என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- தினமும் ஜாக்கி கடும் உடல் பயிற்சிகளைச் செய்கிறார்.
- சுறுசுறுப்புடனும் தன் பணிகளைக் கவனித்து வரும் ஜாக்கியை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!
உலக மக்கள் அனைவரும் அறிந்து போற்றும் 'பரந்த மனம் கொண்ட துருதுருப்பானவன்' என்ற அர்த்தத்தைத் தரும் சான் காங் சாங்கை உங்களுக்குத் தெரியுமல்லவா?
தெரியாதா?
இப்படிச் சொன்னால் தெரியும் என்பீர்கள். உலகம் போற்றும் ஸ்டண்ட் - சூப்பர் - மெகா ஸ்டார் ஜாக்கிசானைத் தெரியுமா?
ஓ! தெரியுமே என்று சொல்லாதவர் யார்? சான் காங் சாங் என்பது அவரது இயற்பெயர்.
வறுமையில் வாடியதால், தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளையான ஜாக்கிசான் உலகையே தன் திறமையால் தத்து எடுத்துக் கொண்ட வரலாறை அறிய வேண்டியது அவசியம் தானே! இதோ பார்ப்போம் ஜாக்கிசானை இங்கு!
பிறப்பும் இளமையும்: ஜாக்கிசான் 1954 ஏப்ரல் 7-ம் தேதி ஹாங்காங்கின் பழைய கிரன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் பிறந்தார். வறுமையோ வறுமை! அப்படிப்பட்ட ஒரு ஏழை குடும்பம்.
சொல்லப் போனால் அவரது தாயார், பிரசவத்திற்கு உதவிய டாக்டருக்கே குழந்தை ஜாக்கியை 20 டாலருக்கு விற்க எண்ணினார்.
ஏழு வயது வரையில் பெற்றோர் அவரை வளர்த்தனர். பின்னர் அவரது சிபுவுக்கே (ஆசிரியர்) தத்துக் கொடுக்க முடிவு செய்தனர். ஒரு சொற்பத் தொகையைக் கொடுத்தார் சிபு.
ஒரு கையில் கசங்கிய ஒரு டாலர் நோட்டு. இன்னொரு கையில் பழங்கள் அடங்கிய பை.
ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பெற்றோர் ஏறுவதற்குத் தயாராக இருக்க ஒரு டாலர் கொடுத்து விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டை வாங்கி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார் சின்னப் பையனான ஜாக்கி.
சிபு மிகவும் கடுமையான நடைமுறைகளைக் கொண்டவர். அவர் நடத்தி வந்த பள்ளியில் ஜாக்கிசான் பட்டபாடு பெரும்பாடு. அங்கு சிலம்பம், கராத்தே போன்ற சண்டைக் கலைகளும் குதிப்பது, தாவுவது போன்ற சர்க்கஸ் வேலைகளும் தான் கற்றுத் தரப்பட்டன. காலம் மாறத் தொடங்கவே பள்ளி மாணவர்களை திரைப்படத்துறைக்கு அனுப்பினார் சிபு.
முதல் நடிப்பு: குட்டையாகவும், குண்டாகவும் இருந்ததால் அவருக்கு நடிக்க அடித்தது ஒரு சான்ஸ்! எதாக நடிக்க வேண்டும்?' அங்கு போய் படுத்துக் கிட, செத்த பிணமாக நடி' என்றார் டைரக்டர். அப்படியே செய்தார் ஜாக்கி சான்.

ச.நாகராஜன்
பின்னர் ஸ்டண்ட் காட்சிகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார்.
1971-ல் 'லிட்டில் டைகர் பிரம் காண்டன்' என்ற படத்தில் பெல் பாட்டம் ஜீன்சுடனும் சிறிய மீசையுடனும் முதல் முதலாக திரையில் தோன்றினார் கடுமையாக உழைத்த ஜாக்கிசானுக்கு மளமளவென்று பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
அமெரிக்க வெற்றி: ஜாக்கி சான் ஹாலிவுட்டிற்குள் நுழைய பெரும்பாடுபட்டார். ஆனால் அவரை ஹாலிவுட் உள்ளே நுழையவே விடவில்லை. என்றாலும் கூட விடாது செய்த முயற்சியாலும் உழைப்பாலும் 'ரஷ் ஹவர்' படத்தின் மூலம் அமெரிக்காவை அவர் வென்றார். படம் வெளியான 17 நாட்களிலேயே 840 லட்சம் டாலர் வசூலானது. அமெரிக்கவில் முதல் வாரத்தில் மட்டும் 330 லட்சம் டாலர் வசூலானது. இந்தப் படம் வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பு. தனியான ஸ்டண்ட் பாணி, அளவான காமெடி இரண்டும் படத்திற்கு பிரமாண்டமான வெற்றியைத் தந்தது.
படம் வெற்றி பெற்றவுடன், "இந்த வெற்றிக்காக 15 வருட காலம் காத்திருந்தேன்" என்றார் ஜாக்கி. கடும் உழைப்பு வெற்றியைத் தந்தே தீரும் அல்லவா? அதிரடி மன்னனானார் ஜாக்கிசான்!
உடம்பில் எத்தனை காயம்!
ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பார். அதனால் இவர் பட்ட அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ ஒரு சின்னப் பட்டியல்!
தலைமுடி: 'டிரங்கன் மாஸ்டர் II-ல் அவர் தலைமுடி தீப்பற்றி எரிந்தது
தலை: 'ஆர்மர் ஆப் காட்' படத்தில் மண்டை ஓடு உடைபட்டது. போலீஸ் ஸ்டோரி - II' படத்திலும் தலையில் அடிபட்டது.
கண் புருவம்: 'தண்டர் போல்ட்' படத்தில் கார் வெடிக்கும் காட்சியில் இமைகள் தீப்பற்றி எரிந்தன.
வலது கண்: 'மிராக்கிள்' படத்தில், மூங்கில் குத்தி காயம் ஏற்பட்டது.
இடது கண்: 'ட்ரங்கன் மாஸ்டரில்' வெட்டுக் காயம் பட்டது.
வலது காது: 'ஆர்மர் ஆப் காட்' படத்தில் வலது காது கேட்கும் சக்தியில் பாதியை இழந்து விட்டது.
மூக்கு: 'டிராகன் பிஸ்டில்' மூன்று முறை உடைந்தது
கன்னம்: 'ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்' படத்தில் உடைந்த கண்ணாடி பாட்டில்களால் தழும்புகள், வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
தாடை: பிசகி இருக்கிறது.
மேல் உதடு: 'பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்' வெட்டுக் காயம். பற்கள்: 'ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ' வில் உடைந்தன.
கழுத்து: 'ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்' படத்தில் சுளுக்கு. கழுத்துப்பட்டை எலும்பு: 'சூப்பர் காப்' படத்தில் முறிந்தது. வலது தோள்: 'தண்டர்போல்ட்டில்" அடி
கை எலும்பு: இரண்டும் முறிந்துள்ளன.
வலது கை: 'பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்' முறிவு
வலது, இடது கை: 'போலீஸ் ஸ்டோரியில்' தீக்காயம்
விரல்கள்: 'விராஜெக்ட் ஏ'யில் ஐந்து விரல்களும் முறிந்தன.
மார்பு: 'ஆபரேஷன் காண்டர்' படத்தில் எலும்புகள் முறிந்து ரத்தம் கொட்டியது.
இடுப்பு: 'மாக்னிபிஷண்ட் பாடி கார்டில்' பிசகியது.
இடது பாதம்: 'சிடி ஹண்டர்' படத்தில் முறிந்தது.
முன் பாதம்: பலமுறை முறிந்துள்ளது.

தினமும் ஜாக்கி கடும் உடல் பயிற்சிகளைச் செய்கிறார். பாத்ரூமில் கூட சில விசேஷ பயிற்சிகளைச் செய்வது வழக்கம்.
குடும்பம்: ஜாக்கிசானின் குடும்பம் பற்றி அவரே ஒரு முறை சொன்னார் இப்படி:
எனக்கு திருமணம் ஆகி விட்டதா என்று நிருபர்கள் கேட்கும்போது இல்லை என்று சொல்லி விடுவேன். ஏனெனில் இந்தக் கேள்வி முதல் தடவையாக என்னிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பதாகச் சொன்னேன். அதைக் கேட்டு என் விசிறிகளில் ஒரு பெண் பாலத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். இன்னொருத்தி என் அலுவலகம் முன்னே விஷத்தைக் குடித்து விட்டாள். ஆகையால் ஜாக்கிரதையாக பதில் சொல்வது என்று முடிவெடுத்து விட்டேன்."
உண்மையைச் சொல்லுமாறு வேண்டியபோது, "எனக்கு அருமையான ஒரு மனைவி உண்டு. ஒரு மகனும் இருக்கிறான்" என்றார் அவர். ஜாக்கி சான் 1982-ல் ஜோன் லின் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் மணந்தார்.
அதே ஆண்டில் பிறந்த அவரது மகனான ஜேஸீ சானும் ஒரு நடிகர். ஒரு இசைக் கலைஞர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் போதைமருந்து வைத்திருந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். 2015 பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஜாக்கிசான் சீனாவில் 2009-ல் இருந்து போதை மருந்தைத் தடுக்கும் தூதுவராக இயங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.
அவருக்கு ஒரு மகள். பெயர் எட்டா.
ஹாங்காங் நடிகையான எலெய்ன் யீலீ அவருடன் இணைக்கப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஜனவரி 1999-ல் மகள் எட்டா பிறந்தாள். ஆனால் ஜாக்கியை விட்டுப் பிரிந்து தன் தாயாருடனேயே வாழ ஆரம்பித்தாள் எட்டா.
அறக்கட்டளை: ஜாக்கிசான் யூனிசெப்-ஆல் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார்.
1988-ல் தனது அறக்கட்டளையைத் தொடங்கிய அவர் ஏராளமான நன்கொடைகளை அளித்துக் கொண்டே வருகிறார். விலங்குகள் பாதுகாப்பிலும் அவருக்கு அக்கறை உண்டு. சீனாவில் வெள்ளம் ஏற்பட்டபோதும் 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் போதும் உடனடியாக அவர் நிவாரண நிதியை அளித்தார், தனது இறப்பிற்குப் பின்னர் தனது சொத்தில் பாதி நன்கொடையாக தேவைப்பட்டோருக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
படங்கள்: ஜாக்கிசான் சுமார் 200 திரைப்படங்களில் பங்கு பெற்றுள்ளார். நடிகராக, ஸ்டண்ட் மாஸ்டராக, இயக்குநராக இவர் பங்கு பெற்றுள்ள படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன; பெற்று வருகின்றன. ஜாக்கியின் சுமார் 48 படங்கள் 500 கோடி யு.எஸ். டாலரை வசூல் செய்து தந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய சாதனையாகும்.
டிரங்கன் மாஸ்டர் (1978) ஹாங்காங்கில் படம் வெளியானதும் வசூலான மொத்த தொகை 80 லட்சம் ஹாங்காங் டாலர்கள். இதில் சிறப்பு அம்சம் குங்பூ காமெடி.
ப்ராஜக்ட் ஏ (1984) : ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். சாமோஹங், யூயென் பியாவ், மார்ஸ், டிக்வாய் ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம் முதல் வாரத்திலேயே 140 லட்சம் ஹாங்காங் டாலர்களை சம்பாதித்துத் தந்தது.
போலீஸ் ஸ்டோரி (1985) ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் இவர் ஒரு டிடெக்டிவ். முப்பது அடி கம்பத்தில் இருந்து இறங்கும் காட்சியில் மயிரிழையில் தப்பினார் இவர். நவீன யுகத்தின் பிரமாதமான சண்டைப்படம் என்று உலகமே பாராட்டியது இந்தப் படத்தைப் பார்த்து!
ஆர்மர் ஆப் காட் (1986): ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் நடந்த விபத்தில் பாறை ஒன்றில் மோதி மண்டையில் பலமான அடி பட்டது; ஒரு காது கேட்கும் சக்தியில் பாதியை நிரந்தரமாக இழந்து விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சூப்பர் காப், கிரைம் ஸ்டோரி, தண்டர்போல்ட், நைஸ் கை, 1911, CZ12 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த ஏராளமான படங்களில் சில.
இவரது அரசியல் அனுபவம் தனி!
இப்போதும் சுறுசுறுப்புடனும் தன் பணிகளைக் கவனித்து வரும் ஜாக்கியை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!
அனுபவ மொழிகள்: கடும் உழைப்பு, தைரியமான ஸ்டண்ட் காட்சிகள், தனக்கென தனி ஒரு பாணி. இதுவே ஜாக்கிசான்!
ஜாக்கிசான் தன் அனுபவத்தை வைத்து அனைவருக்கும் சொல்லும் பொன்மொழி இது தான்: ஜாக்கிசானைப் போல ஆக வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். ஒரே ஒரு ஜாக்கிசான் தான் இருக்க முடியும். அதற்கு பதிலாக கம்ப்யூட்டரைப் படியுங்கள்.
சூழ்நிலைகளை உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள். உங்கள் சூழ்நிலைகளை நீங்கள் மாற்றுங்கள்.
- சகோதரத்துவத்தை உடன்பாட்டு முறையில் போதிக்கிறது ராமாயணம்.
- `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!` என்ற அதன் உபதேசமே இந்திய மனங்களின் இணையற்ற லட்சியம்.
இந்திய ஆன்மிக மரபில் பல துறவியர் தவ ஆற்றல் நிறைந்தவர்களாக இருந்ததோடு கூடவே, உயர்ந்த எழுத்தாற்றல் நிறைந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களால் இலக்கியம், ஆன்மிகம் இரண்டு துறைகளும் ஒருசேரத் தழைத்துச் செழித்திருக்கின்றன.
தன் சொந்தக் குடும்பத்தைத் துறப்பது மட்டுமல்ல துறவு. மொத்த சமுதாயத்தையும் தன் சொந்தக் குடும்பமாக நினைத்துப் பாரபட்சமில்லாமல் அனைவர் மேலும் அன்பு செலுத்துவதும் துறவுதான். எனவே துறவியர் எழுதிய எழுத்துகள் மூலம் அனைத்து மக்களும் பயன் பெற்றனர்.
தங்களுக்கென்று தனிப்பட்ட பொருள்தேவை எதுவும் இல்லாததால், துறவியர் பொருளுக்காக எழுதவேண்டிய அவசியம் இருப்பதில்லை. சுயநலத்தைத் தவிர்த்துப் பொதுநலனுக்காகவே வாழ்ந்த மகான்கள் அவர்கள்.
எனவே அவர்கள் உயர்ந்த நோக்கங்களுக்காகவும் மேலான லட்சியங்களுக்காகவும் தனிமனிதனும் சமுதாயமும் மேன்மை அடைவதற்காகவும் எழுதினார்கள்.
துறவியர் எழுத்தாளர்களாகவும் இயங்கி, சமுதாயத்தைத் தங்கள் எழுத்தால் நெறிப்படுத்திய மரபு பாரத தேசத்தில் மிகப் பழங்காலத்திலேயே தொடங்கி விட்டது.
இரு துறவியர் எழுதிய இருபெரும் இதிகாசங்கள்தான் இன்றளவும் இந்திய மனங்களை அறத்தின் பாதையில் தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

திருப்பூர் கிருஷ்ணன்
ஒருவர் ராமகாதையை இதிகாசமாக்கிய துறவியான மகரிஷி வால்மீகி. பிறப்பால் வேட்டுவ ஜாதியைச் சேர்ந்த அவர், எந்த ஜாதியினரும் ஆன்மிகத்தில் உயர்நிலை அடைய முடியும் என்பதற்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார்.
ராமாயணம் நடந்த காலத்திலேயே வாழ்ந்து ராமாயணக் கதையைச் சுடச்சுட எழுதிய துறவி அவர். சீதை அவரை அண்ணன்போல் கருதி அவரிடம் அடைக்கலம் புகுந்ததையும் சீதாராமனின் புதல்வர்களான லவனும் குசனும் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்ததையும் அவர்கள் வால்மீகி ராமாயணத்தை ராமன் முன்னிலையிலேயே பாடியதையும் ராமாயண உத்தரகாண்டம் உருக்கமாய்ப் பேசுகிறது.
வேட்டுவரான வால்மீகி தன் இதிகாசத்தில் சித்தரித்த சீதை என்ற பெண்மணிதான் இந்தியப் பெண்களின் லட்சிய வடிவம் என வியந்து போற்றுகிறார் வீரத் துறவி விவேகானந்தர்.
இன்னோர் இதிகாசமான மகாபாரதத்தை எழுதிய வியாசரும் ஒரு துறவியே. அவரது எழுத்தின் மேன்மை உணர்ந்து அவர் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமானே தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டு அந்த இதிகாசத்தை எழுதினார் என்கிறது புராணக் கதை. சகோதரத்துவத்தை உடன்பாட்டு முறையில் போதிக்கிறது ராமாயணம். அதன் நாயகனான ராமபிரான் செல்லுமிடமெல்லாம் குகன், சுக்கிரீவன், விபீஷணன் என்று புதிய புதிய சகோதரர்களை உருவாக்கிக் கொள்கிறான். அதனால் அவனுக்கு விளையும் நன்மைகளைச் சித்திரிக்கிறது அந்த இதிகாசம்.
அதே சகோதரத்துவத்தை எதிர்மறை முறையில் பேசுகிறது வியாசரின் மகாபாரதம். அண்ணன் தம்பிச் சண்டை மகாபாரதப் போர் மூலம் எத்தகைய பேரழிவுக்கு வித்திடுகிறது என்பதை விவரித்து எச்சரிக்கிறது அது.
மகாபாரதத்தின் ஒரு பகுதியாக வருவதும் அதில் வரும் ஒரு பாத்திரமான கண்ணன் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு போதித்ததுமான பகவத் கீதைதான் இன்றளவும் பாரத மனங்களைக் கோட்பாட்டு ரீதியாக ஆட்சி செய்யும் புனித நூல்.
`கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!` என்ற அதன் உபதேசமே இந்திய மனங்களின் இணையற்ற லட்சியம்.
கீதையின் தத்துவங்களால் கவரப்படாத உயர்நிலைப் பிரமுகர்கள் இல்லை. மகாத்மா காந்தி, வினோபா பாவே, பால கங்காதர திலகர், மகான் அரவிந்தர், மகாகவி பாரதியார் என கீதைக்கு உரையெழுதியவர்கள் இன்னும் எத்தனையோ பேர்.
ஆக வால்மீகி, வியாசர் என்ற இரு பெரும் துறவியரின் இதிகாச எழுத்துக்கு இந்தியக் கலாசாரமும் இந்தியப் பண்பாடும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றன.

