என் மலர்
செய்திகள்

ரஜினியை பற்றி திமுகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் வடலூரில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடந்தது.
மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் இளைஞரணி பொறுப்பை ஏற்கும் போது பல சவால்கள் இருந்தன. அவற்றை உங்கள் உதவியோடு முறியடித்தேன். நமக்கு 10 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க தலைமை இலக்காக நிர்ணயித்தது. ஆனால், 2 மாதத்தில் 8 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம்.
அந்த இலக்கை 50 லட்சமாக மாற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் உத்தரவிட்டுள்ளார். அந்த இலக்கை அடைவதற்கு என்னோடு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் இளைஞர்களை மட்டுமே புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தகுதியான இளைஞர்களை சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நமது பணி சிறப்பாக இருந்தது. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் 60 சதவீத வெற்றியை பெற்றுள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலில் இளைஞரணிக்கு குறிப்பிட்ட அளவே போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞரணியினருக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க கட்சி தலைமையிடம் வலியுறுத்துவோம்.
நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே ஒருவர் அரசியலுக்கு வருகிறேன்... வருகிறேன்... என்று சொன்னார். ஆனால், அவர் இன்று வரை வரவில்லை.
அவரை பற்றி தி.மு.க. வினர் யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் பாரதிய ஜனதா துணையுடன் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிட தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.






