என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.
    X
    தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.

    அதிமுக ஆட்சியில் ஒரு குறையையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    பூதக்கண்ணாடியை போட்டு பார்த்தால்கூட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குறையையும் மு.க.ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது என்று திருச்சி பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #LokSabhaElections2019 #ADMK

    திருச்சி:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து கந்தர்வக்கோட்டை, துவாக்குடி மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மூலம் நாடு வளர்ச்சி பெறவும், பாதுகாப்புடன் இருக்கவும் தகுதியான பிரதமர் தேவை என்பதை உணர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது.

    இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டாக்டர் இளங்கோவனுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள். நாம் இங்கு மெகா கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் வைகோவை கூறலாம்.

    வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனியாக கட்சி தொடங்கிவிட்டு, இன்று அவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அவர்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். மக்கள் மீது அக்கறையுள்ள கூட்டணி நமது கூட்டணி. கொள்கை உடைய கூட்டணி நமது கூட்டணி. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சேர்ந்துள்ள கூட்டணி. ஆனால் அவர்களின் கொள்கை இல்லாத கூட்டணி.

    இன்றைக்கு ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. அரசு என்ன செய்தது என்று பேசி வருகிறார். கடந்த 22-ந்தேதி முதல் இன்று 1-ந்தேதி வரை நான் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. அரசு எம். ஜி.ஆர். காலத்தில் என்ன செய்தது, ஜெயலலிதா காலத்தில் என்ன செய்தது ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் இந்த அரசு என்ன செய்தது என்பதை புள்ளி விவரங்களுடன் கூறி வருகிறேன்.

    ஆனாலும் அவர் அதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து பேசி வாக்காளர்களை குழப்பி வருகிறார். இந்த மெகா கூட்டணியை பார்த்து அவர் மிரண்டு போயுள்ளார். விரக்தியில் அவர் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசி வருகிறார்.

    நேற்று முன்தினம் கூட பிரசாரத்தில் ஒரு முதலமைச்சரான என்னை மண் புழு என்று பேசியுள்ளார். மண்புழு என்றைக்கும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மண்புழு இயற்கை உரமாக பயன்படும். மக்கள் என்ற செடியை வளர்க்க உரம் தேவைப்படுவது போல நான் மக்களுக்கு மண்புழுவாக பயன்பட விரும்புகிறேன்.

    செடி எப்படி வளர்ந்து வரும்போது பூச்சி தாக்குமோ அதுபோல பூச்சி வைரஸ் கிருமியாக தேர்தல் என்ற மருந்து மூலம் வைரஸ் பூச்சியான ஸ்டாலினை தேர்தல் மூலம் மக்கள் அகற்ற வேண்டும். அப்போது தான் நாடு செழிக்கும். தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அராஜகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை விமர்சிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். அவர் பூதக்கண்ணாடியை போட்டு பார்த்தால் கூட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குறையையும் கண்டு பிடிக்க முடியாது.

    தமிழக மக்களுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பு இல்லை என்பது தெரியும். 4 நாட்களுக்கு முன்பு கூட ஒரு கர்ப்பிணியை ரெயிலில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக பத்திரிகையில் செய்தி வந்தன. தனியார் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு தி.மு.க.வினர் பில் கொடுக்காமல் ஓட்டல் உரிமையாளரை அடித்து அராஜகத்தில் ஈடுபடுவதை கண்கூடாக பார்க்கிறோம்.

    பிரியாணி, புரோட்டா சாப்பிட்டுவிட்டு அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். அடுத்த நாள் தகராறு செய்த ஓட்டலுக்கு ஸ்டாலின் சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். இப்படி அராஜகத்தில் ஈடுபடுபவர்களை எல்லாம் அ.தி.மு.க. சட்டப்படி தண்டனை வழங்கி வருகிறது. தலைவர்கள் எவ்வழியோ அவ்வழியே தொண்டர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே இப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்களே? ஆளும் கட்சியாக வந்தால் என்ன செய்வார்கள். ஆளும் கட்சியாக அவர்கள் ஒருபோதும் வர முடியாது. ஆனால் அராஜகம் செய்யும் தி.மு.க.வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவுக்கு மரணத்தை கண்டுபிடிப்போம் என கூறி வருகிறார். யாரால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டார் என மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, துன்பப்பட்டு சித்தரவத்தைக்கு ஆளாகி தி.மு.க. அரக்கர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்த நிலையில் நிரபராதி என்று தீர்ப்பு வந்த பிறகும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இறக்க வைத்துவிட்டனர். தற்போது இது குறித்து நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இதுபற்றி நான் விரிவாக கூற முடியாது.

    ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, அவரின் ஆசி பெற்ற இந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் சரி பெண்கள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்களா? பெண்களை பற்றி பேச தி.மு.க.விற்கு தகுதி கிடையாது. இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். மத்தியில் நிலையான ஆட்சி வரவேண்டும் என்று தான் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். கடந்த 2011, 2016-ல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றி காட்டியது. ஆனால் தி.மு.க. என்றைக்கும் நிறைவேற்றியது கிடையாது.

    15 ஆண்டுகளாக மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்துள்ளது. மத்திய அரசிடம் ஏதாவது நிதி பெற்று திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. 15 ஆண்டு காலமாக தங்கள் குடும்பத்தினர் பதவிக்கு வர வேண்டும் என கூட்டணி வைத்திருந்தனர். ஆனால் மக்கள் பணி செய்ய தான் அ.தி.மு.க. அரசு உள்ளது.

    திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வரப்படும். முக்கொம்பில் ரூ.350 கோடியில் தடுப்பணை கட்ட அனுமதி வழங்கி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #EdappadiPalaniswami #MKStalin
    Next Story
    ×