என் மலர்
விளையாட்டு
- 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
சென்னை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது.
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லை இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.
ஜூலை 31-ந்தேதி வரை இந்த போட்டிகள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
சேலம், கோவை ஆகிய இடங்களில் முதல் முறையாக டி.என்.பி.எல். போட்டிகள் நடக்கிறது. ஸ்டேடியம் புனரமைப்பு காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த முறை போட்டிகள் நடைபெறவில்லை.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், லைகா கோவை கிங்ஸ் , 2018-ம் ஆண்டு சாம்பியனான சீசம் மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
ஜூலை 24-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது.'எலிமினேட்டர்' ஆட்டம் 26-ந்தேதியும், 'குவாலிபையர்' ஆட்டம் 27-ந்தேதியும் சேலத்தில் நடக்கிறது. 'குவாலிபையர் 2' போட்டி 29-ந்தேதியும் இறுதிப்போட்டி 31-ந்தேதி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்திலும் நடக்கிறது.
இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும்.
நாளைய தொடர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. இதற்காக கவுசிக் காந்தி தலைமையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
நேற்றைய பயிற்சிக்கு பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் ஜெகதீசன், அலெக்சாண்டர் ஆகியோர் கூறுகையில், 'நெல்லையில் முதல் ஆட்டத்தில் விளையாடுவது உற்சாகம் அளிக்கிறது. கொரோனாவால் கடந்த ஆண்டு ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது என்றனர்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இந்த சீசனில் கார்த்திக், மதனகுமார் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஏற்கனவே வெற்றி பெற்ற அணி டி.என்.பி.எல். கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.என்.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் 14 பேர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆடினார்கள். இதனால் டி.என்.பி.எல். போட்டியில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஏலத்தில் அதிகமான வாய்ப்பு கிடைக்கும்.
- உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.
- முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பென் ஸ்டோக்ஸ் தனிமைத்தப்படுத்தப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுப்பட்டனர். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைத்தப்படுத்தப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டு முதல் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஜனவரி 2021-க்குப் பிறகு முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- மத்தியபிரதேச அணி இதுவரை ரஞ்சி கோப்பையை வென்றதில்லை.
- 42-வது முறையாக பட்டம் வெல்ல குறி வைத்துள்ள மும்பை அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.
பெங்களூரு:
38 அணிகள் பங்கேற்ற 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் (5 நாள்) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி கால்இறுதியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டை ஊதித்தள்ளியது. உத்தரபிரதேசத்துக்கு எதிரான அரைஇறுதியிலும் ரன்மழை பொழிந்த மும்பை அணி மொத்தம் 746 ரன்கள் முன்னிலையோடு 'டிரா' கண்டு இறுதிசுற்றுக்குள் நுழைந்தது. 42-வது முறையாக பட்டம் வெல்ல குறி வைத்துள்ள மும்பை அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.
மத்தியபிரதேச அணி இதுவரை ரஞ்சி கோப்பையை வென்றதில்லை. 1998-99-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் அந்த அணியினர் தங்களை தயார்படுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மத்தியபிரதேச அணிக்கு மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் பலமாகும். இவர் ஏற்கனவே மும்பை ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக இருந்து கோப்பையும் பெற்றுத் தந்துள்ளார். மேலும், தற்போது மும்பை அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் அமோல் முஜூம்தார், சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியின் கீழ் விளையாடி இருக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆவர். ஆக நன்கு பரிட்சயமான இவ்விரு பயிற்சியாளர்களில் யாருடைய யுக்தி எடுபடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது.
- இந்திய தரப்பில் தீப் கிரேஸ், நவ்னீத் கவுர், சோனிகா, வந்தனா ஆகியோர் கோல் அடித்தனர்.
ரோட்டர்டாம்:
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த போட்டியில் ஏற்கனவே அர்ஜென்டினா அணி (42 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்டது.
இந்திய அணி 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தியா-அமெரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாமில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது. இந்திய தரப்பில் தீப் கிரேஸ், நவ்னீத் கவுர், சோனிகா, வந்தனா ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 27 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. அமெரிக்கா 5 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் அமெரிக்காவை இன்று (இரவு 8 மணி) மீண்டும் இதே மைதானத்தில் சந்திக்கிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
- இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
கொழும்பு:
இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் இலங்கை 2-1 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 110 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த தனஞ்செய டி சில்வா அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார்.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், மேத்யூ குனமென் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணியின் அசலங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.
- 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த 105 வயது பாட்டி ராம்பாய் புதிய சாதனை படைத்தார்.
- எனது அடுத்த இலக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்பது.
வதேதரா:
இந்திய தேசிய தடகள சம்மேளனம் சார்பில் தேசிய முதியோர் தடகள போட்டிகள் குஜராத் மாநிலம் வதேதரா நகரில் நடந்தது.
இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த 105 வயது பாட்டி ராம்பாய் புதிய சாதனை படைத்தார். அவர் 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடி கடந்தார்.
இதுபோல கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ஒரு நிமிடம் 52.17 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 105 வயதில் தேசிய போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த பாட்டி ராம்பாய்க்கு மைதானத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சாதனை படைத்த பாட்டி ராம்பாய் கூறும்போது, எனது அடுத்த இலக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்பது. அதிலும் சாதனை படைத்து வெற்றி பெறுவேன். இதற்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன், என்றார்.
