என் மலர்
கதம்பம்
- ஹோவி பிரபு தீவில் மக்கள் தொகை 400 தான்.
- ஹோவி தீவு ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே உள்ளது.
ரொம்ப கஸ்டமான ஒரு சுற்றுலா போகணுமா? ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஒரு விமானத்தை பிடிங்க. அங்கிருந்து நியூஸிலாந்து போகும் வழியில் 700 கிமி தொலைவில் லார்ட் ஹோவி தீவு உள்ளது.
"இதெல்லாம் ஒரு அதிசயமா? சிட்னிக்கு போறது கிட்னியை விற்கும் அளவு கஸ்டமா?"னு டென்சன் ஆகக்கூடாது.
ஹோவி பிரபு தீவில் மக்கள் தொகை 400 தான். தீவிலும் அதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் தான் இருக்கமுடியும். அதனால் அங்கிருந்து ஒரு சுற்றுலா பயணி கிளம்பினால் தான் உங்களுக்கு அங்கே போக டிக்கட் கிடைக்கும்.
எதுக்கு இப்படி எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறார்கள்?
ஹோவி தீவு ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே உள்ளது. மனித நடமாட்டமே இல்லை என்பதால் இறகுகள் இல்லாத நிறைய பறவை இனங்கள் ஜாலியாக வசித்து வந்தன. அவற்றை உண்ண பாம்புகள் இல்லை, முட்டைகளை திருட எலிகள் இல்லை, பூனைகள் இல்லை, கழுகுகள் இல்லை. சொர்க்கம் மாதிரியான வாழ்க்கை.
தீவின் அகலம் 2 கிமீ, நீளம் 14 கிமீ. அழகான பீச்சுகள், உலகில் எங்கேயும் காணமுடியாத வித்தியாசமான மரம், செடிவகைகள்...அங்கே கிடைக்கும் கென்டியா எனும் ஒரு வகை பனை ஐரோப்பாவெங்கும் வெகு பிரபலம். உலகிலேயே இங்கே மட்டும் தான் அவை கிடைக்கும். தீவின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்.
ஆனால் மனிதன் காலடி எடுத்து வைத்தான். தொல்லைகள் துவங்கின. பல பறவை இனங்கள் அழிந்தன. சுற்றுலா பயணிகள் குவிந்தார்கள். தீவெங்கும் எலிகள் பெருகின.
2015ம் ஆண்டு தீவுவாசிகள் விழித்துக்கொண்டார்கள். இயற்கையை காப்பாற்றவேண்டுமெனில் முதலில் சுற்றுப்பயணத்தை கட்டுபடுத்தனும் என முடிவு செய்து ஒரு சமயத்துக்கு 400 பயணிகள் தான் என மட்டுப்படுத்தினார்கள். டீசல் ஜெனெரேட்டர் மூலம் தீவுக்கு கிடைத்த மின்சாரம் சோலார் பேனலுக்கு மாறியது. தீவின் இயற்கை கழிவுகள் முழுக்க காம்போஸ்ட் செய்யபட்டு உரமாக்கபட்டன.
சுற்றுலா பயணிகளுக்கு கார்கள் கிடையாது. சைக்கிள்தான். தீவின் சுற்றளவு மிக குறைவு என்பதால் அவர்களும் சரி என சொல்லிவிட்டார்கள். ஓட்டல் அறைவாடகைகள் மிக அதிகரிக்கபட்டன. உணவகங்களில் விலையும் கூட்டபட்டது. சீசனுக்கு போனால் ஒரு நாள் வாடகை ரூ 32,000 வரும். அதனால் வசதியான நபர்கள் தான் சுற்றுலா போகமுடியும்.
இவர்களின் முயற்சியின் விளைவால் யுனெஸ்கோ அமைப்பு அந்த தீவுக்கு "உலக பாரம்பரிய தீவு" எனும் அங்கீகாரத்தை வழ்ங்கியுள்ளது
- நியாண்டர் செல்வன்
- புது டிசைனில் சட்டை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்.
- புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே.,
நமக்கு விருப்பமான ஒன்று என்றால் அதற்காக நாம் நம் நேரத்தை செலவு செய்வோம்,
பணத்தை செலவு செய்வோம்,
எவ்வளவு அதில் மூழ்கி இருந்தாலும் இன்னும் இன்னும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.