சம்ஸ்கிருத இலக்கியங்களைப் படைத்த துறவியர் இவ்விருவரைத் தவிர மேலும் பலர் உண்டு.
காலடியில் பிறந்தவரும் தம் காலடியால் பாரத தேசம் முழுவதும் நடந்தவருமான ஆதிசங்கரர் அவர்களில் மிக முக்கியமானவர்.
`கனகதாரா ஸ்தோத்திரம், லட்சுமீ நரசிம்ம ஸ்தோத்திரம், சுப்ரமண்ய புஜங்கம், மனீஷா பஞ்சகம், கணேச பஞ்ச ரத்தினம். நிர்வாணாஷ்டகம்` உள்ளிட்ட பல பக்திப் பனுவல்களப் படைத்த பெருமை பெரும் இலக்கியவாதியான துறவி ஆதிசங்கரருக்கு உண்டு. `பிபரே ராமரசம், சிந்தா நாஸ்திகிலா, காயதி வனமாலி` போன்ற உயர்ந்த பக்திக் கீர்த்தனைகளை எழுதிய சதாசிவப் பிரம்மேந்திரர் ஆன்மிகம், சங்கீதம், இலக்கியம் என்ற மூன்று துறைகளையும் செழுமைப் படுத்திய துறவி.
இன்னும் ஏராளமான துறவியர் சம்ஸ்கிருத இலக்கியத்தைத் தங்கள் எழுத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் மிக நீண்டது. தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றுப் பரப்பிலும் பல துறவியர் அதன் செழுமைக்குக் காலந்தோறும் வளம் சேர்த்திருக்கிறார்கள். `நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த` இளங்கோ அடிகள் ஒரு துறவியே. சேரன் செங்குட்டுவனின் தம்பியான இவர் இளவரசுப் பட்டத்தைத் துறந்து சமணத் துறவியானார் என்கிறது மரபுவழிக் கதை.
சிலப்பதிகாரத்தில் வரும் `ஆய்ச்சியர் குரவை` போன்ற பகுதிகளில் திருமால் உள்ளிட்ட இந்துமதக் கடவுளர் மனமாரப் புகழப்படுவதைப் பார்க்கிறோம். இளங்கோ என்ற சமணத் துறவிக்குப் பிற மதக் காழ்ப்பு ஒருசிறிதும் இருக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்கிறோம்.
சிலம்பைப் பயில்வோர் மனத்தில் தமிழர்களின் பாரம்பரிய மத நல்லிணக்க உணர்வை எண்ணிப் பெருமிதம் தோன்றுகிறது.
அந்தக் காலம் தொட்டே ஆண்களைப் போல் பெண்களுக்கும் துறவு பூணும் உரிமை இருந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறார் சிலப்பதிகாரத்தில் பூம்புகாரிலிருந்து மதுரை வரும்வரை கோவலனுக்கும் கண்ணகிக்கும் வழித்துணையாக வரும் சமணத் துறவியான கவுந்தி அடிகள்.
வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து `இவர்கள் யார்?` என வினவ, `இவர்கள் எம் மக்கள்!` என அன்போடு பதில் சொல்கிறார் கவுந்தி அடிகள்.
`உம் மக்கள் என்றால் அவர்கள் ஒருவரையொருவர் மண முடிப்பரோ?` எனக் கேலி பேசுகிறார்கள் அவர்கள். சீற்றமடைந்த கவுந்தி அடிகள் அவர்களை முள்ளுடைக் காட்டில் முதுபெரும் நரிகளாகுமாறு சபித்தார் எனக் கூறி அந்தப் பெண் துறவியின் தவ ஆற்றலைப் பற்றிப் பேசுகிறது சிலம்பு. பின்னர் மாதரி என்ற பெண்ணின் வீட்டில் கோவலனையும் கண்ணகியையும் தங்க வைக்கிறார் அவர் எனவும் கதையைத் தொடர்ந்து சொல்லிச் செல்கிறது சிலப்பதிகாரம்.
இரட்டைக் காப்பியங்களில் சிலம்போடு சேர்த்து எண்ணப்படும் இன்னொரு காப்பியம் மாதவியின் மகளைக் கதாநாயகியாகக் கொண்டு எழுதப்பட்ட மணிமேகலை. அதை இயற்றிய கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஒரு பெளத்தத் துறவியே. இளங்கோ அடிகளின் சமகாலத்தில் வாழ்ந்த அவர், அவரது நெருங்கிய நண்பராகவும் இருந்தார் என்கிறது வரலாறு. அவர் தாம் படைத்த காப்பியத்தில் கதாநாயகியான மணிமேகலையையே ஒரு துறவினியாகப் படைக்கிறார்.
காப்பிய காலத்தில் மட்டுமல்லாமல் இடைக் காலத்திலும் பல துறவியர் இலக்கியம் படைத்துத் தமிழை வளப்படுத்தியதைத் தமிழ் இலக்கிய வரலாறு பதிவு செய்துள்ளது.
`பிரபுலிங்க லீலை` போன்ற உன்னதமான செய்யுள் நூல்களை எழுதியவரும் கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப் படுபவருமான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் துறவு நிலையில் வாழ்ந்தவரே.
`சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்` ஆகிய சைவ சமயக் குரவர்கள் நால்வரைப் பற்றியும் `நால்வர் நான்மணிமாலை` என்ற செய்யுள் நூலைப் படைத்த பெருமையும் இவருக்கு உண்டு.
இன்றளவும் தாய்ப்பாசத்திற்கு இலக்கணமாகத் திகழ்பவரும், அன்னையின் சடலத்தை எரிக்க நேர்ந்தபோது அற்புதமான வெண்பாக்களை உள்ளம் உருகும் வகையில் படைத்தவருமான பட்டினத்தார், துறவிதான்.
தன் அக்கா உண்ணாமுலையின் மகளான தனக்கோடி அம்மையாரை வற்புறுத்தல் காரணமாக மணந்தாலும் மணமான அன்றே மணவாழ்வை விட்டு விலகித் துறவு வாழ்க்கை வாழ்ந்த ராமலிங்க வள்ளலாரை விட்டு விட்டு பக்தி இலக்கிய வரலாற்றை எப்படி எழுத இயலும்?
வள்ளல் பெருமான எழுதிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டுத் தானே திருவருட்பா? தமிழ் பக்தி இலக்கிய வானில் ஒளிவீசும் நிரந்தர நட்சத்திரமல்லவா ராமலிங்க வள்ளலார்?
`அட்சர மணமாலை` உள்ளிட்ட பல செய்யுள் நூல்களைப் படைத்த பகவான் ரமண மகரிஷி என்ற மாபெரும் துறவி குறித்து அறியாதார் யார்? ஆன்மிக எழுத்துலகில் அவர் பங்களிப்பும் கணிசமானது. தத்துவச் செழுமை நிறைந்து, பயில்பவர்களை நான் யார் என்ற விசாரத்தில் ஆழ்த்திச் சிந்திக்க வைப்பது. நூறாண்டு வாழ்ந்தவரும் அண்மைக் காலத்தில் தோன்றிய உண்மைத் துறவியுமான காஞ்சிப் பரமாச்சாரியார் ஏராளமான விஷயங்களைத் தம் அடியவர்களுக்கு உரையாடல்களிலும் சொற்பொழிவுகளிலும் எடுத்துரைத்து அவர்களை நெறிப்படுத்தினார்.
அவை அனைத்தையும் தொகுத்து எழுதினார் அவரது அடியவரான ரா. கணபதி. அவ்விதம் எழுதப்பட்ட பரமாச்சாரியாரின் சிந்தனைகள் `தெய்வத்தின் குரல்` என்ற தலைப்பில் பல தொகுதிகளாக வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப் பட்டுள்ளன.
மகாகவி பாரதியாரின் சம காலத்தவரும் பாரதியாரால் பெரிதும் மதிக்கப் பட்டவருமான மகான் ஸ்ரீஅரவிந்தர் புதுச்சேரியில் துறவு வாழ்க்கை வாழ்ந்தவரே. அவர் தமது சிந்தனைகளை ஆங்கிலத்தில் வடித்துத் தந்து, ஆங்கில இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளார்.
மகான் ஸ்ரீஅரவிந்தரின் தத்துவச் செறிவு நிறைந்த ஆங்கிலச் செய்யுள் நூலான சாவித்திரி உலகம் போற்றும் உன்னத ஆன்மிகக் காப்பியமாகப் போற்றப் படுகிறது.
பாரத தேசம் பற்பல துறவியரின் எழுத்தால் பயன்பெற்ற தேசம். அவ்விதம் சொல்வதும் சரியல்லதான். பாரதத் துறவியரின் தவ ஆற்றல் நிறைந்த தூய எழுத்துகளால் உலகம் முழுவதுமே பயன் பெற்றிருக்கிறது என்று சொல்வதே சரி.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- ஈசனும் மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க கோபாவேசத்தோடு தவம் செய்தனர்.
- மகாசக்தியின் ஒளியையும் உருவமும் பார்த்து தேவர்கள் கண்களில் நீர் பொங்க ஆனந்தம் அடைந்தனர்.
ஆடி மாதம் கும்பகோணம் பகுதி ஆலயங்களை தரிசனம் செய்ய செல்வதாக இருந்தால் மறக்காமல் அம்மன்குடிக்கு சென்று வாருங்கள். இந்த ஊர் கும்பகோணத்தில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த ஊரில் இருக்கும் அஷ்டபுஜ துர்க்கை பல்வேறு சிறப்புகள் கொண்டவள். இதனால் இந்த தலத்தில் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும். அதுபோல ஆடி மாதமும் சிறப்பு பூஜைகள் உண்டு.
இந்த தலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.....
அசுர சகோதரர்களான கரம்பனும் ரம்பனும் தவம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விபட்டபோது தேவர்கள் மிரண்டு போனார்கள். கரம்பன், ஜலஸ்தம்பனம் என்றழைக்கப்படும் நீரின் சக்தியை தன் வசமாக்கும் வித்தையை வரமாகப் பெறும் தவத்தை மேற்கொண்டான். மூச்சை நிறுத்தி நீருக்குள் உயிர் ஜீவிக்கும் தன்மையை தன்வயமாக்கினான்.
அவன் சகோதரன் ரம்பன் மேகம் முட்டும் உயரத்திற்கு அக்னியை மூட்டினான். ஒற்றைக் காலில் நின்று மனதை ஒருமையாக்கி தீக்கடவுளை சித்தத்தில் நிறுத்தினான். தீக்குள் தீயாகி மறையும் ஆற்றல் பெற்றான்.
அசுரர்கள் மும்மூர்த்திகளையும் எப்படியாவது எதிரில் நிறுத்தி வரம் கோருவதில் கில்லாடிகள். எனவே அவர்களது தவத்தை தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது அவர்கள் தலையை துண்டாக்க வேண்டும் என்று தேவர்கள் முடிவு செய்தனர்.

இந்திரன் நீருக்குள் இருக்கும் கரம்பனை எவ்வாறு கவிழ்க்கலாம் என யோசித்தான். சத்தம் போடாது முதலை உருவில் நீரில் நழுவி வழுக்கிக் கொண்டு சென்றான். கரம்பனின் காலை முதலையாக மாறிய இந்திரன் கவ்வினான். கபளீ கரம் செய்தான்.
ஐயாறுகளும் சங்கமிக்கும் அந்த இடம் ரத்தச் சிவப்பாகியது. அசுர சகோதரனின் ஓலத்தையும் பொங்கிவரும் ரத்த வெள்ளத்தையும் பார்த்து ரம்பன் புரண்டு புரண்டு அழுதான்.
ரம்பனின் ரத்தம் கொதித்தது. சித்தம் முழுதும் தன் சந்ததியை - சக்தியை பெருக்க வேண்டும் என்று யோசித்தது. எருதாக வடிவெடுத்தான். எதிரே வந்த பெண் எருமையை இணையாக்கிக் கொண்டான்.
பெண் எருமை பாய்ந்த வேகத்தில் அதற்குள்ளிருந்து கருப்பாக, எருமைத் தலையோடு மானுட உடம்போடு அதீத சக்தி தளும்ப, நான்கு கால் பாய்ச்சலாக வெளிவந்து ஒருவன் வீழ்ந்தான்.
அசுரக் கூட்டம் புதியவனை ஆரத் தழுவிக் கொண்டது. அவனுக்கு 'மகிஷன்' என பெயர் சூட்டி மகிழ்ந்தது. தந்தை ரம்பனின் விருப்பத்தை மகிஷன் நிறைவேற்றத் துடித்தான். மேரு மலைக்கு ஓடினான். உக்கிரத் தவமியற்றினான். பிரம்மனும் அவன் முன் தோன்றி காட்சி அளித்தார்.
தனக்கு மரணம் வராதிருக்க வேண்டும் என்று மகிஷன் வரம் கேட்டான். அதற்கு பிரம்மன், ''என் சக்திக்கு மீறியதை என்னால் கொடுக்க இயலாது'' என்றார்.
''பெண் ஒருத்தியைத் தவிர வேறு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது'' என இறுதியாக மகிஷன் கேட்டான். அதை ஏற்று பிரம்மன் வரம் தந்தார். பிரம்மனின் வாக்கில் அவரறியாது பிரமாண்ட சக்தி உருவானது.

