search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 விக்கெட் வீழ்த்திய ஷமி
    X
    5 விக்கெட் வீழ்த்திய ஷமி

    ஷமி, ஜடேஜா அபார பந்துவீச்சு - 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஷமி, ஜடேஜா ஆகியோரின் அபார பந்துவீச்சினால் தென் ஆப்பிரிக்காவை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
     
    அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் எல்கர் 160 ரன்களும் டி காக் 111 ரன்களும் கேப்டன் டுபிலிசிஸ் 55 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். 

    முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 7 ரன்னில் அவுட்டானார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடினார். அரை சதமடித்த புஜாரா 81 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் விக்கெட் விழாமல் நின்றனர்.

    இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. விராட் கோலி 31 ரன்னுடனும், ரகானே 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து, 395 ரன்களை இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.

    4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா

    இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அஷ்வின் மற்றும் ஜடேஜா விரைவில் விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து இறங்கிய முன்னணி வீரர்களை மொகமது ஷமியும், ஜடேஜாவும் விரைவில் அவுட்டாக்கினர். ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதனால் நிலைகுலைந்த தென் ஆப்பிரிக்கா அணி 70 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

    கடைசி கட்டத்தில் முத்துசாமியும், டேன் பீட்டும் இணைந்து நிதானமாக ஆடினர். பீட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அப்போது தென் ஆப்பிரிக்கா 161 ரன்கள் எடுத்திருந்தது. இருவரும் இணைந்து 91 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்தியா சார்பில் மொகமது ஷமி 5 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
    Next Story
    ×