மேலும் மேலும் அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று ஆராய்வோம்.
புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே.,
புது டிசைனில் சட்டை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்...
எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும்.
நமக்கு விருப்பமான செயலை செய்வதில் நமக்கு ஒரு வருத்தமோ பளுவோ தெரியாது...
மகிழ்ச்சியாக செய்வோம்...
எனவே, ஔவை பாட்டி சொன்னாள்...
"அறம் செய்ய விரும்பு" என்று.
விரும்பினால், மகிழ்ச்சியாக அறம் செய்வோம்,
மீண்டும் மீண்டும் செய்வோம்,
தேடி தேடி போய் செய்வோம்...
அறம் செய் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் செய்துவிட்டு, ஔவை சொன்ன மாதிரி அறம் செய்து விட்டேன் என்று முடித்துக் கொள்வோம்.
அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல...
அற வழியில் நிற்றல் என்றால் ஒழுங்கான, தர்ம வழியில் நிற்றல் என்று பொருள்.
அற வழியில் நிற்க விருப்பப் பட வேண்டும்.
எனவே அறம் செய்ய விரும்புங்கள்.!
- பரஞ்சோதி சந்திரமோகன்
- ஹாங்காங் படங்களில் ப்ரூஸ் லி நடித்த படங்களும் அங்கே நன்றாக ஓடின.
- ஆங்கிலத்தில் டிவி சீரியல்கள், இரண்டாம் ஹீரோ என நடித்து வந்தார்.
'என்டர் த டிராகன்' படம் மூலம் தான் ப்ரூஸ் லி உலகப்புகழ் பெற்றார். அதற்குமுன் ஹாலிவுட்டில் அவர் ஊர், பேர் தெரியாத ஹீரோ. ஹாங்காங் படங்களில் ப்ரூஸ் லி நடித்த படங்களும் அங்கே நன்றாக ஓடின.
ஆனால் ஹாலிவுட்டில் அவரை யாருக்கும் தெரியாது. ஆங்கிலத்தில் டிவி சீரியல்கள், இரண்டாம் ஹீரோ என நடித்து வந்தார். இந்த சூழலில் திடீர் என தன் 32வது வயதில் மரணமும் அடைந்தார்.
அவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்து 'என்டர் த டிராகன்' வெளியானது. அது அத்தனை பெரிய வெற்றி பெறும் என யாருக்கும் தெரியாது. சும்மா எட்டரை லட்சம் டாலர் செலவில் எடுத்தார்கள். 20 கோடி டாலர் வசூல் செய்தது. அமெரிக்கா என இல்லை, திரையிட்ட நாடுகளெங்கும் வெற்றி என்றால் அப்படி ஒரு வெற்றி.
"யார் இந்த ப்ரூஸ் லீ?" ஹாலிவுட் பதறியடித்தபடி அவரது கால்ஷீட்டுக்கு அலைய, அவர் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது.
அதன்பின் அவரது பழைய சீன படங்களை வாங்கி "ரிட்டர்ன் ஆஃப் த டிராகன், பிஸ்ட் ஆப் பியூரி" என டப்பிங் பண்ணி ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். அனைத்தும் அதிரி புதிரி வெற்றி.பாக்ஸ் ஆபிஸ் அதிர்ந்தது.
தான் இத்தனை பெரிய சூப்பர்ஸ்டார் ஆனது தெரியாமல் மண்ணுக்குள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார் ப்ரூஸ் லி.
வரலாறுதான் எத்தனை விசித்திரமானது?
-நியாண்டர் செல்வன்
- நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.
- அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமே அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே...
உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று. நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?
1. ஞாயிறு — சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார்.
2. திங்கள் — சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி, மோர். பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பாம், இட்லி, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.
3. செவ்வாய் — செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை, மிளகாய் துவயல்.
4. புதன் — புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாவக்காய் தொக்கு, முருங்கைக் காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி, வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.
5. வியாழன் — குரு
சுக்கு காபி, அல்லது கஷாயாம், கார்ன் சூப், கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி, மாம்பழஜூஸ், பொங்கல், கதம்பதயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.
6. வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட், முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.
7. சனி — சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை. இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமே அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே...
-மதுரம்
- பெண்ணொருத்தி எங்கேயோ தொலை தூரத்தில் நின்று புலம்பிக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.
- இயற்கையின் ஜாலக் காட்சிகளை இருள் விழுங்கிவிடுகிறது எனினும் கதைக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.
ஊர்: திருநெல்வேலி சந்திப்பு (அன்று வீரராகவபுரம் என்று அழைக்கப்பட்டது. என் அம்மா வீராபுரம் என்றே சொல்வாள்.)
புதுவையிலிருந்து பாரதியார் வருகிறார். வேதநாயகம் பிள்ளை ( மாயூரம் வேதநாயகம் பிள்ளை அல்ல.) நண்பர்களுடன் வரவேற்கக் காத்திருக்கிறார். பாரதியாரும் வந்துவிட்டார்.
சந்திப்பு நிலையத்திலிருந்து வண்ணார்பேட்டை போக வேண்டும். மாட்டு வண்டி வரவில்லை. பாரதியாருக்கு பொறுமை போய்விட்டது!
'மாட்டுவண்டியில் போவதுகூட காந்தியடிகளின் அகிம்சா தத்துவத்திற்கு விரோதம்தானே' என்று சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார். மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள்!
உடன் சென்றவர்களில் ஒருவர் பேரறிஞர் பி.ஸ்ரீ. ஆச்சாரியார் .அவர் பாரதியிடம் பெரும் பற்று கொண்டவர். அவர் எழுதிய 'பாரதி நான் கண்டதும் கேட்டதும்' என்ற நூலிலிருந்து சில வரிகள்:
"சொக்காயும், தலைப்பாகையும், நெற்றியில் திருநாமமும், கழுத்தில் நண்பர்கள் அணிந்த பூமாலைகளுமாய்ப் பாரதியார் நடந்து சென்றது மக்களின் கவனத்தை விநோதமாகக் கவர்ந்தது. அங்கங்கே சிறுவர்கள் கூட்டங்கூடி,
"அதோ பாருங்கள் மாப்பிள்ளை போவதை!" என்றும்,
"அதோ போகிறார் படைத்தலைவர் தம் படையுடன்! எங்கே எந்தப் போருக்குப் போகிறார்" என்றும் பேசத் தொடங்கிவிட்டார்களாம்.
வழி நடுவில், அதாவது.. சுலோச்சன முதலியார் பாலத்திற்கு அருகில், புழுதிக் காற்று கொஞ்சம் வீசத் தொடங்கியது. அப்போது வேதநாயகம் பிள்ளை, "என்ன, சுப்பையா, அப்போதே சொன்னேனே வண்டியில் போவதுதானே உசிதம்!" என்றார்.
பாரதியாரோ, "இந்தப் புழுதிக்குத்தானே நான் தவித்துக் கொண்டிருந்தேன். தவம் செய்து கொண்டிருந்தேன்.. புதுவையில் எத்தனை வருஷமாக என்பதுதான் உனக்குக் தெரியுமே"என்று சொன்னாராம்.
பிறகுதான் பாரதி தரிசனம் எனக்குக் கிடைத்தது.
சூரியாஸ்தமன சமயம்; வானத்திலும் பூமியிலும் தோன்றிய அழகுகளுக்கு வரம்பே இல்லை.... மணியோசை போல் கணீரென்று பாடிக் கொண்டிருந்த குரல் ஒன்று காதில் விழுந்தது. என்ன அதிசயம்! அவ்வளவு கம்பீரமான ஒலி செய்த குரல் எல்லையற்ற சோகத்தால் இழைக்கப்பட்டது போல் இருந்தது..
மேற்குத் திசையைச் சுட்டிக் காட்டுவது போல கையை நீட்டி, சீக்கிய வீரர் போல் முண்டாசும் தலையுமாக ஒருவர் நிமிர்ந்து நின்று ஆவேசமாய்,
"ஆடை குலைவுற்று நிற்கிறாள்- அவள்
ஆ! என்றழுது துடிக்கிறாள்"
என்று பாடிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு சிறு கூட்டம் அப்படியே பரவசமாகி அவர் காட்டிய திசையை நோக்கி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் இருந்தது. நானும் அப்போது பார்த்தேன்; திக்கற்ற பெண்ணொருத்தி எங்கேயோ தொலை தூரத்தில் நின்று புலம்பிக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.