மகிஷனின் முழுக் கூட்டமும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டது. தேவலோகத்தை அநாயாசமாக அசுரலோகமாக்கிக் கொண்டது. இந்திரன் பரிதாபமாக தளர்ந்துபோய் தனது குருவான பிரஹஸ்பதியின் பாதத்தில் சோர்வாகச் சரிந்தான்.
தேவர்களின் நிலையை எண்ணி பிரகஸ்பதி வருந்தினார். பராசக்தியிடம் முறையிடுங்கள். பிரம்மன் அளித்த வரம் குறித்து திருமாலிடம் சொல். ஈசனின் தாள் பணிந்து உருகு. அதற்கு முன்பு ஒருமுறை தளராது போர்க்களம் சென்று போரிட்டுப் பார்'' என்று அறிவுரை கூறினார் பிரகஸ்பதி.
இந்திரன் இப்போது தெய்வ நினைவோடு போரிடுவதை விட தெய்வத்தையே போருக்கு அழைக்கலாமே என்று ஆழமாக யோசித்தான். பரமேஸ்வரன், மகாவிஷ்ணுவின் பாதங்களில் சகல தேவர்களும் போய் வீழ்ந்தனர்.
ஈசனும் மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க கோபாவேசத்தோடு தவம் செய்தனர். மகா சக்தியான பராசக்தியை நாடும் மா தவம் அது. தேவர்களும் அவர்களோடு இணைந்தனர்.
சட்டென்று பிரபஞ்சமே ஒளிரும் பேரொளி சிவனுக்குள்ளும், மகா விஷ்ணுவுக்குள்ளும் ஜோதியாய் வெடித்தது. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. நாராயணனின் புஜபலம் முழுவதும் திரட்டி பதினெட்டுத் திருக்கரங்களோடு நின்றாள் மகாலட்சுமி. அவளிடம் பிரம்மனின் செம்மை பாதங்களாக பரிமளித்தன. ஈசனின் வெள்ளொளி திருமுகமாக மலர்ந்தது. எமனின் கருமை கருங்குழல் கற்றையாக காற்றில் அலைந்தது. இந்திரனின் ஜால சக்தி அம்மையின் இடைப் பகுதியாயிற்று.
பாத விரல்களில் சூரியனின் ஜோதி தெறித்துப் பரவியது. ஈசனின் இணையற்ற பக்தனான குபேரனின் ஒளி திருமகளின் நாசியாகி மின்னியது. அக்னி அவளின் திருநயனங்களில் உக்கிரமாகக் குடி புகுந்தார். கனலாகிச் சிவந்தாள் துர்க்கா. வாயு இனிய கானமாய் அவள் செவிக்குள் புகுந்தான். சூரியனின் செவ்வொளி கீழுதடாகவும், முருகனின் செவ்வேள் மேல் உதடாகவும் ஒளிபரப்பி சிவந்திருந்தன.
மகாசக்தியின் ஒளியையும் உருவமும் பார்த்து தேவர்கள் கண்களில் நீர் பொங்க ஆனந்தம் அடைந்தனர். அவள் பாதம் பணிந்துத் துதித்த னர். 'ஜெய... ஜெய...' என விண்முட்டும் கோஷம் எழுப்பினர். இது நிகழ்ந்தது மகாளய அமாவாசைக்கு முந்தைய தினம். பிரளயத்தில் பார்வதி காளியாகி வந்தாள். இப்போது மகாலட்சுமியே துர்க்கையாக எழுந்தாள்.
சகல ஆயுதங்களையும் அவள் முன் மலையாகப் பரப்பினர். ராஜராஜேஸ்வரியாக நின்றவளுக்கு ராஜசிம்மத்தையே கொடுத்தான் இமயத்து ராஜன் ஹிமவான். சிம்மம் பிடரியைச் சிலிர்த்து கம்பீரமாக நடந்து தேவியின் அருகில் நின்றது.
மகிஷன் எங்கோ தொலைதூரத்தில் தேவர்களின் பிளிறல் கேட்டு முகம் சிவந்தான். அவன் திரும்புவதற்குள் சிம்மத்தின் கர்ஜனை அவன் காதை செவிடாக்கியது. மகாலட்சுமி மாபெரும் உருவோடு அவனெதிரே நின்றாள். மகிஷன் அவளை மதியாது ஆயுதங்களை வீசினான். அதை புல்லாகக் கிள்ளி எறிந்தாள்.
அசுரக் கூட்டம் அதற்குள் பேயாகப் பறந்து தாக்கினர். அன்னை அசுரர்களின் உடலைச் சீவி எறிந்தாலும், உள்ளிருக்கும் ஜீவன்களை பரம கருணையாக தன்னிடம் அழைத்துக் கொண்டாள். தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது.
இறுதியாக எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலட்சுமியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே 'மகிஷாசுர மர்த்தினி' எனப்படுபவள்.
பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து அம்மன்குடி தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்த தால் இத்தலத்தை 'தேவி தபோவனம்' என அழைத்தனர்.
இங்குள்ள கோவில் சிறியதும் அல்ல பெரியதும் அல்ல நடுத்தரமானதாக உள்ளது. ஆனால், கீர்த்தியில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஈசன் சந்நதிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இணையாக தனிக் கருவறையில் துர்க்கா தேவி சிம்ம வாகனத்தில் எழில் கொஞ்சும் திருமுகத்தோடும் அருள் பூக்கும் கண்களோடும் இங்கு அருள்பாலிக்கிறாள்.
கோவிலின் முகப்பு வாயிலில் உள்ள விநாயகப் பெருமானை தரிசித்து உள்ளே சென்றால் இடது புறத்தில் துர்க்கையின் சந்நதி இருப்பதை காணலாம். பிரம்மராயர் காலத்திய துர்க்கையின் சிலை காலத்தால் சற்று தேய்ந்து போனதால், அதே அழகில் அறுபது வருடம் முன்பு இன்னொரு துர்க்கையை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய சிலையை உள்ளேயே துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.
துர்க்கை சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்து எட்டு கரங்களோடு தோன்றும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அதில் முகம் மலர்ந்து மெல்லியதாக புன்னகைக்கும் அழகை பார்க்க நம் அகம் முழுதும் அவள் அருளமுதம் நிரம்பும். இத்தேவியின் பாதம் பணிவோருக்கு கைமேல் கனியாக வெற்றியை ஈட்டித் தருவாள்.
துர்க்கை சந்நதிக்கு அருகேயே பார்வதி தேவியின் சந்நதியும் கைலாசநாதரின் மூலக் கருவறையும் உள்ளன. துர்க்கை, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த பாவம் போக்க இந்த தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அம்மனின் நுழைவாயிலில் மிக அபூர்வமான ஒரு சரஸ்வதியின் சிலை உள்ளது. கண்கள் மூடி, கைகளில் ஜபமாலையோடு வீற்றிருக்கும் கோலம் காணுவதற்கு அரியதாகும். நவராத்திரியில் பிரதம நாயகியான லட்சுமி துர்க்காவோடு தானும் தவத்தில் ஆழ்கிறாளோ என்று தோன்றுகிறது.
நவகிரகங்களுக்கு அதிபதியான துர்க்கை இத்தலத்தில் உறைவதால் இக்கோயிலுக்குள் நவகிரகங்கள் இல்லை. ஏராளமான சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலின் கோஷ்டத்து மேல் பகுதியில் ராஜராஜசோழன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது.
கும்பகோணம் செல்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய தலம். இந்த ஊருக்கு கும்பகோணம்- உப்பிலியப்பன் கோவில்-அய்யாவாடி வழியாக பஸ்கள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோவிலை அடையலாம்.
- இருவரும் இணைந்து கொடுத்தப் பாடல்களின் வகைகள் அதிகம்!
- இருவருக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு அளவிட முடியாதது.
"கவியரசர் கண்ணதாசன்- மெல்லிசை மாமன்னருக்கு இடையே இருந்தது, தொழில் புரிதலா? மனப் புரிதலா? அன்பா? நட்பா? - எது என்று புரியாத அளவிற்கு அவர்களுக்கு இடையே இருந்த புரிந்துணர்வு அளவிட முடியாதது!
கவியரசர் நினைக்கும் சொற்களுக்கு எம்.எஸ்.வியின் தத்தகரம் கிளம்பி வரும்!! எம்.எஸ்.வியின் இசைக்கு தகுந்த சொற்கள் கவியரசரிடமிருந்து பிறந்தோடி வரும்!! அதற்கு உதாரணம் தான் "சிப்பியிருக்குது முத்துமிருக்குது" என்ற பாடல் காட்சி என்றுப் பார்த்தோம்!
இவர்கள் கூட்டணியில் பிறந்த பாடல்கள் பல்வேறு வடிவமைப்பில் வந்த மாதிரி வேறு எந்த கவிஞரின் கூட்டணியிலும் வந்ததில்லை. எத்தனையோ கவிஞர்கள் எழுதினாலும், இவர்கள் இணைந்து கொடுத்தப் பாடல்களின் வகைகள் அதிகம்!
கேள்வி பதில் பாடல்கள், அடுக்குத் தொடரில் வரும் பாடல்கள், முழுக்க இயைபு தொடை, ஒரே சொல்லில் முடியும் பாடல்கள்..
உவமை அணி பாடல்கள், இருட்டுற மொழிதல் பாடல்கள், சிலேடைப் பாடல்கள், கால வளர் நிலைப் பாடல்கள், ஆகுபெயர் பாடல்கள், சிறிய, பெரிய, பல்லவி மற்றும் அனுப்பல்லவி பாடல்கள், ஒரே சொல் பாடல் வரி, இருசொல் பாடல் வரிகள், அறுசீர் அடி, எழு சீர் அடி கொண்ட பாடல்கள் என அத்தனையும் புதுமை! அவற்றையெல்லாம் பாடல்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும் என்றால் அது மட்டுமே ஒரு தனித் தொடராகி விடும். அவ்வப்போது பாக்கலாம்.
இன்னொரு மாபெரும் கவிஞரை மீட்டெடுத்து தமிழ் திரையுலகத்திற்கு தந்ததும் கவியரசர் தான்!
ஒரு இளைஞன், அற்புதமாக எழுதக்கூடியவர். எம்.ஜி.ஆருக்கே பாடல் எழுதியவர், இருந்தும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அவர், நடிகர் வி. கோபாலகிருஷ்ணனின் நண்பர். வாய்ப்புகள் தேடி அலைந்து, நம்பிக்கை குலைந்து ஊருக்கே கிளம்பி போவதா? அல்லது தொடர்ந்து முயற்சி செய்து வெல்வதா என்ற குழப்பத்தின் எல்லைக்கே சென்று விட்டார். அவரது நண்பரான பி. பி. ஸ்ரீனிவாஸ் பின்னணி பாடகர், தான் அன்று ஒலிப்பதிவு முடித்துவிட்டு வந்த ஒரு பாடலைப் பற்றி பேசுகிறார், பாடியும் காட்டுகிறார்.
"மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? என்ற பல்லவி அவரைப் பார்த்து கேட்பது போலவே இருக்கிறது! அடுத்து சரணத்தில், "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும்".
பி.பி.எஸ். தொடர்கிறார். "நாளைப் பொழுதை இறைவனுக்கு அளி, உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்று தீர்வையும் பாடல் சொன்னது. அவ்வளவுதான் ஊரில் உறவினர் சொன்ன வேலைக்குப் போகும் எண்ணத்தை தூக்கிப் போட்டார். வெற்றி பெற்ற பிறகுதான் பிறந்த ஊருக்கு போவது என்று முடிவெடுக்கிறார்! அந்த இளைஞன் அவர் யார்?
1961ல் 'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தில் "சிரிக்கிறாள் இன்று சிரிக்கிறாள் சிந்தியக் கண்ணீர் மாறியதாலே" என்ற பாடலில் ஆரம்பித்து 15000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். 1973ல் 'பாரத விலாஸ்' படத்தின் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்த போது மறுத்தவர். 2007ல் 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்றவர். 1961 முதல் 2013 வரை 53 ஆண்டுகள் பாடல்கல் எழுதினார்.
வயதானாலும், காலத்திற்கேற்றார் போல் டிரெண்டியான சொற்களை பாடல்களில் வைத்து எழுதியதாலேயே "வாலிப கவிஞர் வாலி" என்று செல்லமாக அழைக்கப்பட்ட திருச்சிக்கார ரங்கராஜன் தான் அந்த இளைஞன்!!
கவியரசர் ஒரு புறம், மருதகாசி, மாயவநாதன், ஆலங்குடி சோமு என்கின்ற புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் நடுவே எழுத வந்த கவிஞர். வாலி பிற்கால இளைய தலைமுறை யுகபாரதி, சினேகன் காலம் வரை புகழுடன் வளைய வந்தார்!!
'முக்தா பிலிம்ஸ் வி. சீனிவாசன் "இதயத்தில் நீ" என்ற படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம். நடிகர். வி. கோபால–கிருஷ்ணன், தன் நண்பனான வாலியை, எம்.எஸ்.வியிடம் அறிமுகம் செய்கிறார். "இவர் என் நண்பர், நல்ல கவிஞர். 'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தில் பாட்டுக்கள் எழுதியிருக்கிறார். நீங்கள் இவருக்கு வாய்ப்பு தரவேண்டும்."
அப்படியா, நான் தர்ற மெட்டுக்கு பாடல் எழுதுங்கள் பார்க்கலாம்.-எம்.எஸ்.வி. உடனே, "பூவரையும் பூங்கொடியே" பாடல் எழுதிக் காட்டுகிறார். படித்துப்பார்த்த எம்.எஸ்.வி. கவிஞர் வாலிக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார். வாலி சிறகடித்து வானில் பறக்கிறார்.
அதே படத்தில், "ஒடிவது போல் இடையிருக்கும், இருக்கட்டுமே", "உறவு என்றொரு சொல் இருந்தால்", "யார் சிரித்தால் என்ன" என்ற மூன்று பாடல்களையுமே வாலியை எழுத சொல்கிறார். அத்தனையும் பி. சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் மிக அற்புதமான மெட்டு தந்து 'தெறி ஹிட்' ஆக்கிவிட்டார் எம்எஸ்.வி.
தமிழ் திரையுலகம், 'இதயத்தில் நீ' என வாலியை ஏற்றுக்கொண்டது. 'கற்பகம்' படத்தில் அப்போது இசையமைத்துக் கொண்டிருந்ததால் அதிலும் வாலியை எழுத வைக்க ஆசைப்பட்டார் எம்.எஸ்.வி. ஆனால் 'கற்பகம்' பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கண்ணதாசனின் மெகா மகா ரசிகர்.
வாலியை அவர் ஏற்றுக் கொள்வாரோ என்ற சந்தேகம் இருந்தது. மெல்ல கேட்கிறார், "ஒரு புது பாடல் ஆசிரியர் வாலின்னு பேரு. பிரமாதமாக எழுதுகிறார். ஒரு பாட்டு அவரை வைத்து எழுத சொல்லலாமா?"
"எனக்கு கவியரசர் தான் எழுதணும்."
"ஒரே ஒரு பாட்டு கொடுத்துப் பாருங்களேன், எனக்காக."
"சரி"
வாலி எழுதினார். கதைப்படி அந்த பாடல், அத்தனை பாட்டும் தாலாட்டு!
"அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா,
ஆடும் வரை ஆடிவிட்டு, அல்லி விழி மூடம்மா".
எடுத்தவுடன் சிக்சர்! கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கிளீன் போவுல்டு. பிறகு படத்தின் மொத்த நான்கு பாடல்களும் வாலியே எழுத இயக்குனர் சம்மதித்தார்.
இரவில் தூங்காமல் கண் கொட்டாமல் விழித்திருக்கும் குழந்தையின் விழிகளை - இரவில் பூக்கும் அல்லி மலருக்கு உவமையாக வைத்து என்ன அருமையாக எழுதியிருக்கிறார்! "மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு, தேன்குயில் கூட்டம் பண்பாடும், மான் குட்டி கேட்டு கண் மூடும்" என்ற வரிகள் அத்தைகளை பெருமை கொள்ள வைத்தது.

