என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: மரண தண்டனை பெற்ற ஷேக் ஹசீனாவும்.. வன்முறை ஓயாத வங்கதேசமும்  - இந்த ஆண்டின் அதிரடி திருப்பங்கள்
    X

    2025 REWIND: மரண தண்டனை பெற்ற ஷேக் ஹசீனாவும்.. வன்முறை ஓயாத வங்கதேசமும் - இந்த ஆண்டின் அதிரடி திருப்பங்கள்

    • இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன
    • பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். எனவே இட ஒதுக்கீடு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

    ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு

    இருப்பினும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை மோசமான நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை என போற்றப்பட முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா 2009 முதல் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த நிலையில் அவரது 16 ஆண்டுகால ஆட்சி வெறும் 3 மாதகால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது.

    ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    ஷேக் ஹசீனாவால் அடக்குமுறையை சந்தித்த பலர் அவரது ரகசிய சிறையான கண்ணாடிகளின் வீட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

    குறிப்பாக முகமது யூனுஸ் என்ற 84 வயது முதியவர் சிறையில் இருந்து விடுதலையானார். இவர் ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிகான நோபல் பரிசை பெற்றவர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் உருவானது.

    யூனுஸ் ஆட்சியில்..

    வங்கதேசத்தின் மறு உருவாக்கம் முற்றிலும் மகிழ்ச்சியானதாக அமைந்துவிடவில்லை. இஸ்லாமிய பெரும்பாண்மை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

    யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும் இதற்கு கண்டனம் கூறுவதை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்தற்கான சுவடுகள் எதுவும் இல்லை. இந்துக்களின் வழிபாடு தளங்கள் குறிவைக்கப்பட்டன.

    இந்த சூழலில் வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

    ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.

    7 சகோதரிகள்

    முகமது யூனுஸ் வங்கதேசத்தின் பாரம்பரியமான இந்திய சார்பில் இருந்து விலகி சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவை வளர்த்து வருகிறார். மேலும் இந்தியாவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். கடந்த ஏப்ரலில் சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த யூனுஸ் இரு நாடு உறவுகளை பற்றி விவாதித்தார்.

    சீனாவில் நடந்த கூட்டத்தில் பேசிய யூனுஸ், "இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம்).

    இந்த ஏழு மாநிலங்களும் இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார். இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

    தொடர்ந்து இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் இணைத்து அவ்வப்போது அந்நாட்டு தலைவர்கள் சர்ச்சைக்குரிய படத்தை யூனுஸ்க்கு பரிசளித்து வருவதும் தொடர்கிறது.

    ஷேக் ஹசீனாவின் தலைவிதி

    இதற்கிடையே இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவையும் மீண்டும் வங்கதேசம் அனுப்ப யூனுஸ் அரசு இந்தியாவிற்கு கடிதங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

    கடந்த ஆண்டு மாணவர் இயக்கத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டது போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

    மேலும் அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி இந்த மாத தொடக்கத்தில் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    மேலும், ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

    அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மருமகளும் பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்-க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.

    வங்கதேச அரசின் தொடர் அழுத்தத்தின் படி அவரை நாடுகடத்துவது குறித்த கோரிக்கைக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷேக் ஹசீனா விரும்பும்பரை அவர் இந்தியாவில் இருக்கலாம் என்றும் அதுகுறித்து அவர்தான் முடிவெடிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

    புதிய போராட்டம்

    இந்த சூழலில் ஆண்டின் இறுதியான தற்போது வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

    ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.

    கடந்த 20 ஆம் தேதி அதிகாலை, பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.

    அங்கு தொடர்ந்து பாதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என யூனிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போராட்டத்தில் இந்திய எதிர்ப்பு மேலோங்கி காணப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×