இது என்ன மாயமா, மந்திரமா?
பாட்டு மேலும் தொடர்ந்து சென்றது. கோரமான காட்சி படிப்படியாகக் கண்முன் தெரிந்தது.... பாடகர் எப்படியோ திரௌபதியாகவும் துச்சாதனனாகவும் பீமனாகவும் மாறிக் கொண்டிருந்தார்! சீறுவது போலச் சிவந்திருக்கும் அந்தி வானம் பீமசேன கோபத்தை எவ்வளவு பொருத்தமாகக் காட்டிவிட்டது!
அந்தி மயங்குகிறது; இயற்கையின் ஜாலக் காட்சிகளை இருள் விழுங்கிவிடுகிறது எனினும் கதைக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.
'தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும் எனும்
இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை
செய்தான்!
கருமத்தை மேன்மேலும் காண்போம்;
இன்று
கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்;
காலம் மாறும்" என்று உருக்கமான குரலில்....
பாட்டு முடிந்தது. சந்திரோதயம் ஆயிற்று..
அவர் குதூகலமாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பும் அவர் பாடிய பாட்டைப் போல் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.
அவரே பாரதியார் என்று சொல்லவும் வேண்டுமா?"
-மா.பாரதிமுத்துநாயகம்
- உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும்.
- கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது.
ஒரு மனிதன் உறுப்புக் கொடை செய்ய விரும்பினால் அவன் இறந்த பிறகு அதன் மூலம் ஒன்பது பேர் நன்மை அடைவர்.
1. சிறுநீரகங்கள் : அதிகமாகத் தேவைப்படும் உறுப்பு. அதிகமாக கொடை அளிக்கப்படும் உறுப்பும் இதுவே. மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் இரண்டு சிறுநீரகங்களும் தலா ஒரு நபருக்கு என இருவரின் வாழ்வை மேலும் நீட்டிக்க உதவும். டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து விடுபட உதவும்.
உயிருடன் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தாருக்கு ஒரு சிறுநீரகத்தை கொடையாக வழங்க முடியும். இறந்த நபரிடம் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சிறுநீரகம் 30 மணிநேரங்கள் உயிரோடு இருக்கும்.
2. கல்லீரல் : வெளியே எடுக்கப்பட்ட கல்லீரல் 6-12 மணிநேரங்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். இறந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை இரண்டாகப் பிரித்து இருவருக்கு வழங்க முடியும்.
உயிருடன் இருப்பவர்களும் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தங்கள் கல்லீரலின் சிறு பகுதியை கொடையாக வழங்க முடியும். கொடை வழங்கிய பகுதி மீண்டும் வளர்ந்துவிடும்.
3. நுரையீரல் : இறந்தவிரிடம் இருந்து பெறப்படும் நுரையீரல் - வலது இடது பகுதிகள் தலா இருவருக்கோ அல்லது இரண்டு பகுதிகளும் சேர்த்து ஒருவருக்கோ தேவைக்கேற்ப பொருத்தப்படும்.
உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும். எனினும் கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது. வெளியே எடுக்கப்பட்டு 4-6 மணிநேரங்கள் உயிர்ப்புடன் இருக்கும்
4. இதயம் : இறந்தவரிடம் இருந்து பெறப்பட்டு 4-6 மணிநேரங்களில் தேவைப்படுபவருக்கு பொருத்தப்பட வேண்டும்.
5. கணையம் : இறந்தவரிடம் இருந்து 6 மணிநேரங்களுக்குள் பொருத்தப்பட வேண்டும். உயிருடன் இருப்பவர்களும் தங்கள் கணையத்தின் சிறு பகுதியை தானமாக வழங்க முடியும்.
