தான், குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஹெனன் மாகாணத்தின் ஜியாவ்ஜுவோ நகர நீதிமன்றம் கடந்த 2020 ஜனவரி மாதம் அந்த ஆசிரியைக்கு மரண தண்டனை வழங்கியது. மரண தண்டனைக்கான உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று, அதே நீதிமன்றம் அவருக்கு தண்டனையை நிறைவேற்ற அவர் அடையாளத்தை உறுதி செய்தது. பின்பு அவர் தண்டனைக்கான மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சமீப காலமாக சீனாவின் மழலையர் பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறை மரணங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த தீர்ப்பை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்தனர்.
வருடாவருடம் ஆயிரக்கணக்கான குற்றவாளிகளுக்கு சீனா மரண தண்டனை வழங்கி வருவதாக மனித உரிமைகளுக்கான என்.ஜி.ஓ. அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவிக்கிறது.
- திரவ உந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்திய 2வது தனியார் சீன நிறுவனம் என்ற பெருமையை லேண்ட்ஸ்பேஸ் பெற்றுள்ளது.
- சீனாவில் தனியார் வணிக விண்வெளி நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன.
சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது.
ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 09:00 மணிக்கு வானில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்நிறுவனம், குறைந்தளவே மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு ஏவுகணை வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்துகிறது.
இதன் மூலம், மீத்தேன் வாயுவை எரிபொருளாக கொண்டு செலுத்தப்படும் விண்வெளி வாகனங்களை உருவாக்கும் போட்டியில் அமெரிக்காவின் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஜோஸின் நிறுவனமான புளூ ஆரிஜின் நிறுவனம் ஆகியவற்றை சீனா முந்தி விட்டது.
மேலும், திரவ உந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்திய இரண்டாவது தனியார் சீன நிறுவனம் என்ற பெருமையையும் லேண்ட்ஸ்பேஸ் பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், எரிபொருளை நிரப்பி மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சீனாவின் பீஜிங் டியான்பிங் டெக்னாலஜி எனும் நிறுவனம் ஒரு மண்ணெண்ணெய்-ஆக்சிஜன் ராக்கெட்டை ஏவி வெற்றி கண்டது.
2014ல் விண்வெளி துறையில் தனியார் முதலீட்டை சீன அரசாங்கம் அனுமதித்ததிலிருந்து சீன வணிக விண்வெளி நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன.
லேண்ட்ஸ்பேஸ் கடந்த டிசம்பர் மாதம் ஜுக்-2 ராக்கெட்டை ஏவும் முயற்சியில் இறங்கி தோல்வி கண்டது. தற்போது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
- இரண்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்
- இதற்கு முன் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி மாதிரிகளை சேகரித்துள்ளது
2030 வருடத்திற்குள் சந்திரனுக்கு இரண்டு ராக்கெட்டுகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டர் (Lander) வாகனத்தை சுமந்து செல்லும். மற்றொன்று விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் விண்கலத்தை ஏந்திச் செல்லும்.
விண்வெளி வீரர்களையும், லேண்டரையும் ஒன்றாக அனுப்பும் அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டை உருவாக்குவதில் சீனாவிற்கு நீண்டகாலமாக தொழில்நுட்ப தடை இருந்து வந்தது. இந்த இரட்டை ராக்கெட் திட்டம் மூலம் அது தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு ராக்கெட்டுகளும் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் விண்கலங்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், விண்வெளி வீரர்கள் லேண்டரில் பயணித்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவார்கள். பின்பு சந்திரனில் தங்கள் அறிவியல் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு, மாதிரிகளை சேகரித்த பிறகு, சுற்றுப்பாதையில் உள்ள விண்கலத்திற்கு விண்வெளி வீரர்கள் லேண்டர் மூலம் திரும்புவார்கள். அதில் பயணித்து அவர்கள் பூமிக்கு வருவார்கள்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் போட்டி சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் சந்திரனில் உள்ளதாக கருதப்படும் கனிம வளங்களை குறி வைக்கின்றன.