1964ல் வந்த 'படகோட்டி' படத்தின் எட்டுப் பாடல்களும் வாலியே எழுதினார். அந்த அளவிற்கு வாலி - எம்.எஸ்.வி. கூட்டணி மிகவும் பிடிதுப்போய், எம்.ஜி.ஆரின் மனதில் தனியிடம் பிடித்தார். ஒரு முறை காரில் போகும்போது எம்.ஜி.ஆர், வாலியிடம் சொன்னார், "மீனவர்கள்' பற்றிய பின்னணியில் வரும் இந்த படத்திற்கு ஐந்து எழுத்தில் வருவது போல் ஒரு பேர் சொல்லுங்கள்".
'படகோட்டி' என்றார் வாலி. அந்த பெயரே படத்துக்கு வைக்கப்பட்டது. "எங்கள் தங்கம்" என்று ஒரு திரைப்படம் 1970-ல் வந்தது. மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு. மூலக்கதை கலைஞர் கருணாநிதி என்பதால் சில சமயம் கலைஞர் பட நிறுவனத்துக்கு வருவதுண்டு. அப்போது எம்.எஸ்.வி. தந்த பல்லவிக்கு முதல் வரியை எழுதிவிட்டார் வாலி. அடுத்த வரி சரியாக வரவில்லை. 'வெத்தலைப் பாக்கு போட்டு போட்டு வாயே வீங்கிவிட்டது' என்கிறார் வாலி (வெற்றிலைப் பாக்கு போட்டா தான் பாடல் எழுத வருமாம்).
அப்போது அங்கே வந்தார் கலைஞர். விவரத்தை கேட்டார், "முதல் வரி என்ன?"
"நான் அளவோடு ரசிப்பவன்".... அடுத்த வரி, "எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று எழுதிக்கோங்க என்று வரி எடுத்து கொடுத்தாராம் கலைஞர். எல்லோரும் உற்சாகமாகி விட்டார்கள். தொடர்ந்து பாடல் எழுதி முடிக்கப்பட்டது.
கவியரசரை 1978-ல் 'அரசவை கவிஞராக' அறிவித்தார் எம்.ஜி.ஆர். அப்போது வாலி அடித்த பஞ்ச், இதுவரை 'கவி அரசராக' இருந்தவரை நீங்கள் 'அரசு கவியாக' மாற்றிவிட்டீர்களே என்றார். இதை கேட்டு எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார்.
உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி, மேஜர் சுந்தரராஜன் சிறுவயது முதல் நண்பர்கள். கொடைக்கானல் சுற்றுலா வந்த இடத்தில் தங்களது வாழ்க்கை பயணத்தை அலசுகிறார்கள். இதற்கு ஒரு பாடல் வாலி எழுதியதற்கு, அங்காங்கே வசனம் பேசி, வால்ட்ஸ் ஸ்டைலில் இசையமைக்கிறார். எம்.எஸ்.வி.
பாடும் இருவரும் நடுத்தர வயதை தாண்டியவர்கள் என்பதால் மலைமீது ஓடி வந்து பாடினால் மூக்சிரைக்கும். அதனால் தத்ரூபமாக மூக்சிரைத்தபடி பாட வேண்டுமென டி.எம். சவுந்தரராஜனிடம் சொல்லிவிட்டார்.
ஒலிப்பதிவுக்கு முன் கூட்டத்திற்கு வெளியே மூன்று முறை ஓடி சுற்றி வந்து, மைக்கின் முன் நின்று மூக்சிரைக்க பாடினார் டி.எம்.எஸ்! சில பாடல்கள் நமக்கு எப்படி எல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன என தெரிய வரும்போது மலைப்பாக இருக்கிறது!
"பூவா தலையா" என்ற படத்தில் வாலியின் ஒரு பாடல், "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே" என்ற பாடல்! சேரன், சோழ பாண்டிய நாடு என்பதான தமிழகத்தை தன் காதலியுடன் ஒப்பிட்டு பாடுவதாக வரும் வரிகள். "இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே!" என்ற கற்பனை அதுவரை யாரும் செய்யாதது.
கவியரசர் "எந்த ஊர் என்றவளே" என்ற பாடலில் ஒவ்வொரு ஊரையும் தொட்டு எழுதியிருந்தார். அது தத்துவப் பாடல்! இது காதலியை வர்ணிக்கும் பாடல்!
வீணை, புல்லாங்குழல், சிதார், செனாய், டோலக்கு–டன் பாடலின் மெட்டும், டி.எம்.எஸ். குரலும் நம்மை எங்கேயோ கொண்டு செல்லும்! ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புகளையும் தன் காதலிக்கு சொல்லி வர்ணித்து வரும் பாடல்!
"நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்நாட்டை பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பார்!!
"மதுரையில் பறந்த" பாடலில் வாலி, தன் காதலியை தமிழ்நாடாக உருவகப்படுத்துவது போல் எழுதியிருப்பார்!! அடடா என்ன அழகு இது!
அதனால் தான் கவியரசர் கண்ணதாசனையும், கவிஞர் வாலியையும் தன் இரு கண்கள் என்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் நெற்றிக்கண் என்றும் எம்.எஸ்.வி. சொன்னார்!!!

தொடர்ந்து புதையல் எடுப்போம்...
இணைய முகவரி:
banumathykrishnakumar6@gmail.com
- தேவர்களுக்கு மாலைப் பொழுது வழிபாட்டு நேரமாக உள்ள காலம் இது.
- ஆடி மாதத்தில் வரும் முக்கிய பண்டிகைகளைப் பார்ப்போம்.
அம்பிகையின் வழிபாட்டை சிறப்பாக கொண்டாடும் மாதங்களில் ஆடியும் ஒன்று. இந்த மாதம் அம்பாளுக்கு மட்டும் அல்லாது சிவபெருமானின் வழிபாடு, நாராயணரின் வழிபாடு, முருக வழிபாடு என அனைத்து விதமான தெய்வங்களின் அருளையும் மழை எனப் பொழிய செய்யும் மாதம் ஆடி.
தேவர்களுக்கு மாலைப் பொழுது வழிபாட்டு நேரமாக உள்ள காலம் இது. இதைக் கற்கடக மாதம் என்பார்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம். காலத்தோடு ஒப்பிட்டு விழா நடத்துவது, வழிபாடு செய்வது என்பது நம் முன்னோர்கள் வகுத்த நியதி. ஆடி மாதத்தில் விவசாயிகள் தங்களது வேலைகளை மிகவும் வேகமாகத் துவங்குவார்கள். காற்று இதமாக வீச, லேசான மழைச் சாரலோடு இறைவனின் அருள் மழையில் நனையும் காலமாக அமையும்.

இந்த ஆடி மாதம் பலருக்கும் பண்டிகை மாதமே! ஒரு காலத்தில் மக்கள் ஆடி மாதத்தில்தான் புதுத் துணிகள் எடுத்து ஊர் திருவிழாவினை தங்களது உற்றார், உறவு, நட்பு, சுற்றத்தினரோடு கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று சில பழக்கங்கள் மாறிப் போனாலும் இறை வழிபாட்டின் தன்மை மட்டும் மாறாமல் நிலைத்து நிற்கின்றது. காலம் காலமாக பொங்கல் வைத்தல், கூழ் வார்த்தல், தீ மிதித் திருவிழா, பால் குடம் இதுபோன்ற விழாக்களை இன்றளவும் நாம் கொண்டாடும் மாதமாக இந்த ஆடி மாதம் அமைந்துள்ளது.
இந்த மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு, பௌர்ணமி, அமாவாசை, பூரம், தபசு, கிருத்திகை, ஆடி 18, வரலட்சுமி விரதம் என அளவில்லாப் பண்டிகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். உலகைக் காக்கும் அன்னை பராசக்தி; மாரியம்மன், மகா காளி, ரேணுகா பரமேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அங்காள பரமேஸ்வரி என பலத் திருக்கோலங்களில் நமக்கு காட்சி தந்து நம்மை ஆட்கொள்ளும் அன்னையாக அருள் ஆட்சி செய்து வருகிறாள். ஆடி மாதத்தில் வரும் முக்கிய பண்டிகைகளைப் பார்ப்போம்.
அம்பாளின் சர்வ சக்திகளையும் தரும் ஓர் உன்னத நாள். இந்நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சர்வ மங்களமும் உண்டாகும். வெள்ளிக்கிழமை அம்பிகையின் வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அன்னை பராசக்தியை துர்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவரின் ரூபமாக வெள்ளிகிழமை அன்று வழிபாடு செய்யும்போது முப்பெரும் தேவியர்களின் அருளும் நமக்கு கிடைக்கும்.

பலரும் அவதிப்படும் ஓர் தோஷம் செவ்வாய் தோஷம். இதனால் திருமணத் தடை, காரியத் தடை மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், குழந்தையின்மை என பலப்பல பிரச்சனைகளால் துன்பப்படுகின்றோம். இதில் இருந்து விடுபட அம்பாள் வழிபாட்டோடு முருக வழிபாடும் இணையும் நாள்.
தானத்தில் சிறந்தது அன்னதானம். அதை செய்ய சிறந்த நாள் ஆடி ஞாயிறு. எனவேதான் இந்த நாளில் கூழ் காய்ச்சி வார்த்தார்கள். ஆடியில் சூடு குறைய, உடல் குளிர உதவும் தானியம் கேழ்வரகு. அதை ஒரு காலத்தில் தர்மமாக செய்தார்கள்.
திருமண வரம், குழந்தை வரம் தரும் நாள். அனைத்து அம்பாள் கோவில்களிலும் பால் குடம், பூச்சொறிதல், திருமணம், வளைகாப்பு, ஊஞ்சல் என கன்னியர்களும், மங்கையர்களும் கொண்டாடிப் பலன் பெறும் நாள்.
மனிதர்களே தவம் செய்யுங்கள், உங்கள் குறிக்கோளை அடைய தேவையற்ற செயல்களை விட்டு, தேவையான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, தவம் செய்தால் நினைத்தது நடக்கும் என்ற கோட்பாட்டை அம்பாளே தானே தவம் செய்து நிரூபித்த நாளே ஆடித் தபசு. அவளின் தவத்தைப் போற்ற சங்கரனும், நாராயணரும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி தந்த நாளே ஆடித் தபசு.

தேச மங்கையர்க்கரசி
முன்னோர்களை மதித்தல் தாய், தந்தையர்கள் வாழும் காலத்தில் அவர்களை மதித்து, பேணிப் பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களைப் போற்றி வணங்கும் வழக்கத்தை அமாவாசை என்ற நாளில் செய்தார்கள் நமது முன்னோர்கள். மாதம்தோறும் வரும் அமாவாசையை விட சில முக்கியமான மாதங்களில் வரும் அமாவாசைக்கு தனி சக்தி உண்டு. அதில் ஒன்றே இந்த ஆடி அமாவாசை ஆகும்.
பவுர்ணமி நாள் எப்படி முழுமை பெற்ற நாளாக விளங்குகின்றதோ அப்படி ஒரு மனிதன் முழுமை பெற ஞானம் அவசியமானது. அந்த ஞானத்தை நமக்கு உபதேசித்து நம்மை நல்வழிப் படுத்துபவர் எவரோ அவரே நமக்கு ஞான குரு ஆவார். குரு என்பவர் இறைவனுக்கு சமமானவர். அந்த குருவின் அடிச்சுவட்டை சிறிதும் மாறாமல் அப்படியே பின்பற்றுவது மாணவனின் தலையாய கடமை. யார் நமக்கு குரு? அப்படி ஒருவர் எங்களுக்கு இல்லையே என நீங்கள் யோசிக்கலாம். யார் நம் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்தவும், நமது ஆன்மாவிற்கான பயணத்தை செவ்வனே நடத்தவும் வழி காட்டுகிறாரோ அவரே நம் குரு. சிலருக்கு உலகியல் வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களை கற்றுத் தந்திருப்பார்கள். அந்த நபரும் நமக்கு குருவே. பள்ளி, கல்லூரி மற்றும் பல கலைகளை பயிற்றுவிக்கும் ஆசான்களும் நமக்கு குருவே. அவர்கள் அனைவரையும் வணங்க வேண்டிய நாள் குரு பூர்ணிமா. இந்நாளில் ஹயக்கிரீவர் வழிபாடும் சிறப்புக்குரியது.
நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஓர் உன்னதமான நாள். காவிரித் தாயை கொண்டாடி மகிழும் புனிதமான நாள். பெண்கள் மங்கள நாண் மாற்றி பொங்கி வரும் புதுப் புனலாம் காவிரித் தாயிடம் உன்போல் என் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி கரை புரள வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யும் நாள். இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் உயர்வும், பெருக்கும் ஏற்படும் என்பதே ஆடி 18-ன் சிறப்பு.
நம் சொந்தக் கடவுளாம் கந்தக் கடவுளை வழிபாடு செய்யும் சிறப்பான நாள் இது. அம்பிகையின் அருள் பாலனாக விளங்கும் முருகப்பெருமான் நமக்கு அருளை வாரி வழங்கும் நாள். ஆறு குழந்தையாக ஆயிரத்து எட்டு இதழ் அடுக்குத் தாமரையில் அவதரித்த குமரனை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் வண்ணமாக முருகனை வழிபடும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு பெற்று விளங்குகிறது. ஞான வேலை சக்தி வேலாக மாற்றி முருகன் கையில் அதை வெற்றி வேலாகத் தந்தாள் அம்பிகை. அந்த அம்பிகைக்கு உரிய மாதத்தில் வேலவனை வணங்க வெற்றி நிச்சயம்.
ஆண்டுதோறும் பல விரத நாட்கள் நமக்கு உண்டு. அதில் பெண்கள் தனது பரம்பரை வழக்கத்தைக் கடைப்பிடித்து விரதம் இருந்து கணவரின் நலனுக்காகவும், குடும்பத்தின் செழிப்புக்காகவும் அன்னை மகாலட்சுமிக்கு நோன்பு நோற்று வணங்கும் நாள். பெண்கள் ஒன்றாகக் கூடி மகிழ்ந்து இறை வழிபாடு செய்து அம்பிகையின் அருளை பெறும் இந்த நாளில் அஷ்ட லட்சுமிகளும் வர லட்சுமியாக நம் இல்லம் வந்து நமக்கு வரம் தருவாள்.
இப்படி ஆடி மாதத்தில் வரும் எல்லா நாட்களும் ஒரு சிறப்பு பெற்ற நாளாகவே உள்ளது. மாதம் முழுவதும் நம்மால் இப்படி கொண்டாட முடியுமா? என்பது சிலருக்கு கேள்வியாக இருக்கலாம். இதில் அவரவருக்கு எந்த நாள் ஏற்றதாகவும், வழக்கத்தில் உள்ளதாகவும் உள்ளதோ அதைக் கடைப்பிடித்து அன்னையின் அருளைப் பெறலாம். உயிர்களுக்கு அளவற்ற கருணையை மழையென பொழியும் கருணாம்பிகை ஆதி சக்தி அன்னையை அன்போடு வழிபடுவோம். அன்னையின் அருள் மழையில் நனைந்து செழிப்போடு வாழ்வோம்.
- 40 வயது என்பது, பெண்களின் உடலில், மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வயதாகும்.
- பலவித உறுப்புகளும் செயல் இழக்கும் நிலை ஏற்படும்.
40 வயதை தாண்டிய பெண்கள் பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு கடந்து செல்வது எப்படி? அதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்...
40 வயது என்பது, பெண்களின் உடலில், மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வயதாகும். இந்த மாற்றங்கள் ஈஸ்ட்ரோஜன் குறைவதால் ஏற்படுகிறது. பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் நீங்கள் முக்கியமாக உங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் சென்று உங்களை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நிறைய பெண்களுக்கு பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் படபடப்பாக இருக்கிறது, அதிகம் வியர்க்கிறது என்பார்கள். அவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். உடல் ரீதியான மாற்றங்களும் வயதான காலகட்டத்தில் வரக்கூடிய பிரச்சனைகளும் இந்த காலகட்டத்தில் வரும் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் 40 வயதை கடக்கும் போது ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தைராய்டு ஹார்மோனும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் ஒன்றோடொன்று சேர்ந்து வருகிற ஹார்மோன்கள். எனவே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் சிறுநீரகம், கல்லீரல், கொழுப்பு சத்து ஆகிய பரிசோதனைகளையும் செய்து கொள்வது நல்லது. 40 வயதில் இந்த பரிசோதனைகளை செய்தால் நமது உடல் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அடுத்து வரும் காலங்களில் உடல் நலனில் எந்த வித மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
40 வயதுக்கு மேல் உணவு பழக்க வழக்கங்களை சீராக வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே சாப்பிடுவதைவிட குறைவாக சாப்பிட்டாலும் உங்களின் உடல் பருமன் அதிகமாகும். சரியாக தூக்கம் வராது. எனவே உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான உணவு பழக்க வழக்கங்கள், உடற்ப யிற்சிகள் மற்றும் தேவைக்கேற்ப சில மருந்துகளையும் எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் புற்று நோய்க்கான மாற்றங்களும் இந்த காலகட்டத்தில் தான் ஏற்படுகிறது. இதற்கான அறிகுறிகள் நமக்கு தெரியாது. அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் நமக்கு தெரிய வரும். எனவே இதற்காக சில பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.

