என் மலர்
செய்திகள்

தேமுதிகவின் செயல்பாடு விபரீதங்களை ஏற்படுத்தி விடும்- வைகோ பேட்டி
திருச்சி:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய அளவிலான நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நாட்டை பொறுத்தவரை எல்லை தாண்டும் பயங்கரவாதிகளைக்கூட எளிதில் துவம்சம் செய்து விடலாம். ஆனால் உள்நாட்டில் மதம் மூலம் பிளவுப்படுத்தி பார்க்கும் அரசியலும், அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளும் மிகவும் மோசமானது.
எனவே நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க. தலைமையில் ம.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. எங்களது நோக்கம் நரேந்திர மோடியை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க வேண்டும். தேசத்துக்காக புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
அதே வேளையில் ராணுவத்துக்காக ரபேல்பேரம் நடத்தப்பட்டு இமாலய ஊழலில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் இலாகா வசம் இருந்த ராணுவத்துக்கு சொந்தமான ரபேல் பேர முக்கிய ஆவணங்கள் திருட்டு போய் உள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பா.ஜ.க. அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்துக்கு பா.ஜ.க. அரசு மீத்தேன் திட்டம், முல்லைபெரியாறு, கர்நாடகாவில் காவிரியை தடுத்து அணை கட்டும் திட்டம் என்று பல்வேறு துரோகங்களை செய்து கொண்டே இருக்கிறது. இதனால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச்செய்வது மக்களின் கடமை.

பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தை மக்கள் புரிந்து கொண்டு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச்செய்வார்கள். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த தகவல் உண்மை என்றால் தே.மு.தி.க.வின் செயல்பாட்டை ம.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. எங்களை பொறுத்தவரை கூட்டணி என்றால் உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம். தே.மு.தி.க.வின் செயல்பாடு பல விபரீதங்களை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #vaiko #dmdk #parliamentelection