6. குடல்: இறந்தவரிடம் இருந்து எடுத்த ஆறு மணிநேரங்களுக்குள் தேவைப்படுபவர்களுக்கு பொருத்த வேண்டும். இவையன்றி இறந்த நபர்களின் கண்களில் இருந்து கார்னியா எனும் விழிப்படலம் . விழிப்படலம் சார்ந்த கண் பார்வையிழப்பில் இருக்கும் நபர்களுக்கு உதவும்.
கொடையாக வழங்கப்படும் தோல் தீக்காயம் அடைந்தவர்கள், அமில தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
தானம் வழங்கப்படும் எலும்புகள், இதய வால்வுகள் போன்றவையும் பலர் வாழ உதவுகின்றன.
- டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
- கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
- நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப அவர்கள் சொன்னதையே சொல்வார்கள்.
ஒரு முறை நடிகவேள் எம்,ஆர். ராதா தனது விலை உயர்ந்த காரை வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்.
அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது. இதைப் பார்த்த நடிகவேள் எம்,ஆர். ராதா சிரித்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்
அதற்கு அவர் மிகவும் சாந்தமாக, "அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப் பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது" என்று சிரித்துக் கொண்டே கூறினார். கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.
ஏன் என்றால் அவர்களுக்கு சொன்னாலும் புரியாது . நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப அவர்கள் சொன்னதையே சொல்வார்கள். அதை சிரித்துக் கொண்டே கடந்து போங்கள். இது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள். நீங்கள் செயல் வீரராக இருங்கள். அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள். எத்தனையோ பிரச்னைகள் நீங்கும்.
-ஆர்.எஸ். மனோகரன்
- மாநில அரசுகளின் விடுமுறைகள் தனி.
- மாநிலங்கள் எல்லாம் வேற இருக்கா என டென்சன் ஆகவேண்டாம்.
வேலை செய்து, செய்து அலுப்பாகா இருக்கா?
நேபாளத்துக்கு கிளம்பிவிடுங்கள். உலகிலேயே அதிக விடுமுறை நாட்கள் கொண்ட நாடு என்ற "பெருமையை" பெற்ற நாடு நேபாளம்.
52 ஞாயிற்றுக்கிழமைகள், 43 விடுமுறை நாட்கள் என ஆண்டுக்கு 95 நாட்கள், அதாவது ஆண்டுக்கு மூன்று மாதம் விடுமுறையிலேயே கழிக்கும் நாடு நேபாளம்.
"இத்தனை நாட்கள் விடுமுறை தேவையா" என யோசிக்க நேபாள பிரதமர் ஒரு கமிட்டியை போட்டார். கமிட்டி "விடுமுறை நாட்களை குறைக்கவேண்டும்" என தீர்மானம் போட்ட கையுடன் புதியதாக பங்குனி 1 அன்றையும் விடுமுறையாக அறிவித்தார் பிரதமர்.
இது மத்திய அரசின் விடுமுறை. மாநில அரசுகளின் விடுமுறைகள் தனி. நேபாளமே மாநில சைஸில் தான் இருக்கும். அதில் மாநிலங்கள் எல்லாம் வேற இருக்கா என டென்சன் ஆகவேண்டாம். ஏழு மாநிலங்கள் இருக்கு, மாவட்டங்கள் இருக்கு. அவர்கள் நினைத்த போதெல்லாம் விடுமுறை விடுவார்கள். ஒரு மாநில முதல்வர் சமீபத்தில் தன் மைத்துனர் இறந்ததுக்கு விடுமுறை விட்டு எல்லாம் சாதனை படைத்தார்.
- நியாண்டர் செல்வன்
- இறை நிலையை உணராமல் அஞ்ஞானத்திலேயே இருந்தால் பிறவித் தொடர் தொடரும்.
- இறை நிலையை ஆத்மார்த்தமாக உணர்ந்து விட்டால் இந்த பூமிக்கு வர வேண்டியதில்லை.
இறந்த பின் என்ன நடக்கும்? என்ன மாதிரியான வாழ்வு கிடைக்கும் பரமஹம்சரே?.
இறை நிலையை உணராமல் அஞ்ஞானத்திலேயே இருந்தால் பிறவித் தொடர் தொடரும்.
இறை நிலையை ஆத்மார்த்தமாக உணர்ந்து விட்டால் இந்த பூமிக்கு வர வேண்டியதில்லை. பிறவித் தொடர் அறுந்து விடும்.