சந்திரனில் மனிதர்களுக்கான வாழ்விடங்களை நிறுவுவதன் மூலம், செவ்வாய் போன்ற பிற கிரகங்களுக்கு எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் பயணங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
இதுபோன்ற விண்வெளி பயணங்களில், அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா இன்னும் பின்தங்கியே உள்ளது.
சந்திரனில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் சீனாவின் லட்சிய நோக்கங்களை பூர்த்தி செய்ய, அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், "சூப்பர் ஹெவி லாங் மார்ச் 10" எனப்படும் ராக்கெட், விண்வெளி வீரர்களுக்கான ஒரு புதிய வடிவமைப்புடைய விண்கலம், சந்திரனில் பயணிக்கும் லேண்டர் மற்றும் விண்வெளி வீரர்களின் குழுவோடு சந்திரனில் நடமாடும் ரோவர் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர்.
2020-ல் சீனா மேற்கொண்ட ஆளில்லா விண்வெளி பயணத்தின் மூலம் சந்திரனில் இருந்து மாதிரிகளை கொண்டு வந்தது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு பிறகு சந்திரனிலிருந்து மாதிரிகளை கொண்டு வந்த 3-வது நாடாக சீனா ஆனது குறிப்பிடத்தக்கது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நர்சரியில் இறக்கிவிட்டுச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
- தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பொதுவாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில், 3 குழந்தைகளும் அடங்குவர். மீதமுள்ள பலியானவர்களில் ஒருவர் ஆசிரியர் என்றும் மற்றும் 2 பேர் பெற்றோர்கள் எனவும் கூறப்படுகிறது. இச்சமபவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இது தொடர்பாக வூ என்ற குடும்பப்பெயர் கொண்ட 25-வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 07:40 மணியளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நர்சரியில் இறக்கிவிட்டுச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பள்ளியில் கொல்லப்பட்ட நபர்களில் ஒருவரின் கார் இப்போது கத்திக்குத்து நிகழ்த்தியவரின் குழந்தையை மோதியுள்ளது என அடையாளம் தெரியாத சாட்சி ஒருவர் கூறியிருப்பதாக தெரிகிறது. வேறு எந்த விவரமும் கிடைக்கவில்லை.
சீனாவில் வன்முறை குற்றங்கள் அரிதாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக மழலையர் பள்ளி தாக்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் காயமடைந்தனர்.
2021ம் ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு நிகழ்வில், தெற்கு சீனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில், கத்தியால் தாக்கிய ஒரு நபரால், 37 மாணவர்களும், 2 பெரியவர்களும் காயமடைந்தனர்.
2021ல் குவாங்சி பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் ஒரு சம்பவத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பொதுவாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என இந்த சம்பவங்களை ஆராய்பவர்கள் கூறுகின்றனர். அனேகமாக இச்சம்பவங்களில் கத்தியே பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் பெரும்பாலான துப்பாக்கிகள் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு அவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
- டாகு எனும் பனிப்பாறையின் 5,382 சதுர அடி பகுதி போர்வையால் மூடப்பட்டுள்ளது
- பனிப்பாறையால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதும், நீர் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது
புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் நீராய் உருகுவது தொடர்ந்தால், சில தசாப்தங்களில் அவைகள் காணாமல் போய்விடும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில், வடமேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், வேகமாக உருகும் டாகு எனும் பனிப்பாறையின் 5,382 சதுர அடி பகுதியை சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி என கருதப்படும் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளை (geotextile blankets) பயன்படுத்தி ஒரு குழு மூடியது. இதன்மூலம் சூரியக்கதிரில் இருந்து பாதுகாக்கப்பட்டு, பாறைகள் வெப்பமடைவது குறைந்து உருகுதல் நிற்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மிதமான பனிப்பாறை (temperate glacier) வகையை சேர்ந்தது டாகு பனிப்பாறை. இது திரவ நீர் மற்றும் பனிப்பாறை பனி இரண்டையும் உள்ளடக்கியது. ஆனால் இது தற்போது உடனடியாக உருகும் நிலையை அடைந்துவிட்டது. ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாங் ஃபீடெங்க் என்பவரின் கருத்துப்படி, இது வழக்கமான ஆல்பைன் பனிப்பாறைகளை விட வேகமாக உருகுகிறது.
