'மோடியின் மன்னிப்பில் ஆணவமே தெரிகிறது.. சிவாஜி சிலை ஊழலை மறைக்கும் செயல்' - உத்தவ் தாக்கரே

'இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது''தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்'
'மோடியின் மன்னிப்பில் ஆணவமே தெரிகிறது.. சிவாஜி சிலை ஊழலை மறைக்கும் செயல்' - உத்தவ் தாக்கரே
Published on

மகாராஷ்டிரா மாநிலம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை எட்டே மாதத்தில் கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, இந்த அசம்பாவிதத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி எதிர்க்கட்சிகள் இன்று தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே, மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, ராமர் கோவில், புதிய பாராளுமன்ற கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவது, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது என இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது. சிலை உடைந்ததற்காக மோடி கேட்ட மன்னிப்பைக் கவனித்தீர்களா? அந்த மன்னிப்பில் ஆணவம் தெரிகிறது. மோடி மன்னிப்பு கேட்டது எதற்காக?, தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.அதை மகாராஷ்டிர மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாநிலத்தில் பல இடங்களில் மன்னர் சிவாஜியின் சிலை உள்ளது , ஆனால் மால்வனில் உள்ளது கீழே விழுந்துள்ளது, இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழலை மக்கள் உணர்கின்றனர். இது சிவாஜி மகாராஜ் -கு இழைக்கப்பட்ட அவமானம், சிவாஜி மன்னர் மட்டும் கிடையாது, அவர் எங்களுக்கு கடவுள், சிவாஜியை அவமதித்தவர்களை மகாவிகாஷ் கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்கும் என்று தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com