ஜெயராணி
பெண்களுக்கு முக்கியமாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகிய 3 வித புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றை எளிமையான பரிசோதனையில் கண்டறியலாம். மார்பக பரிசோதனை, மெமொகிராம், சோனோ மெமோகிராம் செய்ய வேண்டும். இதில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்பதை ஆரம்ப நிலையில் பார்த்துக்கொள்வது நல்லது. அடுத்து கர்ப்பப்பை ஸ்கேன், கருப்பை அளவுகள் ஆகியவை அந்தந்த வயதுக்கு ஏற்ப நார்மலாக இருக்கிறதா என்பதை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.
இவை அனைத்துமே பெண்களுக்கு பிற்காலத்தில் வரப்போகிற புற்றுநோய்க்கான நிலைகளில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்தும். இந்த பரிசோதனைகளை 2 வருடங்களுக்கு ஒருமுறை செய்து கொள்ள வேண்டும்.
சில புற்றுநோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புற்றுநோய் காரணமில்லாமல் வருவதால் தான் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது முக்கியமான விஷயம். அதன் மூலம் பிற்காலத்தில் வரப்போகிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
மேலும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது எலும்பு தாது அடர்த்தி குறைவாகி, எலும்புகள் பலவீனமாகி எலும்பு முறிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 80 சதவீத பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் முடிவு காலத்தை முடிவு செய்வதே இந்த எலும்பு முறிவு பிரச்சனைகள் தான். இதனால் பெண்கள் நிலை குலைந்து படுக்கையில் வாழ்க்கை யை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் பலவித உறுப்புகளும் செயல் இழக்கும் நிலை ஏற்படும். எனவே இதற்காக வைட்டமின் டி3 மற்றும் கால்சியம் பரிசோதனைகளை செய்து அதன் நிலையை அறிந்து கொண்டு அதற்கான துணை உணவுகளையும், அதற்கான பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டால் வயதாகும் போது வருகிற பிரச்சனைகளை ஓரளவு தடுக்க முடியும்.

இந்த பரிசோதனைகளில் எல்லாமே நார்மலாக இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வயதாகும் போது ஏற்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வது என்று பலரும் கேட்பதுண்டு. இதற்கு முக்கியமான சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதில் முதல் முக்கியமான விஷயம் உடற்பயிற்சி. நாம் உடற்பயிற்சி செய்யும்போது மனதும், உடலும் ஆரோக்கியம் அடைகிறது. ஒவ்வொரு பெண்ணும் தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியின் போது உடலை வலுவாக்குவதற்கான பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அதனால் உங்களின் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். மேலும் யோகா மூலம் உங்களின் தசைகளை வலிமையாக்கும் போது வயதாகும் போது ஏற்படுகிற தசை பலகீனத்தை தடுக்க முடியும். இந்த காலகட்டத்தில் உங்கள் உணவில் புரதச்சத்து, வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிற பழ வகைகள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்களுடைய உடலுக்கும், குடலுக்கும் நல்லது. இந்த உணவு முறைகளை நீங்கள் சரியாக கடைபிடிக்கும் போது உடல் ரீதியான ஆரோக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.
தினசரி உணவுகளில் கீரை ஒரு கப், ஒரு முட்டை, ஒரு பழம், ஒரு காய், கொஞ்சம் சுண்டல், பயறு வகைகள் மற்றும் தேவைக்கேற்ற மாமிச உணவுகள், பால் 2 டம்ளர் ஆகியவற்றை சரிவிகிதமாக எடுத்துக்கொண்டால் தேவையான அனைத்து சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கிறது. இது பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள், மெனோபாஸ் நிலையை அடையும் போது ஆரோக்கியமாக அதை எதிர்நோக்க உங்களை தயார் படுத்திக்கொள்ள உதவும்.
மேலும் இதனுடன் மன ரீதியான விஷயங்களையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் இந்த காலகட்டத்தில் ஏற்படும் கோபம், மனநிலை மாற்றம், மன அழுத்தம் ஆகியவை உறவு முறைகளில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் துணையோடு நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய விஷயங்களை பேசுங்கள். சந்தோஷமாக இருங்கள்.
இதுபோன்ற நேரங்களில் பாலியல் உறவு பிரச்சனைகளுக்கு சில மருந்துகளை உங்கள் மருத்துவரிடம் கேட்டால் அதற்கான லூப்ரிகன்ஸ், மெனோபாசில் ஹார்மோன் தெரபி மற்றும் தேவையான மருந்துகள் கொடுப்பார்கள். இதனால் பெண் உறுப்பு உலர்வு, அதனால் ஏற்படும் வலிகள், சிறுநீர் தொற்று ஆகியவற்றை முழுமையாக சீராக்க முடியும். இந்த காலகட்டத்தில் 1000 மில்லிகிராம் கால்சியம் உடலுக்கு தேவைப்படுகிறது. இதனை நாம் சாப்பிடும் உணவில் உள்ள கீரைகள், பழங்கள், பால் ஆகியவை கொடுக்க முடியாது. எனவே நல்ல கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் பலமடையும்.
அதேபோல் புரதம் நன்றாக எடுத்துக்கொள்ளுங்கள். நன்கு ஓய்வெடுங்கள். தோழிகளுடன் நிறைய விஷயங்களை பேசுங்கள். நல்ல சிந்தனைகளை வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். மெனோபாஸ் வந்து விட்டது என்று கவலைப்படாதீர்கள். இது பெண்களுக்கு அருமையான வாழ்க்கை மாற்றம். இதை ஆரோக்கியத்துடனும், விழிப்புணர்வோடும் எதிர்கொண்டால் இந்த காலகட்டத்தை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும்.
செல்: 72999 74701
- கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.
- குருமங்கள யோகத்தை அதிகரிக்கும் வழிபாட்டை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கோட்சாரத்தில் வருகிற ஆகஸ்டு 26-ந் தேதி வரை ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும் இணைந்து சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த கிரக சேர்க்கை குருமங்கள யோகமாகும். இந்த கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களை நேற்று விரிவாக பார்த்தோம். தற்போது 12 ராசியினருக்கும் இந்த கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்: தாராள தன வரவு
ராசிக்கு 2-ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான செவ்வாயும் பாக்கிய அதிபதி, விரய அதிபதியான குருவும் சேர்ந்துள்ளனர். இதனால் மேஷ ராசிக்கு வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித் திறமை மேம்படும். தன வரவில் நிலவிய தடை தாமங்கள் விலகும். சேமிப்புகள் உயரும். வராக்கடன்கள் வசூலாகும்.
குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் விலகும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும் . பூர்வீகச் சொத்து மீதான வம்பு, வழக்குகளின் தீர்ப்புகள் சாதகமாகும். சுப விரயங்கள், சுப விசேஷங்கள் நடைபெறும். திருமணம், குழந்தை பிறப்பில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். பழநி முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
ரிஷபம்: திருமணத்தடை அகலும்
ரிஷப ராசியில் 7,12-ம் அதிபதி செவ்வாயும் 8,11ம் அதிபதி குருவும் இணைந்து குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் தனது சம சப்தம பார்வையால் குருவுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், ராகு/கேது தோஷம் விலகி திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கைத் துணை மூலம் சொத்து அதீத பொருள் வரவு உண்டாகும்.
பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். கூட்டுத் தொழிலில் நிலவிய மாற்றுக் கருத்துக்கள் மறையும்.நிலம், வாகனம் வாங்க நினைத்தால் வெற்றி கிடைக்கும், மேலும் உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் அரசு உத்தியோக முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டு. திருப்பரங்குன்றம் முருகனை வழிபடவும்.
மிதுனம்: சுப விரயங்கள் உண்டாகும்
ராசிக்கு 12-ம் மிடமான அயன, சயன, வெளிநாட்டு பயண ஸ்தானத்தில் குரு மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. 7, 10-ம் அதிபதி குருவும். 6,11-ம் அதிபதியான செவ்வா யும் இணைந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்துகிறார்கள். கடன் பெற்று வீடு, வாகன, யோகம் மற்றும் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற சுப தேவைகளை நிறைவு செய்வீர்கள். வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வெளிநாடு செல்வதற்கான அறிகுறிகளும் உள்ளன. புதிய தொழில் முதலீட்டில் கவனம் தேவை.
தடைபட்ட சொத்து விற்பனை சாதகமாகும். உடல்நலப் பிரச்சிினைகள் சீராகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சீராகும். வாழ்க்கைத் துணையால் நண்பர்க ளால், தொழில் கூட்டாளியால், வாடிக்கை யாளர்களால் சகாயமான பலன் உண்டு. பட்டமங்கலம் சென்று குரு பகவானை வழிபடவும்.
கடகம்: காதல் வெற்றி
ராசிக்கு 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் 5,10-ம் அதிபதியான செவ்வாயும், 6,9-ம் அதிபதியான குருவும் சேர்க்கை பெற்று குரு மங்கள யோகத்தை வலுப்படுத்துகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும், பாக்கிய அதிபதி குருவும் ஒருங்கே பலம் பெறுகிறார்கள். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். முன்னோர்கள் வழிபாடு, பித்ரு தர்ப்பணம் ஆகியவற்றின் மூலம் பாக்கிய பலன்கள் அதிகமாகும். கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.
தொழில், உத்தியோகத்தில் நிலவிய மன சஞ்சலம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். சிலருக்கு சுய விருப்ப விவாகம் நடக்கலாம். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பாக தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். செவ்வாய் கிழமை திருத்தணி முருகனை வழிபடவும்.
சிம்மம்: தொழில் விருத்தி
ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் 4,9ம் அதிபதி செவ்வாயும் 5, 8ம் அதிபதி குருவும் இணைந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்துகிறார்கள். வங்கிப் பணி, ஆசிரியர் தொழில், ஜோதிடம், நிதி நிர்வாகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள். அரசியல், ஆன்மீகம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகமாகும். தாய், தந்தை வழிச் சொத்தில் நிலவிய சர்ச்சைகள் விலகி முழு பங்குத் தொகையும் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும்.
பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானம் உண்டு. சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும்.ஆலங்குடி சென்று குரு பகவானை வழிபடவும்.
கன்னி: இடப்பெயர்ச்சி
கன்னி ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் 4, 7ம் அதிபதி குருவும் 3,8ம் அதிபதி செவ்வாயும் இணைகிறார்கள். இது குரு மங்கள யோகத்தை ஏற்படுத்துகிறது. இடப்பெயர்ச்சி செய்ய, முக்கிய ஒப்பந்தங்களில் ஈடுபட சிறப்பான காலம். முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்கு உண்டு. பிறவிக்கடனும், பொருள் கடனும் தீர்க்க உகந்த காலம். பாகப்பிரிவினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகி தந்தை வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும்.
பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தாங்க முடியாத வைத்தியச் செலவுகள் குறையும். கூட்டுத் தொழிலில் பிரிவினை, கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பிரிவினை போன்ற பாதிப்புகள் சீராகும். அசையும், அசையாச் சொத்துக்கள் சேரும். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்து இருக்கும். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். மருதமலை முருகனை வழிபடவும்.
துலாம்: பேரதிர்ஷ்டம்
ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் துலாம் ராசிக்கு 2, 7-ம் அதிபதியான செவ்வாயும் 3, 6-ம் அதிபதியான குருவும் இணைந்து குருமங்கள யோகம் உருவாகி உள்ளது. துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும் பேரதிர்ஷ்ட மும் ஒருங்கே சேர்ந்து செயல்படும் அமைப்பாகும். ஞாபக சக்தி கூடும். கண், காது, மூக்கு பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். கை மறதியாக வைத்த பொருட்கள், தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும். வழக்குகள் தள்ளுபடியாகும்.
புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். ஊர் மாற்றம், வேலை மாற்றம் செய்யலாம் . வீடு, மனை, சொத்து சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டு. தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் தொடர்பான சில மன உளைச்சல் இருக்கும். திருமணத் தடை அகலும். 2வது குழந்தை பிறக்கும்.சுவாமிமலை முருகனை வழிபடவும்.
விருச்சிகம்: வருமான உயர்வு
விருச்சிக ராசிக்கு 7ம்மிடமான சம சப்தம ஸ்தானத்தில் ராசி மற்றும் 6ம் அதிபதியான செவ்வாயும் 2 ,5ம் அதிபதியான குருவும் சேர்ந்து நிற்பது குருமங்கள யோகம். இதனால் செயல்களில் வெற்றி உண்டாகும். வருமானமும் வசதியும் உயரும். பொன் பொருள் சேரும். குல தெய்வ பிரார்த்த னைகள், வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த காலம். குழந்தைக்காக ஏங்கிய வர்களின் விருப்பம் நிறைவேறும். உயர் கல்வி யோகம் உண்டு.
வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை, ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.பூர்வீக சொத்து பிரச்சினை முடிவிற்கு வரும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. சுய ஜாதகரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடை பெறும். தொழில், கூட்டுத் தொழில், உத்தியோகத்தில் நிலவிய சர்ச்சைகள் சீராகும். குன்றத்தூர் முருகனை வழிபடவும்.
தனுசு: கடன் கிடைக்கும்
தனுசு ராசிக்கு 6ம்மிடமானருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் ராசி அதிபதி, சுக ஸ்தான அதிபதியான குரு 5,12ம் அதிபதியான செவ்வாயுடன் சேருகிறார். இது தனுசு ராசிக்கு குரு மங்கள யோகத்தை மேம்படுத்து கிறது. சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கூடும். விவசாயம் செழிக்கும். தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும்.
இதுவரை எதிர்பார்த்த, விண்ணப்பித்த தொழில், விவசாய, சொத்து வங்கி கடன் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை பாராட்டு உண்டு. அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் துவங்க அரசின் ஒப்புகை கிடைக்கும். சிலர் வேலை மாற்றம் செய்யலாம்.சோலைமலை முருகனை வழிபடவும்.
மகரம்: சுப யோகம்
ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 4,11-ம் அதிபதி செவ்வாயும் 3, 12-ம் அதிபதி குருவும் சேர்ந்து நிற்பது குருமங்கள யோகமாகும். ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார உயர்வை தரும். அதே போல் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் பணி புரிபவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும் போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது.
சிலர் உடன் பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடைகள் அகலும். வடபழனி முருகனை வழிபடவும்.
கும்பம்: கடன் தீரும்
ராசிக்கு 4 ம்மிடமான சுக ஸ்தானத்தில் 2 ,11ம் அதிபதி குருவும் 3,10ம் அதிபதி செவ்வாயும் சேர்ந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்து கிறார்கள். குருமங்கள யோகம் கும்ப ராசிக்கு வரமாக செயல்படும். நிச்சயம் வீடு மனை யோகம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்து இருக்கும். பாதை இல்லாத சொத்து, பட்டா இல்லாத சொத்து, முறையான ஆவணங்கள் இல்லாத சொத்து தொடர்பான சங்கடங்கள் விலகும்.
தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும் . வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். சட்ட சிக்கல்கள் தீரும். பேச்சுத் திறமை, லௌகீக நாட்டம் அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்கம் குறையும். காது, மூக்குத் தொண்டைக்கான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். குருவித்துறை குருபகவானை வழிபடவும்.
மீனம்: நல்ல மாற்றம்
ராசிக்கு 3ம்மிடமான உப ஜெய ஸ்தானம், சகாய ஸ்தானத்தில் ராசி அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி குருவும் தன அதிபதி, பாக்கிய அதிபதி செவ்வாயும் இணைத்து குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. வீடு மாற்றம், வேலை மாற்றம், நாடு மாற்றம் என வாழ்க்கை வளம் பெறத் தேவையான மாற்றங்கள் உண்டாகும். இலவச ஆபர் கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாக கூறுபவர்களிடம் பணம் கொடுப்பது, ஆன்லைன் வணிகம், ஷேர் மார்க்கட், சொத்து வாங்குதல், விற்றல், ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்றவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
குடும்ப உறவுகளுடன் சாதகமான போக்கு தென்படும்.உங்களுக்கு மன அமைதியைத் தரும் நண்பர்களின் சந்திப்பால் மன நிம்மதி கூடும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