உதாரணமாக, குயவன் பானைகளை செய்த பிறகு வெய்யிலில் காயவைப்பான். சில பானைகள் காய்ந்து விடும். சில பானைகள் காயாமல் இளக்கமாக இருக்கும். ஏதேனும் பசு அந்த பக்கமாக போகும் போது, காய வைக்கப்பட்ட பானைகள் மீது நடந்தால், சில பானைகள் உடைந்து விடும்.
குயவன் மீண்டும் அவற்றை உபயோகிக்க முற்படும்போது, உடைந்த நன்றாக காய்ந்த பானையின் துண்டுகளை தூக்கி போட்டு விடுவான். அதை மீண்டும் உபயோகிக்க முடியாது.
ஆனால் சரியாக காயாத இளக்கமான பானை துண்டுகளை பொறுக்கி எடுத்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, இளக்கி, களிமண்ணாக மாற்றி மீண்டும் புது பானை செய்ய உபயோகப்படுத்துவான்.
அதே போல் தான் நன்றாக கடவுளை உணராதவர்கள், சரியாக வேகாத பானை போல. மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும்.
நன்றாக வேக வைக்கப்பட்ட விதை, மீண்டும் முளைக்காது. அதே போலத்தான், ஞானத் தீயால் தன்னை உணர்ந்தவன், இறை நிலையை உணர்ந்தவனுக்கு மீண்டும் பிறவி கிடையாது. அவன் விடுதலை அடைந்தவன்.
-ஆர்.எஸ். மனோகரன்
- வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன.
- கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும்.
கடல் என்பது ஆதியில் இருந்தே மனித இனத்திற்கு ஒரு புரியாதப்புதிராகவே இருந்து வந்துள்ளது.
ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக, இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.
சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்தளத்தில் உள்ளன. மடிந்த கடல்வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரியான படிவுகள்.
இவ்வாறு ஆண்டுதோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்றனவாம்.
கடலடியில் அனேக செங்குத்தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே.
கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்திற்குச் சங்கிலித் தொடர்போல் மலைகளும், வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளனவாம்.
அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பிற இடங்களிலும் இவ்வாறு பள்ளத்தாக்குகள் உள்ளன. சில இடங்களில் இதன் ஆழம் சுமார் 3 மைல். கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உள்ள அகழிகள் ஆகும்.
கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும். அகழிகளின் ஆழத்துடன் ஒப்பிட்டால் உலகின் கடல்களின் சராசரி ஆழம் 12,556 அடி.அதாவது, இரண்டரை மைல்.
பிலிப்பைன்சுக்குக் கிழக்கே உள்ள மின்டானாவோ அகழியில் அமைந்துள்ள குக்மடு தான் உலகின் கடல்களில் மிக ஆழமான இடமாகும். இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் அச்சிகரம் மூழ்கி அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி தான் .
-அண்ணாமலை சுகுமாரன்
- இந்தியாவில் வேறெங்கும் இத்தனை பிள்ளையார் கோவில்கள் கிடையாது.
- எடுத்துக் கொண்ட காரியம் சுழித்துப் போகாமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி.
`அவ்வையாருக்குப் பிள்ளையார் மேல் ஏன் அப்படியொரு பக்தி? பிள்ளையாருக்கு என்ன அத்தனை மகத்துவம்?` என்று கேட்டுவிட்டு, மகாசுவாமிகளின் திருமுகத்தையே பதில்வேண்டிப் பார்த்தவாறிருந்தார் ஓர் அன்பர். மகாசுவாமிகள் பேசலானார்..
`வயதான பாட்டி என்றால் காலை நீட்டிக் கொண்டு தள்ளாமை காரணமாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பதுதான் வழக்கம்.
ஆனால் அவ்வைப் பாட்டியோ ஊர் ஊராகச் சுற்றி தமிழையும் ஆன்மிகத்தையும் எல்லா இடங்களிலும் பரப்பிக் கொண்டிருந்தாள்.
குழந்தை என்றால் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் தவழ்ந்து கொண்டும் நடந்துகொண்டும் இருப்பதுதான் வழக்கம்.