தற்போது நடைபெறும் இந்த முயற்சி, இதற்குமுன் ஒருமுறை சீன அறிவியல் அகாடமி ஆகஸ்ட் 2019-ல் அதே பனிப்பாறையின் 5382 சதுர அடி பரப்பளவில் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளால் மூடிய ஒரு வெற்றிகரமான பரிசோதனையின் தொடர்ச்சியாகும்.
அப்பொழுது இரண்டரை மாதங்களுக்கு பிறகு, பாதுகாப்பற்ற பகுதிகளைவிட போர்வையிடப்பட்ட பகுதியில் 3.2 அடி அளவிற்கு தடிமன் கொண்ட பனிக்கட்டி இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த முயற்சிக்கு தலைமை ஏற்றுள்ள நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியரான ஜு பின் (32 வயது) "பூமி வெப்பமடைந்து கொண்டே இருந்தால், இறுதியில் பனிப்பாறைகளை எப்போதுமே பாதுகாக்க வழியேதும் இல்லை" என எச்சரித்துள்ளார்.
ஜூ தலைமையிலான குழு இம்முறை 93%-க்கும் அதிகமான சூரிய ஒளியை தடுக்கும் திறனைக் கொண்டுள்ள ஒரு புதிய பொருளை கொண்டு தயாரிக்கப்பட்ட போர்வையால் இந்த பரிசோதனையை செய்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்காக, தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை நார்ச்சத்தான செல்லுலோஸ் அசிடேட் மூலம் இந்த போர்வையின் மேற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் குறித்து மற்றொரு ஆராய்ச்சியாளரான வாங் ஃபெய்டெங், "இந்த போர்வையால் மூடும் முயற்சி பனிப்பாறையின் மேற்பரப்பில் சூரிய கதிர்வீச்சு மற்றும் வெப்ப பரிமாற்றத்தை தடுக்கும் திறனை கொண்டிருக்கிறது. பெரும்பாலான ஆராய்ச்சிகள் இன்னும் பனிப்பாறை உருகுவதை நிறுத்துவதற்கான வழிகளைக் காட்டிலும் உருகுவதற்கான காரணங்களை அறிய கவனம் செலுத்துகின்றன" என தெரிவித்தார்.
இந்தத் திட்டமானது உள்ளூர் சுற்றுலாப் பணியகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
டாகு பனிப்பாறையினால் அதனை சுற்றி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதும், நீர் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.
இதுமட்டுமின்றி, திபெத் பீடபூமி (Tibetan platueau) பகுதியில் அமைந்துள்ள டாகுவின் கம்பீரமான காட்சிகள் ஆண்டுக்கு 2 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலை செய்யும் தொழிலுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது.
இப்போது புவி வெப்பமடைந்து பனிப்பாறை உருகுவது தொடர்ந்தால், இவை அனைத்தும் சில வருடங்களில் அழிந்து விடும் அபாயம் உள்ளது. உலகெங்கிலும் இதுபோன்ற முயற்சிகள் பல நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எடுத்துக்காட்டாக 2009 முதல் ரோன் பனிப்பாறை (Rhone Glacier) அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒவ்வொரு வசந்த காலத்திலும் தெற்கு சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளுக்கு சென்று அந்த இடத்தை வெள்ளை வெப்பப் போர்வைகளால் போர்த்துகின்றனர்.
2020-ல் இத்தாலியின் ப்ரெசேனா பனிப்பாறை (Presena Glacier) தார்பாலின் கொண்டு மறைக்கப்பட்டு பலனளிக்கப்பட்டது.