அவரிடம் இந்த வயதில் சாதனை படைத்த நீங்கள், இளம்வயதில் தடகள போட்டிகளில் பங்கேற்காதது ஏன்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிரித்தபடி பதில் அளித்த அவர் அந்த வயதில் என்னை யாரும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.பாட்டி ராம்பாயின் வெற்றி பற்றி அவரது பேத்தி ஷர்மிளா சங்வான் கூறியதாவது:-
பாட்டி ராம்பாய் 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி பிறந்தார். அரியானா மாநிலத்தை சேர்ந்த அவர் அங்குள்ள வயல் வெளிகளில் மட்டுமே ஓடி கொண்டிருந்தார். அதன்பின்பு தான் முதியோர் தடகள போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.
அதன்பின்பு மராட்டியம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்றார். இதில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
சைவ உணவு வகைகளை மட்டுமே பாட்டி சாப்பிடுவார். தினமும் 250 கிராம் நெய், 500 கிராம் தயிர் சாப்பிடுவார். மேலும் தினமும் 2 முறை அரை லிட்டர் பால் குடிப்பார்.
வயலில் வேலை செய்தாலும் தினமும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுவார். அந்த பயிற்சிதான் அவர் போட்டிகளில் வெற்றி பெற உதவியது, என்றார்.
வெற்றியை பெறவும், சாதனை படைக்கவும், வயது தடையில்லை என்பதை பாட்டி ராம்பாய் நிரூபித்துள்ளார். 105 வயதில் தடகள போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த ராம்பாய், முதியோருக்கு ஒரு முன்மாதிரியாகவும், தூண்டுதலாகவும் மாறியுள்ளார்.
- ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
- உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டிய வீரர்களில் ராகுல் திவேதியா ஒருவராக உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்று இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான அணி வருகிற 24- ந் தேதி அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது.
முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் டூப்ளின் நகரில் நடக்கிறது.
இந்திய அணியினரின் விளையாட்டு திறனை நேரில் பார்வையிடுவதற்காக, தேர்வு குழு தலைவரும், முன்னாள் வேகப்பந்து வீரருமான சேட்டன் சர்மாவும் வீரர்களோடு செல்கிறார்.
தென் ஆப்பிரிக்க தொடரில் ஆடிய ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இந்த தொடரில் ஆடவில்லை. காயத்தில் இருந்து குணமடையாததால் லோகேஷ் ராகுலும் ஆடவில்லை. இதனால் அயர்லாந்து பயணத்துக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திவேதியாவை சேர்த்து இருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராகுல் திவேதியா ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். அவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டிய வீரர்களில் ஒருவராக உள்ளார்.
இதனால் அயர்லாந்து தொடரில் அவரை சேர்த்து இருக்க வேண்டும். அணியில் கூடுதல் வீரராக ராகுல் திவேதியாவை சேர்த்து இருக்க வேண்டும் அவர் ஐ.பி.எல்.-லில் பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
- ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்றடைந்தனர்.
- இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்திய அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றியை பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.
கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்தபிறகு ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்றடைந்தனர். இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அணியுடன் பயிற்சியாளர் டிராவிட் ஆலோசனை நடத்தும் புகைப்பட காட்சிகளை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
- சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பின் புதிய தலைவராக இருப்பதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
- சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பின் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை லிசா ஸ்தலேகர் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பின் (FICA) புதிய தலைவராக ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தலேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
இவர் ஆஸ்திரேலியாவுக்காக 187 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் விக்ரம் சோலங்கிக்கு அடுத்தப்படியாக பதவியேற்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் நியோனில் நடைபெற்ற எப்ஐசிஎ செயற்குழு கூட்டத்தில் 42 வயதான அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் குறித்து அவர் கூறியதாவது:-
பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் தான் கௌரவமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பின் புதிய தலைவராக இருப்பதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
கிரிக்கெட் நிச்சயமாக உலகளாவிய விளையாட்டாக மாறி வருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் பல நாடுகள் விளையாடுகின்றன.
எங்கள் வீரர்களின் சார்பாக பணியாற்ற நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். குறிப்பாக ஐசிசியுடன் இணைந்து அனைத்து வீரர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும், எங்கள் விளையாட்டை இன்னும் சிறப்பாகச் செய்ய நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
- ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கான பந்துவீச்சு வரிசை தொடர்பாக எழும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.
பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் பந்து வீசிய விதத்தைப் பார்க்கும் போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் உறுதிப்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன். எனது புத்தகத்தில் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். புவனேஸ்வர் குமார் நிச்சயமாக எனது கருத்துப்படி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார்.
டி20 தொடரில் யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என்னும் பட்சத்தில் ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.
இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.
- கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது.
- காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.
போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார்.
இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார். இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின், மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றது ஊழியர் தான் என்றும் ரொனால்டோ அல்ல என்றும் முதல்கட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன. மேலும் இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன
- ஷோரிபுல் இஸ்லாம் வங்காளதேசத்திற்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- ஷோரிபுல் இஸ்லாம் 2021 ஏப்ரலில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காள தேச அணி 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 24-ந் தேதி செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாத வங்காள தேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் உடல் தகுதியுடன் இருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்கிறார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் வங்காளதேசத்திற்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2021 ஏப்ரலில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.