பிள்ளையாராகிய குழந்தையோ தொந்தியும் தொப்பையுமாக யானை முகத்துடன் அழகே வடிவாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறது.
அதனால்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று நாம் சிலரைக் கேட்கிறோம். வேடிக்கையான பாட்டி. வேடிக்கையான குழந்தை.
சகல உலகங்களுக்கும் தாய் தந்தையான பார்வதி பரமேஸ்வரனின் மூத்த பிள்ளை என்பதால் மரியாதையோடு அவரைப் பிள்ளையார் என்கிறோம்.
`குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே` என்பார்கள். குழந்தை வடிவில் வந்துள்ள தெய்வம் பிள்ளையார். அதனால் அவரை எல்லோரும் கொண்டாடுகிறோம்.
அவ்வை ஓடி ஆடி ஆன்மிகப் பணி செய்ததற்கு இந்தப் பிள்ளையின் அருள்தான் காரணம். அதனால் அவ்வை, தான் சென்ற இடங்களிலெல்லாம் பிள்ளையார் பக்தியைப் பரப்பினாள்.
தமிழகத்தில், அரச மரத்தடியிலும் தெரு மூலைகளிலும் என எல்லா இடங்களிலும் பிள்ளையார் எழுந்தருளியிருப்பதற்கு அவ்வையார் பரப்பிய விநாயகர் பக்தியே காரணம். இந்தியாவில் வேறெங்கும் இத்தனை பிள்ளையார் கோவில்கள் கிடையாது.
ஆயிரம் காலமாக இந்த தேசத்தில் ஒழுக்கமும் பக்தியும் இருந்துவருகிறதென்றால் அது முக்கியமாக அவ்வையாரால் தான்.
அவளுடைய அன்பின் விசேஷத்தால் அவளுக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆனபிறகு இப்போதும் நாம் படிக்க ஆரம்பிக்கிறபோதே அவளுடைய ஆத்திசூடிதான் முதலில் வருகிறது.`
நம் தமிழ்மொழிக்குப் பிள்ளையார் ரொம்ப முக்கியம். எதை நாம் எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு மளிகைப் பொருள் லிஸ்ட் எழுதினால் கூட முதலில் பிள்ளையார் சுழி தானே போடுகிறோம்?
எடுத்துக் கொண்ட காரியம் சுழித்துப் போகாமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி.
படிக்கத் தொடங்கியவுடனேயே நாம் முதலில் கற்றுக் கொள்வது ஒளவைப் பாட்டியின் அறிவுரைகளைத் தான். வாக்கு உண்டாவதற்கே பிள்ளையார் பாதத்தைத் தான் பிடித்தாக வேண்டும் என்று அவள் கற்றுக் கொடுக்கிறாள்.
`வாக்குண்டாம்` என்று பாடல் தொடங்குகிறது. வாக்கு மட்டும் தானா? பேச்சை அழகாக ஜோடித்து விட்டால் போதுமா?
நல்ல மனதைப் பெற்று அந்த மனதிலிருக்கிற நல்ல எண்ணங்கள், கருத்துகள் வாக்கில் வந்தால்தானே நமக்கும் புண்ணியம், மற்றவர்க்கும் பயன்? எனவே நல்ல மனம் கிடைக்கும். இன்னும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
`தப்பாமல் கிடைக்கும்` அதாவது `நிச்சயமாகக் கிடைக்கும்` என்கிறாள் அவ்வை. அந்த மிகப் பொருத்தமான வார்த்தையை அவ்வை தான் போட்டாளோ அல்லது தானே வந்து விழுந்ததோ?
பிள்ளையார் பாதத்தைப் புஷ்பார்ச்சனை பண்ணிப் பிடித்து விட்டால் எல்லா மங்கலங்களும் கிடைத்துவிடும் என்று அவ்வை நமக்குப் பாடிக் கொடுத்திருக்கிறாள்.
`வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு`
மேனி நுடங்காது என்றால் சரீரத்தைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாது என்று அர்த்தம். உடம்பை சிரமப்படுத்திக் கொள்ளாமல் நாலு பூவைப் பறித்து அவருக்குப் போட்டுவிட்டாலே போதும்.