மாலை மலர் வாசகர்கள் குருமங்கள யோகத்தை அதிகரிக்கும் வழிபாட்டை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
- பார்வதி தேவி சிவபெருமானிடம் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்கின்றார்.
- தியான வழிமுறைகள் அனைவருக்கும் பொதுவானதுதான்.
அநேகமாக எல்லோருடைய மனதிலும் ஒரு கேள்வி இருக்கும். இந்த உலகம் எப்படி இயங்குகின்றது. ஆரம்ப காலத்தில் இருந்து இதற்கு என பொறுப்பானவர்கள் யாரேனும் இருக்கின்றார்களா? இறப்புக்குப் பிறகு மனிதனுக்கு என்ன நேருகின்றது? இதற்கெல்லாம் எங்கு பதில் கிடைக்கும்? என மனித மனதின் ஓர் மூலையில் ஓடிக் கொண்டேதான் இருக்கும்.
இது இப்படி ஓடிக் கொண்டே இருக்க, ஆன்மீக ரகசியங்கள் என்றாலே சிவபெருமான் வழிபாட்டில் அதிக பேர் உருகி உருகி தேடியுள்ளனர். 'சிதம்பர ரகசியம்' என்ன என்பதை அறிய சிதம்பரம் நடராஜர் ஆலயம் சென்றால் ஒரு திரையினை விலக்கிக் காட்டுவர். தங்கத்தால் ஆன வில்வ மாலை தொங்கும். அவ்வளவே. தீபாராதனை காட்ட நாமும் கன்னத்தில் தட்டி, கைகளால் கற்பூரம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு வந்து விடுவோம். திரையைத் தாண்டிய 'வெட்டவெளி' என்பதே இங்கு ரகசியம். இது ஆகாய தத்துவம் கொண்ட கோவில்.
இதனையும் தாண்டி சிவனைத் தேடி அலைபவர்கள், ஆன்மீக முன்னேற்றம் காண விரும்புபவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக அமைந்துள்ள நூல்தான் "விஞ்ஞான பைரவ தந்தரா" ஆகும.
மேற்கூறப்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த நூல் மூலம் விடை காண முடியும் என்கின்றனர்.
விஞ்ஞான பைரவ தந்தரா நூல் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்கின்றனர்.
பார்வதி தேவி சிவபெருமானிடம் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்கின்றார். "ஈசனே நீங்கள் தான் சர்வம் என்கின்றனர், உண்மையில் நீங்கள் யார்? இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் என்ன? இதன் மைய இயக்கம் என்ன? என பல கேள்விகளை கேட்கின்றார்.
இதற்கு நேரடியான பதிலாக இல்லாமல் 112 தியான முறைகளின் மூலம் இதனை அறியும் முறையை கூறுகின்றார் சிவபெருமான். இதுவே "விஞ்ஞான பைரவ ரகசியம்" எனப்படுகின்றது. தன்னை அறிதல் பற்றிய விழிப்புணர்வு தூண்டிய நிலை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தியான வழிமுறைகள் அனைவருக்கும் பொதுவானதுதான். இதில் ஜாதி, மதம், நாடு, மொழி என்று எந்த பேதமும் இல்லை. 'தந்திரம்' என்பதை வழிமுறைகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சிவபெருமானால் கூறப்பட்ட வழிமுறைகள் என்றாலும் 9-10-ம் நூற்றாண்டில் குப்தா என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது என்கின்றனர்.
விஞ்ஞான பைரவ தந்திரம் என்பது காஷ்மீர் சைவத்தின் பிரிவான திரிக்கா நூல் ஆகும். ஜெயின், புத்த, தியான முறையில் இந்த முறையினை இன்றும் அதிகமாக பழக்கத்தில் கொண்டுள்ளனர். ஒஹோ அவர்களாலேயே இது அதிக பிரபலம் ஆனது. இன்று சில ஆன்மீக இடங்களில் இதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இதன் முதல் பயிற்சியாக கூறப்படுவதே மூச்சு பயிற்சிதான். சாதாரண மாய் நாம் உள்ளிழுக்கும் மூச்சிற்கும், வெளி விடும் மூச்சிற்கும் இடையே ஒரு மைக்ரோ செகண்ட் இடைவெளி உள்ளது. அதே போல் வெளிவிடும் மூச்சிற்கும், உள்ளிழுக்கும் மூச்சிற்கும் இடையே ஒரு மைக்ரோ செகண்ட் இடைவெளி உள்ளது. இதனை எவருமே கவனிப்பது இல்லை. இது மிகுந்த சக்தி வாய்ந்தது. இதனை அறிவதுதான் முதல் பயிற்சி.
இதனை தானே சுய முயற்சியாய் செய்வது தவறு. ஆபத்தினை விளைவிக்கும். தகுந்த பயிற்சியாளர் தேவை. குரு இல்லாமல் சுயமாய் முயற்சித்த பலரும் சித்தம் கலங்கி பாதிப்பு பெற்றனர். எனவே குரு மூலமே மிக சாதாரண மூச்சு பயிற்சியினையும் தொடங்க வேண்டும்.
ஆகவேதான் இந்த பயிற்சி முறைகளை எழுதுவதனை தவிர்க்கின்றோம். இதில் 112 வழி முறைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. என்றாலும் இதில் தேர்ந்த குருவே அவரவர் நிலைக்கேற்ப பயிற்று விப்பார். பொதுவில் யோகா முறையில் மூச்சு பயிற்சிகளை முதலில் பயில்வது நல்லது.
'ரவா-சப்தம்', பைரவா- சப்தத்தை தாண்டியது-வெற்றிடம்.
இவையெல்லாம் கூட சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல முறைகள், பிரிவுகள் உள்ளன என்பதனை அறிந்து கொள்வதும் ஒரு கொடுப்பினைதான்.
இதனை மேலும் அறிய தகுந்த குரு மார்களிடம் சென்று பயிற்சி பெற வேண்டும்
சில உண்மைகளை நாம் மனதில்
நன்கு பதிய வைக்க வேண்டும்
கமலி ஸ்ரீபால்
* நம்பிக்கை துரோகம் என்பது ஒருவரின் எதிரியிடம் இருந்து வராது. ஒருவர் மிகவும் நம்புபவர் இடம் இருந்தே ஏற்படும். எனவே கண்மூடித்தன மான நம்பிக்கையை உயர் சக்தி தவிர வேறு எங்கும் வைக்க வேண்டாம்.
* நாம் மிகுந்த அன்பு செலுத்துபவர்களும் ஒருநாள் இந்த உலகை விட்டு செல்லத்தான் போகின்றனர். அது முதலில் நாமா? அவர்களா? என்றுதான் தெரிவதில்லை.
* வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அவர்கள் மீது உரிய கவனம். அக்கறை செலுத்த வேண்டும். காலி சட்டியினை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியாது.
* பிறருக்குத் தெரியாது 'எத்தனை கடுமையான வாழ்வினை நீங்கள் வாழ்ந்து வருகின்றீர்கள்' என்று.
* பிறர் நம் மீது மதிப்பு கொடுப்பது இருக்கட்டும். நாம் நம் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
* இந்த நொடியின் நிகழ்வோடு நான் ஒன்றி இருக்கின்றேன்.
* நான் போற்றத் தக்கவனாக என்னை ஒழுக்கமாய் உருவாக்கி உள்ளேன்.
* நான் நன்றியுணர்வு கொண்டவன்.
* நான் அமைதியினையே தேர்ந்தெடுக்கின்றேன். இவை போதும் வாழ்வை இனிமையாக்க.
சிவன் கோவிலை தரிசிக்கும் பலன்கள்!
* திருக்கருக்குடி-குடும்ப கவலை நீங்க
* திருக்கருவேலி-குழந்தை பாக்கியம் பெற, வறுமை நீங்க
* திருவழுந்தூர்- முன் ஜென்ம பாவம் விலக
* திருச்சத்திமுற்றம்- மண வாழ்க்கை அமைய
* திருப்பராய்துறை- கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெற
* திருநெடுங்களம- தீாா துயர் தீர
* திருவெறும்பூர்- அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெற
* திருப்பைஞ்சீலி- எம பயம் விலக
* திருவையாறு- அக்னி தோஷம் விலக
* திருவைகாவூர்-வில்வ அர்ச்சனை செய்து பாவங்கள் விலக
* திருக்கஞ்சனூர்- திரு மண தோஷம் விலக
* திருமங்கலங்குடி- குழந்தை பாக்கியம் பெற
* திருமணஞ்சேரி-திருமண தோஷம் விலக
* திருமுல்லைவாயல்- சந்திர தோஷம் விலக
* திருவெண்காடு-ஊழ்வினை தோஷம் விலக
* திருநெல்வேலி- மகான்களுக்கு செய்த குற்றம் விலக
* திருக்குற்றாலம்- முக்தி வேண்ட
* திருவாலவாய்- நட்சத்திர தோஷம் விலக
* திருப்பரங்குன் றம்-வாழத் தெரியாது தவிப்பவர்கள் வழிபட
* திருவா டானை-தீராத பாவம் நீங்க
* திருமுருகநாத சுவாமி கோவில்-மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
* திருப்பாதிரிபுலியூர்- தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
* திருவக்கரை- செய்வினை தோஷம் விலக
* திரு வேற்காடு-வாணிப பாவம் விலக
* திருமயிலாப்பூர்-மூன்று தலைமுறை தோஷம் விலக
* திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)- காம தோஷம் விலக
* திருவாலங்காடு- வீண் வம்பு தோஷம் விலக வழிபடலாம்.
- சேரன் படம் எடுக்கும்போது காட்சியோடு ஒன்றி விடுவார்.
- மறுநாள் வழக்கம் போல் நான் சரியான நேரத்துக்கு சென்று விட்டேன்.
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...
'டபாய்க்குறாடா கண்ணம்மா டபாய்க்கு றாடா...' - என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் வெற்றி கொடி கட்டியது. 2000-வது ஆண்டில் 'வெற்றி கொடி கட்டு' படமும் வெற்றி கொடி கட்டியது. டைரக்டர் சேரன். அவரது படத்தை பொறுத்த வரை படங்கள் சாதாரணமாக தெரிந்தாலும் கதாபாத்திரங்கள் அழுத்தமாக இருக்கும். அதே போல்தான் சொல்ல வரும் கருத்துகளும் ஆழமாக இருக்கும்.
அந்த படத்தில் வள்ளி என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தேன். என்னோடு மாளவிகாவும் உண்டு. முரளி, பார்த்திபன் ஆகிய இரு ஹீரோக்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான்.
சேரன் படம் எடுக்கும்போது காட்சியோடு ஒன்றி விடுவார். தனக்கு பிடித்த காட்சி. அது எவ்வளவு சிரமமாக இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்காமல் அதை நிறைவேற்றுவதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆனால் என்ன...? கொஞ்சம் முன்னே பின்னே என்று நேரம் ஆகலாம். அதனாலேயே சேரன் என்னிடம் சிக்கி கொண்ட சம்பவமும் உண்டு.
படப்பிடிப்புக்கு சரியாக 7 மணிக்கு வந்துவிட வேண்டும் என்பார். அதற்காகவே நான் காலையில் நாலு மணிக்கே எழுந்து குளித்து ரெடியாகி 7 மணிக்கு முன்னதாகவே செட்டுக்கு சென்று விடுவேன். மணி 7 தாண்டியிருக்கும். ஆனால் டைரக்டர் வந்திருக்க மாட்டார். நாங்கள் காத்திருந்து காத்திருந்து வெறுத்து போவோம்.

ஒரு வழியாக எட்டு மணியளவில் வந்து சேர்ந்தார். அவரை பார்த்ததும் எங்களுக்கு கோபம் வரும். அப்படித்தான் முதல் நாள் ஷூட்டிங்குக்கு 7 மணிக்கே நாங்கள் ரெடியாகி சென்று விட்டோம். ஆனால் சேரன் வரவில்லை. சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார். அவரை பார்த்ததும் 'என்ன சார் இப்படி? இனி நானும் காலையில் 6 மணிக்குதான் எழும்புவேன். அப்புறம் குளித்து ரெடியாகி வருகிறேன்' என்றேன்.
நான் அப்படி சொன்னதும், 'சாரிம்மா... இன்னக்கி ஒரு நாள்தான் இப்படி லேட் ஆகிவிட்டது. நாளை சரியாக வந்து விடுவேன்' என்றார். அதற்கு நானும் சம்மதித்தேன். நாளை ஒரு நாள்தான் பார்ப்பேன்... அதன்பிறகு நானும் லேட்டா கத்தான் வருவேன் என்று சொன்னேன். அவரும் 'டேய்.. தம்பிங்களா நாளைக்கு சொதப்பிடாதீங்க' என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டார்.