திபெத்திய பீடபூமி தற்போதிருக்கும் உயரத்தை அடைய பல கோடி வருடங்கள் ஆன நிலையில், கடந்த 50 வருடங்களில் 15%க்கும் அதிகமாக பனிப்பாறைகளை இழந்திருக்கின்றது. எனவே இது அவசியமான முயற்சி என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- கடல் உணவுகள், ஸ்காலப்ஸ் மற்றும் ஜப்பானிய சாக் போன்றவை சீன சந்தையில் பரவலாக பிரபலமாக உள்ளன.
- நீர் வெளியிடப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா கூறவில்லை.
ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டது.
அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக தென் கொரியா கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி அமைப்பு (IAEA), பெரும் சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ததில் போதுமான அளவு பாதுகாப்பு இருப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், தென் கொரியா, மே மாத இறுதியில் ஆலையில் தானாக செய்த ஆய்வின் அடிப்படையிலும், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அளித்த மதிப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் புகுஷிமா அணுமின் ஆலையிலிருந்து பசிபிக் பெருங்கடலில் சுமார் 10 லட்சம் டன்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியிடுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்று தென் கொரியா அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இந்த திட்டத்தற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் சுங்கத்துறை 10 ஜப்பானிய மாகாணங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, கதிரியக்கப் பொருட்களுக்கான சோதனையை சீனா அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், டோக்கியோ அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடத் தொடங்கிய பின்னர், புகுஷிமா மற்றும் தலைநகர் டோக்கியோ உட்பட ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளுக்கான தடையை நீட்டிப்பது உட்பட "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுப்பதாக சீனாவின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மேலும், 2011ம் ஆண்டில் புகுஷிமா அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு, சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜப்பானிய உணவு கதிரியக்க மாசுபாடு பிரச்சினைக்கு சீனாவின் பழக்கவழக்கங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன.
கடல் உணவுகள், ஸ்காலப்ஸ் மற்றும் ஜப்பானிய சாக் போன்றவை சீன சந்தையில் பரவலாக பிரபலமாக உள்ளன.
அணுசக்தி காரணமாக சில ஜப்பானிய பிராந்தியங்களிலிருந்து இறக்குமதியை கட்டுப்படுத்தும் பல நாடுகளில் இது இருந்தபோதிலும், கடந்த ஆண்டு ஜப்பானிய கடல் உணவு ஏற்றுமதியில் இது மிகப்பெரிய வாங்குபவராக இருந்தது.
ஜப்பானின் திட்டமிட்ட நீரை விடுவிப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவும் கடுமையாக விமர்சித்துள்ளது.
நீர் வெளியிடப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா கூறவில்லை, ஆனால் அதன் நடவடிக்கையின் "எல்லா விளைவுகளையும் தாங்க வேண்டும்" என்று ஜப்பானை எச்சரித்துள்ளது.
- அமெரிக்க கருவூலத்துறை மந்திரி சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
- OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது.
கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமான பணியை செய்வது இயங்குதளம் (Operating System). கம்ப்யூட்டர் பாகங்கள் உயிர்பெற்று இயங்குவதற்கு இயங்குதளம் அவசியமானது. இந்த தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் விண்டோஸ், மேக்ஓஎஸ் ஆகியவை ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில், சீன அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவுடனான போட்டி அதிகரித்துள்ள நேரத்தில், வெளிநாட்டு சார்பைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேனட் யெல்லன் சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த புதிய இயங்குதளம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஓபன்கிளின் (OpenKylin) என்று அழைக்கப்படும் இந்த இயங்குதளம், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய Windows மற்றும் MacOS அமைப்புகளுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகள் சில அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Windows மற்றும் MacOS அமைப்புகளின் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போன்று அல்லாமல், OpenKylin பயனர்கள் மென்பொருளின் குறியீடுகளை பெற முடியும். அத்துடன், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது. இது பிரபலமான ஓபன் சோர்ஸ் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கல்விமுறை அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் பல காரணங்களுக்காக, ஆண்கள் மற்றும் பெண்கள் தற்கொலை செய்து வருவது குறித்து உளவியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதிலும் 15லிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண்களின் தற்கொலைகளின் அளவு அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் இருக்கும் கடுமையான கல்வி முறையால் 35 வயதிற்குட்பட்டவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது.