பிள்ளையாரை வணங்கினால் எல்லா மங்கலங்களும் கிட்டும்!`
மகாசுவாமிகளின் அருளுரையைக் கேட்டு பக்தர் மனம் மகிழ்ந்து நமஸ்கரித்தார்.
-திருப்பூர் கிருஷ்ணன்
- கண்ணதாசன் பாடல் வரிகளை மட்டும் சொல்லவில்லை.
- கண்ணதாசனின் அந்த வார்த்தைகளை சொன்னவுடன் விஸ்வநாதன் முகம் மாறியது.
காலை ஏழு மணி முதல் ஸ்ரீதரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பாடல் கம்போசிங்கிற்காக காத்திருக்க, பத்து மணிக்கு அங்கே வந்த கவிஞர் கண்ணதாசன் "நான் கம்போசிங்கிற்கு தயார். நீங்கள் தயாரா?" என்று கேட்டவுடன் லேசாக எரிச்சலடைந்த ஸ்ரீதர் "நாங்க ஏழு மணியிலே இருந்து இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கோம். காலையிலே சீக்கிரமே இந்த பாட்டை முடிக்கணும்னு நேற்றே உங்ககிட்ட சொன்னேன் இல்லே. அப்படியும் இவ்வளவு லேட்டா வந்தா எப்படி?" என்று கேட்க, "கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுதான் லேட்டாகிவிட்டது" என்றார் கவிஞர்.
"எனக்கு எல்லாம் தெரியும். நேற்று இரவு இரண்டு மணிவரைக்கும் நீங்க தூங்கவேயில்லையாம். அப்புறம் எப்படி ஏழு மணிக்கு உங்களால வர முடியும்?" என்று ஸ்ரீதர் சொல்லிக் கொண்டே போக கண்ணதாசன், விஸ்வநாதன் பக்கம் திரும்பி அவரைப் பார்த்தார். கண்ணதாசனின் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாத எம்.எஸ்.விஸ்வநாதன் தலையைக் குனிந்து கொண்டார்.
சிறிது நேரத்திலே கம்போசிங் தொடங்கியது. ஸ்ரீதர் பாடல் எழுதப்பட வேண்டிய காட்சியை விளக்க, "நீங்க முதல்ல பாட்டை எழுதி விடுங்கள். நீங்கள் எழுதுகின்ற பாடலுக்கு நான் இசையமைக்கிறேன்.." என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
"பரவாயில்லை… நீ மெட்டைச் சொல்லு.." என்று கண்ணதாசன் சொல்ல "ல ல ல லா லா லா …" என்று விஸ்வநாதன் மெட்டைப் பாடிக் காட்டினார். அடுத்த நிமிடம் பாடலை சொல்லத் தொடங்கிய கண்ணதாசன் பாடல் வரிகளை மட்டும் சொல்லவில்லை. விஸ்வநாதனைப் பார்த்து தான் கேட்க நினைத்த கேள்வியையும் அந்தப் பாடலின் வழியே கேட்டார்.
"சொன்னது நீ தானா ?….."
கண்ணதாசனின் அந்த வார்த்தைகளை சொன்னவுடன் விஸ்வநாதன் முகம் மாறியது. கவியரசர் இன்று பாட்டால் தன்னை அடிக்கப் போகிறார் என்று புரிந்து கொண்ட அவர் அடுத்து "ல ல ல" என்று சொல்ல ஒரு கணம்கூட தாமதிக்காமல் "சொல் … சொல்.. சொல்…" என்றார் கண்ணதாசன்.
அத்துடன் நிற்காமல், "சம்மதம்தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே… இன்னொரு கைகளிலே, யார், யார், யார்.. நானா? என்னை மறந்தாயா..? ஏன் ஏன் ஏன் என்னுயிரே…?" என்று கண்ணதாசன் பல்லவியைச் சொல்லி முடித்தபோது விஸ்வநாதன் முழித்ததைப் பார்த்த ஸ்ரீதர் குலுங்கி, குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் மற்ற மற்ற சரணங்களையும் மடை திறந்த வெள்ளம் போல கண்ணதாசன் சொல்ல அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த பாடல் கம்போசிங் முடிவடைந்தது.
-கணேஷ் பாண்டியன்