மறுநாள் வழக்கம் போல் நான் சரியான நேரத்துக்கு சென்று விட்டேன். அங்கு படப்பிடிப்பு வாகனங்களும் வந்திருந்தன. ஆனால் டிராலி, கேமரா எதுவும் தயராக இல்லை. அதை பார்த்ததும் பள்ளி மாணவி போல் 'கடவுளே நான்தான் ஜெயிக்க வேண்டும். எப்படியாவது 7 மணிக்கு தயாராகிவிடக்கூடாது' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். நேரம் ஆகிறது என்பதை உணர்ந்த சேரன் அவசர அவசரமாக கேமராவில் என்னை மட்டும் குளோஸ் அப்பில் ஒரு போட்டோ எடுத்தார். அது காட்சிக்கு உகந்தது போல் தெரியவில்லை. உடனே நான் இது போலிசார் இதை நான் நம்ப மாட்டேன் என்றதும், 'சரிம்மா... சரிம்மா... இப்ப என்ன...? நீ தான் ஜெயித்தாய்' போதுமா? என்றார்.
அதில்லை சார். அதிகாலையிலேயே எழுந்து ரெடியாகி வரவேண்டி இருக்கிறது. நீங்கள் லேட்டாக வருவதாக இருந்தால் நானும் ஒரு அரை மணி நேரம் லேட்டாக வருவேன் என்றேன். சரிம்மா என்றார். அதன் பிறகு தினமும் 7.30 மணிக்குத்தான் செல்வேன். இந்த படத்தில் தான் சினிமாத்தனம் என்ற செயற்கையை இயற்கை வென்றது...!
அது எப்படி என்பதை அடுத்த வாரம் சொல்கி றேன். (தொடரும்...)
- ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள்.
- குரு மங்கள யோகம் பலரை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் குரு மங்கள யோகம்.
குரு மற்றும் செவ்வாய் சம்பந்தத்தால் ஏற்படும் குரு மங்கள யோகம் பலரை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது. இந்த யோகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் நிறைந்த சொத்து சுகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இவர்கள் பிறவி கோடீஸ்வரராக இருப்பார்கள். சிலர் பிறவியில் ஏழையாக பிறந்தாலும் இந்த அமைப்பு இருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள். தற்போது கோட்சாரத்தில் ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும்சேர்ந்து உள்ளனர்.
இந்த குருவும், செவ்வாயும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஒரு ராசியில் இணைவதால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் செவ்வாய் இணைவதால் பெரும் பலன்கள் கிடைக்கப் போகின்றன. குரு மங்கள யோகம் பற்றிய சில தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
குருபகவான்
சுப கிரகங்களில் தலைமை கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னத மான உணர்வுகளை உண்டாக்கக் கூடியவர்.
நவகிரகங்களில், எதிர்மறை பலன் எதுவும் தன்னகத்தே கொண்டிராத முழு சுபகிரகம் குரு. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இவரே தனம், புத்திரம், பொருளாதார நிலை, கொடுக்கல் வாங்கல், பொதுக் காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வ புண்ணியம் போன்றவற்றிற்கு காரகன்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை, சொத்து சுகம் மிகச் சிறப்பாக இருக்கும்.இவை தவிர்த்து பணம் சார்ந்த வங்கி, நிதி நிறுவனங்கள், சிட் பண்டுகள், தங்க நகை கடை , நகை செய்யும் வேலை , மஞ்சள் வியாபாரம் போன்ற தொழிலில், உத்தியோகத்தில் இருப்பார்கள்.
கால புருஷ தத்துவப் படி குரு 9, 12 -க்குடையவர். தனுசு ராசியில் மூலத்திரிகோணம் ஆட்சி. மீனத்தில் ஆட்சி. தனுசு ஒரு நெருப்பு ராசி, மீனம் நீர் ராசி. இரண்டுமே உபய ராசி. குரு நட்சத்திரத்திலும், குருவின் பார்வையிலும் அதிக கிரகம் இருந்தால் அது யோக ஜாதகம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீய பலன்களை குறைத்து, நல்ல பலன்களை செய்யும்.
பாக்கிய ஸ்தானம் மற்றும் அயன சயன போக ஸ்தானத்திற்கு பொறுப்பு வகிக்கும் குரு பகவான் நல்ல நிலையில் இருக்கும் போது தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குல தெய்வ அருள், புண்ணிய மற்றும் தீர்த்த யாத்திரை, அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமை பதவியில் அமர வைத்து பல மக்களை வழி நடத்தும் பொறுப்பு தருவார்.
சமூகத்தில் பெரிய மனித தோரணை ஏற்படுத்த கூடியவர். திருமணம், இல்லற இன்பம், வெளிநாட்டு வாழ்க்கை மோட்சம், முக்தி நிலை பெறுதல் போன்றவற்றை 12ம்மிடத்தின் மூலம் தருவார். குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி. குரு எந்த ஒரு ஜாதகத்திலும் கெட்டு போக விடாது.
செவ்வாய்
செவ்வாய் பூமிக் காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும். இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12ம்மிடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஒரு கிரகத்தினால் ஏற்படும் நன்மை, தீமைகளை உயிர், பொருள், நோய் காரகத்துவம் என மூன்றாக வகைப்படுத்தலாம்.
அதன்படி செவ்வாய் பலம் பெற்றால் உயிர் காரகத்துவமான உடன் பிறந்தவர்களின் அன்பு, அனுசரனை, ஆதாயம் உண்டு. பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார்.
பொருள் காரகத்துவமான அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்த ஆண்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதே போல் திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே.
அதனால் செவ்வாய் தோஷம் பற்றி 1000 பட்டி மன்றம் நடத்தினாலும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும். அதே போல் ஒரு கிரகத்தின் தன்மையை ஆதிபத்திய ரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும், உடன் இணைந்த, சேர்ந்த, பார்த்த கிரகத்திற்கு ஏற்ப அணுகும் போதும் தீர்க்கமான முடிவு கிடைக்கும்.
குருமங்கள யோகம்
இத்தகைய குரு மற்றும் செவ்வாய்க்கு ஒரு ஜாதகத்தில் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அது குரு மங்களயோகமாக செயல்படும். புனிதன் குருவிற்கும் மங்களன் செவ்வாய்க்கும் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அது குருமங்களமாக செயல்படும்.
ராசிக் கட்டத்தின் ஒரே இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தாலும் செவ்வாயின் 4,7,8ம் பார்வையில் குரு இருந்தாலும் குருவின் 5,7,9ம் பார்வையில் செவ்வாய் இருந்தாலும் குருமங்கள யோகமாகும். நிச்சயம் வீடு, மனை, யோகம் நிறைவேறும்.
நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். சகல சவுபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த பண்ணை யாளர்களாக இருப்பார்கள்.
தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும், தந்தையும பாக்கியவான்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.
தாய் வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு.இவர்கள் பிறவியில் ஏழையாக பிறந்தாலும் இந்த அமைப்பு இருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள்.
அத்துடன் எந்த கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பலன் சொல்ல முடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.
உதாரணமாக குரு என்றால் குழந்தை, பணம், தங்கம். கோடிக்கான பணம், தங்கத்தை குறிக்கும் கிரகம் ஒரு ஜாதகத்தில் பலமாக இருந்தால் அளவிற்கு அதிகமாக பணம் வைத்து இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் மூலம் மன வேதனையை தருவார்.
நல்ல பண்பான பிள்ளைகளைத் தரும் குருபகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்கு வதில்லை. ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த வித மான யோகங்களாக இருந்தாலும் 4 விதமாகவே பலன் வழங்கும்.

1. பொருள் காரகத்துவத்தை அபரிமிதமாக வழங்குதல். பொருள் காரகத்துவம் என்றால் தேவைக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வழங்குதல்.
2. போதிய பண வசதி இல்லாவிட்டாலும் உயிர் காரகத்துவங்களால் அதீத அன்பை பெறுவது. அதாவது உற்றார், உறவினர்கள், பெற்றோர்கள், மனைவி, மக்களின் அன்பு, மரியாதையை பெற்று மகிழ்ச்சியாக வாழ்வது.
3. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் இரண்டும் பரிபூரணமாக கிடைத்து நிம்மதியாக வாழ்வது. தேவைக்கு அதிகமான பணம், உபரியான சொத்துக்கள், சிறப்பான தொழில் அல்லது கவுரமான உத்தியோகம், நல்ல பெற்றோர்கள், அன்பான வாழ்க்கைத் துணை, அனுசரணையான பிள்ளைகள் என சகல ஐஸ்வர்யத்து டன் வாழும் வாழ்க்கை.
4. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் இரண்டும் இன்றி வாழ வேண்டிய நிலை.அடிப்படை தேவைக்கு கூட திணறும் நிலை, உறவினர்களால் மன உளைச்சல். பூமியில் ஏன் பிறந்தோம் என்று நிர்பந்தத்திற்காக வாழ்தல்.
தற்போது கோட்சாரத்தில் குருவும் செவ்வாயும் ரிஷப ராசியில் ஓரே ராசியில் சேர்ந்து உள்ளார்கள். இந்த கிரக கூட்டணியால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்கலாம்.
குருமங்கள யோகத்தால் உண்டாகும் நன்மைகள்.
நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சொத்து சேர்க்கை, மருத்துவராகும் யோகம், விவசாயத்தின் மூலம் வருமானம், நல்ல மன ஆரோக்கியம், நல்ல நிலையில் இருக்கும் தாய், தந்தை , சீருடை பணி, காவல் துறை, ராணுவத்தில் வேலை, நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், தீயணைப்புத் துறை, சமையல் வேலை, தொழில் போன்றவற்றை செவ்வாய் மற்றும் குருவின் வலிமையைப் பொருத்து இந்த கிரகங்கள் கொடுக்கும் எனலாம்.
செல்வாக்கு, சொல் வாக்கு, புகழ், அந்தஸ்து, கவுரவம், மரியாதை தானாக உயர்வது, எதிரிகள் இல்லாத சூழல், எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல், துணிந்து செய்யும் காரிய சித்தி வெற்றி, சகோதர வழி ஆதரவு, சகோதர மேன்மை, எதையும் சாதிக்கும் ஆண் வாரிசுகள், வாரிசுகளால் உண்டாகும் பெருமை, அதிகார அந்தஸ்து நிறைந்த உத்தியோகம், தொழில். நாடாளும் யோகம்.
சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். ரியல் எஸ்டேட், புரமோட்டர்ஸ், போர்வெல்ஸ், காவல் உயர் அதிகாரி, நிர்வாக அதிகாரிகளை உருவாக்கு வதும் இந்த குரு மங்கள யோகம் தான்.
இந்த கிரகச் சேர்க்கை அதாவது குருவும் செவ்வாயும் மேஷம், சிம்மத்தில் நின்றால் ஜாதகரின் சொத்து மதிப்பை கணக்கிட முடியாத விதத்தில் அதீத சொத்து சேர்க்கை இருந்து கொண்டே இருக்கும்.
இந்த கிரக சேர்க்கை பார்வையில் குருவும் செவ்வாயும் நட்பு ஆட்சி உச்சம், நீசபங்க ராஜயோகம், திக் பலம் ஆக இருந்து தசா நடக்கும் போது லக்னாதிபதி வலுவுக்கு ஏற்ப பலனை வாரி வழங்குவார்கள். மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம், ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முதன்மையான யோக பலனை தரும்.
குருமங்கள யோகத்தால் ஏற்படும் அசுப பலன்கள். இரண்டு கிரகங்களும் எதிர்மறை பகை வீடுகளில் ஒன்றாக வரும்போது அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை நோக்கித் திரும்புகிறது.
குரு செவ்வாய் தரும் குரு மங்கள யோகத்தில் ராகு கேது இணைவது , சனி இணைவு பார்வை பெறுவது, அல்லது சூரியனால் அஸ்தங்க தோச பெறும் போது பலன் குறைவுபடும் அல்லது யோகம் தராது. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்ப ராசி, லக்னத்திற்கு சுப பலன் குறைவு படும்.
லக்னாதிபதி, ராசி அதிபதி ஓரளவு நல்ல கேந்திர கோணத்தில் பாதிக்காமல் இருப்பதும் யோகத்தை அனுபவிக்க வழி செய்யும். கோட்சாரமும் குரு மங்கள யோகமும் தற்போது கோட்சாரத்தில் ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும் சேரும் இந்த கிரகச் சேர்க்கை ஆகஸ்டு 26 வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின்படி, அதிர்ஷ்டம், செழிப்பு, கல்வி, அறிவு போன்றவற்றுக்கு காரணமான கிரகமான குருபகவான் தைரியம், வீரம், சொத்து, சுகத்திற்கு காரக கிரகமான செவ்வாயுடன் சேருவதால் ஒரு சில ராசிக்கு, வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 12 ராசிக்கும் ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள குரு மங்கள யோகத்தால் ஏற்படப் போகும் மாற்றங்களை நாளை காணலாம்.
தொடரும்...
- தூய அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டியவர் காமராஜர்.
- நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.
பெருந்தலைவரும், காமராஜரும் ஒருவர்தானே...?
தலைப்பு குழப்புகிறதே என குழம்ப வேண்டாம்.

நாட்டு நலனே முக்கியம் என தூய அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டி நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர், பெருந்தலைவர் காமராஜர். இவருடைய தங்கை நாகம்மாள். இவருக்கு ஜவகர், மோகன் என 2 மகன்கள்., மங்கலம், கமலம் என 2 மகள்கள். இவர்களில் ஜவகரின் மகன் காமராஜ்.
அதாவது, பெருந்தலைவரின் தங்கை வழி பேரன். வயது 60. இந்த காமராஜை விருதுநகரில் சந்தித்தோம். பெருந்தலைவர் குறித்து பல சுவாரசிய தகவல்களை கூறினார். அதை இங்கே கேட்போம்.

"எங்கள் தாத்தா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். இதனால் எங்கள் பாட்டியையும், அவரது பிள்ளைகளையும் (அதாவது காமராஜரின் தங்கை மற்றும் குழந்தைகள்) பாதுகாத்து கரை சேர்ப்பது உன் பொறுப்பு என காமராஜரிடம் அவரது தாயார் சிவகாமி தெரிவித்துள்ளார்.
அதன்படி அவரும் கடைசி வரை எங்கள் குடும்பத்தினரை வளர்த்து ஆளாக்கி, தனது கடமையை செய்தார். அவரை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்தபோதே காமராஜ் என எனக்கு பெயர் வைத்தனர்.
குடும்பத்தினர் அனைவர் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டு இருந்தார் காமராஜர்.
நான் சிறுவனாக இருந்தபோது என்னிடம் அடிக்கடி அவர் கூறிய அறிவுரைகள் இப்போதும் நல்ல ஞாபகத்தில் உள்ளன. நல்ல பழக்கங்களை பழக வேண்டும். கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என எப்போதும் கூறுவார். அவர் இருக்கும் வரை விருதுநகரில் உள்ள எங்கள் வீட்டில் (அந்த வீடு காமராஜர் நினைவு இல்லமாக பின்னாளில் மாற்றப்பட்டது) கூட்டுக்குடும்பமாகவே இருந்தோம்.
எனக்கு 10 வயதாக இருந்தபோது அவர் காலமானார். தமிழக முதலமைச்சராக இருந்தபோது, எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சாதாரண மனிதர் போலவே வந்து பங்கேற்றுள்ளார்.