சீன மாணவ-மாணவியர் எதிர்கொள்ளும் கல்விமுறை அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் நடத்திய ஒரு ஆய்வில், 2010 முதல் 2021 வரை 5-வயது முதல் 14-வயது வரையிலான குழந்தைகளின் தற்கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10% அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இதே போல், 15-வயது முதல் 24-வயது வரையிலான தனிநபர்களிடையே தற்கொலை விகிதம் 2017 வரை 7% சரிவைச் சந்தித்தது. ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20% உயர்வை எட்டியுள்ளது.
சீனாவில் வாழ்வில் ஒரு உயர்வான அந்தஸ்து பெற, கல்வியில் பெரும் வெற்றியடைய வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்களின் கவனம் முழுவதும் கல்வியில் நாட்டம் பெறுவதால் அவர்கள் மன நலனை பெரிதும் இது பாதித்துள்ளது. இதை களைய உடனடி கவனம் மற்றும் ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் தேவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் சீன அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். மேலும் ஆரம்பகால அறிகுறிகள் மூலம் தற்கொலை நடத்தையை உடனடியாகக் கண்டறியவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
சீனாவில் இளைஞர்கள் நீண்ட காலமாக கடுமையான போட்டிகளை எதிர்நோக்குகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் மற்றும் பட்டப்படிப்பு முடிந்ததும் நம்பிக்கைக்குரிய வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற விருப்பம் பெரிதாக மாறி அவர்களுக்கு பெருமளவு அழுத்தத்தை உண்டாக்குகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் காலம் 3 ஆண்டுகளாக நீடித்ததால், நாடு முழுவதும் ஏற்பட்ட முடக்கம் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
வழக்கமாகவே சீனாவில் கல்லூரி வளாகங்கள், மாணவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை கூட்டும் விதமாக, பல கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை தருகின்றன எனும் கருத்துகள் வலம் வந்தன.
இவையெல்லாவற்றையும் விட வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, இதர சவால்களையும் சேர்த்து, நம்பிக்கையின்மையை அதிகரிக்கச் செய்கிறது.
நாட்டின் வருங்கால தூண்கள் என கருதப்படும் இளம் வயதினர் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டு இறப்பதை தடுக்க, சீனா விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது.
- மாடியிலிருந்து குதிப்பதை விட தனது தாயைப் பார்த்தே அதிகம் பயந்தான் என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
- அவனை உள்ளே செல்லும்படி வற்புறுத்தவே அவனது தாயார் தாக்கியதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.
சீனாவில் சிறுவன் ஒருவன் தனது தாயிடம் இருந்து தப்பிக்க, 5வது மாடியில் இருந்து குதித்த துயர சம்பவம், சமூக ஊடகங்களில் பரவி பொதுமக்களின் கோபத்தை தூண்டியதுடன், நாட்டில் வலுவான 'குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்' தேவை என விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த மாதம், கிழக்கு சீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தில் நடந்திருக்கிறது.
வீட்டினுள் குச்சியால் தாக்கப்பட்ட ஒரு 6-வயது சிறுவன், குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வெளிப்புற ஏசி மெஷினில் இருந்து குதித்தான். வீடியோவை பதிவு செய்த நபரும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், 'சிறுவனை அடிக்க வேண்டாம்' என்று அந்த தாயிடம் கெஞ்சுவதும், ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே, அச்சிறுவன் திடீரென்று குதிப்பதையும் காண முடிகிறது.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், அதிர்ஷ்டவசமாக பிழைத்து விட்டான். ஆனால், அவன் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
சிறுவன் விழுந்து விடப்போகிறான் என்ற கவலையால், அவனை உள்ளே செல்லும்படி வற்புறுத்தவே அவனது தாயார் அவனை தாக்கியதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.