எங்கள் குடும்பத்தினர் ஒருவர், அவரிடம் தனக்கு எம்.எல்.ஏ சீட் கேட்டுள்ளார். அதற்கு பெருந்தலைவர், உங்களுக்கு அரசியல் தேவையில்லை. தொழிலையும், குடும்பத்தையும் நல்லபடியாக கவனியுங்கள் என்று மறுத்துவிட்டார்.
சிறுவனாக இருந்தபோது பள்ளி விடுமுறை காலங்களில் சென்னைக்கு சென்று இருக்கிறேன். அங்கு அவர் நல்லபடியாக பார்த்துக்கொண்டார்.
விருதுநகர் வீட்டில் அவர் எந்த வசதியையும் செய்து கொடுக்கவில்லை. நான் பிறந்தபோதுதான் அந்த வீட்டில் மின்விசிறியே பொருத்தியுள்ளனர். முதலமைச்சராக இருந்தபோதும், மற்ற நேரங்களிலும் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பியது இல்லை.
அந்த நிகழ்ச்சிக்கு ஆகும் செலவுத்தொகையை கொண்டு ஏழைகள் பயன்பெற செய்யலாம் என்று கூறி இருக்கிறார். இதனால் நாங்கள் அவரது பிறந்தநாளை எளிமையாக வீட்டிலேயே இனிப்புகளை பரிமாறி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
அதுபோல அவரது தங்கை வாரிசுகள் என்பதால் பல்வேறு நபர்கள், அரசியலில் ஈடுபட அழைத்தார்கள். ஆனால் காமராஜரின் நற்பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தவிர்த்து விடுவோம்.
நாங்களும் அவரது பெயரை சொல்லி எந்த பலனையும் யாரிடமும் எதிர்பார்ப்பதில்லை. சிபாரிசு கூடாது என்பதில் அவர் கறாராக இருந்தார். அதை நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
நம்மிடம் இருப்பதை கொண்டு வாழ பழக வேண்டும். அடுத்தவர்களை பார்த்து வாழ நினைக்கக்கூடாது என்பது அவரது வேதவாக்கு. அதை சிறு வயதில் கேட்டதில் இருந்து இப்போது வரை நான் கடைபிடித்து வருகிறேன். பெருந்தலைவர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் நல்லபடியாக வாழ்ந்து வருகிறோம்.
பெரும்பாலும் யாரிடமும் காமராஜரின் நெருங்கிய உறவினர் என்பதை வெளிப்படுத்தமாட்டோம். தவிர்க்க முடியாத இடங்களில் தெரியவந்தால் அவரைப்பற்றிய பெருமையான விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
சமீபத்தில் சாத்தூரில் எங்கள் உறவினர் ஒருவர் வீடு ஒன்றை வாங்கினார். அந்த வீட்டை விற்றவர், பெருந்தலைவர் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். வீட்டை வாங்க வந்திருப்பது காமராஜரின் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததும், ஒரு குறிப்பிட்ட தொகையை விட்டுக்கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு அவர், காமராஜர் பவனம் என்றே பெயர் வைத்திருந்தார். அந்த பெயரை மட்டும் நீ்ங்கள் தொடர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியதைக்கேட்டு நாங்கள் கண் கலங்கிவிட்டோம்.
அந்த வீட்டுக்கு ஏன் காமராஜர் பவனம் என பெயர் வைத்தார் என்பதை அவர் கூறியதை கேட்டு எங்களுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.
அதாவது, சுதந்திர போராட்ட காலங்களில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தலைமறைவாக இருப்பதற்காக காமராஜர், அந்த வீட்டுக்கு சென்றுதான் அவ்வப்போது தங்கி இருந்துள்ளார். அதனால்தான் அந்த வீட்டினர் காமராஜர் பவனம் என பெயரிட்டது அப்போதுதான் எங்களுக்கே தெரியவந்தது.
எக்காரணம் கொண்டும் காமராஜரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எங்கள் பாட்டி எங்களிடம் கண்டித்து கூறியுள்ளார்.
உயர் பதவிகளில் இருந்தபோதும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுக்கோ எந்தவித ஆதாயத்தையும் பெறக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து உள்ளார். இதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது உறவினர்கள் யாராவது ஆதாயம் அடைய முயன்றதாக தெரிந்தால் கடுமையாக கண்டிப்பார்.
எனது பாட்டிக்கோ, என் தாயாருக்கோ உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறுதான் அறிவுறுத்தி இருக்கிறார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கவே மாட்டார்.
இதுபோல பல்வேறு நபர்கள் காமராஜரை பற்றி எண்ணற்ற தகவல்களை கூறி இருக்கிறார்கள். மொரார்ஜி தேசாய், ராமகிருஷ்ண ஹெக்டே, கருணாநிதி என ஏராளமான அரசியல் தலைவர்களும் இப்போது நாங்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு பெருந்தலைவரின் தங்கை வழி பேரனான காமராஜ் கூறினார்.
நாம் அனைவருமே காமராஜரின் எளிமையையும், பொதுவாழ்வில் நேர்மையையும், நிர்வாக திறனையும் பின்பற்றுவதே அவருக்கு ஆற்றும் தொண்டு ஆகும்.
- முகம் தெரியாதவர்க்கும் முகமலர்ச்சியோடு தருவதே உண்மையான அறம் ஆகும்.
- இதயமுள்ள மனிதன் எவனும் சக உயிர்களின் வருத்தம் கண்டு அவர்களுக்கு உதவ எப்போதும் காத்திருப்பான்.
அவ்வையின் ஆத்திசூடி வழி அன்றாடம் வாழ்வியல் நடத்த விரும்பும் அன்பு வாசகர்களே! வணக்கம்.
அறம் என்கிற பொளுக்கு இணையாக, சத்தியம், நேர்மை, ஒழுக்கம், தர்மம், வாய்மை, தானம், ஈகை, கொடை எனப் பலசொற்களை நேர்ப்படுத்தி நாம் விளக்கங்களை அளிக்கலாம். ஆயினும் செய்தல், வழங்குதல் என்னும் செயல்முறையில் வைத்துப் பார்க்கும்போது அறம் என்பதை தருமம், தானம், ஈகை, கொடை ஆகிய நிலைகளில் நெருக்கப்படுத்திப் பொருள் கொள்ளலாம்.
'அறம் செய்க!' என்னும் கட்டளை வாக்கியத்தை ஔவையார், 'விருப்பத்தோடு அறம் செய்ய முனைக!' எனும் அறிவுரை வாக்கியமாக மாற்றி " அறம் செய்ய விரும்பு!" என்றிருக்கிறார் தமது ஆத்திசூடியில். அருள் சேர்க்கும் தவமும், பொருள் வழங்கும் தானமுமே உலகின் தலைமையான மாண்புகள் என்று சுட்டிக்காட்டும் வள்ளுவர், எதுவுமில்லாதவறியவர்களுக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் ஒன்றை வழங்குவதே ஈகை, தானம் என்கிறார்.
'தருவது!' என்பதே மனமுவந்து, மகிழ்ச்சியோடு வழங்குவதாகும். தருபவரும் பெறுபவரும் மகிழ்வில் இணையும் அந்த ஈகைப் பொழுதில் இன்பம் இரட்டிப்பாகி விடுமாம். எப்படியென்றால் பொருள்களை, உதவியைத் தருபவர் விருப்பத்தோடு அந்தச் செயலைச் செய்வதால், அவரும் ஆனந்தத்தோடு இருப்பார்; அவற்றைப் பெறவருபவர்களும் தம்மிடம் இல்லாத பொருள் தமக்குக் கிடைக்கப் போகிறது எனும்போது அவர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் களிப்பர். 'ஈத்துவக்கும் இன்பம்' என்று அறச்செயலைப் பெருமைப்படுத்துகிறார் வள்ளுவர்.
அன்னதானம், கல்விதானம், சொர்ணதானம், ஆடைதானம் என தானங்கள் பலவகையாகத் திகழ்ந்தாலும், அடிப்படையாக வலியுறுத்தப் படுபவை, உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்று மட்டுமே. பூமியில் பிறந்து வாழும் மனிதர் ஒவ்வொருவரும் பசியில்லாத உணவையும், உடம்பை மறைக்கும் ஆடையையும், பாதுகாப்புடன் தங்கி வாழ வீட்டையும் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். அதனால்தான் பசித்திருக்கும் மனிதனுக்கு உணவு கொடுப்பவர்களை, உயிரையே தந்தவர்களாக உயர்ப்பித்துச் சொல்கிறது நமது பழந்தமிழ் இலக்கியம் (உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!).
அறம் என்பதை ஒழுகலாறு என்கிற நிலையிலே பார்க்கும்போது, பொன், பொருள், செல்வம் என வைத்திருப்பவர்கள், எதுவுமற்ற ஏழைகளாம் ஏதிலிகளுக்கு, அவர்களுக்குத் தேவையானவற்றைத் தேவையானபொழுது பகிர்ந்து கொடுக்க வேண்டும். இதுவே வாழ்வியல் அறமாகும். வேண்டியவர்கள், உறவினர்கள் போன்றோருக்கு பொருள்கள் வழங்குவதும், உதவிகள் செய்வதும் தருமத்தின்கீழ் வராது; அவை கடமையின்கீழ் நின்று போகும். முகம் தெரியாதவர்க்கும் முகமலர்ச்சியோடு தருவதே உண்மையான அறம் ஆகும்.
'ஆத்திசூடி' வழியாகத் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தைக் கற்க முனைகிற குழந்தைகளுக்கு ஔவையார் கற்பிக்க முனையும் முதல் அறமே,"அறம் செய்ய விரும்பு!" என்பதே ஆகும். அது என்ன அறம் செய்ய விரும்பு? அறம் செய்! என்று சுருங்கச் சொன்னால் விளங்கிக் கொள்ள முடியாதா?. செய்வதற்குமுன் அதற்கு விருப்பம்வேறு படவேண்டுமா? நல்ல கேள்விதான்.
ஒரு நகரத்தின் நடுவே உள்ள ஒரு கோவிலில் ஒருநாள் நண்பகலில் ஒர் பேரதிசயம் நடந்தது. வானத்திலிருந்து ஒரு பெரிய தங்கத் தாம்பாளம் பறந்துவந்து அந்தக் கோவிலின் பிரகாரத்துக்குள் விழுந்தது. கோவில் அர்ச்சகர் உள்பட பலரும் ஆவலோடு ஓடிவந்து அந்தத் தங்கத் தாம்பாளத்தை எடுக்க முயற்சித்தனர். அப்போதும் ஒரு அதிசயம் நடைபெற்றது; அவர்களது யார் கை பட்டாலும் அந்தத் தங்கத் தாம்பாளம் பித்தளைத் தாம்பாளமாக மாறியது; கையை எடுத்தவுடன் தங்கமாக மாறியது. கூடியிருந்தவர்களுக்கு அந்தத் தாம்பாளம் புதிராக இருந்தது.
அப்போது அந்தக் கோவிலின் கோபுரக் கலசத்திலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது. "வானத்திலிருந்து இங்கு வந்திருக்கும் அந்தத் தங்கத் தாம்பாளம் தர்மநெறி தவறாத ஒரு புண்ணியவானுக்கு உதவுவதற்காக வந்தது ஆகும். உங்களில் யாராவது தர்ம சிந்தனை உள்ளவராக இருந்து, அவர் போய் அந்தத் தாம்பாளத்தைத் தொட்டால், அது பித்தளையாக மாறாமல் தங்கமாகவே இருக்கும்!. அப்படிப்பட்ட அறமனம் உடையவர் வரும்வரை கோயில் மண்டபத்தில் இந்தத் தாம்பாளத்தை மக்கள் பார்வையில் படும்படி வைத்து விடுங்கள். யார் வேண்டுமானாலும் வந்து, அந்தத் தங்கத் தாம்பாளத்தைத் தொடலாம்; அது பித்தளையாக மாறாமல் இருந்தால் எடுத்துக்கொண்டு சென்று தரும காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்!".

சுந்தர ஆவுடையப்பன்
அன்று முதல் ஒரு மண்டபத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாகவும், அவர்கள் கரங்களால் தொடும்படி வசதியாகவும் அந்தத் தாம்பாளம் வைக்கப் பட்டது; அதற்குத் தங்கத் தாம்பாள மண்டபம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. தான தருமச் சிந்தனையுள்ள எந்த நல்ல மனிதனும் வந்து அந்தத் தாம்பாளத்தைத் தொடவேயில்லை.
நாடெங்கும் தங்கத் தாம்பாளச் செய்தி பரவியது; மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் படையெடுத்துக் கோவிலுக்கு வந்தவண்ணமாக இருந்தனர். வந்தவர் யாரும் மூலவர் சன்னதி நோக்கிப் போகவில்லை; மாறாகத் தங்கத் தாம்பாள மண்டபத்திற்கு மட்டும்போய், பித்தளையாக மாறுகிறதா இல்லையா எனத் தொட்டுப்பார்த்துத் தொட்டுப்பார்த்துத் தோற்றுப்போய் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஒருநாள், ஒரு கிராமத்து விவசாயி அந்தக் கோவிலுக்குச் சாமி கும்பிடுவதற்காக வந்தார். கூட்டம் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். ஓர் ஆசாமி கோவிலுக்குள் நுழையும் பரபரப்பில், கோவில்வாசலில் உட்கார்ந்திருந்த கண்தெரியாத ஒரு பிச்சைக்காரரை மிதித்துத் தள்ளிவிட்டுச் சென்றதைப் பார்த்தார். பதறிப்போன விவசாயி, அந்தப் பிச்சைக்காரரைக் கோவிலுக்குள் ஒரு ஓரமாகத் தூக்கிப்போய் உட்கார வைத்துவிட்டு, "ஐயா! உங்களைப் போன்றவர்களுக்கு உதவ என்னிடம் காசு இல்லை; நான் ஒரு ஏழை விவசாயி! மன்னித்து விடுங்கள்!" என்று கூறிவிட்டு, சாமி சன்னதிக்குள் சென்றார்; அங்கே கூட்டமே இல்லை.
அர்ச்சகர் தீபாராதனை காட்ட, மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்த ஏழை விவசாயி, "கடவுளே! நாட்டில் இல்லாதவர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்; இருப்பதை அடுத்தவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என உண்மையிலேயே நினைக்கிற என்னைப் போன்றவர்களும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். வாசலில் பார்த்த கண்தெரியாதவர் போன்றோர்க்கு உதவ மனம் ஆசைப்படுகிறது! ஆனால் பொருள் வசப்பட மறுக்கிறது! அருள் செய்!" என்று வேண்டிக்கொண்டார்.
பிறகு அர்ச்சகரிடம் விவசாயி, ஏன் அந்த மண்டபத்தைச் சுற்றியே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது? என்று கேட்கத், தாம்பாளத்தட்டு விஷயத்தை அர்ச்சகர் சொன்னார். "ஏன் நீங்களும் சென்று அந்தத் தாம்பாளத்தைத் தொடக்கூடாது?" என்று கேட்டுவிட்டு விவசாயியைத் தங்கத் தாம்பாள மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார் அர்ச்சகர். அங்கே விவசாயிக்கு அதிசயம் காத்திருந்தது.
அந்தத் தங்கத் தாம்பாளத்தை விவசாயி தொட்டதும், அது பித்தளையாக மாறவில்லை; தங்கமாகவே தங்கி விட்டது. அர்ச்சகர் உட்பட அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தத் தாம்பாளத்தின் தங்கத்தை வைத்து, வெளியில் காத்திருக்கும் கண்தெரியாத பிச்சைக்காரர்கள் முதற் கொண்டு இல்லாதவர் எல்லோருக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்று மனத்தில் நினைத்துக்கொண்டு கிளம்பினார் விவசாயி.
ஆம்! அறம் செய்யப் பொருள் வேண்டுமே என்று நினைத்தார் அந்த ஏழை விவசாயி; பொருள் கிடைத்துவிட்டது. பலர் அறம் செய்ய வேண்டியிருக்கிறதே என்று பொருள்களை வேண்டா வெறுப்பாக வழங்குவர். அறம் செய்வதற்கும், பொருள்களை, உதவிகளை வழங்குவதற்கும் நல்லமனமும் விருப்பப்படும் கள்ளமில்லா முயற்சியும் இருந்தால் மட்டுமே போதும். வேண்டிய பொருள் வசதிகளும், செல்வவளமும் தாமாய் வந்து சேர்ந்து விடும்.
இந்தத் தங்கத் தாம்பாளக் கதையில் ஓர் அழகான தத்துவமும் பொதிந்திருக்கிறது; யாரெல்லாம் உண்மையான விருப்பத்துடன் தந்து உதவ முன்வருகிறார்களோ அவர்களது பொருள்களெல்லாம் மதிப்புடைய தங்கத்தைப்போலப் பயன்களை வாரிவழங்கும். தர்ம சிந்தனை இல்லாதவர்கள் கைகளில் தங்கமே இருந்தாலும் அது பித்தளையைப் போலப் பயன்குறைந்து மதிப்பிழந்து போகும்.
'கொடுத்தால் பெறலாம்' என்பது கொடுக்கல் வாங்கல் உலகில் பரவலாக வலியுறுத்தப்படும் ஒரு கோட்பாடு. பணத்தைக் கொடுத்துப் பொருள்களைப் பெறலாம். பொருள்களைக் கொடுத்துப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். உழைப்பைக் கொடுத்துப் பணத்தையோ பொருள்களையோ பெற்றுக் கொள்ளலாம். இவை சமூக நடைமுறையில் வணிகப் பயன்கொள்ளல் முறைகளுள் ஒன்று. இவை தவிர விதைத்துப் பெறுகிற விளைச்சல் முறையும் உண்டு. அது ஒன்று கொடுத்துப், பலவாகப் பெறும் கொடைமுறை. இம் முறை இயற்கையுடன் மனிதன் நடத்தும் கொடுக்கல் வாங்கல் முறை ஆகும். அது படைப்புச் சக்தியுடன் நடத்தி அன்பைக் கற்றுக்கொள்ளும் ஆனந்த முறை.
அறம் செய்வது என்பது ஒன்றைக்கொடுத்து அதற்கு இணையாகவோ, குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ எதையுமே எதிர்பார்க்காமல் செய்கிற கருணைமுறை. வருத்தப்படுகிற சக உயிரின் துயரத்தைத் துடைக்க, உணவாகவோ, உடையாகவோ, பொருளாகவோ, உதவியாகவோ தந்து, அவர்கள் அதைப்பெற்று, துயரங்களில் இருந்து வெளியேறி மகிழும் அழகைக் கண்குளிர மனம் குளிரக் கண்டுமகிழும் அமுத நிலை.
நம் தமிழ்மரபில் வாழ்ந்த வள்ளல்களான பாரி, காரி, ஓரி, பேகன், அதியமான், ஆய், குமண வள்ளல் போன்றோர் வரலாற்றைப் படித்தால், அவர்கள் தங்களிடமிருந்த பொருள்வளத்தை முழுமன விருப்பத்தோடு வாரி வழங்கியவர்கள். இன்ன செய்தால் இன்ன கிடைக்கும் என்ற கணிதச் சமன்பாடு எதுவும் அவர்களிடம் இருந்ததாய்த் தெரியவில்லை.
முல்லைக்குத் தேரையும் மயிலுக்குப் போர்வையையும், ஔவைக்கு நெல்லிக்கனி யையும் வழங்கியதில் பெரும்பொருள் சார்ந்த கொடைமரபு எதுவும் அடங்கியிருக்கவில்லை. முல்லைக்கொடி படர ஒரு சாதாரணக் குச்சியை வெட்டச்சொல்லி நட்டிருக்கலாம். ஊர்ந்து வந்த விலை உயர்ந்த தேரை நிறுத்திவிட்டுச் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. மயிலுக்கும் யாதேனுமொரு சாதாரணப் போர்வையைப் போர்த்தியிருக்கலாம்; ஔவைக்குத் தருவதற்கு நெல்லிக்காய் ஒன்றும் விலை உயர்ந்த விருதுப் பொருளுமல்ல.
இவையெல்லாம் பொருள்மதிப்பற்றவை; ஆனால் அவற்றைச் செய்ததன் மூலம் சக உயிர்களுக்கு இரங்கிடும் செயல்மதிப்புடையனவாக வள்ளல்களை உயர்த்திவிட்டன. எல்லா உயிர்களையும் சமமெனப் பாவிக்கும் உயிரிரக்கக் கோட்பாடு, ஒரு மனிதனை இதயமுள்ள மனிதனாக்குகிறது. இதயமுள்ள மனிதன் எவனும் சக உயிர்களின் வருத்தம் கண்டு அவர்களுக்கு உதவ எப்போதும் காத்திருப்பான். அந்தக் காத்திருப்பே ஒவ்வொரு மனிதரையும் அறம் செய்ய விரும்பும் மனிதராக உயர்த்திப் புகழ் பெற வைக்கும்.
தொடர்புக்கு 9443190098