இந்த விளக்கம், மக்களின் கோபத்தை அதிகரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளிலிருந்து தெரிகிறது.
ஒரு சில பயனர்கள், இந்த விளக்கத்தை நம்ப மறுத்துள்ளனர். உண்மையை மூடி மறைக்கும் செயல் என சிலர் பதிவிட்டுள்ளனர்.
"மாடியிலிருந்து குதிப்பதை விட அவன் தனது தாயைப் பார்த்தே அதிகம் பயந்தான்" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
"அவனை அடிப்பதை நிறுத்து என மக்கள் கத்துகிறார்கள், ஆனால் அந்த தாயார் நிறுத்தவில்லை" என்று மற்றொரு பயனர் கூறியிருக்கிறார்.
அச்சிறுவனின் குடும்பப்பெயர் யான் என்றும் அவரது தந்தை வேறு நகரத்தில் வேலை செய்வதாகவும், யான் தனது தாயுடன் வசிப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
சீனாவின் பிரபல சமூக வலைதளமான "வெய்போ"வில் (Weibo) சிறுவன் கீழே விழும் வீடியோ 1 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் வைக்கப்பட்டுள்ளது.
- ஓட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது.
சீனாவில் பாம்பு கறி, தவளை கறி போன்றவற்றை உணவாக சாப்பிடுவதை கேள்வி பட்டிருக்கிறோம்.
தற்போது தைவானில் ஒரு ஓட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது. இது தொடர்பாக இனையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் வைக்கப்பட்டுள்ளது.
அந்த உணவு இளம் பெண்ணுக்கு பறிமாற படுகிறது. அதை அந்த பெண் ருசித்து சாப்பிடுவதோடு, இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்கிறார். காட்ஜில்லா ராமென் என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவு வகையின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,900 ஆகும்.
- இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை "ஒரு குழந்தை கொள்கை" நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் தொகை வல்லுநர்கள், இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டபோதே இதன் விளைவாக, சீனா ஒரு பணக்கார நாடாக ஆவதற்கு முன்பே, "வயதாகி விடும்" என்று எச்சரித்து வந்தனர். அது தற்போது உண்மையாகி வருகிறது.
ஏனெனில், அங்கு தற்போது இளம்வயது பணியாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும், கடன்பட்டுள்ள உள்ளூர் அரசாங்கங்கள் முதியோர்களை கவனிக்க இளம்வயதினர் அதிகம் இல்லாததால், அவர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் ட்ரிப்.காம் எனும் இணையதள வர்த்தக குழுமம், வரும் ஜூலை 1 முதல், தனது பணியாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதியை அறிவித்துள்ளது. அதாவது, பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ரூ.5,66,000 ($6,897.69) வழங்கப்போவதாக கூறியிருக்கிறது.
"அதிகளவு முதியோர்கள், குறைந்தளவு இளைஞர்கள்" என்ற ஒரு ஏற்றத்தாழ்வான நிலையுடன் போராடும் சீனாவில் இந்த நிலையை எதிர்கொள்ள செய்வதற்காக பெரிய தனியார் நிறுவனம் செய்யும் முதல் முயற்சியாகும்.
400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,14,000 ரொக்க மானியமாக வழங்குவதாகக் கூறியிருக்கிறது.
மேலும் இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரிப்.காம் நிர்வாகத் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறும்போது, "பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்து வருகிறேன். ஒரு சாதகமான கருவுறுதல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு, தனியார் நிறுவனங்களாலும் தங்கள் பங்களிப்பை செய்ய முடியும்" என்றார்.
சீனாவில் 2021ல் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 என இருந்த நிலையில், கடந்தாண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோதுகூட தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் எனவும் 2021ம் ஆண்டே அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை பராமரிப்பு செலவு மற்றும் கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பலவீனமான சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை இதற்கான காரணிகளாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார பின்னணியில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மக்கட்தொகை எவ்வாறு அமையும் என்றும் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.






